Showing posts with label தப்லீக் ஜமாஅத் என்ற பெயரில். Show all posts
Showing posts with label தப்லீக் ஜமாஅத் என்ற பெயரில். Show all posts

தப்லீக்கின் அடிப்படை அம்சங்கள் (ஆறு நம்பர்)

ஒரு சிலவற்றை மாத்திரம் தொட்டுக் காட்டுகின்றேன்.

1-ஹஜ்ரத் அலி (றழி)யின் சம்பவம் பிரபலமானதாகும் அவர்கள் உடம்பில் அம்பு தைத்து விட்டது.  அதை அவர்கள் தொழும் போது எடுத்து விடலாம் என்றெண்ணி அவ்வாறே செய்தனர் தொழுது முடிந்ததும் அம்பை எடுக்கவா வந்தீர்கள்?  என அலி (றழி) கேட்க நாங்கள் எடுத்து விட்டோமே என்றனர்.  (தொழுகையின் சிறப்பு 143)
இந்தப் பிரபல சம்பவம் எங்கிருந்து கிடைத்ததோ??? அல்லாஹ்வுக்கே வெளிச்சம்.
2-ஒரு பெரியாரின் உடலுறுப்பு பழுதடைந்து விட்டது.  அதை வெட்டியெடுக்க வேண்டியேற்பட்டது.  அவர் தொழ தக்பீர் கட்டியதும் அதை வெட்டியெடுத்து விட்டனர்.  அவருக்கு எதுவுமே தெரியவில்லை.  (தொழுகையின் சிறப்பு 144)

இந்தச் சம்பவங்களெல்லாம் முகவரியற்றவை, பிரமிப்பூட்டு வதற்காகச் சொல்லப்படுபவை என்பதில் சந்தேகமில்லை.
இப்படியெல்லாம் அம்பைஉடலிலிருந்து உருவியெடுப்பதையே அறிய முடியாதளவுக்கு தொழுகையில் லயித்தல் என்பது மனித சுபாவத்திற்கே அப்பற்பட்டது.  நபியவர்களுக்கே இப்படி யெல்லாம் ஏற்பட வில்லையே! ; இவற்றைப் பகுத்தறிவு கூட ஏற்க மறுக்கின்றதே...எப்படி? நபியவர்களுக்கே தொழுகையில் இப்படியானதொரு பக்தி ஏற்படவில்லை.  நான்தான் உங்கள் அனைவரையும் விட பக்தி மிக்கவன் எனவும் நபிகளார் கூறியிருக்கின்றார்கள். அப்படியென்றால் ?....
நபியவர்களுக்கே ஏற்படாத பக்தி அலியவர்களுக்குஏற்பட்டதா ?
இப்பவடியொரு நிகழ்வு அலி(றழி)க்கு இடம்பெற்றதாக எவ்வித ஆதாரப்பூர்வமான தகவலும் இல்லை. 
இப்படியான சம்பவங்களை இவர்கள் புனைந்து சொல்வதற்கு மற்றுமொரு உள்நோக்கமும் உண்டு அதாவது வலிமார்கள், ஷேக்மார்களின் தொழுகை, வணக்கங்கள் நம்போன்ற பாமரர்களின் தொழுகை போன்றதல்ல.  அவை உயிரோட்டமுள்ளவை எனும் போலி பிரமையை பாமரருக்கு ஏற்படுத்தி அதன் மூலம் குருபக்தியை அதிகரிப்பதே இதன் உள்நோக்கம். 


இரலெல்லாம் தொழுது பகலெல்லாம் நோன்பிருப்பது நபிவழியா?? நாச வழியா??

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வீட்டுக்கு சில நபித் தோழர்கள் வந்து நபிகளாரது வணக்க வழிபாடுகள் பற்றி அவர்களின் மனைவியிடம் கேட்டனர் . அதற்கு அவர் கூறிய பதில் திருப்தியளிக்காததால் 'நாங்களும் நபியவர்களும் ஒன்றா? நாமோ பாவிகள் அவர்களோ முன்பின் பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்கள் . எனவே நாம் நபிகளாரை விட அதிகம் வணக்கம் புரிய வேண்டும் எனமுடிவெடுத்தனர்' அவர்களில் ஒருவர் நான் இன்று முதல் இரவில் தூங்கவே மாட்டேன் .இரவு முழுக்க தொழுது கொண்டிருப்பேன் என்றும் மற்றவர் நான் இனிமேல் காலமெல்லாம் நோன்பு நோற்றுக் கொண்டிருப்பேன். என்றும் மூன்றாமவர் இனி நான் மனைவியிடம் நெருங்கவே மாட்டேன் என்றும் சத்தியம் செய்து கொண்டனர். இந்தச் செய்தி நபியவர்களின் காதுக்குச் சென்றதும் நபியவர்கள் இம்மூவரையும் அழைத்து நீங்கள்தானா இவ்வாறெல்லாம் சத்தியம் செய்து கொண்டவர்கள்?? . அறிந்து கொள்ளுங்கள் . அல்லாஹ்வின் மீது சத்தியமாக நானே உங்கள் அனைவரை விடவும் அல்லாஹ்வுக்கு மிகப் பயப்படுபவனும் தக்வா உடையவனுமாவேன். இருப்பினும் தான் இரவில் தொழவும் செய்கின்றேன் தூங்கவும் செய்கின்றேன், சில நாள் பகலில் நோன்பும் நோற்கின்றேன், சில நாள் நோன்பை விட்டு சாப்பிடவும் செய்கின்றேன், பல மனைவியரை மணந்து இன்பம் அனுபவிக்கவும் செய்கின்றேன். எனவே இதுதான் எனது வழிமுறை, எனதுவழிமுறையைப் புறக்கணிப்பவன் என்னைச் சார்ந்தவனல்ல என நபியவர்கள் கூறினார்கள். (ஆதாரம் புகாரி 4675 முஸ்லிம் 2487)

நபித்தோழர் ஸல்மான் பாரிஸியும் அபூதர்தாவும் நெருங்கிய நண்பர்கள் . ஒருநாள் சல்மான் தனது நண்பர் அபூதர்தாவின் வீட்டுக்குச் சென்றார் . அங்கு அவரது மனைவி அலங்கோலமான அழுக்கடைந்த ஆடைகளுடன் இருப்பதைக் கண்டு அபூதர்தா எங்கே ? நீங்கள் ஏன் இப்படி அவலட்சனமான ஆடையுடன் இருக்கின்றீர்கள்? என வினவினார் .அதற்கு அந்த அம்மையார் 'எனது கணவருக்கு துன்யாவில் எவ்வித தேவையுமே இல்லை . எப்போதும் வணக்க வழிபாடுகளழலேயே அவர் ஈடுபட்டிருப்பார் . என பதிலளித்தார்' இதன் பின் ஸல்மான் தன் நன்பரைச் சந்தித்து நன்பரே' வாருங்கள் சாப்பிடுவோம் என அழைக்க அவர் நான் நோன்பு என்றார் . நோன்பை விடச் சொல்லி விட்டு இருவரும் சாப்பிட்டனர் . இரவானதும் அபூதர்தா தொழ ஆரம்பித்து விட்டார் .உடனே ஸல்மான் வேண்டாம் இப்போது தூங்கு என்று தூங்க வைத்தார்.பின்னிரவில் இருவரும் எழுந்து தொழுதனர் . காலையில் அவரை நோக்கி அபூதர்தாவே நீங்கள் உங்கள் உடலுக்குச் செய்யும் கடமைகள் சில உள்ளன, உம் மனைவிக்குச் செய்யும் சில கடமைகள் உள்ளன, அல்லாஹ்வுக்குச் செய்யும் சில கடமைகளும் உள்ளன . எனவே ஒவ்வொரு கடமையையும் ஒழுங்காக நிறைவேற்ற வேண்டும் எனப் போதித்தார் . பின்னர் இது பற்றி அபூதர்தா நபியவர்களிடம் முறையிட்ட போது 'ஸல்மான் சொல்வது உண்மைதான் ' எனநபியவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி 1823 )

இது தான் நபியவர்கள் முஸ்லிம்களுக்குக் கற்றுத்தந்த வணக்க வழிமுறை . இதைப்புறக்கணித்து நடப்பவர் என்னைச் சார்ந்தவரல்லர் என நபி (ஸல்) அவர்கள் அறிவித்து விட்டார்கள் .இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு பின்வரும் சம்பவங்களைப் படியுங்கள்.

1- பகலெல்லாம் நோன்பு நோற்றதாலும் இரவெல்லாம் நின்று வணங்கியதாலும் இளைத்துக் களைத்து இளவயதிலேயே மரணமடைந்து விட்ட ஏழை வாலிபர்களின் சம்பவம். - ( தொழுகையின் சிறப்பு 10ம் ஹதீஸ் விளக்கம் .)

இச்சம்பவத்தில் அவரிடம் ஏன் இப்படி உடலை வருத்தி இபாதத் செய்கின்றீர்கள் என ஒருவர் கேட்டதற்கு 'நாங்கள் சில வாலிபர்கள் அதிக இபாதத் செய்பவர் யார் எனப் போட்டி வைத்தோம் . மற்ற அனைவரும் இபாதத் செய்தே மரணித்து விட்டனர் நான் மாத்திரமே மிஞ்சியிருக்கின்றேன் . ஒவ்வொரு நாளும் இரு தடவைகள் என்அமல்கள் அவர்களுக்கு எடுத்துக்காட்டப்படும் நிலையில் அதில் அவர்கள் குறை கண்டால் என்னைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்றார் வாலிபர் .
இவர் செய்த இபாதத் முறை நபிவழிக்கு எதிரானது . அப்படியே சரியென வைத்துக் கொண்டாலும் தன் நண்பர்களுக்கு தன் இபாதத் காட்டப்படும் போது அதில் அவர்கள் குறைகாணக் கூடாது எனும் எண்ணத்தில் அமல் செய்திருப்பதால் இதுவே இவரது அமலை இக்லாஸற்ற முகஸ்த்துதிக்குரியதாக்கி விட்டது

2-கப்ரில் தொழுத பெரியாரின் சம்பவம் ( தொழுகையின் சிறப்பு 14ம் சம்பவம் . )

.
தாபித் அல் பன்னானி எனும் பெயருடைய இப்பெரியாரின் புதல் விதம் தந்தை 50 ஆண்டுகளாக இரவு முழுக்க விழித்து வணங்கி ஸூப்ஹூ நேரத்தில் தனக்கு கப்ரில் தொழும் பாக்கியத்தைத் தருமாறு துஆ கேட்டதாகச் சொல்கின்றார் .
ஹதீஸ்க்கலை மேதையான இவர் நபிவழிக்கு மாற்றமாக எப்படி 50 ஆண்டு இரவு முழுதும் வணங்கியிருக்க முடியும் ? கப்ரில் கேள்வி கணக்கு முடிவுற்றதும் மறுமைநாள் வரை தூங்கு எனச் சொல்லி விட்டு மலக்குகள் சென்று விடுவார்கள் என நபிகளார் கூறியிருக்க இவர் எப்படி கப்ரில் எழுந்து தொழுதிருக்க முடியும் ? .
இதைத்தான் விட்டு விடுவோம் இதை நேரில் கண்டதாகச் சொல் கின்றாரே.. அவரைச் சற்று குறுக்கு விசாரணை செய்வோம்.

'மையித்தை அடக்கிக் கொண்டிருக்கும் போது செங்கல் விழுந்து துவாரமேற்பட்டதால் அதனூடாக பெரியார் தொழுததைப் பார்த்திருக்கின்றார் இவர். மய்யித் அடக்கப்பட்டு அதன் உறவினர் சற்று தூரம் சென்றதன் பின்னரே மலக்குகள் வந்துஉயிர் கொடுத்து அவரை எழுப்பி விசாரிக்கின்றனர் . அது வரைக்கும் அவரால் எதுவும் செய்ய முடியாது .தொழுவதாயினும் நோன்பு பிடிப்பதாயினும் அது உயிர் கொடுத்ததன் பின்னரே சாத்தியப்படும். அப்படியிருக்க அதற்கு முன் பெரியார் தொழுவதை இவர் பார்த்திருக்க முடியுமா ?
'கப்ருக்குள் ஒருவர் அடக்கப்பட்டதும் அவருக்கும் உலகுக்குமிடையில் திரையிடப்பட்டு விடுகின்றது . இது பற்றி அல்லாஹ்
'அவர்களுக்குப் பின்னால் அவர்கள் எழுப்பப்படும் நாள் வரைக்கும் ஒரு திரை போடப்பட்டிருக்கின்றது .'என்கின்றான் .
( ஸூரா முஃமினூன் )

இவ்வசனம் கப்றில் நடக்கும் விடயங்கள் மறைவானவை . அவற்றை சாதாரண எம்போன்ற மனிதர்களால் பார்க்க முடியாது என் பதைத்திட்டவட்டமாக எடுத்துரைக்கின்றது .

நீங்கள் இறந்தவர்களை அடக்காது விட்டு விடுவீர்களோ எனும் அச்சம் எனக்கில்லாது விட்டால் நான் செவியுறும் கப்ருடைய வேதனையை நீங்களும் செவியுறுமாறு செய்திருப்பேன் என நபியவர்கள் கூறினார்கள் .. ( ஆதாரம் முஸ்லிம் )

நபியவர்களைத்தவிர வேறு எவரும் கப்ரில் நடப்பவற்றைச் செவியுற மாட்டார்கள் என சொல்லியிருக்க மேற்படி நபர் எங்ஙனம் பெரியார் தொழுததைப்பார்த்திருக்க முடியும் .

கப்ரில் நடக்கும் விசாரணை மலக்குகள் அவரை எழுப்பி இருக்க வைப்பது, வேதனை செய்வது, நல்லவர்களின் கப்று தொலைதூரத்திற்கு விசாலமாக்கப்படுவதெல்லாம் ஹதீஸில் வந்துள்ளது . ஆனால் இவை நாம் விசாரிப்பது போன்றோ, நாம் எழுந்திருப்பது போன்றோ அல்ல . இதன் முறை எப்படி யென்பதை அல்லாஹ்வே அறிவான் . இவர் பெரியார் கப்ரில் தொழுவதைப் பார்த்திருந்தால் வழக்கமாக மனிதர்கள் தொழும் முறையில் தொழுவதையே பார்த்திருக்க வேண்டும் . அது எப்படி மூன்றடி உயர கப்ரினுள் நிகழ்வது சாத்தியமாகும் ?.
அதே போல் அறபு நாட்டு கப்றின் அமைப்பும் வித்தியாசமானது . இதற்கு லஹ்த் எனப்படும் . வழக்கமான கப்று போல்த் தோண்டியதன் பின் அதன் வலது பக்கமாக பக்க வாட்டில் பொந்து போன்று உள்அறை ஒன்று தோண்டி அதனுள்ளேயே ஜனாஸா வைக்கப்படும். பின் அவ்வறை கற்களால் மூடப்படும் . கப்றுக்கு மண்போட முன்பு கூட வெளியே இருப்பவர்களுக்கு ஜனாஸா தெரியும் வாய்ப்பே கிடையாது.

இவை அனைத்தையும் வைத்து ஆராய்ந்து பார்க்கும் போது மேற்படி சம்பவத்துக்கு ஆதாரமிக்க சான்று இல்லாததாலும், இச்சம்பவம் ஹதீஸூக்கு முரணாவதாலும் பகுத்தறிவும் ஏற்க மறுப்பதாலும் இது பெரியார்கள் மீது பக்தியை உருவாக்குவதற்காகப் புனையப்பட்ட சம்பவம் என்பது தெளிவாகின்றது .

3-அறுபது ஆண்டுகள் தொடர்ந்து அழுது கொண்டே இருந்த பெரியார். தொழுகை சிறப்பு 2ம் சம்பவம் .

4-அறுபது ஆண்டுகளாக இஷாவுக்குச் செய்த ஒழுவுடன் ஸூபஹ் தொழுத பெரியார் . தொழுகை சிறப்பு 17ம் சம்பவம் .


5-தூங்கவே மாட்டேன் என சத்தியம் செய்து 40 ஆண்டுகளாகத் தூங்காத பெரியார் . தொழுகை சிறப்பு 1ம் சம்பவம் .


6-எழுபது ஆண்டுகளாக இடைவிடாது வணங்கிய பெரியார் .தொழுகை சிறப்பு 15 ம் சம்பவம் .


7-பதினைந்து ஆண்டுகள் தொடர்ந்து படுக்காத பெரியார் தொழுகை சிறப்பு 11ம் சம்பவம் .


8- அரசனானது முதல் மனைவியுடன் உறவு கொள்ளாத உமர் இப்னு அப்துல் அஸீஸின் சம்பவம். (தொ சிறப்பு 12ம் சம்பவம்.).
நபிவழி வாழ்ந்த ஒரு நீதியான அரசர் இப்படி மனைவியின் ஹக்குகளைப் பாழ்படுத்தியிருப்பாரா?


9-நாற்பது ஆண்டுகள் இரவெல்லாம் அழுது கொண்டும் பகலெல்லாம் நோன்பு வைத்துக் கொண்டுமிருந்த பெரியார் .
( தொ..சிறப்பு 13ம் சம்பவம் .)


10- பதினைந்து நாட்களுக்கு ஒரு தடவை சாப்பிட்ட பெரியார் .
(தொழுகை சிறப்பு  7ம் ஹதீஸின் விளக்கம் )

இப்படி பெரியார்களின் சாதனைப் பட்டியல்கள் நீண்டு கொண்டே செல்கின்றன . இவையெல்லாம் ஆசாபாசங்கள், உலக தேவைகளுடன் படைக்கப்பட்டிருக்கும் மனிதர்களிடமிருந்து நடப்பது சாத்தியமா? என்பது இரண்டாவது விடயம் . சரி நடந்தது என்றே ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம் . ஆனால் இதற்கு மார்க்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளதா ? என்பதே கேள்வி . மார்க்கம் தடுத்திருக்கும் விடயத்தைச் செய்து விட்டு இபாதத் செய்து விட்டேன் என்று எப்படிச் சொல்ல முடியும் .? தீன் என்பது அல்லாஹ்வுடைய கட்டளையும் நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கை வழிமுறைகளும் என்று பெரியார்கள் சொல்லித்தந்த மந்திரத்தை பள்ளியெங்கும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் எனதன்பின் கார்க்கூன் சகோதரர்களே!!
மேற்படி பெரியார்களின் வாழ்க்கைச் சாகச நிகழ்வுகள் அல்லாஹ்வின் கட்டளையா ? அல்லது நபியவர்களுடைய வாழ்க்கை வழி முறையா?என்று ஒரு தடவையேனும் நீங்கள் சிந்தித்ததுண்டா ? சிந்தியுங்கள் இஸ்லாம் சிந்திக்கக் தூண்டும் மார்க்கம் . பகுத்தறிவுக்கு வேலை கொடுக்கும் மார்க்கம் இஸ்லாத்தை ஏற்க வரும் அன்னிய மதத்தினரைக் கூட இஸ்லாத்தைப் பற்றிச் சிந்தித்து அதன் சீரிய நேரிய தன்மையை அறிந்து விளங்கி ஏற்றுக் கொள்ளுமாறே அது தூண்டுகின்றது . எத்தனையோ மாற்றுமத நண்பர்கள் இஸ்லாத்தை அறிய விரும்பி குர்ஆன் ஹதீஸைப் படித்து இஸ்லாத்தின் மாண்புகளை அறிந்து அதனை ஏற்ற வரலாறுகள் நிறைய உண்டல்லவா? அப்படியாயின் பரம்பரை முஸ்லிம்களான நாம் ஏன் இப்படி குர்ஆன் ஹதீஸைப் படிப்பது விளங்குவதை விட்டும் எமக்கு நாமே தடைவேலி போட்டுக் கொள்ள வேண்டும் . குர்ஆன் ஹதீஸ் நமக்கு வழிகாட்டும் என்ற நம்பிக்கை இருந்தால் இன்றே அதன் பக்கம் வாருங்கள் . அதன் மூலம் இஸ்லாத்தைப் பற்றிப் படியுங்கள் . கேவலம் பத்து ரூபாவுக்கு மண்பானை ஒன்றை நீங்கள் வாங்கும் போதும் அதில் வெடிப்பேதும் உள்ளதா எனப் பதினைந்து தடவைகள் தடவிப் பார்க்கின்றீர்கள் .எதற்காக ? நாம் பத்து ரூபாய் விடயத்தில் கூட ஏமாந்து விடக் கூடாதென்பதில் ஜாக்கிரதையாக இருக்கின்றீர்கள்
இந்த மண்பானை விடயத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் கூட மார்க்க விடயத்துக்குக் கொடுக்க மாட்டேன் என்கின்றீர்களே ! ஏன்இப்படி? எனவே யார் எதைச் சொன்னாலும் சட்டென நம்பி விடாமல் குர்ஆன் ஹதீஸில் உள்ளதா ? என்று ஆதாரத்துடன் மார்க்கத்தைப் படியுங்கள் . நிச்சயமாக அல்லாஹ் எம் அனைவருக்கும்நேர்வழி காட்டுவான் . அல்லாஹ் நேர்வழி காட்ட நாடியவர்களை எவராலும் வழிகெடுக்க முடியாது இது இறைவன் வாக்கு. கடவுளை நம்பினார் கைவிடப் படார்!!!.

புத்திக்குப் பொருந்தாத புதிர்ச் சரிதைகள்.

ஹஜ்ரத் ஷக்கீக் பல்கி எனும் சூபி மகான் கூறுவதாவது ..
நாங்கள் ஐந்து விடயங்களைத் தேடினோம் அவற்றை ஐந்து இடங்களில் பெற்றுக்கொண்டோம் .
-இரணத்தில் பரக்கத்து ளுஹாத் தொழுகையிலும் ..
- கப்ருக்கு ஒளி தஹஜ்ஜத் தொழுகையிலும் ..
- முன்கர் நகீரின் கேள்விக்கு பதில் கிராஅத்திலும் .
-சிராத்தல் முஸ்தகீம் பாலத்தை எளிதாகக் கடப்பது நோன்பிலும் ஸதக்காவிலும் ..
-அர்ஷ_டைய நிழல் தனிமையிலிருப்பதிலும் கிடைக்கப் பெற்றோம் . ( தொழு ..சிறப்பு 32ம் பக்கம் . )

இரணத்தில் பரக்கத் ஏற்பட்டிருக்கலாம் .அது லுஹாத் தொழுகையால்தான் என்று எப்படி இவர் அறிந்தார்? குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் வைத்திருக்கின்றாரா?. அல்லது இவருக்குத் தனிப்பட்ட முறையில் வஹி வந்ததா ? கப்ருக்கு ஒளி தஹஜ்ஜூத் தொழுகையிலென்றால் இவர் கப்ருக்குச் சென்று பார்த்து விட்டு வந்தாரா? ஸிராத்தல் முஸ்தகீம் பாலத்தையும் பார்த்திருக்கின்றார் போலும் . அர்ஷின் கீழும் சென்று உட்கார்ந்து விட்டு வந்திருக்கின்றாரோ??....மக்களின் மார்க்க அறியாமையை மூலதனமாகப் பயன்படுத்திக் கொண்டு என்னவெல்லாம் சொல்லுகின்றார்கள் ? உண்மையிலேயே இபாதத்தின் மீது மக்களுக்கு ஆசை ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் அதற்காக குர்ஆன் ஹதீஸிலே நூற்றுக்கணக்கான சம்பவங்கள் உள்ளன . நபியவர்கள் போற்றிச் சென்ற மூன்று சிறந்த நூற்றாண்டு காலப் படுதியில் நபிவழியை அச்சொட்டாகப் பின்பற்றி வாழ்ந்த நல்லோரின் வாழ்க்கைக் குறிப்பு ஆதாரப்பூர்வமான சான்றுகளுடன் இருக்கின்றன .இவற்றையெல்லாம் விட்டு விட்டு முகவரியற்றவர்களின் மூடத்தனமான - நபிவழிக்கு முரணான, பகுத்தறிவு பழித்துரைக்கும் ஆதாரமற்ற சம்பவங்களை பக்திக் பரவசத்துடன் பள்ளியில் உட்கார்ந்து படிப்பதால் இஸ்லாத்தை அறிய முயுமா? பெரியார்கள் பெரியார்கள் என்று அவர்கள் மீது ஒரு குறுட்டுப் பக்தியை ஏற்படுத்தி பின்னர் தங்களையும் மக்கள் பெரியாகளாக மதிக்க வேண்டும் என்ற குறுகிய – சுயநல நோக்கத்துடன்தான் இவையெல்லாம் திட்டமிட்டு எழுதப்பட்டனவா ? என்று எண்ணத் தோன்றுகின்றது.

நபியவர்களை விடச் சிறந்த பெரியார் யார் ? ஸஹாபாத் தோழர்களை விடச் சிறந்த பெரியார்கள் யார்? இவர்களுடைய வாழ்க்கை எமக்கு முன்மாதிரியாக இருப்பதற்குப் போதாவிட்டால் நம்மை விட மோசமான வழிகேடர் யாரும் இருக்க முடியாது . ஸஹாபாக்களின் சம்பவங்களும் தஃலீம் தொகுப்பில் கூறப்பட்டுள்ளதுதானே என சிலர் வினவலாம் . ஸஹாபாக்களின் சம்பவங்களும் இதில் கூறப்பட்டுள்ள பெரியார்களின் சம்பவங்களும் ஒன்றுக்கொன்று முரணானவை . ஸஹாபாக்களின் சம்பவங்கள் நபிவழியை மையமாக வைத்து இடம்பெற்றிருப்பவை .இந்தப் பெரியார்களின் வாழ்வில் இடம்பெற்றதாகச் சொல்லப்படும் சம்பவங்கள் முழுக்க முழுக்க நபிவழிக்கு முரணானவை . இதை ஏற்றால் அதை மறுக்க வேண்டும் .அதை ஏற்றால் இதை மறுக்க வேண்டும் . இரவெல்லாம் நின்று வணங்குவது நபிவழியா ? பகலெல்லாம் நோன்பு நோற்பது நபிவழியா ? மனைவியுடன் உறவு கொள்ளாமல் இருப்பது நபி வழியா ? ,கப்ரில் அடக்கப்பட்டவர்களிடம் துஆக் கேட்பது நபி வழியா ? துறவறம் பூண்டு காடே கதியெனச் செல்வது நபிவழியா? சொல்லுங்கள் . சற்று சிந்தித்துப்பாருங்கள் . எந்த வழி நமக்கு வேண்டும் ? நபிவழியா அல்லது இந்த முகவரியற்ற பெரியார்களின் வழியா ? நீங்களே சிந்தியுங்கள் ,நீங்களே முடிவு செய்யுங்கள் . நாளை அல்லாஹ்வின் முன்னிலையில் நிறுத்தப்படுவீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். கப்ரிலே ஒவ்வொருவருக்கும் கேள்வி கணக்கு உண்டு .

