Pages

Muhammad(pbuh)

ஹதீஸ் எண்: 241
நான் எனது தாயாருடனும், சிறிய தாயாருடனும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றிருந்தோம். அப்போது அவ்விருவர்களில் ஒருவர் குளிக்கும் போது என்ன செய்வீர்கள்? என்று அன்னையாரிடம் வினவினார். அதற்கு அன்னையார் அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்கு உலூச் செய்வது போன்று உலூச் செய்வார்கள் பிறகு தனது தலையில் மூன்று தடவை தண்ணீரை ஊற்றுவார்கள் நாங்கள் எங்களது தலைகளில் (தலைமுடி) பின்னல்கள் காரணமாக ஐந்து தடவைகள் ஊற்றுவோம் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜுமைஃபின் உமைர் அவர்கள்.

ஹதீஸ் எண்: 242
அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது இரு கைகளையும் கழுவி நீரை வலது கையின் மீது ஊற்றுவார்கள். பிறகு மர்மஸ்தானத்தை கழுவுவார்கள். பிறகு இடது கைக்கு ஊற்றுவார்கள் பிறகு தொழுகைக்கு உலூச் செய்வார்கள். பிறகு தம் இருகைகளையும் பாத்திரத்தில் நுழைத்து (தண்ணீர் எடுத்து) தம் தலையை கோதி விடுவார்கள். (தலையின்) அடிப்பாகம் நனைந்து விட்டது என்று தோன்றியதும் தம் தலையில் மூன்று தடவை ஊற்றிக் கொள்வார்கள். அதற்கு பிறகு தண்ணீர் மிச்சமாக இருந்தால் தலையில் ஊற்றி விடுவார்கள்.

ஹதீஸ் எண்: 243
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்ற விரும்பினால் தன் முன்னங்கைகளைக் கழுவத் துவங்கி அவ்விரண்டையும் கழுவிய பின்பு கைகால்களின் அந்தரங்கப் பகுதிகளை கழுவி பிறகு தண்ணீர் ஊற்றுவார்கள். இரு கைகளையும் அவர்கள் சுத்தம் செய்ததும் அவ்விருகைகளையும் சுவரில் தேய்ப்பார்கள். பிறகு உலூச் செய்து தனது தலையில் தண்ணீர் ஊற்றுவார்கள்.

அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.

ஹதீஸ் எண்: 244
நீங்கள் விரும்பினால் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் இடத்தில் உள்ள சுவரில் அவர்களின் கைத்தடத்தை உங்களுக்கு காட்டுவேன் என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஷுஃபீ அவர்கள்.

ஹதீஸ் எண்: 245
நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு கடமையான குளிப்பை நிறைவேற்ற தண்ணீர் எடுத்து வைத்தேன். அவர்கள் பாத்திரத்தை தனது வலது கையில் சாய்த்து (ஊற்றி) அதை இரு தடவைகளோ அல்லது மூன்று தடவைகளோ கழுவினார்கள். பிறகு தனது மறைவு உறுப்பில் (நீர்) ஊற்றி தன் மறைவு உறுப்பை இடது கையினால் கழுவினார்கள். பிறகு தனது கையை தரையில் தேய்த்து அதையும் கழுவினார்கள். பிறகு வாய்க்கொப்பளித்து, நாசிக்கு நீர் செலுத்தினார்கள். பிறகு தனது முகத்தையும் இருகைகளையும் கழுவினார்கள். பிறகு தனது தலைக்கும் தனது உடலுக்கும் தண்ணீர் ஊற்றினார்கள். பிறகு குளிக்கும் இடத்தை விட்டு கொஞ்சம் தள்ளி நின்று தனது இரு கால்களையும் கழுவினார்கள். அவர்களுக்கு நான் (துடைப்பதற்கு) துண்டு கொடுத்தேன் அவர்கள் அதை எடுக்கவில்லை. அவர்கள் தனது உடலிலிருந்த தண்ணீரை உதறி விட்டேன்.

அறிவிப்பவர்: அன்னை மைமூனா (ரலி) அவர்கள்.

(இதன் அறிவிப்பாளர் அஃமத் கூறுகின்றார்) இந்த (துடைக்கவில்லை என்ற) செய்தியை இப்ராகீம் அன்னநயீ அவர்களிடம் வினவினேன். அதற்கு அவர் (நபித்தோழர்கள்) துண்டைக் கொண்டு துடைப்பதை தவறாக கருதவில்லை. ஆனால் வழக்கமாக செய்வதை விரும்பவில்லை என்று பதிலளித்தார்.

இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார்கள்:
முஸத்தத் தெரிவிக்கின்றார்.
நான் (இதன் அறிவிப்பாளரான) அப்துல்லாஹ் பின் தாவூத் அவர்களிடம் வழக்கமாக செய்வதற்காகத்தான் இதை அவர்கள் விரும்பவில்லையா என்று வினவிய போது அது அப்படித்தான் என்று சொன்னார்கள் எனினும் இந்த எனது இந்த நூலில் இவ்வாறு (ஹதீஸ் மட்டும்) தான் உள்ளது.

ஹதீஸ் எண்: 246
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது தனது வலது கையால் இடது கைக்கு ஒரு தடவை தண்ணீர் ஊற்றுவார்கள். பிறகு தனது மறைவு உறுப்பை கழுவுவார்கள். தான் எத்தனை தடவை ஊற்றினோம் என்பதை அவர்கள் ஒரு தடவை மறந்து விட்ட போது என்னிடம் நான் எத்தனை தடவை ஊற்றினேன் என்று வினவினார்கள். நான் எனக்கு தெரியாது என்று சொன்னதும் உனக்குத் தாய் இல்லாமல் போகட்டும்! ஏன் உனக்குத் தெரியவில்லை என்று கேட்டார்கள். பிறகு அவர்கள் தொழுகைக்கு உலூச் செய்வது போன்று உலூச் செய்வார்கள். பிறகு தன் மேனியில் தண்ணீரை ஊற்றுவார்கள். பிறகு இவ்வாறு தான் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் குளிப்பார்கள் என கூறுவார்கள்.

அறிவிப்பவர்: ஷுஃபா (ரலி) அவர்கள்.

ஹதீஸ் எண்: 247
ஐம்பது நேரங்கள் தொழவேண்டும் குளிப்பு கடமையாகி விட்டால் எழு முறை குளிக்க வேண்டும். சிறுநீர் பட்ட ஆடையை ஏழு முறை கழுவ வேண்டும் என்ற சட்டம் இருந்தது. அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் (இதனை மாற்றுமாறு அல்லாஹ்விடம்) கேட்டுக் கொண்டே இருந்தார்கள். (முடிவில்) தொழுகை ஐந்தாகவும், கடமையான குளிப்பு ஒரு தடவையாகவும், ஆடையில் பட்ட சிறுநீரை ஒரு தடவை கழுவுவதெனவும் ஆக்கப்பட்டது.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) அவர்கள்.

ஹதீஸ் எண்: 248
ஒவ்வொரு முடியின் அடிப்பகுதியிலும் தீட்டு இருக்கிறது. எனவே முடியை நன்கு கழுவுங்கள். மேலும் மேனியை சுத்தம் செய்யுங்கள் என்று அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள்.

இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்: இதன் அறிவிப்பாளரான ஹரீஸ் பின் வஜீஹ் என்பவரின் ஹதீஸ் முன்கராகும். (நிராகரிக்கப் படக்கூடியதாகும்) இவர் பலவீனமானவராவார்.

ஹதீஸ் எண்: 249
கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது ஒருவர் ஒரு முடியின் இடத்தை கழுவாது விட்டுவிடுவாராயின் அவருக்கு நரகத்தின் இன்னின்னவாறு (வேதனை) செய்யப்படுகிறது என்று அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதனால் தான் நான் எனது முடியை வெறுத்து (வெட்டி) விட்டேன் என்று அலி (ரலி) அவர்கள் மூன்று தடவை கூறினார்கள். மேலும் அவர்கள் முடியை வெட்டும் வழக்கமுடையவராக இருந்தார்கள்.

பாடம்: 99 குளித்த பின் உலூச் செய்தல்

ஹதீஸ் எண்: 250
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளிப்பார்கள் (பஜ்ரின் முன் சுன்னத்தான) இரண்டு ரக்அத்துக்களையும், பஜ்ர் தொழுகையையும் அவர்கள் தொழுவார்கள். மேலும் அவர்கள் குளித்தபின் புதிதாக உலூச் செய்வார்கள் என்று நான் கருதவில்லை.
அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்.