பாடம்: 132 மாதவிடாய் நேரத்தில் அணிந்திருந்த ஆடையை கழுவ வேண்டுமா?

ஹதீஸ் எண்: 357
முஆதா (ரலி) அறிவிக்கின்றார்.
மாதவிடாய்காரியின் ஆடையில் பட்ட இரத்தம் பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'அதை கழுவட்டும், அது போக வில்லையானால் மஞ்சள் நிறத்தைக் கொண்டு அவள் அதை மாற்ற வேண்டும். அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில்; தொடர்ந்து மூன்று மாதவிடாய்களைப் பெற்றேன். ஆனால் எனது ஆடையை கழுவியதில்லை' என்று கூறினார்கள்.

ஹதீஸ் எண்: 358
'எங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரே ஒரு ஆடையே இருந்தது, அவர் அதிலேயே மாதவிடாயாக இருப்பார். அதில் இரத்தக்கரை படிந்து விட்டால் அவரது உமிழ்நீரால் ஈரமாக்கி தேய்த்து விடுவார்' என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

ஹதீஸ் எண்: 359
பக்கார் பின் யஹ்யா (ரலி) அவரது பாட்டியிடமிருந்து அறிவிக்கிறார்கள்.
(அவரது பாட்டியாகிய) நான், உம்மு சல்மா (ரலி) யின் (வீட்டிற்குள்) சென்றேன். குரைஷிப் பெண்களில் ஒருவர், மாதவிடாயின் போது அணிந்திருந்த ஆடையுடன் தொழுவது பற்றி அவரிடம் கேட்டார். உம்முசல்மா சொன்னார்: நபி (ஸல்) அவர்களின் வாழ்நாளில் எங்களுக்கு மாதவிடாய் ஏற்படும். அப்போது நாங்கள் தொழ மாட்டோம். தூய்மை அடைந்த போது அவர் அணிந்திருந்த ஆடையை பார்ப்பார். இரத்தக்கரை படிந்திருந்தால் அதை கழுவுவோம், அதோடு தொழுது கொள்வோம். அதில் எதுவும் இல்லையெனில் நாங்கள் அப்படியே விட்டு விடுவோம். அதோடு தொழுவதிலிருந்து எங்களை எதுவும் தடுக்காது. பின்னல் சடையை உடைய பெண்களைப் பொருத்த வரை சிலவேளை எங்களில் ஒவ்வொருவரும் பின்னல் சடை போட்டிருப்போம். அவள் குளிக்கும் போது சடையை அவிழ்க்க மாட்டாள். அவள் மூன்று கைக்கொள்ளளவு தண்ணீரை தலையில் ஊற்றிக் கொள்வார். முடியின் அடியில் ஈரத்தை உணரும் வரை தேய்த்துக் கொள்வார். பிறகு உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றிக் கொள்வார்.

(குறிப்பு: இந்த ஹதீஸை பலவீனமானது என்று முஹம்மது நாஸிருத்தீன் அல்பாணி அவர்கள் கூறுகிறார்கள்)

ஹதீஸ் எண்: 360
அஸ்மா பின்த் அபூபக்கர் (ரலி) அறிவிக்கின்றார்.
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் 'நாங்கள் சுத்தமான பிறகு அந்த ஆடையை என்ன செய்ய வேண்டும். அந்த ஆடையுடன் தொழலாமா?' என்று கேட்க நான் செவியுற்றிருக்கிறேன். அதற்கு, '(முதலில் அதை) பார்க்க வேண்டும், இரத்தக்கரை படிந்திருந்தால் தண்ணீரைக் கொண்டு சுரண்டி விட வேண்டும். மேலும் தண்ணீரைத் தெளித்துக் கொள்ள வேண்டும். அது காணப்படாத வரை தொழலாம்' என்று பதிலுரைத்தார்கள்.