நபியவர்களை ஒவ்வொருவருக்கும் காட்டப்பட்டு இவரைப்பற்றி என்ன கூறுகின்றாய் என்று கேட்கப்படும் . அப்போது நபிவழிப்படி நடந்த நல்லவர்கள் 'இவர்தான் எங்கள் நபி முஹம்மது . இவர் எங்களுக்கு நேர் வழியைக் காட்டினார் .அதை நாங்கள் பின்பற்றி நடந்தோம்' என்றும் நபிவழியைப்புறக்கணித்து வாழ்ந்தவர்கள் ' இவரா? இவரை எனக்குத் தெரியாதே இவரைப்பற்றி யாராரோ என்னெ ன்னவோ சொல்லிக் கொண்டிருந்தார்கள் நானும் அதையே சொல்லிக் கொண்டு திரிந்தேன் ' என பதிலளிப்பார்.
( புகாரி 1252 -முஸ்லிம் 1557)

இவ்விரு சாராரில் எந்தப் பிரிவில் நாம் சேர வேண்டுமென்று நீங்களே முடிவெடுங்கள் .அதற்காக என்ன செய்ய வேண்டுமென்றும் முடிவெடுங்கள் . நாமும் நபிவழிப்படி நடந்திருந்தால் தானே தக்க பதிலை அளிக்க முடியும் . இதை மனதில் கொண்டு நாம் செல்லும் பாதையை சீர்படுத்திக் கொள்வது ஒவ்வொருவரினதும் கடமையாகும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள் .




மூன்றாவது அடிப்படை . இல்மு திக்ரு .

ஆரம்பத்தில் அல்லாஹூத்தஆலா துன்யா ஆகிராவுடைய வெற்றியை தீனில் வைத்திருக்கின்றான் . தீன் என்பது அல்லாஹ்வுடைய கட்டளை, நபி  ஸல் அவர்களுடைய வாழ்க்கை வழிமுறை . இந்த வாழ்க்கை எம்மிடத்திலும் பூரா மனித சமு தாயத்திடத்திலும் வருவதற்கான ஒரு உழைப்பே தப்லீக் செய்யும் வேலை எனும் கோஷமே தப்லீக்கில் மூலை முடுக்கெங்கும் பட்டி தொட்டியெங்கும் பிரச்சாரம் செய்யப்படும் . ஆனால் அங்கே அல்லாஹ்வுடைய கட்டளையும் நபி (ஸல் ) அவர்களுடைய வாழ்க்கை வழிமுறையும் தான் போதிக் கப்படுகின்றதா ? என்பதே கேள்விக்குறியாகும் .
இல்மின் சிறப்பு பற்றி தப்லீக்கில் ' இல்முடைய மஜ்லிஸில் ஒரு ஸாஅத்து நேரம் அமர்ந்திருப்பது இந்த உலகம் உலகிலுள்ள வஸ்த்துக்கள் அனைத்தை விடவும் சிறந்தது 'என்றும் திக்ரின் சிறப்புப் பற்றி'திக்ருடையவன் உயிருடையவன் திக்ரற்றவன் உயிரற்ற பிணம்' என்றும் ஒவ்வொருத்தராக ஜமாஅ த்தில் எழுந்து இந்த வசனத்தைச் சொல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றார்கள் .

இல்ம் என்றால் மார்க்க அறிவு என்று அர்த்தம் . மார்க்க அறிவெனும் போது அல்லாஹ்வும் அவனது தூதரும் போதித்தவைகளுக்கே மார்க்க அறிவு எனப்படும் . இது தவிர இவற்றை சரி வரக் கற்றுக் கொள்வதற்கு உதவியாக இருக்கும் கலைகளுக்கும் இல்ம் என்று சொல்லப்படும் .

ஆனால் மார்க்க அறிவு பற்றி எந்தளவு குறுகிய கண்ணோட்டத்துடன் இவர்கள் இருக்கின்றார்கள் என்பதை நாம் சற்று விரிவாக அறிய வேண்டியுள்ளது. சுருங்கக் கூறுவதாயின் இவர்களிடத்தில் இல்ம்-- மார்க்க அறிவு அவசியம் என்று சொல்லப்படும், பேசப்படும் விடயங்களில் 25 சத வீதமானவை பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட செய்திகளாகவும் . 25 வீதமானவை நபியவர்கள் எச்சரித்துச் சென்ற பித்அத்தான மௌட்டீக விடயங்களாகவும் இன்னும் 25 வீதமானவை சிர்க்கை - இணை வைப்பை வளர்க்கும், ஆதரிக்கும் விடயங்களாகவும் இருப்பதை அறியமுடிகின்றது . ஆக கால்வாசி தூய மார்க்க அறிவும் கால்வாசி பித்அத்துக்களும் இன்னும் கால்வாசி ஷிர்க்குக்குத் துணைபோகும் விடயங்களும் மற்றும் கால்ப்பகுதி பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் வழிவந்த செய்திகளையும் கலந்த கலவையால் உருவானதே தப்லீக் அமைப்பு எனலாம் இனி இவை பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம் .

பலவீனமான, புனையப்பட்ட ஹதீஸில் உருவான இல்மு திக்ர் போதனை ...
ஸஹீஹ் என்றால் ஆதாரப்பூர்வமான ஹதீஸாகும். நபியவர்களிடமிருந்து தாம் பெற்றதாக நேர்மையான, நினைவாற்றல் மிக்கஅறிவிப்பாளர்கள் எவ்வித குளறுபடிகளோ,மாற்றமோ இன்றி அறிவிக்கும் ஹதீஸ்களே ஆதாரப்பூர்வமாக ஹதீஸ் எனக் கொள்ளப்படும் .

இதற்கு மாற்றமான ஹதீஸ்கள் பலவீனமான ஹதீஸ்களாகும். பலவீனமான ஹதீஸ்களை ஆதாரத்துக்கு எடுக்க முடியாது என்பதே ஹதீஸ்க்கலை அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும். ஆனால் தப்லீக் பெரியார்களைப் பொறுத்த வரைக்கும் இது விடயத்தில் எவ்விதக் கவனமும் இல்லாது அலட்சியமாக நடந்து கொள்வதே அவர்களின் வழக்கமாகும் .

இவர்கள் போற்றிப் புகழும் ஸூபித்துவப் பித்தர்களில் ஒருவனான இப்னு அறபி என்பவன் ஹதீஸ் பற்றி என்ன கூறுகின்றான் பாருங்கள் ...
'எத்தனையோ ஹதீஸ்களை துன்யாவுடைய உலமாக்கள் ஸஹீஹ் என்று நினைத்து அமல் செய்து கொண்டிருக்கின்றார்கள் ஆனால் நாங்கள் கஸ்புடைய ஞான நிலையில் நபிகளை நேரடியாகச் சந்தித்து இந்த ஹதீஸை நீங்கள் சொன்னீர்களா உங்களுடையதுதானா ? என வினவும்போது இல்லையே ! என்று மறுத்து விடுவார்கள் . எனவே நேரடியாக நபியிடமிருந்து கிடைத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் நாங்கள் அந்த ஹதீஸின்படி அமல் செய்வதை விட்டு விடுகின்றோம் . அவ்வாறே பலவீனமான ஹதீஸை துன்யாவுடைய உலமாக்கள் புறக்கணிக்கின்றார்கள் .ஆனால் நாங்கள் நபியிடத்தில் நேரடியாக சந்தித்து இது பற்றிக் கேட்ட வேளை இல்லையே நான் தானே அதைச் சொன்னேன் என்பார்கள் . எனவேதான் துன்யாவுடைய குறுகிய அறிவுள்ள இந்த ஹதீஸ்கலை உலமாக்களின் 'இந்த ஹதீஸ் பலவீனமானது .அது இட்டுக்கட்டப்பட்டது' எனும் பேச்சையெல்லாம் நாம் பொருட்படுத்துவதில்லை என்று உளறுகின்றான் .

இது போன்று தான் தப்லீக் உலமாக்களின் ஹதீஸ் பற்றிய அணுகுமுறையும் உள்ளது . பாமர தப்லீக் சகோதரர்களைப் பொறுத்த வரை அவர்களுக்கு நபிவழியைத்தான் பின்பற்ற வேண்டும் எனும் வைராக்கியம் இருந்தாலும் கூட அவர்களுக்குப் போதிக்கப்படும் தவறான விளக்கங்களால் அவர்களும் இவ்விடயத்தில் ஒரு வகை அறிவீனத்துடனேயே செயற்படும் அவல நிலையைக் காண முடிகின்றது .

உதாரணத்துக்கு சில நிகழ்வுகள் ....

1- நான் தப்லீக் ஜமாஅத்தில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த காலத்தில் ஓரு முறை வக்தை முடித்து விட்டு வீடு திரும்ப இருந்த வேளை. வக்து முடித்துச் செல்பவர்களுக்கு வாப்பஸ் பயான் எனும் ஒரு பயான் நடை பெறுவது வழக்கம் . அதனை நிகழ்த்த ஒரு கார்க்கூன் வந்திருந்தார் . எனக்கு நன்கு தெரிந்தவர் இன்றும் உயி;ரோடு இருக்கின்றார் . பெயரைக் கூறாது விடயத் தைத் கூறுகின்றேன் . இவர் தனது பயானில் உயர் பீட தப்லீக் பெரியார்கள் சொன்னதாக எங்களுக்குச் சொன்னசெய்தி...
'நாம் நபியவர்கள் மீது எப்படி மஹப்பத் வைக்க வேண்டு மென்றால் நபியவர்கள் சொன்னதாக, செய்ததாக எந்தச் செய்தியை அறிந்தாலும் - அது முடியுமா முடியாதா ? சாத்தியமா ? என்றெல்லாம் எதுவும் யோசிக்காது அதைத் செய்யத் துணிந்து விட வேண்டும். மாறாக அது புகாரியில் உள்ளதா ,முஸ்லிமில் உள்ளதா? ,மிஷக்காத்தில் உள்ளதா ? ஸஹீஹா, ளயீபா ? என்றெல்லாம் ஆராயக் கூடாது . இவ்வாறு துருவி ஆராய்வது நபியை முஹப்பத் வைக்கும் பக்திமான்களின் செயலல்ல ' என்று விளக்கம் கூறினார் .
(இதனை நேரில் கேட்ட சாட்சிகள் இன்னும் பலர் உள்ளனர் .)

2-இதே போன்று கொழும்பு பெரிய மர்கஸூக்கு டில்லி மர்க்கஸில் இருந்து 2002ம் ஆண்டு சில முக்கிய பெரியார்கள் வந்திருந்தனர் . இவர்கள் ஸஹீஹ்-ளயீபான ஹதீஸூக்கு ஒரு அதிசய விளக்கத்தைக் கொடுத்தார்கள் ..
.
பயானில் அப்பொரியார் சொன்னார் ' ஸஹீஹான ஹதீஸ் என் பது பால்த்தேனீர் போன்றது ,ளயீபான ஹதீஸ் சாதாரண தேனீர் போன்றது . பால்த்தேனீர் கிடைக்கா விட்டால் நாம் சாதாரண தேனீரைப் பருகுவதில்லையா ? அது போன்று தான் ஸஹீஹான ஹதீஸ் கிடைக்கா விட்டால் பலவீனமான ஹதீஸின்படி அமல்ச் செய்வதில் எவ்விதத் தவறும் இல்லை ' என்று திருவாய் மலர்ந்தார் . இன்னுமோரிடத்தில் ' ளயீபான ஹதீஸ் என்றால் என்ன தெரியுமா ? பெரிதாக ஒன்றுமில்லை . அதை அறிவித்த அறிவிப்பாளர் எப்போதாவது காலில் செருப்புப் போடாமல் நடந்திருப்பார், எப்போதாவது நின்று கொண்டு தண்ணீர் குடித்திருப்பார் . அதனால் அவர் அறிவித்த ஹதீஸைப் புறந்தள்ளி விட்டார்கள். எனவே இவர் செய்த இந்தச் சிறிய தவறுக்காக நாம் அந்த ஹதீஸையே மறுத்து விட முடியுமா ? ' என்று வினாத் தொடுத்தார் . (இதனை நேரில் கேட்ட சாட்சிகள் பலர் இன்றும் உள்ளனர் .)

பலவீனமான ஹதீஸால் இல்மு திக்ர் போதனை...
இது போன்றே ஜக்கரிய்யா மௌலானா தனது அமல்களின் சிறப்பு எனும் நூலிலே ஏகப்பட்ட கதைகளையும் முகவரியற்ற கப்ஸாக்களையும் அள்ளி விதைத்து விட்டுப் பின்வருமாறு இயம்புகின்றார்கள் .

'(பளாயில்)சிறப்புகளைக் குறிப்பிடும் அறிவிப்புக்களைக் கூறுவதில் முஹத்திதீன்கள் மத்தியில் சற்றுத் தாராளமான நிலை இருக்கின்றது . எனவே சாதாரணமான பலவீனமான அறிவிப்புக்களும் இப்புத்தகத்தில்; கூறப்பட்டுள்ளன . சூபிய்யாக்களுடைய சம்பவங்கள் சரித்திர வகையைச் சார்ந்ததாகும் . அவை ஹதீஸின் அந்தஸ்த்தை விடக் குறைவானவை என்பதும் தெளிவான விடயமாகும் . எனவே இந்நூலிலுள்ள பலவீனமான ஹதீஸ்கள் சம்பவங்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளத்தக்கவையே'.. ( அமல்களின் சிறப்பு ப: 147 )

சிறப்புகள் பற்றி பேசும் ஹதீஸ்களில் மிக அதிகமான உலமாக்கள் பலவீனமானவற்றை அறிவிக்கவே கூடாது என்று ஒரேயடியாகத் தடை விதித்துவிட்டனர். ஒரு சில முஹத்திதீன்கள்; கடுமையான நிபந்தனைகளின் பின் பலவீனமான ஹதீஸ்களைக்குறிப்பிடுவது கூடும் என்கின்றனர். அவர்கள் விதித்த நிபந்தனைகளைப் பாருங்கள் .

1-ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களினால் உறுதிப்படுத்தப்பட்ட ஒரு விடயத்துக்கு வலுவூட்டும் வகையிலேயே ளயீபான ஹதீஸ் இருத்தல் வேண்டும் .
2-அகீதா -இறை நம்பிக்கை, மறைவானவை பற்றிய விடயமாகவோ, சட்டதிட்டங்கள் பற்றியதாகவோ இல்லாதிருத்தல் வேண்டும் .
3- ளயீபான ஹதீஸ் மூலம் செய்யும் அமலுக்குக் கூலி கிடைக்குமென்று உறுதி கொள்ளாதிருத்தல் வேண்டும் .

சிறப்பு பற்றிய ளயீபான ஹதீஸ்களில் இவ்வளவு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் ஜக்கரிய்யா மௌலானா இப்படிப் பொத்தம் பொதுவாக ' தாராளமாக ளயீபானவற்றை வைத்து அமல் செய்யலாம் என்று சொல்லியிருப்பது எப்படி நியாயமாகும் .

சூபியாக்களின் சம்பவங்கள் ஹதீஸை விடத் தரம் குறைந்தவை என்று சொல்லி விட்டு ' எனவே இதிலுள்ள ஹதீஸ்களும் சம்பவங்களும் ஏற்றுக் கொள்ளத் தக்கவையே 'என்று சொல்கின்றார் . ளயீபான ஹதீஸ்களை அறிவிக்க அறிஞர்களின் சலுகை இருக்கின்றது என நியாயம் கூறியவர் அதை விட தரம் குறைந்த சூபியாக்களின் சம்பவங்களை நியாயப்படுத்த எவ்வித காரணமும் கூறாது நழுவி ' சூபியாக்களின் சம்பவங்களும் ஏற்றுக் கொள்ளத்தக்கவையே'என்று மாத்திரம் கூறிமுடிக்கின்றார் .

இதிலிருந்து தெரிவது யாதெனில் தப்லீக் பெரியார்களானவர்கள் ஹதீஸ் கலை அறிஞர்கள் நபிமொழிகளை தரம்காணக் கடைப்பிடித்த வழி முறைகள் அனைத்தையுமே உதறித்தள்ளி விட்டு நமது கருத்தை, நோக்கத்தை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் மாத்திரமல்ல இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கக் கூடிய ஷிர்க்கான சம்பவங்களையும் தாராளமாகக் கூறத்தயங்க மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம் .

ஆனால் ஆச்சரியம் !!! இவையெல்லாம் இல்மு எனும் பெயரில் தப்லீக் சகோதரர்களால் பள்ளிவாயல்கள் தோறும் அரங்கேற்றப்படுகின்றன .

இது அமல்களில் சிறப்பில் இருக்கும் அந்தரங்கங்கள் அடுத்த தஃலீம் நூல்களான ஸதக்காவின் சிறப்பு, ஹஜ்ஜின் சிறப்பு போன்றவற்றைப் பற்றி சொல்ல முடியாதளவுக்கு குப்பைகள் நிறைந்துள்ளன . அதிலுல்ல அனைத்து விடயங்களையும் ஒருவன் சரியென்று நம்பினால் அவனுடைய ஈமானே பறிபோய் விடும் என்று சொல்லும் அளவுக்கு இறைநம்பிக்கைக்கு வேட்டு வைக்கும் விடயங்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஆழமாகப் படித்தால் இவை அழகாகப் புலப்படும் . இவற்றை ஒவ்வொன்றாக எடுத்து விளக்கிக் காட்டுவது முடியாத காரியமாதலால் முதலில் ஒவ்வொரு முஸ்லிமும் ஈமானுக்கு ஊறு விளைவிக்கும் ஷிர்க், பித்அத் பற்றி ஒரளவு அறிந்து வைத்திருந்தால் - ஈமான் எனும் டாச்லைட்டை உங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு அதன் ஒளியில் இந்த இரு புத்தகங்களிலுமுள்ள விடயங்களை அலசினால் . பக்கத்துக்குப் பக்கம், பந்திக்குப் பந்தி ,வரிக்குவரி மார்க்க விரோதக் கருத்துக்களைத் தாங்கிய நச்சுக் கருத்துக்கள் வழி நெடுகிலும் இருப்பதை நீங்களாகவே ஏற்றுக் கொள்வீர்கள் .


இல்மு திக்ர் எனும் பெயரில் அரங்கேரும் பித்அத்துகள் ...

'பித்அத்து' என்றால் நபியவர்களிpன் வழிகாட்டலுக்கு மாற்றமாக மார்க்கத்தின் பெயரால் உருவாக்கப்படும் நூதன அனுஷ்ட்டானங்களைக் குறிக்கும்;. நபியவர்கள் எதை மார்க்க விடயமெனப் போதித்தார்களோ அவை மாத்திரமே தீன் ஆகும். நபியவர்கள் பித்அத் பற்றியும் அதன் தீய விளைவுகள் பற்றியும் மிக முக்கியத்துவம் கொடுத்து மக்களுக்குப் போதித்ததை நாம் அவதானிக்க முடிகின்றது . எந்த அளவுக்கென்றால் நபியவர்கள் ஏதாவது உரை நிகழ்த்த ஆரம்பிக்கும் போது பித்அத் பற்றிய எச்சரிக்கையை விடுத்தவண்ணம் பின்வருமாறு தமது உரையைத் தொடங்குவார்கள்.


'புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே ..அவனைப் புகழ்ந்து அவனிடமே உதவி தேடுகின்றேன் . பேச்சில் சிறந்தது அல்லாஹ்வின் கலாமாகிய அல்குர்ஆனாகும் . வழிகாட்டல்களில் சிறந்தது நபி முஹம்மத் அவர்களின் வழிகாட்டலாகும் . அனைத்திலும் மிகக் கெட்ட விடயம் மார்க்கத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட பித்அத்துகள் - இஸ்லாத்தில் இல்லாத மௌட்டீகங்களாகும் . இவை அனைத்துமே பித்அத்தாகும் .பித்அத்துகள் அனைத்துமே வழிகேடாகும் . அனைத்து வழிகேடுகளும் நரகத்தின் பக்கமே கொண்டுபோய்ச் சேர்க்கும்' என்று கூறியே ஆரம்பிப்பார்கள் (அபூதாவூத் 1060 நஸாயி 3991) .

மேலும் நபியவர்கள் கூறினார்கள் ...
'எனது மார்க்கமான இஸ்லாத்தில் எவர் அதிலில்லாத ஒன்றைப் புதிதாக உருவாக்குகின்றாறோ அது நிராகரிக்கப்பட்டதாகும்'; என்றும் 'எவர் நாங்கள் சொல்லாத ஒருகாரியத்தை மார்க்கத்தின் பெயரால் செய்கின்றாரோ அது நிராகரிக்கப்பட்டதாகும்' எனவும் எச்சரித்துள்ளார்கள் . ( ஆதாரம் புகாரி முஸ்லிம் .)

எனவே பித்அத் எனப்படுவது சொல், செயல் எண்ணம் போன்ற மூன்றின் மூலமும் ஏற்பட முடியும். தப்லீக் அமைப்பினரிடம் அப்படி என்ன பித்அத்துக்கள் இருக்கின்றன. ???
தப்லீக் உஸூலின் பிரகாரம் இவர்கள் 3நாள் ,40 நாள் ,4மாதம் ஒருவருடம் என வெளிக்கிளம்பிச் செல்கின்றார்கள் . இந்த நாட்களை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நிர்ணயம் செய்தீர்கள் என்று கேட்டால் துமாமா எனும் காபிரான உளவாளியை நபியவர்கள் 3 நாட்கள் கட்டிப்போட்டார்கள், மூஸா நபியை அல்லாஹ் தன்னுடன் உரையாட 40 நாட்கள் அழைத்தான், 4 மாதத்தில் கருவில் சிசுவுக்கு உயிர் கொடுக்கப்படுகின்றது என்று ஏதேதோ சம்பந்தமில்லாத காரணங்களையும் ஆதாரங்களையும் கூறி மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட முயற்சித்துக் கொண்டிருப்பார்கள். அப்படியென்றால் நபியவர்களின் தாய் அவர்களின் ஆறாவது வயதில் இறந்தார்கள். அதற்காக ஆறு வருடங்களும், நபியவர்கள் 40 வயதில் நபியானார்கள் என்பதற்காக 40 வருடங்களும் வெளிக்கிழம்பிச் செல்வார்களா ? எங்கள் தனிப்பட்ட நலனுக்காக நிர்ணயித்தோம் என்றால் விடயம் முடிகின்றது . ஆனால் அப்படிச் செய்ய மாட்டார்கள் . அதாவது சுற்றி வளைத்து தமது எண்ணம் தேவைக்கேற்ப நாட்களின் அளவை நிர்ணயித்து விட்டு அதற்கு மார்க்க சாயம் பூச முற்படுவதுதான் ஆச்சரியமான விடயம் . இனி விடயத்துக்கு வருவோம் ....

1- தப்லீக்கில் செல்ல தமது வசதிக்கேற்ப நாள் நிர்ணயிப்பதைத் தவறென்று சொல்ல முடியாது. அது அவரவர் வசதிக்கேற்ப நிர்ணயிக்கப்படும் விடயம் .ஆனால் இந்த தப்லீக் பெரியார்கள் மாதத்தில் ஒருவர் 3 நாள் வெளிக்கிழம்புவதே ஒரு மிகப்பெரிய வணக்கம் என்பது போன்ற பிரமையை உருவாக்கி 3 நாள் செல்லாவிட்டால் அவர் மாபெரியதொரு தெய்வக் குற்றத்தைச் செய்து விட்டார் என்பது போன்ற ஒரு போலி அச்சத்தை உருவாக்கி விடுகின்றனர் . 3நாள் செல்லா விட்டால் அல்லாஹ்வின் சாபம் வந்துவிடும், அவனது வேதனை நம்மைச் சும்மா விடாது . எதற்காகப் போகாது விட்டோமோ அந்தக் காரியமும் நிறைவேறாது என்பது போன்ற போலி பக்தியை, பயத்தை இவர்கள் பாமரர்களுக்குத் தோற்றுவிக்கின்றார்கள் .3 நாட்கள் சென்ற ஒருவர் அத்தியாவசிய வேலை நிமிர்த்தம் வீடு செல்ல ஏற்பட்டால் சில முக்கியஸ்த்தர்கள் ' அப்படிச் சென்றால் வக்து முறிந்து விடும் என்று கூறிப் பயமுறுத்துவதும் உண்டு. இதன் மூலம் இதுவும் தொழுகை நோன்பு போன்றதொரு வணக்கம் என்பது போன்று சித்தரிக்க முயல்கின்றனர் . இது ஒரு பித்அத் ஆகும் . வெறுமனே ஊரை விட்டு வெளிக்கிளம்புவது வணக்கமாகுமா? வெளிக்கிளம்பாமலிப்பது குற்றமாகுமா? இல்லையே!! அப்படியிருக்க ஏன் இவ்வாறு மார்க்கத்தின் பெயரால் இயக்கத்துக்கு ஆள் சேர்க்கின்றார்கள் ??
இன்று தப்லீக்கின் முக்கியஸ்த்தராக இருக்கும் காத்தான் குடியைச் சேர்ந்த எனது உஸ்தாது ஒருவர் அடிக்கடி இப்படிச் சொல்வார்..

' ஊரில் ஏதாவது பிரச்சினைகள் தோன்றும் அபாயம் ஏற்பட்டால் உடனே ஊரிலுள்ள ஜமாத் வெளியே நிற்கின்றதா ? அல்லது வெளி ஜமாஅத் ஊரில் வேலை செய்கின்றதா ? என்று பார்ப்பேன் . அப்படியிருந்தால் அல்ஹம்து லில்லாஹ் நிச்சயம் எவ்விதப் பிரச்சினையும் ஏற்படாது என்று எண்ணிக் கொள்வேன். ஏனென்றால் ஊரில் ஜமாத் நிற்கும் போது எவ்வித வேதனையையும் அல்லாஹ் அனுப்ப மாட்டான் என்று கூறுவார்கள்.

இதை எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சொன்னார்கள் . இது பித்அத்தான பேச்சு இல்லையா? அப்படியானால் கொழும்பு தப்லீக் மர்க்கஸிலிருந்து தினமும் ஜமாத்கள் வெளிக்கிழம்பிக் கொண்டு தானே இருக்கின்றன . ஆனால் இலங்கையில் முஸ்லிம்களுக்குப் பிரச்சினைகள் குறைந்த பாடில்லையே . ஜமாஅத்கள் வெளிக் கிழம்பியிருந்த காலப்பகுதியிலேயே காத்தான்குடியில் பல பிரச்சினைகள் இடம்பெற்றுள்ளதே ... இன்னும் பல இடங்களில் இவ்வாறு இடம்பெற்றுள்ளதே...





2- ஜிஹாத் என்பது இஸ்லாத்தை நிலைநிறுத்துவதற்காக இஸ்லாத்தின் விரோதிகளுடன் ஆயதமேந்திச் செய்யப்படும் புனிதப் போராகும். இதன் சிறப்பு தனியானது .உயர்வானது . இதிலே கலந்து கொள்பவர்களுக்கு அளப்பரிய நன்மைகள் கிடைப்பதாகவும் அவர் முஃமினாக மரணிப்பார் என்ற நற்சோபனமும் , இதிலே கலந்து கொண்டு தனது இன்னுயிரை நீற்பவர் ' ஷஹீத் ' தியாகி பட்டம் சூட்டப்பட்டு கௌரவிக்கப்படுவதாகவும்; இவரது பாவங்கள் இவரின் முதல்த்துளி இரத்தம் தரையில் சிந்தப்பட முன்பே மன்னிக்கப்பட்டு விடுவதாகவும் அல்குர்ஆனும் அல்ஹதீஸூம் சொல்லிக் கொண்டிருக்கின்றன .

