Pages

Muhammad(pbuh)

பாடம்: 87 குளிப்புக் கடமையானவர் குளிக்காமலே உறங்குதல்

ஹதீஸ் எண்: 221
உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் தனக்கு இரவில் குளிப்பு கடமை ஏற்பட்டு விடுகிறதே! என்று அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களிடம் குறிப்பிட்ட போது உன் ஆண்குறியை கழுவி உலூச் செய்து பிறகு உறங்குக என்று அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்.

பாடம்: 88 குளிப்புக் கடமையானவர் குளிக்காமலேயே உண்ணுதல்

ஹதீஸ் எண்: 222
குளிப்புக் கடமையான நிலையில் நபி (ஸல்) அவர்கள் உறங்க எண்ணும் போது தொழுகைக்காக செய்வது போல் உலூச் செய்து கொள்வார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள்.

ஹதீஸ் எண்: 223
இந்த ஹதீஸ் சுஹ்ரீ வழியாக வேறொரு அறிவிப்பாளர் தொடரைக் கொண்டு அறிவிக்கப்படுகிறது. இதில், 'குளிப்புக் கடமையானவர் உண்ண விரும்பினால் கைகள் இரண்டையும் கழுவிக் கொள்ள வேண்டும்' என்பது கூடுதலாக உள்ளது.

இமாம் அபூதாவூது அவர்கள் கூறுகிறார்கள்:
1. இந்த ஹதீஸ் யூனுஸ் வழியாக இபுனு வஹ்ப் அவர்கள் அறிவிக்கிறார்கள். இதில் குளிப்புக் கடமையானவர் உண்ணலாம் என்பது ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2. இதே ஹதீஸ் வேறொரு அறிவிப்பாளர் தொடரைக் கொண்டு இப்னு முபாரக் வழியாகவும் அறிவிக்கப்படுகிறது. இதை உர்வா அல்லது அபூஸலமாவிடமிருந்து அவர் அறிவிக்கிறார்.
3. அல் அவ்ஸிஈ அவர்களும் இப்னு முபாரக் அறிவிப்பது போலவே அறிவிக்கிறார். இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து யூனுஸ், அவர்களிடமிருந்து அல்அவ்ஸிஈ அவர்கள் அறிவிக்கிறார்.

பாடம்: 89 குளிப்புக் கடமையானவர் உண்ண உறங்க நாடும் போது உலூச் செய்து கொள்வது.

ஹதீஸ் எண்: 224
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் உண்ண அல்லது உறங்க விரும்பும் போது உலூச் செய்து கொள்வார்கள். குளிப்புக் கடமையாக இருக்கும் போது (அவ்வாறு செய்தார்கள்) என்பதையே அவர்கள் குறிப்பிட்டார்கள்.

ஹதீஸ் எண்: 225
குளிப்புக் கடமையான ஒருவருக்கு உலூச் செய்த பின் உண்ணவும் உறங்கவும் நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.

அறிவிப்பவர்: அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள்.

இமாம் அபூதாவூது அவர்கள் கூறுகிறார்கள்:
1. இதன் அறிவிப்பாளர் தொடரில் எஹ்யா பின் எஃமுர், அம்மார் பின் யாசிர் இருவருக்கும் இடையே ஒரு அறிவிப்பாளர் விடுபட்டு இருக்கிறார்.
2. அலி இப்னு அபூதாலிப், இப்னு உமர், அப்துல்லா பின் அம்ர் கூறுகிறார்கள்: குளிப்புக் கடமையானவர் உண்ண விரும்பும் போது உலூச் செய்ய வேண்டும்.

பாடம்: 90 குளிப்புக் கடமையானவர் குளிப்பதை தாமதிக்க அனுமதி.