இது தவிர இஸ்லாத்தின் உயர்வுக்காக இஸ்லாத்தின் பக்கம் முஸ்லிமல்லாத மக்களை அழைப்பதற்கான முயற்சியை தஃவா முயற்சி எனப்படும். இதற்கும் பல சிறப்புக்கள் இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் இது வேறு ஜிஹாத் வேறு . முஸ்லிம் மக்களுக்கே அவர்களுக்குத் தேவையான மார்க்க சம்பந்தப்பட்ட விடயங்களைக் கற்றுக் கொடுப்பது அதற்காக வெளிக்கிழம்புவது வேறு இதற்கு தஃலீம், தர்பியா -அறப்போதனை எனப்படும். இவையனைத்துமே நல்ல விடயங்களாயிருப்பினும் இவை வெவ்வேறானவை . இவற்றுக்குக் கொடுக்கப்படும் நன்மைகளும் வெவ்வேறானவை . ஆக நபியவர்களின் காலத்தில் வாளேந்தி ஜிஹாத் செய்வதற்காகவும் நபியவர்கள் பல ஜமாஅத்துக்களை அனுப்பி வைத்தார்கள் . முஸ்லிமல்லாதவர்களை இஸ்லாத்தின் பக்கம் அழைப்பதற்காகவும் பல ஜமாஅத்களை அனுப்பியுள்ளார்கள். முஸ்லிம்களுக்கு மார்க்க விடயங்களைக் கற்றுக் கொடுப்பதற்கும் ஜமாஅத்துக்களை அனுப்பியிருக்கின்றார்கள் ஒவ்வொரு பிரிவினருக்கும் வெவ்வேறு வகை நன்மை கிடைப்பதாகவும் வாக்களித்துள்ளார்கள் .

ஆனால் இன்றைய தப்லீக் பெரியார்கள் இவ்விடயத்தில் மாபெரும் மோசடியையும் பித்அத் ஒன்றையும் செய்து கொண்டிருக்கின்றார்கள் ஜிஹாத் சம்பந்தமாக , அதில் செல்வதன் சிறப்பு அதில் ஈடுபடுபவருக்குக் கிடைக்கும் நன்மைகள் சம்பந்தமாக வந்துள்ள நூற்றுக்கணக்கான குர்ஆன் வசனங்களையும் நபிமொழிகளையும் மாற்றித் திருபுபடுத்தி அவற்றையெல்லாம் இவர்கள் புரியும் தப்லீக் முயற்சி சம்பந்தமான, அதற்கு ஆதாரமாக வந்துள்ள வசனங்களாக அனைத்து இடங்களிலும் பிரச்சாரம் புரிந்து வருகின்றனர் . இது இவர்கள் அல்குர்ஆன் வசனங்களுக்கு பொருள் சொல்லும் விடயத்தில் புரியும் மகா பெரிய பித்அத்துகளில் ஒன்றாகும் . அதே போன்று இவர்களது ஜமாஅத்தில் வெளிக்கிளம்பாதவர்களை ஜிஹாதுக்குச் செல்லாதிருந்தவர்களைக் கண்டித்து இறங்கிய வசனங்களை ஆதாரமாகக் காட்டி சாடுகின்றனர் ,தூற்றுகின்றனர் , அச்சுறுத்துகின்றனர் . இது எவ்வளவு பெரிய குற்றம் என்று தெரியுமா ?? இப்படியான இறை வசனங்களில் மோசடிசெய்த எஹூதிகளைக் கண்டித்து அல்லாஹ்...

'அவர்கள் (இறை வசனங்களை) அதன் இடத்தை விட்டும் திரிபு படுத்துகின்றனர் . இவர்களது இதயங்களைத் தூய்மையாக்க அல்லாஹ் விரும்பவில்லை . இவர்களுக்கு உலகத்திலேயே பெருங்கேவலமும் , மறுமையில் அல்லாஹ்வின் கடுமையான வேதனையும் உண்டு ' என்று கூறுகின்றான் .
(அல் மாயிதா 41ம் வசனம் )

நபியவர்களும் 'யார் அல்குர்ஆனுக்கு தமது மனோ இச்சைப்படி – தனது அபிப்பிராயத்தின் படி வியாகியானம் வழங்குகின்றாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும் என்றும் ஒருவர் தனது சொந்த அபிப்பிராயத்தின் படி குர்ஆனுக்கு விளக்கமளிக்க முற்பட்டால் அவர் சரியாகச் சொன்னாலும் தவறிழைத்தவராகவே கருதப்படுவார் எனவும் கூறியுள்ளார்கள் . (ஆதாரம் திர்மிதி 3676 )

ஆனால் இவர்களோ இவ்வாறு ஜிஹாத் சம்பத்தப்பட்ட வசனங்களையும் நபிமொழிகளையும் தமது இயக்கத்துக்கு ஆள்ச் சேர்க்கப் பயன்படுத்தியதன் விளைவு இன்று ஜிஹாத் என்றாலே குலை நடுங்கமளவுக்குக் கோழைத்தனமும் , ஜிஹாதைப் பற்றிய தவறான கண்ணோட்டம் முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலேயே உருவாகியுள்ளது. ஏதோ நபியவர்களே தப்லீக் ஜமாஅத்தின் அமீராக இருந்து ஜமாஅத்துக்களை அனுப்பி வைத்தது போன்று 'நபியவர்கள் ஜமாத் ஒன்றை அனுப்பினாங்கோ ' என்று தமது பயான்களில் அல்லாஹ்வுக்குக் கொஞ்சமும் பயப்படாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் . அல்லாஹ்தான் நேர்வழிகாட்ட வேண்டும்.

3- தீன் என்பதன் பொருள் ஆளமானது , விரிவானது . ஒரு மனிதன் இஸ்லாத்தின் வழிகாட்டல்ப்படி செய்யும் மார்க்க உலக சம்பந்தப்பட்ட காரியங்கள் அனைத்துமே தீன் என்ற சொல்லுக்குள் அடங்கும் . நபியவர்கள் ஒருவன் தனது மனைவிக்கு ஒரு கவளம் உணவு ஊட்டி விடுவதைக்கூட ஏன்.. தன் அவன் மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடுவதைக்கூட தீனுடைய விடயம் , நன்மையை ஈட்டித்தரும் விடயம் என்று கூறியுள்ளார்கள் . ( புகாரீ )
.
ஆனால் இன்றைய தப்லீக் பெரியார்கள் தீன் என்ற சொல்லைச் சுருக்கி குறுகிய வட்டத்துக்குள்ளாக்கி தப்லீக் ஜமாஅத்தில் செல்வதும் அதன்பெரியார்கள் அங்கீகரித்தவற்றில் ஈடுபடுவதும் , தஃலீம் புத்தகங்களை பக்தியுடன் வாசிப்பது மாத்திரமே தீன் என்று பாமர கார்க்கூன்கள் புரியுமளவுக்கு ஆக்கிவிட்டார்களா இல்லையா? இதற்குப் பெயர் பித்அத்தா இல்லையா,? நீங்களே சொல்லுங்கள் .

இன்று தப்லீக் கார்க்கூன்கள் தமக்குள் ஒருவரைப் பற்றிப் பேசிக் கொள்ளும் போது அவர் எவ்வளவுதான் நல்லவராக ஆலிமாகக் கூட இருப்பினும் தப்லீக்குடன் தொடர்பில்லாதவராயின் ' அவர் தீனை விட்டும் தூரமானவர்' என்று சொல்கின்றார்களா இல்லையா? நீங்களே தீர்ப்பளியுங்கள் .

இந்த தப்லீக் பெரியார்கள் இவர்களது ஜமாஅத் மாத்திரம் தான் தீன் வழி நடக்கும் ஜமாஅத் . இதில் பங்கெடுக்காதவர்கள் தீனை விட்டும் தூரமானவர்கள் . இதில் வாசிக்கப்படும் - இவர்களது உலமாக்களால்ப் போதிக்கப்படும் விடயங்கள் மாத்திமே தீனுடைய விடயங்கள் ஏனைய அனைத்துமே தீனுக்கு அப்பாற்பட்டவை என்று இவர்களுக்குக் கற்றுக்கொடுத்துள்ளதால் தப்லீக் கார்க்கூன்கள் இப்படிப் பேசித்திரிவதை தெளிவாக அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது .இதுவும் இஸ்லாத்துக்குத் தவறானதொரு வடிவம் கொடுக்கும் மகா பெரிய பித்அத்துக்களில் ஒன்றாகும் . இந்த ஹக்கான தீனுடைய வேலையில் நாம் இஸ்த்திகாமத்தாக இருக்க வேண்டும் . இதில் குறை காண்பவர் இதை விட்டும் வெளியேற்றப்படுவார் ' போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் இவர்களிடம் சர்வ சாதாரணமாக உபயோகிக்கப்படுகின்றன . இவை மிக அபாயகரமான வார்த்தைகள் . தப்லீக்கில் இல்லாத அனைவரும் வழிகேட்டில் இருக்கின்றார்கள் என்று மறைமுகமாக உணர்த்தும் வார்த்தைகள் .

என்னை ஒரு தடவை தப்லீக்கில் பயான் செய்வதற்காக அழைத்திருந்தார்கள். எனக்கும் தப்லீக்கும் இருந்த தொடர்பு குறைய ஆரம்பித்திருந்த காலம் அது. நான் நல்லபடியாகவே பயான் செய்து விட்டு தஷ;க்கீல் பண்ணும் போது(வக்தில் வெளிக்; கிளம்ப ஆள்த்திரட்டல்) பயானில் இருந்தவர்களைப்பார்த்து 'சகோதரர்களே! இன்று ஒவ்வொருவரும் தீனைப்பற்றி அறிந்திருக்க வேண்டியிருக்கின்றது . இன்று தீனைத் தெரிந்து கொள்ள பல வழிகள் உள்ளன .அதிலொன்றுதான் இந்த தப்லீக் ஜமாஅத் அமைப்பாகும் எனவே தயங்காது பெயர்களைத் தாருங்கள் என்றேன் ' அவ்வளவுதான் . பயானின் பின்னர் அவர்கள் என்னோடு நடந்து கொண்ட விதமே வேறு . அதுதான் நான்தப்லீக்கில் செய்த இறுதி பயானாகும் . அதன் பின்பு எந்த பயானுக்கும் என்னை அழைப்பது கிடையாது . அவர்களது குற்றச்சாட்டு என்ன தெரியுமா ? நான் 'இன்று இஸ்லாத்தை – தீனை அறிந்து கொள்வதற்குரிய ஒரே வழி தப்லீக்கில் வெளிக் கிளம்பிச் செல்வது மாத்திரம்தான் ' என்று சொல்லியிருந்தால் பாராட்டியிருப்பார்கள் . பிரியாணி சாப்பாடும் தந்து உபசரித்திருப்பார்கள் . ஆனால்??.. இதன்பின் நான் தப்லீக்கில் இருந்து ஓரங்கட்டட்பட்டு விட்டேன் . எப்போதாவது இவர்களின் ஜூமைராத் பயானில் இருந்து விட்டால் ஒற்றர்களைப் பார்ப்பது போது மிகவும் எச்சரிக்கையுடன் எனது நடவடிக்கைகளை அவதானிப்பார்கள் .

இன்று இந்த அமைப்புக்கு ஆதரவு வழங்குவது போல் செயற்படும் அதிக மௌலவிமார் தாம் இந்த அமைப்பினருக்கு ஆதரவாக இருக்காவிட்டால் ஒதுக்கப்பட்டு ஓரங்கட்டப்பட்டு விடுவோம் . ஆதரவளித்தால் கண்ணியத்துடன் நடத்துவார்கள் என்ற குறுகிய நோக்கத்துடனேயே செயற்படுகின்றார்கள் . அவர்களிடம் நீங்கள் மனந்திறந்து பேசும் போது இது உண்மையென்பதை அறிந்து கொள்வீர்கள் . இதை நான் பலமுறை பல உலமாக்களிடம் பரீட்சித்தறிந்திருக்கின்றேன் .


4- பைதல் (கால்நடையாக ) ஜமாஅத்தில் செல்லுதல் .

கால்நடையாக ஜமாஅத்தில் செல்வதை மிகப்பெரியதொரு மார்க்கப்போர் செய்வது போன்று இவர்களுக்குச் சித்தரிக்கப்படுகின்றது . யாருடைய இரு பாதங்களும் இறைபாதையில் புழுதி படிந்தனவாகின்றதோ அவற்றை அல்லாஹ் நரகத்துக்கு ஹராமாக்கி விடுகின்றான் எனும் ஹதீஸை இதற்கு ஆதாரமாகக் கொள்கின்றனர். இந்த ஹதீஸ் ஆதாரப் பூர்வமானதுதான் .( புகாரி , திர்மிதி, தாரமி,அஹ்மத்,மஜ்மஉஸ்ஸவாயித்)

ஆனால் இவர்களது செயலுக்கு அது ஆதாரமாகாது . ஏனெனில் அல்லாஹ்வின் பாதை என்பது ஜிஹாதையே குறிக்கும். றிவைத் தேடும் பயணத்துக்கும் சில வேளை அல்லாஹ்வின் பாதை எனும்பெயர் உபயோகப்படுத்தப்பட்டாலும் இந்த ஹதீஸைப் பொறுத்தவரைக்கும் அது பொருந்தாது .காரணம் இந்த ஹதீஸின் தொடரிலேயே எவர் அல்லாஹ்வின்; பாதையில் காயமுற்று அதன் மூலம் இறக்கின்றாறோ அவரது இரத்தம் மறுமையில் கஸ்த்தூரி வாடையை விடவும் மணம் வீசும் எனவும் உள்ளது . எனவே இந்த ஹதீஸில் அல்லாஹ்வின் பாதையென்பது ஜிஹாதையே குறிக்கும் என்பது தெளிவாகின்றது .

ஒரு பேச்சுக்கு அப்படி வைத்துக் கொண்டாலும் கூட எதேர்ச்சையாக அவரது கால் மண்ணில் மிதிபட்டு புழுதி படிவதே இங்கு நோக்கமேயன்றி வேண்டுமென்று புழுதியில் போட்டு காலைப் புரட்டியெடுப்பது நோக்கமன்று . ஆனால் தப்லீக்கின் கால்நடை ஜமாஅத்தின் நோக்கம் இதுவாகவே உள்ளது . எல்லா வாகன வசதியிருந்தும் பிரயாணத்துக்குரிய செலவினங்களிருந்தும் இவ்வாறு நடந்து செல்வது பிறருக்கு தாம் செய்யும் தியாகத்தை வெளிக்காட்டி ஒருவித செயற்கை பக்தியை உருவாக்குவதே இவர்களது உள்நோக்கம் .

ரோமாபுரிப்போரின் போது மாலிக் எனும் ஒரு நபித்தோழர் வாகனமிருந்தும் தரையில் நடந்து சென்றதாகவும் மற்ற முஸ்லிம்கள் அவரிடம் இது பற்றிக் கேட்ட போது மேற்படி ஹதீஸைக் கூறியதாகவும் அதன் பின்பு அங்கிருந்தவர்களில் அதிகம் பேர் வாகனத்தை விட்டு இறங்கி காலில் புழுதி படிய வேண்டுமென்பதற்காக கால்நடையாக வந்ததாகவும் ஒரு சம்பவம் உள்ளது . இது நபியவர்களது காலத்திற்குப் பிறகு நடந்தது . இதற்கு நபியவர்களின் அங்கீகாரம் இல்லாததால் இது ஹதீஸ் இல்லை ஒரு சில நபித்தோழர்களின் தனிப்பட்ட செயலே இது .எனவே இதை ஆதாரத்துக்கு எடுக்க முடியாது . மேலும் இது வேறு சில நபிமொழிகளுக்கும் முரண்படுகின்றது . எப்படி?,

நபியவர்கள் ஒருமுறை பள்ளிக்கு வந்த போது ஒரு மனிதர் மிகு ந்த நேரமாக வெயிலில் நின்று கொண்டிருப்பதைக் கண்டு அது பற்றி ஒருவரிடம் வினவ அவர் ' பகல்முழுதும் வேகும் வெயி லில் நின்ற நிலையிலேயே உட்காராமல் நோன்பு நோற்பதற்கு நேர்ச்சை வைத்திருப்பதாகக் கூறினார் . அதற்கு நபியவர்கள் அவரது நோன்பை நிறைவேற்றச் சொல்லுங்கள் . வெயிலில் நிற்கவோ , உட்காராமல் நின்றுகொண்டிருக்கவோ வேண்டாம் . நீங்கள் படும் இந்த வீண்சிரமத்தை விட்டும் அல்லாஹ் தேவை யற்றவன் என்றார்கள் . ( ஆதாரம் முஸ்லிம் 3100 )

மற்றுமொரு நபித்தோழர் தான் கால்நடையாக நடந்துசென்று ஹஜ்ஜூச் செய்ய நேர்ச்சை வைத்திருப்பதாகக் கூறியபோது நிச்சயமாக இவ்வாறு ஒருவர் தன் உடம்பை வருத்திக் கொள்வதில் எவ்விதத் தேவையுமில்லை அவர் வாகனத்தில் ஏறிச் சென்றே ஹஜ் செய்யட்டும் என்று கட்டளையிட்டார்கள் . ( புகாரி 1732 முஸ்லிம் 3100)

எனவே நபியவர்கள் தடுத்த ஒரு விடயத்தை இன்று தப்லீக் அமைப்பினர் தீன் என்ற போர்வையில் செய்து மக்களின் அனுதாபத்தைத் தம் பக்கம் திருப்ப முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள் . எனவே நபியவர்கள் இபாதத் இல்லை என்று சொன்ன ஒரு செயலை(பைதல் ஜமாஅத்தை) இபாதத்தின் பெயரால் செய்வதற்குப் பெயர் என்ன ? பித்அத்தா? ஸூன்னத்தா ? நீங்களே முடிவு செய்யுங்கள் .

5- இவர்களின் தஃவா கஸ்துகளின் போது கூட்டு துஆ ஓதி விட்டு வெளியேறிச் செல்லல் . இதுவும் நபியவர்கள் காட்டித்தராத பித்அத்தாகும் . நபியவர்கள் எத்தனையே ஸஹாபாக்களை மார்க்கத்தைக் கற்றுக் கொடுப்பதற்காகவும் , போருக்காகவும் அனுப்பியிருக்கின்றார்களே ! அவ்வேளை கூட்டுப்பிரார்த்தனை புரிந்து விட்டுத்தான் வழியனுப்பினார்களா ? இதற்கான சரியான ஆதாரத்தை நபிவழியிலிருந்து காட்ட முடியுமா? எனவே இந்தக் கூட்டுப் பிரார்த்தனை நபிவழியா? அல்லது அவர்கள் எச்சரித்த பித்அத்தா ?

6- காலை மாலை திக்ர் எனும் பெயரில் ஹதீஸில் வந்த திக்ரு முறைக்கு மாற்றமாகவும் , இவர்களின் பெரியார்கள் சொல்லிக் கொடுத்த பித்அத்தான முறையிலும் திக்ர் செய்தல் .

காலையிலும் மாலையிலும் அதிகமதிகம் திக்ர் செய்யுங்கள் என அல்குர்ஆனில் அல்லாஹ்வே சொல்லுகின்றானே! எனக் கூறினால்... உண்மைதான் . தொழுமாறும் அல்லாஹ் கூறுகின்றான் அதற்காக 6 வேளை தொழ முடியுமா ? ளுஹ்ரை 5 ரக்அத்துகளாகத் தொழ முடியுமா ? ஏன் முடியாது நபியவர்கள் அப்படிச் செய்யவில்லை என்கின்றோம். அப்படியானால் திக்ரை மட்டும் எப்படி காலை மாலையில் நபிவழிக்கு மாற்றமாக நூறு ,நூறு தடவைகள் செய்ய முடியும் ?. லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதை மாத்திரமே 100 தடவைகள் காலை மாலையில் ஓதி வருவதற்கு ஆதாரமிருக்கின்றது. ஏனையவற்றுக்கு ??

7- ஜூமைராத் எனும் பெயரில் வெள்ளிக் கிழமை இரவில் ஒன்று கூடி அன்றிரவு பள்ளியில் இஃதிகாப் இருந்து வணக்கங்கள் புரிதல் வெள்ளிக்கிழமை இரவை மாத்திரம் வணக்கங்கள் புரிவதன் மூலம் விசேஷப்படுத்தக் கூடாதென நபியவர்கள் தடை செய்துள்ளதால் இது பித்அத்தாகின்றது. எதேச்சையாகத்தான் மக்களின் வசதிக்கேற்ப இந்த நாள் தெரிவு செய்யப்பட்தென்று சொல்ல முடியாது ஏனெனில் வெள்ளியிரவில் இபாதத் செய்தல் ஆரம்பத்திலிருந்தே சூபிகளின் மரபு வழிவந்த வழிமுறைகளில் உள்ளதாகும் .

எனவே நான் மேலே சுட்டிக்காட்டியபடி தப்லீக் ஜமாஅத்தில் இல்மு – மார்க்க அறிவு எனும் பெயரில் பலவீனமான ,இட்டுக் கட்டப்பட்ட செய்திகள் போதிக்கும் பாடங்களும் , இஸ்லாத்திலில்லாத பித்அத்தான மௌட்டீக விடயங்களும், ஏன் ஷிர்க்கான விடயங்களும் தாராளமாகப் போதிக்கப்படுகின்றன என்பதை முடிந்தளவு ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டியுள்ளேன் .

இது தவிர இல்மு திக்ரின் போர்வையில் பல்வேறு ஷிர்க்கான விடயங்களும் இந்த அமைப்பில் போதிக்கப்படுகின்றன . விரிவஞ்சி அவற்றைத் தவிர்த்துக் கொள்கின்றேன் .

இவைகளும் இல்மு திக்ர் தானா???

ஜிஸ்திய்யாத் தரீக்காவின் ஷேகுமார் வரலாறு என்று ஒரு புத்தகமுண்டு . ஜக்கரிய்யா மௌலானா அவர்களே தமது கைப்பட எழுதியது . இதில் ஷேக்மார்களின் கராமத் எனும் பெயரில் சில சம்பவங்களைக் கூறுகின்றார்கள் . இவை நடந்ததற்கு எவ்வித ஆதாரமும் இல்லாதது தனி விடயம் . இருப்பினும் இது எப்படி இஸ்லாத்துக்கு முரண்படுகின்றது என்பதைக் கூட கவனிக்காது ஷேகுல் ஹதீஸ் - ஹதீஸ்க்கலை மேதையான இவர்கள் எழுதியுள்ளதே ஆச்சரியமான விடயமாகும் . அவற்றில் சிலவற்றை இங்கு சுட்டிக்காட்டக் கடமைப்பட்டுள்ளேன் .

1- ஹஸன் பஸரி என்பவர்கள் பிலபலமான தாபியீன்களில் ஒருவராவார்கள் . இவர்களுக்கும் தரீக்காக்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை .இருந்தும் ஜக்கரிய்யா மௌலானா அவர்கள் இவர்களை ஜிஸ்தியா தரீக்காவின் ஐந்தாவது ஷேக்காக குறிப்பிட்டிருக்கின்றார்கள் . நபியவர்களையே ஜிஸ்திய்யாவின் முதலாவது ஷேக் என்றவருக்கு இது பெரிய விடயமா ? அவர்களது பொன்மொழிகள் என கூறுவதாவது ...

நீங்கள் ஹறாமான பொருட்களின் மீது கூட வெறுப்புக் காட்டுவதில்லை .ஆனால் ஹலாலான பொருட்களின் மீதே வெறுப்புக் காட்டும் பெரியார்களை நாம் சந்தித்திருக்கின்றோம் . ( ஜிஸ்தியா ஷேக்கள் வரலாறு 153 )

ஹலாலானவற்றை உண்ணாமல் தவிர்ந்திருப்பது வேறு விடயம் ஹலாலானவற்றை வெறுப்பவர் எப்படிப் பெரியாராக இருக்க முடியும்.? இதை ஹஸன் பஸரி சொல்லியிருப்பாரா ?

ஹஸன் பஸரியவர்கள் பல தடவைகள் நாயைக் கண்டால் யா அல்லாஹ் இந்த நாயின் பொருட்டால் என்னை ஏற்றுக் கொள்வாயாக .. என்று பிரார்த்திப்பார்கள் .
( ஜிஸ்தியா ஷேக்கள் வரலாறு 150 )

நாய் என்ன அல்லாஹ்வுக்கு நெருக்கமா நல்லடியாரா ? இது அல்லாஹ்வையே அவமானப்படுத்துவது போலில்லையா ? இந்த வகை வஸீலாவே தடைசெய்யப்பட்டதாகும் . அப்படியிருக்க கேவலம் நாயின் பொருட்டால் கேட்பது ?? ஹஸன் பஸரி ஒரு ஹதீஸ்கலை மேதை இதை அவர்கள் சொல்லியிருப்பார்களா ? நிரூபித்துக்காட்ட முடியுமா?

2- காஜா அப்துல் வாஹித் :
இவர்கள் பற்றிக்கூறும் போது இவர்கள் இரவெல்லாம் நின்று வணங்குபவராகவும்,பகலில் நோன்பு நோற்பவராகவும் மூன்று நாட்களுக்கு ஒருமுறையே நோன்பு திறப்பவராகவும் இருந்தார் . ( அதே நூல் 154)

இவையெல்லாம் நபிகள் தடைசெய்த விடயங்களல்லவா ? இவற்றை ஒரு ஆலிம் இறைநேசச் செல்வர் எப்படிச் செய்ய முடியும் .சரி அவரை விடுவோம் .இதை இபாதத் என சித்தரித்து எழுதும் ஆசிரியர்; ஜக்கரிய்யா மௌலானா பெரிய ஷேகுல் ஹதீஸ் ஹதீஸ்க்கலை மேதையாச்சே.. அவரா இப்படி ?

3- புளைல் இப்னு இயாழ் அவர்களைப் பற்றிக் கூறும் போது ..
' இவர்கள் ஒளூச் செய்கையில் ஒருமுறை ஒவ்வொறு உறுப்புக்களையும் மூன்று தடவை கழுவுவதற்குப் பதிலாக இரண்டு தடவைகள் கழுவி விட்டார்கள் . அன்றிரவு நபியவர்கள் இவரைச் சந்தித்து ( நினைவிலேயே!!) புளைலே ! என்னுடைய ஸூன்னத்தை விட்டதற்காக நீர் தூரமாகி விட்டீர் என்றார்கள் . இந்தக் குறையை நிவர்த்தி செய்வதற்காக அவர்கள் ஒருவருடம் தினமும் ஐநூறு றக்அத்துக்கள் நபில்த் தொழுவதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டார்கள் . மேலும் என்னை யார் சந்திக்காமலும் நான் நோய்வாய்ப்பட்டால் நலன் விசாரிக்க வராமலும் இருக்கின்றாரோ அவருக்கு நான் நன்றி கூறுவேன் என்றார்களாம் . ( அதே நூல் ப: 168-169 )

உழூவின் போது உறுப்புக்களை இரண்டு தடவைகள் கழுவு வதும் நபிவழியே ! நபியவர்கள் அவ்வாறு செய்துள்ளார்கள்
ஆதாரம்: (புகாரி 154) இப்படியிருக்க நபியவர்கள் எங்ஙனம் எமது ஸூன்னத்தைப் புறக்கணித்து விட்டாய் எனக் கூற முடியும் நோயுற்றவரைச் சந்திக்கச் செல்வது நபிவழி . அதை இவர் எப்படி உதாசீனம் செய்ய முடியும் ?? . அதற்கு மேல் ஷேகுல் ஹதீஸூக்கு எப்படி இவையெல்லாம் கிடைத்திருக்க முடியும் . எப்படி கிடைத்ததையெல்லாம் இஸ்லாத்துக்கு முரணாகின்றதா என ஆராந்து பார்க்காமல் எப்படி எழுத முடியும் ?? .

3-இப்றாஹீம் இப்னு அத்ஹமைப் பற்றிக் கூறும் போது ..
இவர்கள் தொடர்ந்து நோன்பு நோற்று நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒரு முறை நோன்பு திறப்பார்களாம் . அதுவும் புற்பூண்டுகளைக் கொண்டுதான் நோன்பு திறப்பார்களாம் ( அதே நூல் ப: 174)

இவ்வாறு செய்வது நபிவழியா? இதைத் தான் நபியவர்கள் போதித்தார்களா ? . உண்மையில் அத்ஹம் இப்படிச் செய்திருந்தாலும் கூட அது அவரது அறியாமையே ! ஆனால் ஷேகுல் ஹதீஸ் இதை எப்படி எழுத முடியும்? . இதை அவ்லியாக்களின் அற்புத வரலாறாகக் கூற முடியும் ? . இதைப் பின்பற்றிப் பிறரும் இப்படிச் செய்தால் அவர்கள் அல்லாஹ்வின் அருளைப் பெற முடியுமா ?.

நபியவர்கள் நோன்பு திறக்கும் போது கனிந்த பேரீச்சை கொண்டும் அது இல்லையெனில் காய்ந்த பழத்தாலும் அதுவும் இல்லையெனில் தண்ணீரைக் கொண்டுமே நோன்பு திறப்பார்கள் . ( திர்மிதி : 657 )

இதை விடுத்து புற்பூண்டுகளால் நோன்பு திறப்பது நபி வழியா ? ஷைத்தானின் வழியா ?

இவர்கள் தோட்ட வேலை செய்து கொண்டிருந்த போது ஒருவன் வந்து இவரிடம் பழம் கேட்க இவர் மறுக்கவே அவன் தலையில் அடித்து விட்டான் . உடனே இவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் இத்தலை அடிவாங்குவதற்குரியதே எனக்கூறினார்கள் . ( அதே நூல் பு 178 )

3- ஹாஜா ஹூதைபதுல் மர்அஸி...

இவர்கள் ஞானத் தேர்ச்சி பெற்றவர்களாயிருந்தார்கள் . ஆறு நாள்களுக்கு ஒரு தடவையே நோன்பு திறப்பார்கள் . இது பற்றிக் கேட்டால் ஆன்மீக மக்களின் உணவு லாயிலாஹ இல்லல்லாஹ் ஆகும்' என்று கூறுவார்கள் .

அப்படியாயின் ஆறு நாட்களுக்கொரு முறை எதற்காக ஆன்மீக மக்களின் உணவைப் புறக்கணித்து விட்டு உலக மக்களின் உணவை உண்டு நோன்பை முறிக்க வேண்டும் ?

நன்மைகள் அனைத்திலும் சிறந்தது மனிதன் தனது வீட்டிலேயே இருப்பதாகும் .பர்ழுத் தொழுகைக்காக பள்ளிக்குப் போக வேண்யதில்லையென்றால் நான் வீட்டிலேயே இருப்பேன் என்றார்கள்

எப்போதும் வீட்டிலேயே முடங்கியிருப்பது நபியவர்கள் காட்டித்தந்த வழியா ? துறவிகளின் வழியா? வீட்டிலேயே இருந் தால் எப்படி மக்களை இஸ்லாத்தின் பக்கம் அழைப்பது .??

காஜா மம்ஷாத் அலவி அவர்கள் குழந்தைப்பருவத்திலும் பகலில் ஒருபோதும் பால்க்குடிப்பதில்லை . ஆகவே இவர்கள் குழந்தையிலேயே அவ்லியாவாக இருந்தார்கள் என்று கூறுவர்.

இந்த அறியாமையை என்னவென்று விபரிப்பது .

இவர்கள் இறக்கும் போது அருகிலிருந்த ஒருவர் இவருக்கு சுவனத்தைக் கொடுக்குமாறு இறைவனிடம் பிரார்த்தித்தார். இதனைக் கேட்ட இவர் முப்பது வருடமாக சுவர்க்கம் தன்னைப் பூரணமாக அலங்கரித்துக் கொண்டு என்முன் வந்து கொண்டிருந்தது நான் ஒரு முறை கூட அதனை ஏறெடுத்தும் பார்க்க வில்லை .நான் சுவர்க்கத்தின்எஜமானனை ஆசிக்கின்றேன் என்றார்கள் ( அதே நூல் ப: 192 )

அடப் பாவமே ! நபியவர்கள் சொர்க்கத்தைக் கேட்டுப் பிரார்த் திக்குமாறு கூற இவர்களோ ....

காஜா ஸையித் அபூ யூஸூப் ..
' இவர்களது சன்னிதானத்தில் ஒரு மனிதன் மூன்று நாட்கள் தங்கியிருந்தால் அவன் கராமத் உடையவனாகி விடுவானாம் . இவர் ஒரு முறை தர்வேஸ் ஒருவரின் வீட்டில் விருந்தினராகத் தங்கினார் . அன்றிரவு அவரின் மகள் பௌர்ணமி நிலவுவானத்திலிருந்து தன் மடியில் இறங்குவது போல் கனவு கண்டார் . காலையில் அவர் ஹஜ்ரத்திடம் விளக்கம் கேட்கச் சென்ற போது அவர் கனவைச் சொல்வதற்கு முன்பே ஹஜ்ரத்தவர்கள் அப்பெண் கண்ட கனவையும் அதற்காக விளக்கத்தையும் கூறினார் . அதன் பின் தர்வேஷ; தன்மகளை அவருக்கே மணமுடித்து வைத்தார் . ஒரு முறை இவர்களுக்கு வணக்கத்தில் கொஞ்சம் சோம்பல் ஏற்படவே அதற்காக இருபது ஆண்டுகள் வரை தண்ணீரே குடிக்காமல் இருந்தார்கள் . வீட்டில் ஒரு தனியறை அமைத்து அதில் தனித்திருந்து பன்னிரண்டு வருடம் வணக்கம் புரிந்தார்கள் .( அதே நூல் பக்கம் : 201)

இது உண்மையாக இருக்குமா ? நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

காஜா மவ்தூத் ஜிஷதி ...
இவர்களுக்கு பூமியை நொடிப்பொழுதில் கடக்கும் சக்தி இருந்தது. கஃபாவை தவாப் செய்ய மனம் நாடினால் காற்றின் மூலமாக மக்கா சென்று விடுவார்கள் . ஒரு நாள் ஒரு அரச குமாரன் இவர்களிடத்தில் வந்து பரக்கத்துக்காக தனக்கு ஏதேனும் கொடுக்குமாறு வேண்டினான் . ஷேக் முதலில் மறுத்து விட்டு பின் சிபாரிஷின் பேரில் ஒரு தொப்பியை அவனுக்குக் கொடுத்து இதைப் பாதுகாக்கா விட்டால் வருந்த வேண்டியேற்படும் எனக் கூறினார்கள் அவன் அது விடயத்தில் கவனயீனமாக இருப்பது தெரிய வந்ததும் தொப்பி தன் வேலையைச் செய்யவில்லையா ? என்றார்கள் . இதனால் அவன் ஒரு குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்டு அவனது இரு கண்களும் தோண்டப்பட்டன . ( அதே நூல் ப: 204 )

காஜா உஸ்மான் ஹாரூனி...
இவர்கள் ஒரு நதியைக் கடக்க வேண்டியிருந்தது . உடனே தன்னிடமிருந்தவர்களிடம் கண்களை மூடிக் கொள்ளுங்கள் என்றார்கள் . அதன் பின் கண்திறந்து பார்த்த போது அனைவரும் நதியைக் கடந்திருந்தார்கள் . எப்படிக் கடந்தார்கள் என்றே தெரியவில்லை . ஒரு முறை ஒருமனிதர் வந்து தனது மகனைக் காணவில்லையென்றும் கண்டுபிடித்துத் தரமாறும் சொன்னார் .அதற்கு அவர்கள் உன் மகன் உன் வீட்டிலிருக்கின்றான் என்றார்கள் .அவர் ஆச்சரியத்துடன் சென்று பார்த்த போது அங்கே மகன் இருக்கக் கண்டார்கள் . அவனிடம் இது பற்றிக் கேட்க நான் ஒரு காட்டில் அடைக்கப்பட்டிருந்தேன் .அப்போது இந்த ஷேக் வந்து என்னை அவிழ்த்து என்கால் மீது தன் காலை வைத்தார் .உடனே கண்ணைத்திறந்து பார்த்த போது நான் என் வீட்டிலிருந்தேன் .என்றான். ( அதே நூல் ப: 211 )

காஜா முயீனுதீன் திஸ்தி சொல்கின்றார்கள் . ' நான் ஒரு முரீதை அடக்கம் செய்வதில் கலந்து கொண்டேன் . அடக்கம் செய்த பின் எல்லோரும் போய் விட்டார்கள் . கப்ரடியில் சிறிது நேரம் அமர்ந்திருந்தேன் . ஒரு குற்றத்துக்காக அதாபு செய்யும் மலக்கு அவரிடம் வந்தார் . அப்போது ஷேக் உத்மான் காரூனி வந்து இவர் என்னைச் சார்ந்தவர் என்றதும் கப்றாளியின் வேதனை நிறுத்தப்பட்டது . ( அதேநூல் 212 ம் பக்கம் .)

இப்படி இந்தப்புத்தகத்தை நீங்கள் கையிலெடுத்தால் எத்தனையோ ஷிர்க்கான விவகாரங்கள் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் . ஷேக்மார்களின் காலில் விழுந்து பக்தர்கள் கும்பிடுபோட்டதாகவும் , இந்த முஸ்லிம் பெயர் தாங்கிய துறவிகள் தம்மை எதிர்த்தவர்களுக்கு சாபமிட்டு நரகத்துக்கு அனுப்பியதாகவும் , தமது பக்தர்களை சுவர்க்கத்தில் நுழைவிக்கும் பொறுப்பை ஏற்றதாகவும் ஆயிரக் கணக்கான கப்ஸாக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இவற்றில் உள்ளவற்றை ஒருவன் உண்மைப் படுத்தினால் அவனின் ஈமான் பறிபோய்விடும் என்பது மட்டும் உண்மை .ஆனால் இவற்றை தான் சார்ந்திருக்கும் திஷ்த்திய்யாத் தரீக்காவின் அவ்லியாக்களுக்கு நடந்த கராமத்துக்கள் என ஷேகுல் ஹதீஸ் ஹதீஸ்க்கலை மேதையான ஜக்கரிய்யா மௌலானா அவர்கள் சொல்கின்றார்கள் . அவைகளையும் இல்மு திக்ர் என ஏற்று நீங்களும் திஸ்திய்யாத் தரீக்காவில் இணைந்து அவர்களின் ஆசார பக்தராக ஆக வேண்டுமென விரும்புகின்றார்கள் . நீங்கள் தயாரா?

அப்படி நீங்கள் தயாராகி விட்டால் அந்தத் தரீக்காவின் ஷேக்மார்களே உங்கள் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து நீங்கள் என்னதான் பாவியாக , குற்றவாளியாக இருந்தாலும் அவற்றைப் பொறுத்து உங்களை சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்று விடுவார்கள் ?. சொர்க்கத்தின் திறப்பு- சாவி அவர்களின் கரங்களில்தானே இருக்கின்றது ?. அதன் பின்பு கூட நீங்கள் வேண்டிய பாவங்களைத் தாராளமாகச் செய்து கொள்ளலாம் ?. நீங்கள் அவர்களின் முரீதாக சீடனாக இருக்கும் காலமெல்லாம் இந்தப் பாவமெல்லாம் உங்களின் சொர்க்கப் பிரவேசத்தை ஒருபோதும் தடுத்து விடாது ? .

இப்போது உங்கள் முன்னிலையில் இரண்டு பாதைகள் உள்ளன . ஒன்று நபியவர்கள் காட்டித்தந்த பாதை . அடுத்தது ஜிஷ்த்திய்யாத் தரீக்காவின் ஷேக்மார்கள் காட்டித்தந்த பாதை . இரண்டில் எதைத் தெரிவு செய்வது எனும் உரிமை உங்கள் கையில் உள்ளது . முடிவெடுப்பதும் நீங்கள்தான் அதற்கான பலனைப் பெறுவதும் நீங்கள்தான் . நபிவழி நடந்தால் நரகமில்லை . அதை நாடாதவர்களுக்குச் சொர்க்கமில்லை . சொர்க்கமில்லை .  





நான்காம் நம்பர் .இக்ராம் - முஸ்லிம்களைக் கண்ணியப்படுத்தல்.

இந்த உஸூல் இஸ்லாம் வலியுறுத்திய ஒரு விடயம் என்பதில் சந்தேகமுமில்லை . ஒவ்வொரு முஸ்லிமும் மற்ற முஸ்லிமுக்குச் சகோதரன் என்பது நபிமொழி . ஒரு முஃமினுக்கும் மற்ற முஃமினுக்குமுரிய உதாரணம் ஒரு கட்டடத்தைப் போன்றது அதன் ஒவ்வொரு பகுதியும் மற்றப் பகுதியைப் பலமாகப் பிடித்திருக்கின்றது என்றும்,  முஸ்லிம்கள் தங்களுக்கிடையில் கொண்டிருக்கும் நட்பு பாசம் என்பவற்றுக்கு உதாரணம் ஒரு உடம்பின் பல பகுதிகளைப் போன்றது . அவற்றில் ஒருபகுதி நோயால் பீடிக்கப்படும் போது ஏனைய உறுப்புக்கள் அனைத்துமே துன்பம் அனுபவிக்கின்றன என்பது போன்ற நிறைய நபிமொழிகளும் இது விடயமாக நிறையவே வந்துள்ளன .

தப்லீக் சகோதரர்களுக்கு அல்லாஹ் றஹ்மத்துச் செய்வானாக . மற்றவர்களை விட இவர்கள் இந்த விடயத்தில் முக்கிய கவனம் செலுத்துவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது . இருப்பினும் இவர்களது இக்ராம் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் இருப்பதுதான் வருத்தமான விடயமாக இருக்கின்றது .

ஒரு முஸ்லிம் பள்ளிக்கு வர வேண்டும் தொழுகையாளியாக மாற வேண்டும் என்பதில் இவர்கள் தமது சொந்த வேலையைக் கூட விட்டு விட்டுச் செயற்படுவது பாரட்டத்தக்கதே . ஆனால் இவர்களது இந்த எண்ணத்தில் இப்போது தவறானதொரு கருத்துக் கண்ணோட்டம் உருவாகி விட்டது . அதாவது இவர்களது உதவியை, உபசரிப்பை, இக்ராமை ஒருவர் பெற வேண்டுமானால் அவர் தப்லீக் ஜமாஅத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொள்பவராக இருக்க வேண்டும்,  அல்லது அதற்கு ஆதரவாக இருக்க வேண்டும் . குறைந்த பட்சம் எதிலும் சம்பந்தப்படாதவராக ஒரு அப்பாவி மகனாக இருக்க வேண்டும். இதற்கு மாற்றமாக அவர் தப்லீக்கில் செல்லாதவராக அதனை விமர்சிப்பவராக,  அல்லது வேறு ஒரு அமைப்பில் இருப்பவராயின் அவர்களுக்கு தப்லீக் அமைப்பினர் இக்ராம் செய்வது ஒரு புறமிருக்க அவர்களை எதிரிகளை,  காபிர்களைப் பார்ப்பது போல் ஒருவித விரோதக் கண்ணோட்டத்தில் பார்ப்பதை சாதாரணமாக நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது .
அது மாத்திரமல்ல தப்லீக் அமைப்பினரிடம் உள்ள இஸ்லாமிய முரண்பாடுகளை ஏனைய உலமாக்கள் சுட்டிக்காட்டிய சமயம் அதனை ஏற்றும் கொள்ளாது,  அல்லது அவர்களிடம் அறிவு ரீதியாக தம் அமைப்பின் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு மறுப்புமளிக்காது அவர்களை அச்சுறுத்தல்,  ஆள்வைத்துத் தாக்குதல் போன்ற ரவுடிச் செயல்களில் ஈடுபடுவதையும் மேலிடம் இதைக் கண்டும் காணாமல் இருப்பதையும் அறிந்து கொள்ள முடிகின்றது .

இவற்றையெல்லாம் இஸ்லாத்தின் எதிரிகளை வீழ்த்துவதற்காக மேற்கொள்ளப்படும் அறப்போர் என்ற கருத்தோட்டம் மேலிடங்களிலிருந்தே இவர்களுக்குப் போதிக்கபடுவது தான் வருந்தத்தக்க உண்மை.

இவர்கள் இலங்கையில் மாத்திரம் மேற்கொண்ட தாக்குதல்கள், கத்திக்குத்துக்கள், வாள்வெட்டுக்கள்,படுகொலை மிரட்டல்களைத் திரட்டினால் தனியாக ஒரு புத்தகமாகவே வெளியிடலாம் .

இதனாலேயே இதன் வளர்ச்சி ஏனைய நாடுகளை விட இலங்கையில் அதிக வீறு நடை போடுகின்றது . காரணம் இவர்களை விமர்சிக்கவே அறிஞர்கள் பயப்படுகின்றனர் . தமக்கும் மிரட்டல் வருமோ, தாக்குதல் நடக்குமோ ஓதுக்கி விடுவார்களோ என்ற அச்சத்தால் அதிகம் பேர் பேசாமடந்தைகளாக வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றனர். இன்று உலக அளவில் இலங்கையை தப்லீக்கின் துரித வளர்ச்சிக்கு முன்னுதாரணமாகச் சொல்லப்படுகின்றது .'இந்த வேலையைச் செய்யும் முறையைச் சரிவரப் படிப்பதென்றால் சிலோனுக்குச் செல்லுங்கள்' என்று டில்லிப் பெரியார்களே சிலோனை முன்னுதாரணமாகக் காட்டுவதன் ரகசியம் இதுதான். இங்கு தப்லீக்குக்கு எதிராக மறுபேச்சுப் பேச முடியாது மீறிப் பேசினால் இருட்டடி,  இனந்தெரியாத நபரின் தாக்குதல்,  அச்சுறுத்தல் போன்றவற்றுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும் . இந்த அராஜகப் போக்கே இலங்கையின் குறிப்பாக கொழும்பு போன்ற பகுதிகளின் தீவிர தப்லீக் வளர்ச்சியின் ரகசியம் .

எனக்குத் தெரிந்த ஒருவர்தான் றம்ஸான் மௌலவி. கொழும்பைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் இதன் தீவிர கார்க்கூனாக இருந்தவர் .4 மாதங்கள் இந்தியா பாக்கிஸ்தான் சென்று வந்ததன் பின் தஃலீம் புத்தகத்தில் வரும் 'கப்ரில் தொழுத பெரியார்' சம்பவம் கூட சாத்தியம் தான் என் பயான் செய்தவர் பின்னர் மதீனாவில் இஸ்லாமிய உயர்கல்வி கற்றதன் பின் தப்லீக்கிலிருந்து விலகிக் கொன்டவர் . இவரை அந்த பகுதி மஸ்ஜிதின் நிர்வாகிகள் ஜூம்ஆ குத்பா நிகழ்த்துமாறு வேண்டினர் .
அவர் அதற்குத் தயாராக இருந்த வேளை அன்றிரவு சில தப்லீக் இயக்கத்தினர் இவர் வீடு வந்து ' நாளை நீங்கள் குத்பா நிகழ்த்தினால் நாங்கள்தான் உங்களுக்கு ஜனாஸா தொழுவிக்க வேண்டி வரும்' என இரு தடவைகள் மிரட்டினர் . இதற்குப் பயந்து அவர் அன்று குத்பா நிகழ்த்தவில்லை .

இவர் இன்று ஹயாத்தாக இருக்கின்றார் முடிந்தால் அவரைக் கேளுங்கள் முகவரி தருகின்றேன் . ( இப்படி உண்மையில் நடந்ததா? என அவரிடம் அன்று நான் உறுதிப்படுத்தியதற்கு ஆச்சரியத்துடன் 'இதிலென்ன சந்தேகம் என்றதுடன், இவ்வாறு இன்னும் பல நிகழ்வுகள் உள்ளன என்றார் .

இப்படி நிறைய சம்பவங்களைச் சொல்ல முடியும் .

எனவே இவர்களிடத்தில் இக்ராமுல் முஸ்லிமீன் - முஸ்லிம்களைக் கண்ணியப்படுத்தல் எனும் விடயம் உஸூலில் ஒன்றாக இருந்தாலும் 'முஸ்லிம் ' என்பதன் பொருளையே இவர்கள் சுருக்கி குறுகிய வட்டத்திற்குள் வரையறுத்து விட்டார்கள் . இந்த அமைப்பைக் குறைகூறும், எதிர்க்கும் நபர் எவ்வளவுதான் பெரிய தக்வாதாரியாயினும் படித்தவராயினும் அவர் இவர்கள் வரையறுத்த முஸ்லிம் என்ற வட்டத்தை விட்டு வெளியேறி விட்டவராகவே கருதப்படுகின்றார் . போத்தலும் கையுமாகத் திரியும் ரவுடி - காவாலிகளைக் கூட இவர்கள் அனுதாபக் கண் கொண்டு பார்ப்பார்கள் . அவனுக்கு இக்ராம் செய்து அவன் வீடு சென்று சந்திப்பார்கள். அனால் இவர்களை விமர்சிப்போரை இஸ்லாத்தின் விரோதியாகச் சித்தரித்து தமது கார்க்கூன்களுக்கும் அவ்வாறே அறிமுகம் செய்து விடுவார்கள் . அதுமட்டுமன்றி அவர்மீது இல்லாத குற்றச்சாட்டுக்களையும் பொய்களையும் கட்டவிழ்த்து விடுவதற்கும் தயங்க மாட்டார்கள் . உண்மையில் இவர்களது நடவடிக்கைகள் குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் இருக்குமாயின் குற்றச்சாட்டுகளுக்கு அறிவியல் ரீதியாக, குர்ஆன் ஹதீஸிலிருந்து பதிலளிக்க ஏன் தயங்குகின்றார்கள் ?? இல்மு திக்ரை முக்கிய உஸூலாக்கிப் போதிப்பவர்கள் இல்மின் மூலம் பதிலளித்தால் என்ன ? அரிவாளை வீசி விட்டு அறிவால் பதிலளிக்க முடியாதா? தூய இஸ்லாமிய அறிவு இவர்களுக்குப் போதிக்கப்பட்டிருந்தால் இந்த நிலைநிச்சயம் ஏற்பட்டிருக்காது .

உதாரணத்துக்கு மதீனாவிலுள்ள அல்ஜாமிஆ இஸ்லாமியா இஸ்லாமியக் கலாபீடம் இவர்களுக்கு பெரியதொரு தலையிடியைக் கொடுக்கும் விடயம் . காரணம் தமது தப்லீக் அமைப்பில் தீவிரமாக ஈடுபாடு கொண்டிருந்த எத்தனையோ மத்ரஸா மாணவர்கள் -- தப்லீக்கின் எதிர்கால வாரிசுகள் என முக்கியஸ்த்தர் மனப்பால் குடித்துக் கனவு கண்டு கொண்டிருந்தவர்கள் மதீனாவுக்கு ஓதச் சென்ற பின்னர் தலைகீழாக மாறி விட்டார்கள் . இதனால் ஆத்திரமடைந்த இவர்கள் அம்மாணவர்கள் தப்லீக் அமைப்போடு இணைந்து செயற்படாததன் நியாயங்களை -அவர்களின் குற்றச் சாட்டுக்களை ஏற்றும் கொள்ளாது,  அதற்கு அறிவியல் ரீதியாக மறுப்பும் தெரிவிக்காது பல்வேறு அபாண்டங்களை ஜாமியா மீதும் அம்மாணவர்கள் மீதும் இன்றும் சுமத்திக் கொண்டிருக்கின்றார்கள் .

உலக வங்கியிலிருந்து அது ஒதுக்கும் வட்டிப்பணத்திலேயே ஜாமிஆ இயங்குகின்றதென்றும், இங்கு படித்துக் கொடுப்பவர்கள் யஹூதிகளும் நஸாராக்களுமாவார்கள் என்றும்,  யஹூதிய்யத்தையும் நஸ்ரானிய்யத்தையுமே இங்கு போதிக்கின்றார்கள் என்றும், அதனாலேயே இவர்கள் தப்லீக்கை எதிர்க்கின்றார்கள் என்றும், இங்குள்ள ஆசிரியர்கள் தாடியில்லாமல்,  ட்ரவுஸர் அணிந்து சிக்ரேட் புகைத்தவர்களாகவே படிப்பிப்பார்கள் என்றும் மாணவர்களுக்கு பணத்தாசை காட்டி கிருஷத்தவப் பிரச்சாரர்களாக மாற்றுகின்றார்கள் என்றும், எனவே ஹராத்தையே ஊட்டப்பட்டு ஹராத்திலேயே வளர்ந்த இவர்களிடமிருந்து ஹராமான விடயங்களே வெளிப்படுகின்றன என்றும் எத்தனையோ அபாண்டங்களைக் கட்டவிழ்வித்து விட்டிருக்கின்றார்கள் .

இது வெறும் ஆதாரமற்ற பேச்சில்லை . மாறாக பல கார்க்கூன்களுக்குரிய விஷேட பயான்களில் இது கூறப்படுகின்றது . அது மட்டுமின்றி இவ்வாறு கூறித்திரிந்த ஒரு தப்லீக் முக்கியஸ்த்தர் ஒருவரை அணுகி இது பற்றி விசாரித்தவிடத்து அவர் சிரித்துக் கொண்டே மௌனம் சாதித்தார் அவரிடமிருந்து நேரடியாக இதைக் கேட்ட சாட்சிகளும் இன்றும் உள்ளனர் .

ஐந்தாம் நம்பர் .இக்லாஸ் : மனத் தூய்மை.

இக்லாஸ் எனும் சொல் மனத்தூய்மை, கலப்பற்ற எண்ணம் போன்ற பொருள்களைக் கொண்டிருக்கின்றது மார்க்க சம்பந்தப்பட்ட விடயத்தைச் செய்யும் போது அதில் முகஸ்த்துதியோ,  உலக நோக்கங்களோ இல்லாது முழுக்க முழுக்க அல்லாஹ்வின் திருப்தியை மாத்திரம் இலக்காகக் கொண்டு செய்யப்படும் போதே அது இக்லாஸான அமல் எனும் பெயரைப் பெறுகின்றது .

அல்லாஹ் சொல்கின்றான்...


'நாம் அவர்கள் செய்த அமல்களின் பக்கம் வந்து நோட்ட மிட்டு விட்டு (அவை இக்லாஸூடன் செய்யப்படாததன் காரணமாக) அவற்றை வீசியெறியப்பட்ட புழுதியைப் போன்று ஆக்கி விட்டோம்' என்கின்றான் . (ஸூரத்துல் புர்க்கான் வசனம் 23)

எனவே ஒரு முஸ்லிம் குறிப்பிட்ட ஒரு இபாதத்தை இறைவனுக்காக இக்லாஸூடன் செய்கின்றானா? அல்லது அவனது எண்ணத்தில் முகஸ்த்துதி கலந்து விட்டதா?,  அல்லது உலக இலக்கை மையமாக வைத்துச் செய்கின்றானா? என்பது உள்ளம் சம்பந்தப்பட்ட விடயம். அல்லாஹ்வைத் தவிர உள்ளத்தில் உள்ளதை அறிவோர் யாருமில்லை .இருப்பினும் ஒருவரின் புறச் செயற்பாடுகள் நடவடிக்கைகளின் மூலமாக அவரது நோக்கம் என்னவென்பதை ஓரளவுக்கு அனுமானிக்க முடியும் .
தப்லீக் அமைப்பினரைப் பொறுத்த வரைக்கும் அவர்களை இந்த இக்லாஸ் விடயத்தில் நடுத்தர தப்லீக் பொறுப்புதாரிகள், அதியுயர் தப்லீக் முக்கியஸ்த்தர்கள் என இரு பிரிவாகப் பிரிக்கலாம் .