ஹதீஸ் எண்: 226
குதைப் பின் அல்ஹரித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
நான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன். (குளிப்புக் கடமையான) நபி (ஸல்) அவர்கள் குளிப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் எப்போது குளிப்பார்கள்? இரவின் ஆரம்பத்திலா அல்லது இறுதியிலா? அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள், சிலவேளை அவர்கள் இரவின் ஆரம்பத்திலும் சிலவேளை இரவின் இறுதியிலும் குளிப்பார்கள். அதற்கு நான், அல்லாஹ் மிகப்;பெரியவன், இந்த விஷயத்தில் சலுகையளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று வியந்து கூறினேன். மீண்டும் நான் அன்னை ஆயிஷா அவர்களிடம் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் வித்ருத் தொழுகையை இரவின் ஆரம்பத்தில் தொழுதார்களா? அல்லது இறுதியில் தொழுதார்களா? அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள், சிலவேளை அவர்கள் இரவின் ஆரம்பத்திலும் சிலவேளை இரவின் இறுதியிலும் தொழுவார்கள். அதற்கு நான் அல்லாஹ் மிகப்பெரியவன், இந்த விஷயத்தில் சலுகையளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று வியந்து கூறினேன். மீண்டும் நான் அன்னை ஆயிஷா அவர்களிடம் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை சப்தமிட்டு ஓதுவார்களா? அல்லது சப்தமின்றி ஓதுவார்களா? அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள். சிலவேளை அவர்கள் சப்தத்துடனும் சிலவேளை சப்தமின்றியும் ஓதுவார்கள். அதற்கு நான், அல்லாஹ் மிகப்பெரியவன், இந்த விஷயத்தில் சலுகையளித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று வியந்து கூறினேன்.

ஹதீஸ் எண்: 227
உருவப்படம், நாய், குளிப்புக் கடமையானவர் இருக்கும் வீட்டில் மலக்குகள் நுழைய மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அலி (ரலி) அவர்கள்.

ஹதீஸ் எண்: 228
குளிப்புக் கடமையான நிலையில் நபி (ஸல்) அவர்கள் தண்ணீரைத் தொடாமலேயே தூங்கி விடுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள்.

இமாம் அபூதாவூது சொல்கிறார்கள்:
யஸீது பின் ஹாரூன் சொல்லக் கேட்டதாக ஹஸன் பின் அலி அல்வஸீத்தி கூறுகிறார்கள்: இந்த ஹதீஸ் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது, ஏனெனில் இந்த ஹதீஸ் அபூஇஸ்ஹாக் என்பவரால் அறிவிக்கப்படுகிறது.

பாடம்: 91 குளிப்புக் கடமையானவர் குர்ஆனை ஓதுதல்

ஹதீஸ் எண்: 229
அப்துல்லாஹ் பின் ஸலமா சொன்னார்கள்:
இரண்டு பேரில் ஒருவர் எங்களைச் சேர்ந்தவர் மற்றவர் பனூ அஸத் கூட்டத்தாரைச் சேர்ந்தவர் இவர்களோடு நானும் அலி (ரலி) அவர்களின் அழைப்பின் பேரில் சென்றிருந்தோம். அவ்விருவரையும் ஒரு கூட்டத்தாரிடம் 'நீங்கள் வலிமை மிக்கவர்களாக இருக்கிறீர்கள். உங்களின் வலிமையை மார்க்கத்தில் காட்டுங்கள்' என்று சொல்லி அனுப்பினார்கள். பிறகு எழுந்து கழிப்பறைக்குச் சென்றுவிட்டார்கள். அதன் பின்னர் அவர்கள் வெளியே வந்து தண்ணீர் கேட்டு வாங்கி ஒரு கையளவு தண்ணீரைக் கொண்டு (கைகள்) மீது தடவினார்கள். பிறகு குர்ஆன் ஓதினார்கள். அவர்கள் இந்த செயலினால் ஆச்சர்யமடைந்தனர். அப்போது அவர்கள் சொன்னார்கள்: 'நபி (ஸல்) அவர்கள் கழிப்பறையிலிருந்து வெளியே வந்த பிறகு எங்களுக்குக் குர்ஆன் கற்றுக் கொடுத்தார்கள், எங்களோடு இறைச்சியை உண்டார்கள். எதுவும் அவர்களை தடுக்க வில்லை. அறிவிப்பாளர் சொன்னார்: குர்ஆனை ஓதுவதிலிருந்து எதுவும் தடுக்க வில்லை, குளிப்புக் கடமையைத் தவிர.

பாடம்: 92 குளிப்புக் கடமையானவரோடு கைகொடுக்க செய்ய அனுமதி

ஹதீஸ் எண்: 230
ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் அவரை (ஹுதைபாவை) சந்தித்து கைகொடுப்பதற்காக அவரை நோக்கி வந்த போது, அவர் சொன்னார், 'நான் குளிப்புக் கடமையானவனாக இருக்கிறேன்'. அதற்கு நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள், 'ஒரு முஸ்லிம் அசுத்தமாக மாட்டார்'.