இவர்களில் நடுத்தர மட்டத்தில் உள்ள கார்க்கூன்கள் மஹல்லா, ஏரியாப்பொறுப்புதாரிகள் போன்றோர் பாமர மக்களைப் பள்ளியுடன் தொடர்பு படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தூய்மையாக இக்லாஸூடன் நடந்து கொள்வதைப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது .

மக்கள் நல்வழி நடக்க வேண்டுமென்பதற்காக அவர்களது வீடு வரை தேடிச்சென்று அவர்களிடம் உரையாடல்,  குஸூஸி உமூமி கஸ்த்துக்களில் ஈடுபடுவதற்காக தமது அந்தஸ்த்து தொழில் வர்த்தகம் அனைத்தையும் தியாகங்செய்து நேரமொதுக்கல், அலைந்து திரிந்து மூலை முடுக்குகளெல்லாம் செல்வதால் ஏற்படும் சிரமங்களை அல்லாஹ்வுக்காகப் பொறுத்துக் கொள்ளல்,  எவ்வித சுயநல உலக நோக்கமுமின்றி தன்னை விடப்படிப்பில் அந்தஸ்த்தில் செல்வ நிலையில் தாழ்ந்தவர்களிடத்தில் கூட அவர்களின் காலடிக்குச் சென்று பள்ளிக்கு அழைத்தல்,  ஒரு காரியத்தைத் திட்டம;ட்டு மஸூரா அடிப்படை யில் செய்தல் போன்ற விடயங்களைச் சொல்லலாம் . இவர்களிடம் இவ்விடயங்களில் உலக நோக்கங்கள் எதுவும் இல்லை- இவற்றை இவர்கள் பூரண இக்லாஸூடனேயே செய்கின்றனர் என்பதைக் காட்டுகின்றன . இதற்காக இவர்களை அனைவரும் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

ஆனால் இவர்கள் தமது ஆத்மீக வழிகாட்டிகளாக அல்குர்ஆன்-ஹதீஸை நம்பியிருக்காமல் இதை விடுத்து இவர்களது மேலிடத்து உத்தரவுகளையும் வழிகாட்டல்களையுமே நூற்றுக்கு நூறு நம்பியிருப்பதால் இவர்களிடம் ஷிர்க்கான பித்அத்தான விடயங்கள் பல இவர்களையறியாமலே ஏற்பட்டு விடுகின்றன. குறிப்பிட்டுச் சொல்வதென்றால் தப்லீக் பெரியார்களின் வேத நூலான அமல்களின் சிறப்பு, ஹஜ்ஜின் சிறப்பு, ஸதக்காவின் சிறப்பு போன்றவற்றிலுள்ள அனைத்து விடயங்களையும் இவர்கள் உண்மைப்படுத்துவதால், சரியானவையென உறுதிப்படுத்துவதால் அதிலுள்ள நான் முன்னர் சுட்டிக்காட்டிய காட்டாத அனைத்தையும் நம்பித்தொலைத்து விடுவதால்; அதன் மூலம் பலவித பித்அத்தான ஷிர்க்கான நம்பிக்கைகள் இவர்களிடம் தோன்றி விடுகின்றன .
எனவே இவர்களைப் பொறுத்த வரைக்கும் அல்குர்ஆனுக்கோ ஹதீஸூக்கோ முரணான எந்தவொரு விடயத்தையும் இவர்கள் செய்வதில்லை அதைத் தமது மேலிடத்துப் பெரியார்கள் வலியுத்தினாலும் சரிதான்,  மேலும் அவர்கள் சொல்பவை இஸ்லாத்துக்கு மாற்றமானதா இல்லையா? எனப் பார்த்தே எடுத்து நடப்போம் என இவர்கள் முடி வெடுத்தால்தான் இவர்கள் புரியும் இக்லாஸான தப்லீக் நடவடிக் கைகளுக்கு அல்லாஹ்விடத்தில் நற்கூலி கொடுக்கப்படுமென அடித்துச் சொல்ல முடியும் . ஏனெனில் நாம் புரியும் ஒரு இபாதத்து ஸாலிஹான அமலாக அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமாயின் அது முழுக்க இக்லாஸூடனும் செய்யப்பட வேண்டும் . அதேபோல் நபியின் வழிகாட்டல்ப்படியும் செய்யப்பட வேண்டும் என்பதை அல்குர்ஆனும் நபிமொழிகளும் உறுதிப்படுத்துகின்றன .

இவர்களில் அடுத்த வர்க்கத்தினர் தப்லீக் உயர்மேலிடங்கள் . டில்லி ட்ரைவிந் போன்ற மர்க்கஸ்களின்; முக்கியஸ்தர்கள் . இவர்களில் சுயரூபம் தப்லீக் கார்க்கூன்களான பக்தர்களுக்கே சரிவரத் தெரியாது . இஸ்லாத்தைப் பின்பற்ற வேண்டுமெனப் போதிப்பார்கள். ஆனால் தாம்சொல்பவைதான் இஸ்லாம் என வாதிப்பார்கள். நபிவழிதான் நம்வழியென பயான்களில் முழங்குவார்கள் ஆனால் முதலாம் நம்பர் ஹனபி மத்ஹபு வெறியர்களாக இருப்பார்கள் . ஹனபி மத்ஹபைப் பின்பற்றுவது வாஜிப் என்பார்கள் . அல்லாஹ் தான் எல்லாவற்றையும் படைத்தவன் ரிஸ்க் அளிப்பவன் அனைத்து சக்தியுமுள்ளவன் - வஸ்த்துக்களுக்கு எவ்வித சக்தியுமில்லை என பயான்களில் சொல்வார்கள்,  ஆனால் மறுபக்கம் தமது விஷேட பயான்களில் தம் ஷேக்மார், குருமார்களுக்கு அற்புதங்கள் எனும் பேரில் நடந்த இஸ்லாத்தையே அழிக்கும் ஷிர்க்கான விடயங்களைக் கராமத் எனும் பெயரில் கட்டவிழ்த்து விட்டு கப்ர் வழிபாட்டுக்கு நியாயம் கற்பிப்பார்கள் அதன் பக்கம் மக்களை அழைக்கவும் செய்வார்கள் . பாமர அறபியல்லாத மக்களுக்கு வாசிக்க அமல்களின் சிறப்பு . .அறபிகளைக் கண்டால் றியாலுஸ் ஸாலிஹீன் ஹதீஸ்க் கிதாபைக் காட்டி நடிப்பு . ஏன் இது வரை இந்த அமல்களில் சிறப்பு, ஹஜ்ஜின் சிறப்பு போன்றவை இத்தனை மொழிகளில் பெயர்க்கப்பட்டது போன்று அறபியில் பெயர்க்கப்படவில்லை தெரியுமா? . அங்குதான் ரகசியமுள்ளது . முழு அறபு உலகத்தின் எதிர்ப்பையும் அதனால் சம்பாதித்து தமது திட்டங்கள் செயலற்றுவிடும் என்ற பயம்தான் காரணம்

 ஸஹாபாக்களின் வாழ்க்கை எம்மிடம் வரவேண்டுமெனக் கூறி விட்டு தமது தஃலீம் புத்தகத்தில் ஏதேதோ சிர்க் நிறைந்த குப்பைகளை யார்யாருக்கோ நடந்ததாக எழுதி வைத்திருக்கின்றார்கள் . எனவே இவர்களுக்கு இரு பக்கமுண்டு .இரட்டை வேடமுண்டு . இவர்கள் தம்மை இஸ்லாத்தின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொண்டாலும் இவர்களது உண்மையான நோக்கம் இவர்கள் சொல்வதைக் கேட்டு அதே போன்று செயற்படக்கூடிய ஒருபக்தர் கூட்டத்திற்கு இவர்கள் தலைமை வகிப்பதே. யதார்த்தத்தில் இவர்கலெல்லாம் சூபிகள், தரீக்காவாதிகள் . வாழையடி வாழையாக சூபித்துவக் குருக்களிடம் பைஅத் பெற்று ஆயிரக் கணக்கான மக்களிடமிருந்து பைஅத்தும் வாங்கியுள்ளனர் . சூபித்துவம், தரீக்கா என்றெல்லாம் மக்கள் மத்தியில் தம்மை அறிமுகப்படுத்தினால் போதிய ஆதரவு கிடைக்காது எனும் காரணத்தால் இப்போதுள்ள புதிய பெயரில் தமது தரீக்கா நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே இவர்கள் இக்லாஸூடன் செயற்படுகின்றார்கள் என்று பாமரர்கள் நம்புவது வேடிக்கையான விடயம் .

இத்தகவல்கள் சிலருக்கு வியப்பைத் தரலாம் .அப்படிப்பட்டவர்கள்; மேற்கொண்டு இது சம்பந்தமாக ஆராய்ந்து உறுதிப்படுத்தியதன் பின்- தப்லீக் முக்கியஸ்த்தர்களிடமே இது பற்றி வினாவெழுப்பி தப்லீக்கின் நடவடிக்கைகள் அனைத்தையும் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களைக்கூறி நிரூபிக்குமாறு வலியுறுத்தி சரியானமுடிவெடுக்கக் கடமைப்பட்டுள்ளார்கள் . மற்றும் சிலருக்கு இது ஆத்திரத்தையளிக்கலாம் . அப்படிப்பட்டவர்கள் உணர்ச்சி வசப்பட்டு விடாமல் ஆத்திரத்தைத் தூக்கியெறிந்து விட்டு அமைதியடைந்து மேற்படி சுட்டிக்காட்டப்பட்ட விடயங்கள் தப்லீக் அமைப்பில் இருக்கின்றதா? என அவதானிக்கக் கடமைப்பட்டுள்ளார்கள் . நபிவழிதான் நம்வழி எனும் கொள்கையை ஏற்றவர்களாயிருந்தால் நீங்கள் நிச்சயம் இப்படிச் செய்வீர்கள் . இதற்கு மாற்றமாக குருவழியே குடியானவன்; வழி ஆசான்வழியே அடியேன்வழி எனும் கொள்கையில் வாழ்பவர்களுக்கு இதுவெல்லாம் பயனளிக்காது . அல்லாஹ் நாடினால் - அவனாக இவர்களுக்கு நேர்வழிகாட்டினால்த்தான் உண்டு . அதற்காகவும் நாம் பிரார்த்திப்போம் . 












தப்லீக் ஜமாஅத்தினரின் ஆறு நம்பர் என்று சொல்லப்படும் ஆறு அடிப்படை அம்சங்களும் வருமாறு :

தப்லீக் ஜமாஅத்தினரின் ஆறு நம்பர் என்று சொல்லப்படும் ஆறு அடிப்படை அம்சங்களும் வருமாறு :

  • கலிமா -லாயிலாஹ இல்லல்லாஹ் .

  • தொழுகையை நிலை நாட்டல் .

  • இல்மு – திக்ரு .

  • இக்ராம் -(பிற சகோதரர்களைக் கண்ணியப்படுத்தல் )

  • இக்லாஸ் - ( மனத்தூய்மை )

  • தப்லீக் . - (வக்தில் வெளிக்கிளம்பிச் செல்லல் )


இந்த ஆறு விடயங்களுக்கும் நோக்கம் சிறப்பு , முயற்சி என்று சில விடயங்களை இணைத்து அலங்கரித்துள்ளனர் .  இப்போது இவை ஒவ்வொன்றையும் சற்று விரிவாக ஆராய்வோம் .


முதலாம் நம்பர் 'கலிமா'

ஆறு நம்பரில்; முதலாவது விடயம் கலிமா 'லாயிலாஹ இல்லல்லாஹ் ' இதன் நோக்கம் பற்றி இவர்கள் சொல்லும் போது. . . .  'வஸ்த்துக்களுடைய நம்பிக்கையை உள்ளத்திலிருந்து அகற்றி வஸ்த்துக்களின் இறைவனான அல்லாஹ்வின் நம்பிக்கையை இதயத்தில் பதிப்பதுதான் இதன் நோக்கம் என்கின்றனர் .  அதாவது நம்மைப் படைத்தது அவனே , நமக்கு உணவளிப்பது அவனே, செல்வத்தைத் தருவது வறுமையைத் தருவது நோயை விடுவது , குணப்படுத்துவது கஷடத்தை நீக்குவது , உயர்த் துவது தாழ்த்துவது அனைத்தும் அவன்தான் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும் என்று கலிமாவுக்கு விளக்கம் கூறுகின்றனர் . 
ஆனால் நபி (ஸல்) அவர்கள் குரைஷிக் காபிர்கள் மத்தியில் அன்று இந்தக் கலிமாவை முன்வைத்த போது அதன் நோக்கம் பற்றி என்ன கூறினார்கள் அதற்கு எப்படி விளக்கமளித்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது .

குரைஷிக் காபிர்கள் அன்று கல்லையும் மண்ணையும் விக்ரகங்களையும் தான் வணங்கிக் கொண்டிருந்தார்கள் .  ஆனால் அல்லாஹ்வைப் பற்றிய இறை நம்பிக்கை அவர்களிடம் எப்படி இருந்தது என்பது பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான். . .

قُلْ مَنْ بِيَدِهِ مَلَكُوتُ كُلِّ شَيْءٍ وَهُوَ يُجِيرُ وَلا يُجَارُ عَلَيْهِ إِنْ كُنتُمْ تَعْلَمُونَ (88) سَيَقُولُونَ لِلَّهِ قُلْ فَأَنَّا تُسْحَرُونَ (89) بَلْ أَتَيْنَاهُمْ بِالْحَقِّ وَإِنَّهُمْ لَكَاذِبُون المؤمنون 84 .  َ

நபியே பூமியும் அதிலுள்ளவைகளும் யாருக்குச்சொந்தமென்று (அவர்களிடம் கேளுங்கள்).  அல்லாஹ்வுக்குரியவையேயென்று அவர்கள் பதிலளிப்பார்கள்.  அப்படியாயின் அவர்கள் சிந்திக்க வேண்டாமா ? ஏழு வானங்களின் அதிபதியும் பிரமாண்டமான அர்ஷின் அதிபதியும் யாரெனக் கேளுங்கள் .  அல்லாஹ்தான் என அவர்கள் கூறுவார்கள் . நீங்கள்அறிவுடையோராயின் அனைத்து வஸ்த்துக்களின் ஆட்சி அதிகாரங்களையும் தன்கையில் வைத்திருக்கும் - (பிறருக்கு ) அடைக்கலம் கொடுக்கும் , எவரின் அடைக்கலமும் தேவையற்றவன் யார் என அவர்களைக் கேளுங்கள் அல்லாஹ் தானென அவர்கள் பதிலளிப்பார்கள் .( முஃமினூன் .  84 ---88 )

இந்த வானங்களையும் பூமியையும் படைத்தவன் யாரென்று அவர்களைக் ( குரைஷிக் காபிர்களைக்) கேட்டால் அல்லாஹ் தான் என்று அவர்கள் நிச்சயம் கூறுவார்கள் ( அன்கபூத் 66 வசனம் )

قل مَنْ يَرْزُقُكُمْ مِنْ السَّمَاءِ وَالأَرْضِ أَمَّنْ يَمْلِكُ السَّمْعَ وَالأَبْصَارَ وَمَنْ يُخْرِجُ الْحَيَّ مِنْ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنْ الْحَيِّ وَمَنْ يُدَبِّرُ الأَمْرَ فَسَيَقُولُونَ اللَّهُ فَقُلْ أَفَلا تَتَّقُون - يونس 31
َ
நபியே(அவர்களிடம் ) சொல்லுங்கள் . .  உங்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உணவளிப்பவன் யார் ? உங்களது பார்வை கேள்வி (அனைத்துக்கும் ) சொந்தக்காரன் யார் . ? செத்ததிலிருந்து உயிருள்ளதையும் உயிருள்ளதிலிருந்து செத்ததையும் வெளிப்படுத்துபவன் யார் ? எனக் கேளுங்கள் அல்லாஹ்தான் என்று அவர்கள் கூறுவார்கள் அப்படியானால் அவர்கள் (அவனைப்) பயப்பட வேண்டாமா ? (ஸூரத்துல் யூனுஸ் 37ம் வசனம் )

இது போன்ற அல்குர்ஆன் வசனங்கள் பல்வேறு இடங்களில் இடம்பெற்றிருப்பதை அவதானிக்க முடிகின்றது .
எனவே இந்த வசனங்களின் படி அன்றைய குறைஷிக் காபிர்களிடம் கூட அல்லாஹ்தான் அனைத்தையும் படைத்தவன் .  ஆக்குபவன் அழிப்பவன்,காப்பவன் ,உணவளிப்பவன் , நோயைக் குணப்படுத்துபவனெல்லாம் அவன்தான் எனும் நம்பிக்கை இருக்கத தான் செய்தது . 
அல்லாஹ்கூறுகின்றான். . .

وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ نَزَّلَ مِنْ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الأَرْضَ مِنْ بَعْدِ مَوْتِهَا لَيَقُولُنَّ اللَّهُ قُلْ الْحَمْدُ لِلَّهِ بَلْ أَكْثَرُهُمْ لا يَعْقِلُون العنكبوت 65 . 
َ
அவர்கள் (காபிர்கள்) கப்பலில் ஏறினால் ( கடலில் மூழ்கி விடு வோமோ எனப் பயந்து ) அல்லாஹ்விடம் பயபக்தியுடன் பிரார்த்திப்பார்கள் .  கடலிலிருந்து அவன் அவர்களைக் காப்பாற்றியதும் அவனுக்கு இணை வைப்பார்கள் என்று கூறுகின்றான் .
(ஸூரா அன்கபூத் 65 ம் வசனம் )

அக்காலத்தில் அப்றஹா எனும் மன்னன் கஃபாவைத் தகர்ப்பதற்காக யானைப்படையுடன் வந்தான் .  இடையில் நபியவர்களின் பாட்டனாரான அப்துல் முத்தலிபின் ஒட்டகங்களைச் சுவீகரித்துக் கொண்டதும் அவனுடன் பேச அப்துல்முத்தலிப் வந்தபோது அவன் 'நான் கஃபாவை இடிக்க வந்துள்ளேன் நீயோ உன் ஒட்டகங்களைப் பற்றிப் பேசுகின்றாயே' என்றான் அதற்கு அப்துல் முத்தலிப் 'ஒட்டகத்தின் சொந்தக்காரன் நான் . அவற்றை நான் தான் பாதுகாக்க வேண்டும் .  கஃபாவின் சொந்தக் காரனோ அல்லாஹ் எனவே அதை அவன் பாதுகாத்துக் கொள்வான் என்று கூறியது அல்லாஹ்வின் மீது அவருக்கிருந்த யகீன் - அசைக்க முடியாத நம்பிக்கையைப் படம்பிடித்துக் காட்டுகின்றது.  இத்தனைக்கும் அவர் ஒரு காபிர் என்பதும் குறிப்பிடத்தக்கது .  ( ரஹீக் அல் மக்தூம் அலா ஸீரத்திர் ரஸூல் ப: 95 . )

இதிலிருந்து அல்லாஹ்தான் எமக்கு அனைத்துக்கும் பொறுப்பாளன், அவனே உணவளிப்பவன், குணமளிப்பவன் எனும் நம்பிக்கை காபிர்களிடம் இருந்ததென்பது தெளிவாகின்றது .  எனினும் இத்தகைய மக்களைத்தான் அல்லாஹ் 'குல் யா அய்யுஹல் காபிரூன் - காபிர்களே! என்று அழைக்கின்றான் .  அப்படியானால் இந்தக் கலிமாவின் நோக்கம்தான் என்ன என்ற வினாவெழுகின்றது . 
ஆம் இக்கலிமாவுக்கு கலிமத்துத் தௌஹீத் -- ஓரிறைக் கொள்கையின் வாசகம் என்று நாம் சொல்கின்றோம் .  தௌஹீத் எனும் போது மேற்சொன்னவாறு அல்லாஹ்தான் அனைத்தையும் படைத்து நிர்வகிப்பவன் என்று நம்புவதும் ஒரு பகுதிதான் .  ஆனால் அதை விட முக்கியமாக அவனை மாத்திரமே வணக்கத்துக்குரியவனாக ஆக்கி அவனல்லாத எந்த சக்திக்கும் அல்லாஹ்வின் ஆற்றலில் எவ்விதப் பங்குமில்லை என்று உறுதியாக நம்பி எந்த இபாதத் ஆகிலும் அல்லாஹ்வுக்காகவே அதைச் செய்வதுடன் அதன்படி செயற்படுவதே இந்தக்கலிமாவின் அடிப்படை நோக்கமாகும். 
இதைத்தான் குரைஷிக் காபிர்கள் செய்யத் தவறினார்கள் .  வெறுமனே அல்லாஹ்வை நம்பி விட்டு பின்னர் அல்லாஹ்வுக்கு இருக்கும் சக்தி வேறு சிலருக்கும் இருக்கின்றதென்ற நம்பிக்கையிலோ அல்லது அல்லாஹ்விடத்தில் நெருக்கத்தத்தைப் பெற்றுத்தர இவர்கள் வல்லவர்கள் என்ற நோக்கிலோ வேறு சில விக்ரகங்களுக்கும்; கடவுள்த் தன்மைகளைக் கற்பித்தார்கள்.  இதனைத்தான் நபியவர்கள் கண்டித்தார்கள்.  விமர்சித்தார்கள், எதிர்த்தார்கள்.  இதனாலேயே யுத்தமெல்லாம் கூட மூண்டன .  எனவே வெறுமனே கலிமாச் சொல்லிவிட்டு அதன்படி செயற்படா விட்டாலும் அந்த நம்பிக்கை போலியானது என்றே அர்த்தமாகும் .  எனவே லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவின் அர்த்தமே பக்தி எனும் பேரில் தப்லீக் முக்கியஸ்த்தர்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு கட்டுப்படல் ,அவர்களின் வார்த்தைகளை வேத வாக்காக மதித்தல், அவர்களுக்கு மாறுசெய்தால் சாபம் ஏற்பட்டுவிடுடென எண்ணல், அவர்களது ஆசியால் நமக்கு பாக்கத் ஏற்படுமென நம்புதல், அவர்களுக்கு வேறுபல சக்திகள் இருப்பதாகக் கூட நம்புதல் போன்ற தப்லீக் கார்க்கூன்களிடம் காணப்படும் மூட நம்பிக்கைகள் அனைத்துக்கும் வேட்டு வைக்கின்றது .

அதேபோல் அல்லாஹ் தனது பெயர்நாமங்கள் தன்மைகள் பண்புகள் பற்றி அல்குர்ஆனிலும் ஹதீஸிலும் எவ்வாறு சொல்லியிருகின்றானோ அதே போன்று எவ்வித கூட்டல் குறைத்தலின்றி மாற்றல் மறைத்தலின்றி , திரிபு படுத்தல் இருட்டப்புச் செய்தலின்றி அப்படியே நம்பியாக வேண்டும் .  இந்த மூன்று விடயங்களையும் இந்த சிறிய கலிமா தன்னகத்தே உள்ளடக்கி யிருக்கின்றது .  இதனையே . .


1- அத்தௌஹீத் அர் ருபூபிய்யா .
2- அத்தௌஹீத் அல் உலூஹிய்யா .
3- தௌஹீதுல் அஸ்மாயி வஸ்ஸிபாத் .

என மூன்று தனித்தனிப் பெயர்கள் கொண்டு அழைக்கின்றோம் .

ஆனால் தப்லீக் ஜமாஅத் அமைப்பைப் பொறுத்த வரைக்கும் இந்த கலிமாவின் ஒரு பகுதியான அல்லாஹ்தான் அனைத்தையும் படைத்தான் , அவன்தான் அனைத்தையும் இயக்குகின்றான் என்ற கோணத்தில் மாத்திரம்தான் விளக்கம் கொடுக்கப்படுகின்றதேயன்றி அல்லாஹ்வைத்தவிர வேறு எவருக்கும் வணக்கத்தில் எவ்வித பங்கும் கொடுத்துவிடக் கூடாது .  அவனது குர்ஆனிலிருந்தும் நபியவர்களின் ஹதீஸிலிருந்தும் மாத்திரமே இஸ்லாம் அமைக்கபட்டுள்ளது அதிலே எவருக்கும் கையாடல் செய்ய அனுமதியில்லை .  மீறினால் அது ஷிர்க்கான , பித் அத்தாக – மௌட்டீகமாக ஆகிவிடும் என்பது பற்றியோ , ஷிர்க் பித்அத்தின் விபரீதங்களை விளக்குவது பற்றியோ எவ்விதக் கரிசனையும் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

இதன் பிரதிபலிப்பும் விபரீதமும் அவர்களது அன்றாட நடவடிக்கைகளில் தெட்டத் தெளிவாகத் தெரிய வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது நபியவர்கள் தமது பிரச்சாரத்தில் ஷிர்க் பித்அத்துக்களை ஒழிப்பதில் அதன் வாடையையே வேரடி மண்ணோடு பிடுங்கி எறிவதற்காகத்தான் இவ்வளவு பாடுபட்டார்கள் இன்னல்களைச் சகித்தார்கள் .  யுத்தங்கள் புரிந்தார்கள் .  ஆனால் இவ்விடயங்கள் பற்றி தப்லீக்கில் எவ்வித முக்கியத்துவமும் கொடுப்பதில்லை என்பதை அடித்துச் சொல்லலாம் .  சமூகத்தில் நிலவக்கூடிய ஷிர்க்கான – பித்அத்தான அனுஷட்டானங்களைப் பற்றி எங்காவது இவர்கள்பேசியதுண்டா ? சமூகச் சீர்கேடுகள் , பிரச்சினைகள் அதற்காகன தீர்வுகள் பற்றி யெல்லாம் எங்கேனும் இவர்களது இஜ்திமாக்களில் பேசப் பட்டதுண்டா ? கேட்டால் அதெல்லாம் துன்யாவுடைய விடயங்கள் என்று நழுவுவார்கள்; .  பகிரங்க ஷிர்க்கை எதிர்த்துப் பேசுவது துன்யாவுடைய விடயம் , இஸ்லாமிய லேபலை வைத்துக் கொண்டவர்கள் அதன் பெயரால் சமூகத்தில் நடத்தும் பித்அத்தான மௌட்டீகங்களைச் சுட்டிக்காட்டுவது துன்யாவுடைய விடயம் . முஸ்லிம்களுக்கெதிரான எதிரிகளின் சதிகளைப் பற்றிப் பேசுவது துன்யாவுடைய விடயம் , 3 நாள் அவர்களுடன் புறப்பட்டு விட்டால் மட்டும் அது தீனுடைய விடயமாகி விடும் . 

இதன் காரணமாகத்தான் ஒன்றுமறியா புதிய அப்பாவி தப்லீக் சகோதரர்கள் உற்பட அனைத்து தப்லீக் தொண்டர்களும் தமது பகுதி பள்ளிவாயல்கள் , அப்பகுதி தர்ஹாக்களில் இடம்பெறும் கந்தூரி , பாத்திஹா ,கொடியேற்றம் , மௌலீது மஜ்லிஸ் போன்றவற்றை எதிர்ப்பதிலோ அதை நிறுத்தும் முயற்சியிலோ ஈடுபடாதிருப்பதையும் அதை எதிர்ப்பவர்களைக் குழப்பவாதிகள் என்று எண்ணுவதையும் , இன்னும் சிலரோ இவை போன்ற சுப வைபவங்களில் தாராளமாகக் கலந்து கொண்டு சிறப்பித்து நார்ஸா- அன்னதானம் பெற்றுச் செல்வதையும் சர்வ சாதாரணமாகக் காண முடிகின்றது. 

இதைவிடப் பேராச்சரியத்துக்குரிய கவலைதரும் விடயம் யாதெனில் இந்த தப்லீக்கின் வேராகத் திகழும் பல உலமாக்களே ஒவ்வொரு பகுதிகளிலும் இவ்வாறான பித்அத்தான அனாச்சார நிகழ்வுகளுக்குத் தலைமை தாங்கி பள்ளிகள் தோறும் அரங்கேற்றி வைத்து சிறப்பிப்பதைக் காணும் போது ?? நெஞ்சமே பற்றியெரிகின்றது . உங்களில் சிலருக்கு இது ஆச்சரியத்தைத் தரலாம் .  ஆனால் என்னிடம் அதற்கு நிறைய ஆதாரங்கள் உண்டு அவ்வாறான நூற்றுக் கணக்கான உலமாக்களின் பெயர்ப்பட்டடியல் என்னிடமுண்டு .  அணுகினால் அள்ளித்தர நான் தயார் .

மேலும் இந்த தப்லீக் பெரியார்கள் கலிமத்துத் தௌஹீத் லாயிலாஹ இல்லல்லாஹ் விடயத்தில் தங்கள் மத்ஹபான மாத்துருதிய்யா ,அஷ்அரிய்யா போன்ற மத்ஹபுவாதிகளின் கருத்தையே கொண்டிருக்கின்றனர் .  இந்தப் பிரிவினரிடம் குர்ஆன் ஹதீஸூக்கு முற்றிலும் மாறுபட்ட கோற்பாடுகள் நிறையவே இருக்கின்றன .  உதாரணத்திற்கு அஷ்அரிய்யா எனும் பிரிவினர் அல்லாஹ் தனக்கு இருப்பதாகச் சொன்ன பண்புகளில் ஏழே ஏழு பண்புகளை மாத்திரம் ஏற்றுக் கொண்டு ஏனையவற்றை மறுக்கின்றனர்.  உதாரணத்திற்கு அல்லாஹ் அர்ஷிலே நிலை கொண்டிருப்பதாக குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் இருக்க இவர்கள் அல்லாஹ் உலகெங்கும் இருக்கின்றான் என்கின்றனர் .  வேறு சில தப்லீக் மேதாவிகளோ அல்லாஹ் எங்கிருந்தாலும் நமக்கென்ன ? அதுவா முக்கியம் வக்தில் வெளிக்கிளம்புவது தானே முக்கியம் என்கின்றனர் அப்படியானால் முக்கியமற்ற ஒரு விடயத்தை அல்லாஹ் ஏன் குர்ஆனில் 20க்கும் மேற்பட்ட இடங்களிலும் நபியவர்கள் நூற்றுக்கணக்கான இடங்களிலும் சொல்லி நேரத்தை வீணடிக்க வேண்டும் சிந்திப்போமாக .  இப்படி கலிமா லாயிலாஹ இல்லல்லாஹ்வோடு சம்பந்தப்பட்ட எவ்வளவோ விடயங்கள் ஒவ்வொரு முஸ்லிமும் வழிதவறி விடாமலிக்க அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விடயங்கள் தப்லீக்கில் சொல்லப்படாமல் மூடி மறைக்கப்படுகின்றன கலிமாவுக்கு நபியவர்கள் சொல்லித்தந்த அர்த்தத்தில் மூன்றில் ஒன்றை மாத்திரம் எடுத்துக் கொண்டு மீதி இரண்டு பகுதிகளும் குழி தோண்டிப் புதைக்கப்படுகின்றன . 

இது ஒரு புறமிருக்க கலிமாவுக்குச் சொல்லப்படும் மூன்றிலொரு பகுதி விளக்கத்தையாவது அதே தூய்மையுடன் விட்டு வைக்கின்றார்களா என்றால் அதுவும் இல்லை .  வஸ்த்துக்களுக்கு எவ்வித சக்தியுமில்லை.  அல்லாஹ்வுக்குக்தான் அனைத்து சக்திகளும் உண்டு என்று சொல்லப்படும் தத்துவம் காலப் போக்கில் சிதைய ஆரம்பித்து 4 மாதம் 1 வருடம் என்றெல்லாம் சென்று வந்தவுடன் தாங்கள் பின்பற்றும் தப்லீக் பெரியார்களுக்கும் ஆத்மீக சக்திகளுண்டு .  அவர்களால் உயிரோடும் மரணித்த பின்பும் கூட உலகில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை- நச்சுக் கருத்து தப்லீக் பெரியார்களாலேயே அவர்களுக்கு ஊட்டப்பட்டு விடுகின்றது .  எப்படி ஸூபித்துவ வாதிகள் அன்று இஸ்லாத்தின்-- ஷரீஆ எனும் பெயரை வைத்து மக்களைத் தம்பக்கம் அழைத்து பின்னர் தரீக்கா எனும் பேரில் அவர்களது இறை நம்பிக்கையைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி தமக்கும் கடவுளின் சக்திகள் இருப்பதாக நம்பவைத்து தாம் கூறுபவை அனைத்தையும் எவ்வித சிந்தனையுமின்றி யோசிக்காமல் இஸ்லாம் என்பதாக ஏற்கும் தலையாட்டி பொம்மைகளாக மூளைச் சலவை செய்து விடுகின்றார்களோ அதே நிலைதான் இங்கு தப்லீக் பெரியார்களிடமும் காணப்படுகின்றது . 

இதனை வெறும் அனுமானமாகவோ அல்லது காழ்ப்புணர்ச்சியிலோ சொல்ல வில்லை .  ஆதாரத்துடன்தான் சொல்கின்றேன்.  அதுவும் அவர்களது புத்தகத்திலிருந்தே. .  இதைத் தொடர்ந்து படியுங்கள்

அஷ்ரப் அலி தானவி அவர்கள் தப்லீக்கின் பிரபல பெரியார்களில் ஒருவர்.  . இவர்களிடம் நிறைய சிஷ்யர்கள் பைஅத் ( ஞான தீட்சை) பெற்றிருந்தனர் .  ஒருமுறை அவரின் சிஷ்யர்களில் ஒருவர் ஒரு கனவு கண்டார் . கனவில் அவருக்கு சக்ராத் - இறுதி நேரம் நெருங்கி மரணத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார் .  அவ்வேளை கலிமாவை மொழிவதற்காக லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் றஸூலுல்லாஹ் என்று சொல்ல முயற்சிக்கின்றார் .  ஆனால் அதற்குப் பதிலாக அவரின் வாயிலிருந்து லாயிலாஹ இல்லல்லாஹ் அஷ்ரப்அலி தானவி ரஸூலுல்லாஹ் என்றுதான் வருகின்றது.  இதனால் திடுக்கிட்டு விழித்த அவர் இது ஷிர்க்கான விடயமாயிற்றே என்று பதை பதைத்து மீண்டும் தூங்கியதும் மீண்டும் அதே கனவு .  இப்படியே மூன்று தடவைகள் அதே கனவைக் கண்டதும் அச்சத்தினால் மறுதினம் விழித்ததும் நபியவர்களுக்கு ஸலவாத் சொல்ல முயற்சித்தார் .  அதற்கும் அல்லாஹூம்ம ஸல்லி அலா நபிய்யினா அஷ்ரப்அலிதானவி றஸூலுல்லாஹ் என்றுதான் நாவிலிருந்து வெளிப்பட்டது .  உடனே அச்சத்துடன் பெரியார் அவர்களிடம் வந்து இக்கனவைத் தெரிவித்தார்கள் .  அதற்கு அஷ்ரப் அலி தானவி அவர்கள் 'இது பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை .  அது நல்ல கனவுதான் ஏனெனில் நானும் நபி அவர்களுடைய அந்தஸ்த்தில் உள்ளவன்தான் நீங்கள் அஷ்ரப்அலி தானவி றஸூலுல்லாஹ் என்று சொன்னால் அதுவும் சரிதான் அதனால் பயப்படத் தேவையில்லை என்று சொன்னார்கள் . 
இந்த விடயம் அன்றைய உலமாக்களுக்கிடையில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது .  மேற்படி பத்வா மார்க்கத்துக்கு முரணானது, குப்ரை ஏற்படுத்தக் கூடியது எனவே உடனடியாக அதனை வாபஸ் வாங்க வேண்டுமென அன்றைய அகில இந்திய உலமாக்கள் அமைப்பு கோரிக்கை விடுத்தது .  இதற்கு மறுப்பளித்து தப்லீக் ஜமாஅத்தின் மீதான குற்றச்சாட்டுகளும் பதில்களும் எனும் நூலில் மேற்படி அஷ்ரப் அலி தஹானவியின் பத்வா சரியானதே என நியாயப் படுத்தி எழுதியுள்ளார்கள் ஷேகுல் ஹதீஸ் ஜக்கரிய்யா மௌலானா அவர்கள் .  ( ஆதாரம் .  தப்லீக் ஜமாஅத்தின் மீதான குற்றச்சாட்டுகளும் பதில்களும் . ப: 144-145 )
( அதாவது அஷ்ரப் அலி தானவியும் அவர்கள் அளவுக்குள்ள மவ்லானா மார்களும் நபிமார்களின் அந்தஸ்துக்குச் சமமா னவர்கள் .  எனவே அவர்கள் சொல்வதை யெல்லாம் வேதவாக்காக ஏற்று கண்ணை மூடிக்கொண்டே பின்பற்றலாம் என்பதே இதன் உள் அர்த்தம் . )

பாருங்கள் இதுதான் வஸ்துக்களின் பக்கம் இருக்கும் நம்பிக்கையை நீக்கி அல்லாஹ்வின் பக்கம் நம்பிக்கையை ஏற்படுத்தும் இலச்சனம்?? கலிமாவுக்கு அவர்கள் வழங்கும் வெளிப்படையான வியாக்கியானம் எப்படி ? இந்த ரசசிய வியாக்கினம் எப்படி ?
வஸ்த்துக்களுக்கு எவ்வித சக்தியுமில்லை அல்லாஹ்வுக்கு மாத்திரம் தான் எல்லா சக்தியுமுள்ளது என்பதை எப்படி நிரூபிக்கின்றார்கள் என்று பாருங்கள் .

ஹஜ்ஜின் சிறப்பு எனும் தப்லீக் நூலில்; வந்துள்ளதாவது . . . 
ஷேக் அபூ ஜஃபர் என்று ஒரு பெரியார் மதீனாவில் இருந்தார் அவர் ஒருமுறை மக்காவுக்குச் செல்லத் தயாரானார் .  அப்பொழுது அவரது சீடர்களில் ஒருவர் நானும் தங்களுடன் வருகின்றேன் என்று கேட்டுக்கொள்ள அதற்கு அப்பெரியார்
( ஹிள்று (அலை) மூஸா நபிக்குச் சொன்ன பாணியில்; ) அதற்கு நீ சக்தி பெற மாட்டாய் என்றார் அதனைக் கேட்காது சீடர் அடம்பிடிக்கவே பெரியார் அவர்கள் சரி அப்படியென்றால் நான் எடுத்து வைக்கும் காலடிச் சுவட்டின் மீதே நீயும் காலெடுத்து வைக்க வேண்டும் என்று நிபந்தனையிட அதற்குச் சம்மதித்து இருவரும் பயணத்தைத் தொடர்ந்தனர் .  இஷாத் தொழுகையின் பின் பயணத்தைக் கால்நடையாகத்தான் மேற்கொண்டனர் .  அந்தச் சீடர் சொல்கின்றார். . .  .  இரவில் கொஞ்ச நேரந்தான் நடந்திருப்போம்.  தூரத்தில் விளக்குகள் தெரிய ஆரம்பித்தன .  அருகே நெருங்கிக் சென்றபோது மக்கா மஸ்ஜிதே ஆயிஷாவின்; விளக்குகளே அவை .  நேரம் அப்போது தான் தஹஜ்ஜத்துடைய வேளை .  இவ்வளவு குறுகிய நேரத்துக்குள் மதீனாவிலிருந்து மக்கா வந்து சேர்ந்தமை பற்றி எனக்கு ஆச்சரியம் . ஷேக் அவர்களின் வல்லமை ஒருசில மணிநேரத்துக்குள் கால்நடையாக மக்காவுக்கு வந்து விட்டார்கள் .  ( நபியவர்களுக்கே மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொள்ள ஒரு வாரம் எடுத்தமை குறிப்பிடத்தக்கது . ) ஸூபஹூத் தொழுகையை முடித்ததும் அங்குள்ள சிலசகோதரர்களைச் சந்தித்தேன் எங்கிருந்து வந்ததாக அவர்கள் வினவினார்கள் . நான் மதீனாவிலிருந்து . .  என்றேன் .  எப்போது புறப்பட்டீர்கள் என்றதும் இரவு இஷாவுக்குப் பின்  என்றேன் .  எப்போது வந்து சேர்ந்தீர்கள் என்றதும் தஹஜ்ஜூத் நேரத்தில் என்றேன் .  அதைக் கேட்ட அவர்கள் ஆச்சரிய மேலீட்டால் யாருடன் வந்தீர்கள் என்றதும் நான் ஷேக்கின் பெயரைச் சொன்னேன் அதற்கு அவர்கள் ஆச்சரியத்துடன் இல்லை . .  எப்படி இது ?? ஷேக் அவர்கள் நேற்றிரவு இஷாவுக்குப் பின்னிருந்து தஹஜ்ஜூத் வரைக்கும் இங்கு மஸ்ஜிதுல் ஹராமில் எங்களுக்குப் பாடம் நடாத்திக் கொண்டிருந் தார்களே . .  என்று ஆச்சரியப்பட்டார்கள் . . . . . அதற்கு மற்றும் சிலர் அந்த ஷேக்கைப் பொறுத்த வரைக்கும் இதுவெல்லாம் சாதாரண விடயம் என்று கூறினர் .

வஸ்த்துக்களால் எதுவும் ஆவதில்லை என்பது தப்லீக் போதனை ஆனால் இந்தப் பெரியார்களால் அல்லாஹ்வால் முடியுமான அனைத்தும் செய்யமுடியும் .  அவர்கள் நினைத்தால் கணப் பொழுதில் உலகை வலம் வரலாம் .  ஒரே நேரத்தில் ஒருவர் பல இடங்களில் தரிசனத்தந்து – பல அவதாரமெடுத்து சாகசச் செயல்கள் செய்யலாம்.  இவையெல்லாம் இஸ்லாத்தின் கொள்கையா ? சூபிஸத்தின் கொள்கையா , தப்லீக் அமைப்பு இஸ்லாத்தை வளர்க்கின்றதா ஸூபிஸத்தை வளர்க்கின்றதா ? நீங்களே சொல்லுங்கள் .  இந்தக் கொள்கை - ஒரே நேரத்தில் பல இடங்களில் பல உருவமெடுக்கும் கொள்கை சூபிகளின் கொள்கையா இல்லையா ? அப்படியானால் தப்லீக்கும் சூபித்துவத்துக்கும் தொடர்பு இருக்கின்றதா இல்லையா ? சொல்லுங்கள் .
வஸ்த்துக்களால் எதுவும் ஆவதில்லை.  அல்லாஹ்வால்தான் அனைத்தும் ஆகின்றன என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு ?? 



தப்லீக்கின் அடிப்படை அம்சங்கள் (ஆறு நம்பர்)

அதே போன்று இஸ்லாத்தின் ஆணிவேராகத் திகழ்வது இஸ்லாமிய அகீதா எனும் இறை நிர்ணயக் கோற்பாடு . அல்லாஹ்வைப் பற்றிய அவனது மலக்குகள் வேதங்கள் நபிமார்கள் பற்றிய விடயங்களெல்லாம் அகீதா - ஒவ்வொரு முஃமினும் கட்டாயம் நம்பிக்கை கொள்ள வேண்டிய பகுதியில் அமையும் . இவ்விடயத்தில் ஒரு முஸ்லிமிடம் சரியான நம்பிக்கை இருத்தல் அவசியம் . இதிலே கோளாறு இருந்தால் அவனது இறை நம்பிக்கையில் கோளாறு உள்ளதாகவே கருதப்படும் . ஆனால் தப்லீக்கின் பெரியார்களிடத்தில் இது சம்பந்தமாக இருந்த சில நம்பிக்கைகளைப் பார்க்கும் போது இந்துப் புராணங்கள்,மூடநம்பிக்கைகளே தோற்றுப் போகுமளவுக்கு அவை இருப்பதைக் காண முடிகின்றது .கலிமா லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதை முதலாவது நம்பராக வைத்துச் செயற்படும் தப்லீக் பெரியார்களிடமே இக்கலிமாவின் போதனைக்கு மாற்றமான ஈமானுக்கெதிரான எத்தனையோ ராங் நம்பர்கள் -தவறான நம்பிக்கைகள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது . அவற்றில் சிலவற்றை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் .

சம்பவம் இல: 1-
iஷேக் இல்யாஸ் (றஹ்) அவர்கள் சொல்கின்றார்கள்;...
'இந்த தப்லீக்கின் அடிப்படை விதிமுறைகளை நான் எனது விருப்பப்படி உருவாக்க வில்லை . அது எனக்குக் கொடுக்கப்பட்டது அவ்வாறு செய்யுமாறு எனக்குக் கட்டளையிடப்பட்டது
இதற்கு விளக்கமாக மற்றொரு இடத்தில் அபுல் ஹஸன் அலி நத்வி அவர்கள் 'அல்லாஹ்தான் இல்யாஸ் அவர்களுக்கு இந்த விடயத்தை உதிப்பாக்கி அவர்களது இதயத்தில் போட்டான்' என்கின்றார்கள் இவை இல்ஹாமாகவோ கனவிலோ அவர்களுக்குத் தெளிவு படுத்தப்பட்டனவாம் .
 (ஆதாரம் - தப்லீக்கே தஹ்ரீக் ப:57)

கட்டளையிடப்பட்டது என்றால் யாரால்?? அதற்கு விடையாக அல்லாஹ்வால் என தெளிவாகக் கூறிவிடுறார்கள் . அல்லாஹ்வின் கட்டளை வருவது நபிக்கே அப்படியானால் அவர்களும் நபியோ ?? நபிமார்களைத் தவிர வேறு யாராகினும் ஒருவரின் எண்ணத்தில் கனவில் வருவதெல்லாம் உண்மையாக முடியாது . அவை சரியா தவறா? என குர்ஆன் ஹதீஸைக் கொண்டே முடிவு செய்ய வேண்டியுள்ளது . ஒவ்வொருவரும் எனது கனவில் அல்லாஹ் இப்படிக் கட்டளையிட்டான் , நபி வந்து இப்படிச் சொன்னார்கள் என்று சொல்ல ஆரம்பித்தால் குர்ஆன் எதற்கு ஹதீஸ் எதற்கு ??
எனவே கனவில் வருவது இறை வாக்கு என்று நம்புவதே ஈமானுக்கு முரணான விடயமாகும் . இல்ஹாமில் சொல்லப்பட்டது என்பதும் ஈமானுக்கு முறணானதாகும் .
'முஹம்மதுர்ரஸூலுல்லாஹ்' எனும் கலிமாவின் அர்த்தத்திலேயே இது விளக்கப்படுகின்றது .நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று ஏற்றுக் கொள்வது நான்கு அம்சங்களை உள்ளடக்கியிருப்பதாக அல்குர்ஆன் போதிக்கின்றது .

 அவர்கள் இட்ட கட்டளைக்கு அடி பணிதல் ;
 அவர்கள்சொல்வதையெல்லாம் உண்மைப்படுத்தல்; .
 அவர்கள் தடுத்தவற்றை விட்டும் தவிர்ந்து வாழுதல்
 -அவர்கள் சொல்லித்தந்தவாறே அல்லாஹ்வை வழி படல்.

ஆனால் தப்லீக்கில் இவையெல்லாம் மூடி மறைக்கப்பட்டு விட்டு அவர்களின் சொந்த வியாக்கியானங்களே இஸ்லாமெனப் போதிக்கப்படுகின்றன ..

சம்பவம் இல: .2-
அல்லாமா ஸூபி இக்பால் அவர்கள் தப்லீக் முக்கியஸ்த்தர்களில் ஒருவர் . இவர்கள் கூறுகின்றார்கள்..
மிகப்பெரிய தப்லீக் பெரியார் ஒருவர் இருந்தார்கள் . இவர்களிடம் கஸ்புடைய ஞானம் இருந்தது . இதன்மூலமாக அவர்கள் நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் பிரசன்னமாகி உரையாடி மகிழ்வது வழக்கம் . அவர்களிடத்தில் ஷேக் சக்கரிய்யா மௌலானா அவர்கள் ஒரு முறை வருகை தந்து தான் ஒரு பயணம் செய்ய இருப்பதாகவும் அதற்காகத் தங்களிடத்தில் இஸ்திகாராத் தேடுவதற்காக வந்திருப்பதாகவும் தெரிவித்தார்கள் இதனைக் கேட்ட ஷேக் அவர்கள் 'ஜக்கரிய்யாவுடைய இதயத்தில் உதிப்பாகும் அனைத்து விடயங்களுமே மேலிடத்திலிருந்தே கிடைக்கின்றன . எனவே இந்தப் பணத்தை விடவும் சிறந்த ஒரு காரியம் கிடையாது' என்றார்கள் .
(மஹ்பூபுல் ஆரிபீன் 52)

வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை எனும் கலிமாவின் அர்த்தமே எந்த வணக்கமானாலும் அது அல்லாஹ்வுக்கு மாத்திரமே செய்யப்பட வேண்டும் . அல்லாஹ் அல்லாத பிறருக்கு எவ்வித வணக்கத்தையேனும் செய்தால் அதுவே கொடிய ஷிர்க்காக ஆகி விடும் .இதைத்தான் குர்ஆனும் ஹதீஸூம் பல இடங்களில் போதிக்கின்றன . நபிகளிடத்தில் ஒருவர் மிகப்பெரிய பாவம் எது என்று கேட்டதற்கு அல்லாஹ் உன்னைப் படைத்திருக்கும் போது நீ அவனல்லாத ஒருவனை வணங்குவது என்றார்கள் . (புகாரி இல :9)

இங்கு ஷேகுல் ஹதீஸ் - ஹதீஸ்க்கலை மேதை எனப் போற்றப்படும் ஜக்கரிய்யா மவ்லானா அவர்களோ இஸ்திகாரா – நன்மை நாடல் எனும் இபாதத்தை தனது குருவான ஷேக் ஒருவருக்கு செய்திருக்கின்றார்கள் . குரு நாதர் என்ன சளைத்தவரா? அவர் அதைவிட ஒருபடி மேலே சென்று உங்கள் இதயத்தில் உதிப்பாகும் அனைத்துமே மேலிடத்திலிருந்தான் அதாவது அல்லாஹ்விடமிருந்துதான் வருகின்றது என்று சேர்ந்து பாடுகின்றார். குருவும் நல்ல குரு சிஷ்யனும் நல்ல சிஷ்யன் . அல்லாஹ்வை நேரில் சந்தித்து உரையாடல் எனும் வழி கெட்ட கொள்கை நபிவழிவந்ததா? சூபிகள் வழிவந்ததா? தப்லீக் அமைப்பு சூபிகள் வழிவந்தது என்பதை இப்போதாவது ஏற்கின்றீர்களா?

நபி(ஸல்) அவர்கள் கூட தான் செய்பவை, சொல்பவை அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து வருபவை என்று சொல்லவில்லை . மாறாக நானும் உங்களைப் போன்ற மனிதன்தான் தப்பு தவறு எனக்கும் ஏற்படும் என்றே சொல்லியுள்ளார்கள் .

 நபியவர்களுக்கு தொழுகையில் தவறு ஏற்பட்டது . (பார்க்க : புகாரி 460 -673)
 வழக்கு விசாரனையின் போது தீர்ப்புகளில் தனக்கு தவறு ஏற்படுமென கூறியுள்ளார்கள் .(புகாரி 227 -6452)
 போர் பற்றிய வியூகம் அமைப்பதில் அவர்களுக்குத் தவறு ஏற்பட்டுள்ளது . (பத்ர் யுத்தம்- ரஹீக் 128)

இப்படி எத்தனையோ உதாரணங்களை அடுக்கலாம் . நபியவர்களுக்கே மார்க்க விடயங்களில் மாத்திரமே தவறு ஏற்படாது . ஏற்பட்டாலும் உடனே அல்லாஹ் சுட்டிக் காட்டி விடுவான் . இப்படியிருக்க தனது ஷேக்கிடம் இஸ்திகாரா தேடுவதுதான் லாயிலாஹ இல்லல்லாஹ் கலிமாவுக்கு இவர்கள் கொடுக்கும் மதிப்பா ?



சம்பவம் : இல :3
ஷேக் அப்துர் ரஸீத் கன்கோயி எனும் தப்லீக் பெரியார் கூறுகின்றார் .
'பனாஃ எனும் (ஒருவகை மெய்மறந்த) நிலையில் நான் இருக்கும் போதெல்லாம் எந்த விடயத்தை முடிவு செய்வதாயினும் ஷேக் இம்தாதுல்லாஹ்விடம் ஆலோசித்தே செய்வது வழக்கம் . பின்பு பனாஃ நிலையின் உயர் அந்தஸ்த்துக்கு வந்ததும் நபி (ஸல்) அவர்களைக் கண்டு ஆலோசித்தே முப்பது வருடங்களாக எந்த வித முடிவையும் எடுத்து வருகின்றேன் . அதற்கு அடுத்த நிலை இஹ்ஸான் எனும் நிலைதான் என்றார்கள் (
தீஸ் மஜாலிஸ் ப: 311 , மஹ்பூபுல் ஆரிபீன் : ப: 57)

அதாவது இவர்களிடம் இஹ்ஸான் என்றால் அல்லாஹ்வை நேரில் கண்டு அவனுடன் நேரடியாக உரையாடும் நிலையை அடைந்தேன் என்று அர்த்தம். பனாஃ எனப்படுவது சூபிகள் தமக்கு இருப்பதாகக் கூறும் ஒருவகை போதை நிலை . அதாவது தரீக்கத்தின் வழிநடந்த இவர்களுக்கு மூன்றாவது படிநிலையாக பிரபஞ்சம் அனைத்துமே அல்லாஹ்வின் வெளிப்பாடே என்பது புலப்படுமாம் .அந்த அதிர்ச்சியால் ஏற்படும் போதைக்கே பனாஃ எனப்படும் . இப்போது சொல்லுங்கள் தப்லீக் பெரியார்களின் கொள்கையும் சூபிகளின் கொள்கை களும் ஒன்றா இல்லையா? .

இதே போன்று தானே சூபிகளும் அல்லாஹ்வை நேரில் காண்பதாகப் புருடா விட்டுக் கொண்டிருந்தார்கள் . அப்படியாயின் இவ்விரு பிரிவினரும் ஒன்றா இல்லையா ? நீங்களே முடிவு செய்யுங்கள் .

முற்காலத்தில் வாழ்ந்த இப்னு அரபி , மன்ஸூர் கல்லாஜி போன்றோரும் கூட தாம் நபியுடன் நேரடியாக உரையாடுவதாகக் கூறியே ஹதீஸ்களை எடுக்க மறுத்தனர் .அல்லாஹ்வை நேரடியாகக் காண்பகதாகக் கூறி மார்க்கச் சட்டங்களைப் புறக்கணித்தனர் . இவையெல்லாம் மார்க்கத்துக்கு முரணானவையென அக்காலத்தில் வாழ்ந்த உலமாக்கள் மறுப்பளித்துள்ளனர் . எனவே அக்கால ஸூபிகளுக்கும் இக்கால தப்லீக் பெரியார்களுக்கும் வேறுபாடு என்ன இருக்கின்றது . ??


ஸூபிகள் பேசிய அத்வைதம் தப்லீக்கிலும் உண்டா??

அத்வைதம் என்பது 'இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் அல்லாஹ்வே , அனைத்தும் அவனிலிருந்து தோற்றம் பெற்றவைகளே' என்னும் கொள்கையைக் குறிக்கும் . இக்கொள்கையே ஸூபிகளின் அடிப்படைக் கொள்கையாக இருந்தது என்பதை முன்னர் நாம் அறிந்திருக்கின்றோம் . இதே கொள்கை தப்லீக்கின் பெரியார்களிடமும் இருக்கின்றதா? என்பது பற்றி பின்வரும் தகவல்களைப் படித்தபின் வாசகர்களான நீங்களே முடிவு செய்யவேண்டியுள்ளது.

இது சம்மந்தமான இன்னும் சில ஆச்சரியங்களை உங்களுக்கு எடுத்துக்காட்ட விளைகின்றேன் .

ஆச்சரியம் 1-
ஜக்கரிய்யா மௌலானா அவர்கள்; கூறுகின்றார்கள் ..
'அல்லாஹூத்தஆலாதான் உண்மையில் அனைத்து அழகினதும் ஊற்றாக இருக்கின்றான் . உண்மையில் உலகில் இருக்கும் அழகு அனைத்தும் அவனது அழகேயன்றி வேறில்லை . (தப்லீக் தஃலீம் தொகுப்பு ப: 300)

அதாவது உலகிலுள்ள அழகானவை அனைத்தும் அவனது பிரதிபலிப்பே என்பதே இதன் அர்த்தம்.

தனது மற்றுமொரு நூலில் ..
'ஒரு அடியான் தன் எஜமானான அல்லாஹ்வின் கட்டளை, வரம்புகளை மீறுவதன் ரகசியம் யாதெனில் அல்லாஹ் அடியார்களைத் தனது வடிவத்திலேயே படைத்துள்ளான் .எனவே அல்லாஹ்வுக்கு ஜலாலியத்தான (அதிகாரமிக்க) பண்புகள் இருப்பதால் அவனது அடியார்களிடத்திலும் அந்தப் பண்பின் வெளிப்பாடுகள் தோன்றுகின்றன அதனால்தான் அவனிடமிருந்து பாவச் செயல்கள் இடம்பெறுகின்றன (உம்முல் அம்ராழ் ப: 7)

அல்லாஹ் மனிதனின் உருவத்தை உடையவன் என்று சொல்வது மட்டுமின்றி அவன் ஏன் பாவம் புரிகின்றான் என்பதன் காரணத்தை விளக்கி பாவம் புரிவதை நியாயப்படுத்தும் விதத்தைப் பாருங்கள் . என்னே விளக்கம் ?? .அப்படியானால் பாவம் புரிந்தவனைத் தண்டிப்பதும் அர்த்தமற்றது தானே !

ஆச்சரியம் 2
ஜக்கரிய்யா மௌலானா தனது குருநாதர் ஷேக் இம்தாதுல்லாஹ் அவர்கள் நவின்றதாகக் கூறுகின்றார்கள் ..
'ஷேக் அவர்கள் ஹக்கீக்கத் (யதார்த்தத்தைக்) காணக் கூடியவர்களாக இருந்தார்கள் .(அதாவது அல்லாஹ்வை நேரடியாகக் காண்பவர்கள் என்பது அர்த்தம்) அவர்கள் சொல்வார்கள் 'ஒரு ஆண்; பெண்ணின் தோற்றத்தில் இருக்கின்றான்; . பெண்ணோ அல்லாஹ்வின் தோற்றத்தில் இருக்கின்றாள்; . ஆண்பெண்ணுக்குக் கண்ணாடியைப்போன்றவன். பெண் அல்லாஹ்வுக்குக் கண்ணாடியைப் போன்றவள் . எனவே பெண்ணும் அல்லாஹ்வைக் காட்டும் கண்ணாடி தானே ! அதனால்தான் அவளிலே அல்லாஹ்வின் அழகு வெளிப்பட்டுள்ளது . அதை அவசியம் நாம் காண வேண்டும் . (ஸமாயில் இம்தாதிய்யா ப:70)

ஆச்சரியம் 3
மேலும் ஜக்கரிய்யா மொலானா கூறுகின்றார்கள் .
'ஸூபித்துவத்தின் ஆரம்பமே வஹ்தத்துல் வுஜூத் (எல்லாம் அவனே எனும் அத்வைதக் கொள்கைதான்) என்று கூறிவிட்டு மற்றொரு இடத்தில் 'இப்போதுள்ள காலம் முழு மூச்சுடன் சூபித்துத்தின் பக்கம் அழைப்பதற்கும், அதன்படி செயற்படுவதற்கும் பொருத்தமான காலமாகும்' என்று கூறுகின்றார்கள் . (திக்ரு இஃதிகாப் கே அஹமிய்யத் ப: 95)

இப்போது புரிந்து விட்டதா ? இவர்களது சுய ரூபம் . எல்லாமே அல்லாஹ்தான் என்பதே சூபித்துவத்தின் அடிப்படை என அவர்களே ஏற்றுக் கொண்டு விட்டு பின்னர் அதன் பக்கம் முழு மூச்சுடன் அழைப்பதற்கான தருனம் இதுவே என்கின்றார்களே ! அப்படியானால் இவர்கள் 'எல்லாமே அல்லாஹ்வே' எனும் சூபித்துவத்தின் பக்கம்தான் அழைக்கின்றார்கள் என்பதற்கு இதைவிடப் பெரிய ஆதாரம் என்னவிருக்கின்றது ?
.
ஆச்சரியம் 4-
மற்றுமொரு இடத்தில் ஜக்கரிய்யா மௌலானா சொல்கின்றார்கள்...
அல்லாஹூத்தஆலா குர்ஆனிலே 'ஹூவல் லாஹிறு' அவனே வெளியானவன் என்று கூறும் வார்த்தை உங்கள் சிந்தனையிலிருந்து நீங்காதிருக்க வேண்டும். நீங்கள் நன்கு சிந்தியுங்கள் ஒரு சிஷ்யனின் யதார்த்தத்திலும் வெளித்தோற்றத்திலும் அல்லாஹ்வே இருக்கின்றான் . இதனை அவன் நன்கு இதயத்தில் பதித்தால் அல்லாஹ்வின் தாத்துதான் (சடம் தான்) உலகத்திலும் (மனிதனாக) வெளியாகியுள்ளது என்பதை சிந்திப்பான் . (ஸக்காலத்துல் குலூப் ப: 89)

மௌலானா அவர்களின் கொள்கை 'எல்லாமே அல்லாஹ்தான்'; எனும் சூபிகளின் கொள்கைதான் என்பதில் இனியேனும் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியுமா?
அவர்கள் எல்லாம் இறைவனே எனும் கொள்கையில் இருந் தார்கள் என்பதற்கு இதைவிடப் பெரிய ஆதாரம் வேறு என்ன வேண்டியிருக்கின்றது .

ஆச்சரியம் 5
சூபித்துவ பித்தரான 'எல்லாமே அல்லாஹ்தான்' எனும் கொள்கையின் ஆரம்பப்ப் பிரச்சாரகனாகிய மன்ஸூர் அல்ஹல்லாஜி என்பவனைப்; பாராட்டிக் கூறிய கவிதையொன்றில் ஜக்கரிய்யா மௌலானா அவர்கள் கூறுகின்றார்கள் ....
'மன்ஸூர் ஹல்லாஜியை (இஸ்லாமிய ஆட்சியாளர்கள்) சிலுவையில் அறைந்ததற்குக் காரணம் .அவர் அல்லாஹ்வுடைய விடயத்தில் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டார். நான்தான் அல்லாஹ் என்று சொன்னார் . அவரது இந்த வார்த்தை உண்மைதான். எனினும் அதை அவர் அப்படிப் பகிரங்கப் படுத்தியிருக்கக் கூடாது . (வலிய் காமில் ப: 249)

நான்தான் அல்லாஹ் என அந்தக் கிறுக்கன் கூறியதையும் உண்மையெனக் கூறும் மௌலானாவை என்னவென்று கூறுவது என்று நீங்களே முடிவு செய்யுங்கள் .

ஆச்சரியம் - 6
திக்ர் செய்யும் ஒழுங்குகள் பற்றி மௌலானா ஜக்கரிய்யா அவர்கள் சொல்லும் போது...
'திக்ரின் போது அல்லாஹூ நூருஸ்ஸமாவாத்தி வல் அர்ழ் - அல்லாஹ் வானங்கள் ,பூமியுடைய ஒளியாவான் எனும் வசனத்தை மனதில் முன்னிறுத்த வேண்டும் .எல்லா இடங்களிலும் அல்லாஹ் இருக்கின்றான் அவனது ஒளி அண்ட சராசரங்கள் அனைத்திலும் வியாபித்துள்ளது என்று எண்ணிக் கொண்டு அவனது ஒளியில் தானும் சங்கமித்து மூழ்கி விட்டதாக எண்ண வேண்டும் . (ஸகாலதுல் குலூப் ப: 144)

கலிமா லாயிஹ இல்லல்லாஹ் -- வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத்தவிர எவருமில்லை . என்ற கலிமாவை தம் அடிப்படை விதிகளில் முதன்மையானதாக ஆக்கிய தப்லீக் பெரியார்கள் தமது நூல்களில் எழுதி வைத்துள்ள கலிமாவுக்கு முரணான விடயங்கள் சிலவற்றை இங்கே சுட்டிக்காட்டியுள்ளேன் இவை போன்ற நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான விடயங் கள் இவர்களின் நூல்களில் மலிந்து கிடக்கின்றன . இவற்றிலிருந்து தெரிய வருவது யாதெனில் கலிமாவுக்குரிய அர்த்தத்தை விளங்குவதில் இவர்களும் சூபித்துவ வாதிகளை ஒத்த அதே நிலைப்பாட்டைத்தான் கொண்டிருக்கின்றனர் . அதே அத்வைதக் கருத்துக்களைத் தமது புத்தகங்களில் பரவலாகக் கூறியிருப்பதிலிருந்தும் , அன்றைய உலமாக்களால் வழிகேடர்கள் என்று பத்வா – தீர்ப்புக் கொடுக்கப்பட்ட சூபிகளை முன்னிலைப்படுத்தி அவர்களின் கருத்துக்களுக்கு முன்னுரிமையளித்து சூபியாக்கள் , பெரியார்கள் ,ஞானவான்கள் என்று தமது நூல்களில் போற்றுவதிலிலிருந்தும் இவை தெளிவாகின்றன .

பெரியார்கள் என்ற காரணத்தால் - நாம் விரும்புபவர்கள் எனும் காரணத்தால் , நாம் தொழுகையாளிகளாக மாறுவதற்குக் காரணமாயிருந்தவர்கள் எனும் காரணத்தால் அவர்கள் சொல்வது அனைத்தையும் நாம் ஏற்க வேண்டுமா ? அல்லாஹ் றஸூலுக்கு மாற்றமானதா இல்லையா என்று கொஞ்சம் சிந்திக்க வேண்டா =மா? இஸ்லாத்திக்கு மாற்றமான ஒரு கருத்தை ஒரு குருநாதர் சொல்லிவிட்டால் அது தவறானது என மாணவனுக்கும் தெரிந்தி =ருந்தால் அந்தத் தவறை குருவுக்குப் பக்குவமாகச் சுட்டிக் காட்டிப் புரிய வைப்பதுதான் ஒரு உண்மையான சிஷ்யனுக்கு இலட்சனமேயன்றி அவர் சொல்லிவிட்டால் அது எப்படித் தவறாக முடியும்? என வறட்டுப் பிடிவாதம் பிடிப்பது அறிவற்ற மூடர்களின் செயலாகும் . நபியவர்களுக்கே தவறு ஏற்பட்டிருக்கும் போது இவர்களுக்குத் தவறு ஏற்படுவது என்ன ஆச்சரியமா ? எல்லோருமே மனிதர்கள்தானே !

அன்றாடம் தப்லீக் சகோதரர்களால் தஃலீம் எனும் பெயரில் வாசிக்கப்படும் நூற்களான .அமல்களின் சிறப்பு , ஸதகாவின் சிறப்பு , ஹஜ்ஜின் சிறப்பு போன்ற நூல்களில் கூட இவ்வாறான நச்சுக்கருத்துக்கள் பரவலாகக் காணப்பபடுகின்றன . ஆனால் இவற்றை மொழிபெயர்த்த வல்லவர் தந்திரமாக இப்படியாக அத்வைதக் கருத்துக்களை பாமர மக்களுக்கு எழிதில் புரியாத வண்ணம் மிக்க சமயோசிதமாக மொழிபெயர்த்துள்ளார் .

ஆனால் இதுவரை தமிழில் பெயர்க்கப்படாத தப்லீக் பெரியார்களின் நூல்களில் இவ்வாறான நச்சுக்கருத்துக்கள் தாராளமாக பச்சை பச்சையாகச் கூறப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றைத்தான் மேலே சுட்டிக்காட்டியுள்ளேன் . தப்லீக் சகோதரர்கள் நபிவழி எது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் இவைகளைக் கூறுகின்றேன் . வேறு எவ்வித நோக்கங்களோ காழ்ப்புணர்வோ அல்லாஹ் மீது சத்தியமாக தப்லீக் சகோதரர்கள் மீது எனக்கில்லை என்பதை சத்தியமிட்டுக் கூறுகின்றேன் . ஒரு சில பயபக்தி மிகு பேணுதலான கார்க்கூன்கள் கூட 'உயிரோடு உள்ளவர்களைப் பற்றியே விமர்சிப்பது புறம்பேசியதாக ஆகி விடும் போது மரணித்த இந்த மௌலானாக்களைப் பற்றி எப்படி தாறுமாறாகப் பேசுவது ஆகும் இது புறம்பேசுவதாகாதா ? மரணித்தவர்களைப் பற்றி நல்லவற்றையேயன்றி வேறு எதையும் பேச வேண்டாமென நபியவர்கள் கூறியுள்ளார்களே' என்றெல்லாம் சொல்லி தப்லீக் அமைப்பிலுள்ள தவறுகளைச் சுட்டிக்காட்டும் பிரசுரங்களைப் படிக்க வேண்டாமென மக்களைத் தடுக்கின்றனர் .
இதுவும் ஒரு அர்த்தமற்ற வாதமாகும் . உதாரணத்திற்கு ஒருவர் நல்ல ஆட்டிறைச்சி என்று சொல்லிக் கொண்டு செத்த ஆட்டின் இறைச்சியை விற்றுக் கொண்டிருக்கின்றார் . நீங்கள் அதை அவருக்கு இதமாக எடுத்துச் சொல்லியும் , கண்டித்தும் எவ்விதப் பலனும் இல்லை .இப்போது அவனது செயலைப் பற்றிப் பேசினால் புறம்பேசியதாகி விடும் என எண்ணிக் கொண்டு வாய் மூடி இருக்க வேண்டுமா ? அல்லது இது பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டுமா? இதைச் சுட்டிக்காட்டுவது புறமா? அவதூறா ? இல்லை . இது ஒரு இஸ்லாமியக் கடமை மாத்திரமல்ல . தார்மீகக் கடமையும் கூட . அப்படித்தான் இங்கும் தீன் என்று சொல்லிக் கொண்டு - இஸ்லாம் எனும் லேபிளை ஒட்டிக் கொண்டு தீனுக்கு மாற்றமான எத்தனையோ விடயங்கள் இன்னும் சொல்லப் போனால் ஷிர்க்கான பித்அத்தான விடயங்கள் கூட இஸ்லாம் என்று போதிக்கப்படுகின்றன . எனவே இதனை விடயம் தெரிந்த அனைவருமே சுட்டிக்காட்ட வேண்டும் எதிர்க்கவும் வேண்டும் . நபியவர்கள் பிர்அவ்ன் ஹாமான், அபூ ஜஹ்ல் போன்றவர்களைப் பற்றி உம்மத்துக்கு எச்சரித்தமை எப்படி புறம்பேசியதாகாதோ – கவாரிஜ் எனும் இஸ்லாத்துக்கு மாற்றமான ,ஆனால் நிறைய வணக்கம்புரியக் கூடியவர்களைப் பற்றி எச்சரித்தமை எப்படிப் புறம் பேசியதாகாதோ அப்படித்தான் இதுவும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் .




தப்லீக்கின் அடிப்படை அம்சங்கள் (ஆறு நம்பர்)
அல்லாஹ் எங்கும் நிறைந்திருக்கின்றானா ?

அல்குர்ஆனிலும் நபி மொழிகளிலும் அல்லாஹூத்தஆலா தனது அர்ஷ் எனும் பீடத்தில் நிலைபெற்றிருப்பதாகவும் தன் படைப்பினரின் அனைத்து செயற்பாடுகளையும் அவதானித்த வண்ணம் இருப்பதாகவும் கூறியிருப்பதைக் காணக் கூடியதாயிருக்கின்றது .

றஹ்மானான அல்லாஹ் அர்ஸிலே நிலை கொண்டிருக்கின்றான். (ஸூரா தாஹா 5ம் வசனம்)
இதுபற்றி மேலும் விளக்கமாக அன்ஆம் 18,முல்க் 16, பாதிர் 10,மஆரிஜ் 4, ஆல இம்ரான் 55,நஹ்ல் 102, ஸஜதா5, போன்ற இன்னும் பல வசனங்களில் தெளிவு படுத்தியுள்ளான். இதன் விதம் முறைமையைப் பொறுத்த வரை படைப்புக்களின் கற்பனைக்கு மாற்றமாகவே இருக்கும் எனவும் நாம் அறிய முடிகின்றது. நபியவர்கள் அல்லாஹ் மேலே அர்ஷிலே நிலை பெற்றிருக்கின்றான் என்பதை பல்வேறு நபிமொழிகளில் தெளிவு படுத்தியிருக்கி;றார்கள் 'வானத்திலுள்ளவனே நம்பிய என்னை நீங்கள் நம்ப மாட்டீர்களா? என சிலரிடம் வினவியுள்ளார்கள்; .( புகாரி ப:4004)

ஒரு அடிமைப் பெண்ணிடம் அல்லாஹ் எங்கிருக்கின்றான் என்று நபியவர்கள் கேட்க அவள் வானத்தில் (மேலே) என பதிலளிக்க இவள் முஃமின் இவளை விடுதலை செய்யுங்கள் என்றார்கள். ( முஸ்லிம் 836)

அனைத்து ஸஹாபாத்தோழர்களும் இந்த விடயத்தில் இவ்வாறே நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.
இது இப்படியிருக்க தப்லீக் பெரியார்கள் அல்லாஹ் எல்லா இடத்திலும் இருக்கின்றான் எனும் இந்துக்களின் கொள்கையிலிருந்து காப்பியடிக்கப்பட்ட மாத்துர்தியா, அஷ்அரிய்யா போன்றோரின் கொள்கையினையே கொண்டிருக்கின்றனர் என்பதை அறியும் போது தான் வேதனையாக இருக்கின்றது. இந்துக்கள் தான் கடவுள் தூணிலுமிருப்பான் துரும்பிலுமிருப்பான் எனும் வழிகெட்ட கொள்கைக்குரியவர்கள் அவர்கள் காபிர்களாதலால் இக்கொள்கையைச் சொல்வது ஆச்சரியமல்ல ஆனால் தப்லீக் பெரியார்கள் ??

திக்ரின் சிறப்புப் பற்றி ஜக்கரிய்யா மௌலானா கூறும் போது 'அல்லாஹ் எல்லா இடங்களிலும் இருக்கின்றான். அவனது ஒளி உலகையே வியாபித்திருக்கின்றது என்று நினைத்துக் கொண்டு திக்ர் செய்ய வேண்டும்' என்கின்றர்கள். ( ஸக்காலத்துல6; குலூப் 144)

தப்லீக் சகோதரர்களே ! நாம் அனைவரும் நேர்வழியை அடைய வேண்டுமெனும் நோக்கில்தானே இவ்வளவு சிரமப்பட்டு தியாகத்துக்கு மத்தியில் வெயில் மழையைப் பொருட்படுத்தாது பாடு படுகின்றோம். எதற்காக ? எம்மால் ஒருவன் நேர்வழி பெற்று விட்டால் அதன் அளப்பரிய நன்மை முழுக்க எமக்குக் கிடைக்கும் எனும் ஆசையால் தானே ! அப்படியாயின் நாம் பிறருக்குக் கற்றுக் கொடுப்பதும் நூற்றுக்கு நூறு நபிவழியில் உள்ளதுதானா? என்று பார்க்க வேண்டும் தானே ! இல்லா விட்டால் நாம் இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை இஸ்லாம் என்று சொல்லிக் கொடுத்து விட்டால் , அதன் படி அவன் அமல் செய்தால் அதனால் கிடைக்கும் குற்றத்திலும் எமக்குப் பங்கு ண்டுதானே ! அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் அப்படி நடந்து விட்டால் எமது நிலை என்ன ? குளிக்கப் போய் சேறு பூசியதாகவல்லவா ஆகி விடும் ? எனவே நீங்களும் பெரியார்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இவற்றையெல்லாம் கூறுகின்றேன். உண்மை சற்று கசப்பாகத்தான் இருக்கும். ஆனால் புரிந்து விட்டால் அதுவே கரும்பாகி விடும். எனவே பொறுமையுடன் வாசியுங்கள் .


பெரியார்களின் நபி வழிக்கெதிரான செயல்கள், கருத்துக்கள்

'தப்லீக் ஜமாஅத்துக்கெதிரான குற்றச்சாட்டுக்களும் பதில்களும்' என்று ஒரு புத்தகமுண்டு. ஜக்கரிய்யா மொலானா தனது கைப்பட எழுதியது. அதில் தேவ்பந்த் ஆலிம்கள் பெரியார்களின் ஏகோபித்த கொள்கைகள் பற்றி அவரது ஷேக் மௌலானா மதனீ எழுதியதைப் பின்வருமாறு எடுத்துக் கூறுகின்றார் .

1- தேவ்பந்து பெரியார்கள் உஸூல், புரூஉ ஆகிய அனைத்து விடயங்களிலும் இமாம் அபூஹனீபாவைப் பின்பற்றுபவர்களும் அவ்வாறு பின்பற்றுவது வாஜிப் என்று சொல்பவர்களுமாவார்கள் இவர்கள் வஹ்ஹாபிகளுக்கு எதிரானவவர்கள். வஹாபிகள் தம்மை ஹம்பலி மத்ஹபு எனக் கூறிக் கொண்டாலும் அதன் சட்டங்களிலொன்றை ஹதீஸூக்கு மாற்றமெனக் கருதினால் அதனை விட்டு விடுவார்கள் .ஆனால் நாங்கள் ஹனபி மத்ஹபைப் பின் பற்றுவது கட்டாயக் கடமை என்பவர்கள் .

2- தேவ்பந் பெரியார்கள் நபியவர்கள் தமது கப்ரில் இவ்வுலகில் இருந்தது போலவே ஹயாத்தாக இருக்கின்றார்கள் .உலகில் ஒருவர் தனிமையிலிருந்து தியானம் செய்வது போல் நபியவர்கள் தனிமையில் இருக்கின்றார்கள் எனும் கருத்தையுடையவர்கள்.

3- நபியவர்களின் சிறப்புகள் அனைத்தும் நிரந்தரமானவை. உலகில் இப்போது ஏற்பட்டுக் கொண்டிருப்பவை இனி ஏற்படுபவை அனைத்தும் அவர்களது பொருட்டாலேயே ஏற்படுகின்றன அவர்களே எல்லாவற்றுக்கும் அசல் - சூரியனைப் போன்றவர்கள் அவர்களைக் கொண்டு வஸீலாத் தேடலாம் என்பதே தேவ்பந் உலமாக்களின் முடிவான சொல்லாகும்.

4-தஸவ்வுப் - மெஞ்ஞானம் மிகவும் பலன் மிக்கது. ஷேக்கிடம் பைஅத் செய்து கொள்வது மார்க்க முன்னேற்றத்துக்குக் காரணமாக ஆகும் .

5- நபியவர்களுக்கு மார்க்க அறிவு மாத்திரமின்றி இறைவனைப் பற்றிய எல்லா அறிவும் , மற்ற வகையான எல்லா அறிவுகளும் இருந்தன. முன்னோர் பின்னோர் அனைவரின் அறிவும் அவர்களுக்கு இருந்தது. அவர்களுக்குச் சமனான அறிவுள்ள எவரும் பிறக்கவுமில்லை பிறக்கப் போவதுமில்லை.

6-தலாயிலுல் கைராத், புர்தா ஷரீப் போன்றவற்றை ஓதுவதும் அதிகம் பலனளிப்பதாகும். தேவ்பந் பெரியார்கள் இவற்றில் அதிகம் ஈடுபட்டு வந்துள்ளதோடு புர்தா போல் தாமே இயற்றியுமுள்ளனர் நபியவர்களின் பிறப்பு (மீலாதுன்நபி) மட்டுமல்ல அவர்களைப் பற்றி எதைப் பேசினாலும் அதனால் நன்மையும் பரக்கத்தும் உண்டாகும். . (தப்லீக்- கு - பதில்கள் 180)

இவையனைத்தும் தேவ்பந் உலமாக்களின் கொள்கையென ஜக்கரிய்யா மௌலானா அவர்கள் கூறியவைகள். இவற்றிலுள்ள மார்க்க முறணான விடயங்களை நீங்களாகவே புரிந்து கொள்வீர்கள். விளக்க வேண்டியதில்லை என நினைக்கின்றேன் .

பாமர மக்களுக்கு தப்லீக் அமைப்பின் மீதும் அதன் பெரியார்கள் மீதும் அளவு கடந்த பற்றும் நம்பிக்கையும் ஏற்பட வேண்டுமென்ற நோக்கத்திலோ என்னவோ இந்தப் பெரியார்களில் சிலர் தம்மைப் பற்றியோ ,பிற சகபெரியார்களைப் பற்றியோ சில எல்லை மீறிய பேச்சுக்களையும் இவர்கள் வெளிப்படுத்தத் தவ வதில்லை. அதிலே இருக்கும் மார்க்க விரோத விடயங்களைக் கண்டு கொள்வதில்லையோ அல்லது கண்டும் காணாமல் விட்டு விடுகின்றார்களோ அல்லாஹ்வுக்கே வெளிச்சம் .

முஹம்மதுர் றஸூலுல்லாஹ் - நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்ற கலிமாவை நாம் மொழிந்து இஸ்லாமாகியிருக்கின்றோம். தப்லீக் சகோதரர்களும் கலிமாவுடைய வாழ்க்கை வர வேண்டும் என்பதற்காகவே தாமும் பாடுபடுவதாக வாதிடுகின்றனர். அப்படியானால் முஹம்மதுர் றஸூலுல்லாஹ் என்றால் என்ன? நபி (ஸல்) அவர்களை ஏற்று அவர்களை வாழ்க்கை வழி காட்டியாக்கி அவர்கள் ஏவியதை எடுத்து நடக்க வேண்டும். தடுத்தவற்றை விட்டும் விலகிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நபியவர்களை அன்புவைத்தவர்களாகவும் அவர்கள் வழி நடந்தவர்களாகவும் ஆக முடியும். இதில் தப்லீக் சகோதரர்களுக்கென்ன ? எந்த முஸ்லிமுக்கும் மாற்றக் கருத்துக் கிடையாது. மாற்றுக் கருத்துடையவர் முஸ்லிமாக இருக்கவும் முடியாது .இதனை மனதில் பதித்துக் கொண்டு பின்வரும் சம்பவங்களைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள் .

1- ஜக்கரிய்யா மௌலானா அவர்கள் சொல்கின்றார்கள் ..
'எனக்கேற்பட்ட கைசேதமே அந்தோ பரிதாபம் , உங்கள் மீது சத்தியமாகச் சொல்கின்றேன் எனக்கு விரக்தியாக இருக்கின்றது.
என்னை விட்டு விடுங்கள் நான் அப்படியே பாலை வனம் செல்ல விரும்புகின்றேன் .( அகாபிர் கே ஸூலூக் வ இஹ்ஸான். ப: 230)

பாலை வனத்துக்கென்ன ? அசோக வனத்துக்கு வேண்டுமானாலும் போய்வரட்டும். ஆனால் 'உங்கள் மீது சத்தியமாக' என்ற வார்த்தையைக் கவனியுங்கள். சத்தியம் செய்வதாயின் அல்லாஹ்வின் மீது மாத்திரம் செய்யுங்கள் ,அல்லது வாய் மூடியிருங்கள் என்று நபியவர்கள் கூறியிருக்க நபிவழியின் பக்கம் அழைப்பதாகக் கூறும் ஷேக்குல் ஹதீஸ் - ஹதீஸ்கலை மேதைகளே இப்படிச் சொன்னால் .... பிறகு பாமர தப்லீக் சகோதரர்களின் நிலை என்னவோ ?

2- ஜக்கரிய்யா மௌலானா இயம்புகின்றார்கள்...
இப்ராஹீம் இப்னு அத்ஹம் எனும் ஸூபி மகான் ஒரு தடவை இஷாத்தொழுகையை முடித்து விட்டு போர்வையால் போர்த்திக் கொண்டு ஒருக்கணித்துத் தூங்க ஆரம்பித்து விட்டார்கள். பின்னர் எழுந்து உளுச் செய்யாமலேயே ஸூபஹூத் தொழுகையை நிறைவேற்றினார்கள் .நீங்கள் உளுச் செய்யவில்லையே என அன்னாரிடம் கேட்கப்பட்டபோது நானெங்கே தூங்கினேன் ? இரவு முழுக்க சொர்க்கத்துப் பூங்காக்களுக்கிடையிலும் நரகத்தின் ஓடைகளுக்கிடையேயுமல்லவா சதா சுற்றிக் கொண்டிருந்தேன் என்றார்கள் .(திஸ்திய்யா ஷேக்மார் வரலாறு 162)

நபி (ஸல்) அவர்கள் பற்றி தப்லீக்கில்...
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த உம்மத்தினர் அனைவருக்கும் தூதராகவும் வழிகாட்டியாகவும் அனுப்பப்பட்டிருக்கின்றார்கள் அவர்கள் இறுதி நபி அவர்களுக்குப்பின் நபிமாரின் வருகை முற்றுப் பெற்று விட்டது. இதனை ஏற்றுக் கொள்ளாதவர்களும் இஸ்லாமிய வட்டத்தை விட்டும் வெளியேறியவர்களாகவே கணிக்கப்படுவார்கள். நபியர்கள் அல்லாஹ்விடமிருந்து வஹி எனும் இறைகட்டளைகளைப் பெற்று அதனை மக்களுக்குச் சொல்வதற்குப் பணிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கென தனிப்பட்ட முறையில் அரிதாக சில சட்டதிட்டங்களை அல்லாஹ் அவர்களுக்கு அருளியுள்ளான் .இது தவிர்ந்த ஏனைய விடயங்களில் அவர்களும் எம் போன்ற மனிதரே... அன்றாட மனிதனுக்கு ஏற்படக் கூடிய பசிதாகம் , ஊன் உறக்கம் .நோய்நொடிகள், கோபம் மகிழ்ச்சி , பிறப்பு இறப்பு போன்ற அனைத்து விடயங்களிலும் அவர்கள் எம்மைப் போன்ற மனிதரே .

இது பற்றி அல்குர்ஆனில்.....
'நபியே நிச்சயமாக நானும் உங்களைப்போன்ற மனிதனே , எனக்கு வஹி அறிவிக்கப்படுகின்றது. (நான் இறைவனல்ல) உங்களின் இறைவன் ஒருவனே என்று நபியே நீங்கள் கூறுங்கள்'. (ஸூரத்துல் கஹ்பு110 ம் வசனம்)

இவ்வாரே உலக விடயங்களில் நான் உங்க ளைப்போன்றவன்தான் என்று நபியவர்கள் பல இடங்களில் வலியுறுத்திக் கூறியிருக்கின்றார்கள். ஆனால் நபியவர்களைப்பற்றி தப்லீக் பெரியார்களின் நம்பிக்கை எப்படி இருக்கின்றது என்பதைத் தெளிவு படுத்துவதற்காக அவர்களால் கைப்பட எழுதப்பட்ட சில நூல்களிலிருந்தே ஒரு சில தகவல்களைத் தருகின்றேன். அசந்து போய் விடாதீர்கள். ஆச்சரியப் படாதீர்கள். படித்து விட்டு உண்மைதானா என ஆராய்ந்தும் பார்த்ததன் பின் அல்லாஹ்வுக்குப் பயந்து சரியானதொரு முடிவை தப்லீக் சகோதரர்கள் எடுக்க வேண்டும் .


1- பெரியார்களை தரிசிக்க வரும் நபி (ஸல்) அவர்கள் .
ஜக்கரிய்யா மௌலானா அவர்கள் சொல்கின்றார்கள்...
எனது மாமிக்கு மரண வேளை நெருங்கிய போது அவர்கள் 'என்னைத்தூக்கி இருத்துங்கள் இதோ நபியவர்கள் என்னிடம் வந்திருக்கின்றார்கள்' என்றார்கள். அதன் பின் அவர்களது இன்னுயிர் பிரிந்தது. எனது பாட்டனார் முஹம்மது இஸ்மாயீல் அவர்கள் மரணித்த போது அவர்களின் மரண ஊர்வலத்தின் அளவே மூன்று மைல் தூரம் நீளமாயிருந்தது. அவர்களில் கஸ்புடைய ஞானம் கொடுக்கப்பட்ட ஒருவரும் இருந்தார். அவர் ஷேக் அவர்கள் என்னை விரைவாக அடக்கம் செய்யுங்கள் எனக்கு வெட்கமாக இருக்கின்றது .ஏனெனில் நபியவர்கள் எனது வரவை எதிர்பார்த்த வண்ணம் நின்று கொண்டிருக்கின்றார்கள் ' என்று கூறியதாகக் சொன்னார். (தீஸ் மஜாலிஸ்134 ,மொலானா இஸ்யாஸ் ஓர் தீனீ தஃவத் )

அப்படியானால் நபியவர்கள் இன்னும் மரணிக்க வில்லையோ ?? நாம் நபியவர்கள் மரணித்து விட்டதாகவல்லவா நம்பியிருக்கின்றோம். எது சரி ?

இது பற்றி ஸவூதி அரேபிய உலமாக்கள் பத்வாக் குழுவிடம் கேட்கப்பட்ட போது இப்படியான நிகழ்வுகள் நிகந்ததாககக் கூறுவதெல்லாம் குர்ஆன் ஹதீஸூக்கு முற்றிலும் மாற்றமானதாகும். நபியவர்கள் நேரடியாகவோ அல்லது அவர்களது உருவம் மாத்திரமோ மரணிக்கவிருப்பவரிடம் வருவதென்பது அல்குர்ஆன் ஹதீஸூக்கு முரணான விடயமாகும். அவர்களை மறுமையில் அனைவரும் எழுப்பப்பட்டதன் பின் சந்திக்கும் வரைக்கும் யாராலும் காண முடியாது என்றுபல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் பத்வா மார்க்கத் தீர்ப்பு அளித்துள்ளனர். . பார்க்க :( பதாவா இஸ்லாமியா 1- 134 )

2- நபிமார்களைப் போல் பாசாங்கு பண்ணும் மௌலானாக்கள் .
மௌலானா நானூத்வி அவர்கள் கூறுகின்றார்கள். 'நான் சில வேளைகளில் தஸ்பீஹ் மணியைத் தூக்கும் போது அதன் ஒவ்வொரு மணியும் பாறாங்கற்களைப் போன்று சுமையாக இருப்பதை உணர்வேன். இதயத்திலும் நாவிலும் ஒரு வித அடைப்பு ஏற்படுவது போன்றும் உணர்ந்தேன். இது பற்றி மௌலானா ஹாஜி மக்கி அவர்களிடம் வினவிய போது 'இந்தச் சுமை இருக்கின்றதே... இதுதான் அல்லாஹ்விடமிருந்து வஹியைப் பெறும் போது நபிமார்களுக்கும் ஏற்பட்டது. உமக்கும் அல்லாஹ் நபிமார்களுடைய பொறுப்பைத் தரப்போகின்றான் என்றார்கள். இதே போன்ற நிகழ்வு இல்யாஸ் மொலானா அவர்களுக்கும் ஏற்பட்டது. அது பற்றி றஸீத் அஹ்மத் கான்கோயியிடம் கேட்ட போது அவர்களுக்கு நடுக்கம் ஏற்பட்டு நபியவர்களுக்கும் இதே நிலைதான் வஹி வரும் போது ஏற்பட்டது என்றார்கள். ( ஸவானிஹ் காஸிமி 1- 134)

அல்லாஹ்வின் இறை தியானத்தில் லயித்துப் போன ஒருவர் நபியவர்களைச் சந்தித்த போது அவர்கள் இவ்வாறு கூறினார்களாம் ஜக்கரிய்யா மௌலானா அவர்களது இதயத்திலிருந்து உதிப்பாகக் கூடிய அனைத்துமே அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைப்பவையே என்றார்களாம். (மஜாலிஸ் திக்ர். ப :12 )

அன்புமிகு சகோதரர்களே.. சற்று ஆழமாகச் சிந்தியுங்கள். அன்று சூபியாக்கள் தம்மை மகான்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டு தம் மீது முரீதுகளுக்குப் பிடிப்பும் நம்பகத்தன்மையும் ஒருவகை அச்ச உணர்வும் இருக்க வேண்டுமென்பதற்காக இப்படித்தான் தம்மைப் பற்றி திகிலூட்டக்கூடிய சாகசக் கதைகளையும் , பஞ்ச தந்திரப் புதிர்களையும் முரீதுகளுக்கு அள்ளி வீசி அவர்களை ஆச்சரியத்திலும் அச்சத்திலும் வீழ்த்தி தாம் சொல்பவை அனைத்துமே வேத வாக்கு என்று நம்பும் அளவுக்குப் பண்ணி விட்டார்கள். அதற்கும் இந்த தப்லீக் பெரியார்களின் பேச்சுக்களுக்கும் எவ்வித வித்தியாசமும் எனக்குத் தெரிவில்லை. இவற்றைச் சொல்வதன் நோக்கம் அவர்கள் மீது பக்தர்களுக்கு அபார மதிப்பு ஏற்பட வேண்டும் என்பதைத் தவிர- அவர்களது பேச்சை வஹியென நம்பி மாற்றுப் பேச்சு பேசக் கூடாது என்பதைத் தவிர வேறென்ன இருக்க முடியும். இஸ்லாத்தின் பக்கம் அழைப்பவர். குர்ஆன் ஹதீஸின் பக்கம் அழைப்பவர் ; தன்னைப்பற்றிய சுய புகழாரம் பாடுவதன் - தம் குரு நாதர்கள் பற்றித் தேவாரம் பாடுவதக் ரகசியம் என்ன?. புகழ் விரும்பினால் கூட புகழ்ந்து கொள்ளட்டும். ஆனால் எதற்காக நபிமார்களின் சம்பவங்கள் போல் தமக்கும் நிகழ்ந்ததாகக் கூறி நபி போன்று பாசாங்கு பண்ண வேண்டும்??

சற்று சிந்தியுங்கள் நபியவர்களின் வாயிலிருந்து வருபவைகளைப் பொறுத்த வரையிலும் கூட மார்க்க விடயங்கள் மாத்திரமே அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருபவை. இது தவிர ஏனைய நேரங்களில் அவர்களுக்கே பல தவறுகள் ஏற்பட்டிருக்கின்றன. அப்படியிருக்க நபியவர்களே நேரில் வந்து அந்தப் பெரியாரிடம் ஜக்கரிய்யா மொலானாவின் இதயத்தில் உதிப்பாகும் அனைத்தும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்ததாகும் என் எப்படிச் சொல்லியிருக்க முடியும்?. ஒன்று அப்பெரியார் நபியவர்களின் பெயரில் பச்சைப் பொய்யைக் கூறியிருக்க வேண்டும் அல்லது அவரிடம் ஷைத்தான் ஆஜராகி மேற்படி விடயத்தைக் கூறியிருக்க வேண்டும் அப்படியல்ல அது உண்மைதான் என்று வாதிடும் சகோதரர்களைப் பொறுத்த வரை ஜக்கரிய்யா மௌலானா நபியவர்களை விட உயர்ந்தவர்கள் என்று அவர்கள் வாதிடுகின்றனர் என்றே அர்த்தம். ஏனெனில் தான் சொல்பவை செய்பவை இதயத்தில் உதிப்பவை அனைத்தும் அல்லாஹ்வின் புறத்தலிருந்து வருபவை என்பது நபியவர்களுக்கே கொடுக்கப்படாத ஒரு அந்தஸ்த்து அல்லவா ?
மௌலானா தகிய்யுத்தீன் அலி நத்வி அவர்கள் கூறுகையில் ஜக்கரிய்யா மௌலானா அவர்கள் தூங்குவார்கள் ஆனால் நபியவர்களைப் போன்று அவர்களின் கண்கள்தான் தூங்கும் இதயம் தூங்காது. (தீஸ் மஜாலிஸ் ப: 29 )

பேசாமல் ஜக்கரிய்யா மௌலானாவும் ஒரு நபிதான் என்று இவர்கள் சொல்லி ஒரு போடு போட்டாலும் ஆச்சரியப்படுவத ற்கில்லை .

3- நபியவர்கள் மரணிக்க வில்லையா ??

அல்குர்ஆன் ஹதீஸ் போதனைப்படி நபியவர்கள் இவ்வுலகை விட்டும் மரணித்து விட்டார்கள். மரணித்தவர்கள் மீண்டும் மஹ்ஷரில் எழுப்பப்படும் வரை கப்ரிலே பர்ஸக் உடைய வாழ் வில் இருக்கின்றனர். இவர்களால் எதையும் கேட்கவோ பார்க்கவோ, செய்யவோ, பதிலளிக்கவோ முடியாது. இந்த வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை அல்லாஹ்தான் அறிவான். அனால் இது உலக வாழ்க்கைக்கு முற்றிலும் வேறுபட்டது. நபியவர்கள் மீது நாம் ஸலவாத் சொல்லும் போது அவர்களது உயிரை அல்லாஹ் மீட்டிக் கொடுத்தே பதிலளிக்க வைக்கின்றான் என்று நபியவர்களே கூறியிருக்கின்றார்கள். எனவே அல்லாஹ் உயிரை மீட்டி மக்கள் ஸலாம் சொன்ன விடயத்தை அறிவிக்காத வரை நபியவர்களுக்கே அது பற்றி எதுவும் தெரியாது என்பது இதிலிருந்து தெளிவாகின்றது .
ஆனால் தப்லீக் பெரியார்களின் கருத்து இந்த விடயத்தில் எப்படியிருக்கின்றது என்று தெரிந்துகொள்ள வேண்டுமல்லவா ???

ஜக்கரிய்யா மொலானா அவர்கள் சொல்வது ....
'முல்லா ஜாமி அவர்கள் ஹஜ்ஜூக்குச் சென்றார்கள் ஹஜ்ஜை முடித்துக் கொண்டு நபியவர்களைப் புகழ்ந்து பாடலொன்றை இயற்றிக்கொண்டு மதீனா செல்லத் தயாரானார்கள் . அப்போது மக்கா அமீரின் கனவில் நபியவர்கள் தோன்றி அவரை மதீனாவுக்குச் செல்ல விடாமல் தடுக்குமாறு சொன்னார்கள் . இதையறிந்த அப்பெரியார் யாருக்கும் தெரியாமல் ஒழித்து மதீனா செல்லத் தயாரானார் . மீண்டும் நபியவர்கள் அமீரின் கனவில் தோன்றி இவரைத் தடுக்குமாறு கூற அமீரானவர் காவலர்களை அனுப்பி அவரைப் பிடித்து சிறையில் அடைத்து நையப் புடைக்க ஆரம்பித்தார்கள் . பின் நபியவர்கள் மறுமுறையும் கனவில் தோன்றி ஏன் அவரைத் துன்புறுத்துகின்றீர்கள் . அவர் எவ்வித குற்றமும் செய்யவில்லை மாறாக அவர் ஒரு பாடலைப் புனைந்து வைத்திருக்கின்றார் . அதை அவர் என் முன்னிலையில் பாடினால் முஸாபஹாச் செய்வதற்காக நான் என் கையை வெளியே கொண்டு வர வேண்டியிருக்கும் . அதனால் மக்கள் மத்தியில் பித்னா ஏற்படும் என்று அஞ்சுகின்றேன் என நபியவர்கள் கூறினார்கள் .  ( ஹஜ்ஜின் சிறப்பு 803 )

இப்றாஹீம் பின் ஸைபான் என்பவர் நபியவர்களின் ஜியாரத்துக்குச் சென்று ஸலாம் கூறிய போது வஅலைக்கஸ்ஸலாம் என அசரீரி கேட்டது . (ஹஜ்ஜின் சிறப்பு 153 )

இது போன்ற சம்பவங்கள் இன்னும் பலருக்கு ஏற்பட்ட விபரங்களை ஜக்கரிய்யா மௌலானா எடுத்துக்கூறி நபியவர்கள் கப்ரில் எம்மைப் போன்று உயிருடன் இருக்கின்றார்கள் நாம் பேசுவதை அவர்கள் கேட்கின்றார்கள் . அதற்கு பதிலும் அளிக்கின்றார்கள் எனும் நபி வழிக்கு மாற்றமான கருத்தை நிலை நாட்டுகின்றார்கள் . தீன் என்பது அல்லாஹ்வின் கட்டளையும் நபியவர்களுடைய வாழ்க்கை முறையும் என்று இவர்கள் போடும் கோஷத்திற்கு இதுதான் அர்த்தமோ ? இப்படி தனது கப்ரில் வந்து மண்டியிட்டு பாடல் இசைக்குமாறுதான் நபியவர்கள் வழிகாட்டிச் சென்றார்களோ ?

மற்றுமொரு அதிசய நிகழ்ச்சி ...
றிபாய் நாயகம் அவர்கள் நபியவர்களை ஜியாரத் செய்ய வந்த வேளை கப்ரின் முன்னால் நின்று கொண்டு ஒரு பாடலைப் பாடினார்கள் . அதன் கருத்தாவது ...

நான் உம்மை விட்டும் தூரத்தில் இருந்த போது உம்மை சந்திக்க என் உயிரைத் தூதனுப்பினேன் .பூமி எனது கோரிக்கையை ஏற்று என்சார்பாக என்னுயிரை உம்மிடம் அழைத்து வந்தது . இப்போது நானே உங்கள் சமூகத்துக்கு வந்துள்ளேன் . என்னுதடுகள் (முத்தமிட்டு) பேறு பெறுவதற்காக உம் கரத்தை நீட்டுங்கள் என்று பாடினார்கள் . உடனே நபியவர்களின் கை கப்ரிலிருந்து வெளிப்பட்டது . அதனை றிபாய் நாயகமவர்கள் முத்தமிட்டார்கள் இதனை அவ்வருடம் ஹஜ்ஜூச் செய்த தொண்ணூறாயிரம் பேர் தமது கண்களால் கண்டார்கள் அவர்களில் அப்துல் காதிர் ஜீலானியும் ஒருவராவார்கள் . (ஸதகாவின் சிறப்பு ப : 941 )



4- நபியவர்களிடம் நேரடியாக பேசும் பெரியார்கள்.

ஸூபிகள் மாத்திரம் தான் நபியவர்களை நேரடியாகச்சந்தித்து தமக்குத் தேவையான சட்டதிட்டங்களைப் பெற்றுக் கொள்கின்றார்கள் என எண்ணுகின்றீர்களா? அதே இஸ்லாத்துக்கு முரணான கொள்கை தப்லீக் பெரியார்களிடமும் தாராளமாக உள்ளதே! நம்பமுடிய வில்லையா? இதைப் படியுங்கள்.

ஜக்கரிய்யா மௌலானா தமது 21 ஆவது மஜ்லிஸில் கூறியதாக ஷேக் தகிய்யுத்தீன் அவர்கள் கூறுகின்றார்கள்.
'ஷேக் நிலாமுத்தீன் அவ்லியா, கத்தஸல்லாஹூ ஸிர்ரஹூல் அஸீஸ் அவர்கள் (இவர்களது தர்ஹா இன்றைய டில்லி தப்லீக் மர்க்கஸின் வளாகத்தில் உள்ளது குறிப்பித்தக்கது) இசை கேட்கும் வழக்கமுடையவராயிருந்தார்கள்.  அப்போது டில்லியின் முப்தியாக இருந்த காழி ளியாஉத்தீன் அவர்கள் இதனைக் கடுமையாகக் கண்டித்து வந்தார்கள்.  ஆனால் ஷேக் அவர்களோ எனக்கு மாத்திரம் இசை கேட்க அனுமதிக்கப்பட்டிருக்கின்றது.  ஏனெனில் அது சில நோய்களுக்கு நிவாரணியாகும் என்றார்கள்.  ஆனால் இதை ஏற்றுக் கொள்ளாத முப்தி அவர்கள் கடுமையாக விமர்சிக்கவே ஷேக்கவர்கள் ' நான் நபியவர்களிடம் எனக்கு இசை கேட்பது ஆகுமென அனுமதியெடுத்துத் தந்தால் ஏற்றுக் கொள்வீர்களா? என முப்தியிடம் கேட்க அவர்களும் சம்மதித்தார்கள் அன்றிரவு முப்தியவர்களின் கனவில் நபியவர்கள் தோன்றி ஷேக் நிழாமுத்தீன் அவர்கள் இசை கேட்பது ஆகும் அவர்களுக்கு சலுகையளிக்கப்பட்டுள்ளது என்றார்கள்.  அதற்கு முப்தியவர்கள் யா றஸூலல்லாஹ் மார்க்கத்தின் படி தீர்ப்பளிக்கவா? அல்லது கனவில் கண்டபடி தீர்ப்பளிக்கவா? என வினவினார்கள்.
அடுத்த நாள்க் காலை முப்தியைச் சந்தித்த ஷேக் அவர்கள் இனியாவது என்னுடைய விடயத்தில் தலையிடாமல் என்னை விட்டு விடுவீர்களல்லவா? என்றார்கள்.  (தீன் மஜாலிஸ் எனும் நூலில்)

ஜக்கரிய்யா மௌலானாவை தரிசிக்க வந்த நபியவர்கள்.

ஜக்கரிய்யா மௌலானா அவர்கள் ஒருமுறை தம் மஜ்லிஸில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது நபியவர்கள் அவ்விடத்தில் சற்று உயர்ந்த மஜ்லிஸில் உட்காந்திருந்தார்கள்.  அவர்களுக்கு முன்னிலையில் அழகிய புத்தகங்கள் பல அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.  அவை அனைத்துக்கும் மேலே ஹஜ்ஜின் சிறப்பு என்ற தஃலீம் புத்தகம் இருந்தது. அதற்குக் கீழ் ஸலவாத்தின் சிறப்பும், அதன்கீழ் ஹயாத்துஸ் ஸஹாபா கிதாபும் இருந்தன.  அவ்வேளை அங்கே யூஸூப் பின்னூரி அவர்கள் வந்து நபியவர்களும் ஜக்கரிய்யா மௌலானாவும் பேசிக் கொண்டிருப்பதைக் செவியுற்று புன்னகைத்த வண்ணமே சென்றார்கள்.
(அறிவிப்பவர் அப்துல் ஹமீம் மௌலானா(ஆப் பைத்தீ ப: 134)

ஹஜ்ஜின் சிறப்பு, ஹயாத்துஸ் ஸஹாபா ஆகிய இரு நூல்களிலும் உள்ள கதைகள் சம்பவங்கள் அனைத்துமே நூற்றுக்கு நூறு உண்மை என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் கூட அவை புகாரி முஸ்லிம் போன்ற ஹதீஸ் நூற்களையும் தாண்டி முதலாவது இடத்தில் இருப்பதாகக் கூறி தப்லீக் நூல்களே அனைத்து கிரந்தங்களையும் விட சிறந்தது என்ற தவறான கருத்தை மறைமுகமாகச் சித்தரிக்கின்றார்களே!! பார்த்தீர்களா?.  தமது தவறான வழிகெட்ட சூபிக் கொள்கையை மக்களுக்கு வலுக்கட்டாயமாகத் திணிக்க எப்படியெல்லாம் நாடகமாடுகின்றார்கள் பாருங்கள்.



இபாதத்தின் பெயரால் அரங்கேறும் ஷிர்க்குகள்.

இப்பகுதியில் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ்வைப் போல் தெய்வீக தன்மை வாய்ந்தவாகளாகச் சித்தரித்து அவர்களின் பெயரால் செய்யப்படும் ஷிர்க்கான விடயங்கள் சிலவற்றைச் சுட்டிக்காட்டுகின்றேன். இவர்களது வழக்கமான வழிமுறை யாதெனில் முதலில் நபியவர்களைப் புகழ்வதாகக் காட்டிக் கொள்வார்கள் பின்னர் அவர்கள் தம்மையும் தரிசிக்க வருவதாகக் கதையளப்பார்கள், அதன்பின் நபியவர்களுக்கு தெய்வீகத் தன்மைகள் இருப்பது போன்று சித்தரிப்பார்கள், இறுதியில் தமக்கும் அவ்வாரான ஆற்றல் உள்ளதாக வாதிப்பார்கள்.  இது இவர்கள் சூபிகளிடமிருந்து தத்தெடுத்த வழிமுறை.  இங்கு அதற்கான சில ஆதாரங்களை முன் வைக்கின்றேன்.

அல்லாஹ் அல்லாதவர்களிடத்தில் பிரார்த்திப்பது, உதவி தேடுவது கொடிய ஷிர்க்காகும் என அல்லாஹ்வும் நபியவர்களும் போதித்திருக்கின்றனர்.

அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான். ..
அல்லாஹ்வை விடுத்து நீங்கள் பிரார்த்திக்கும் எவருமே அணுவளவு உதவியும் செய்ய சக்தியற்றவர்களாகும். நீங்கள் அவர்களிடம் பிரார்த்தித்தாலும் அவர்களால் அதைக் கேட்க முடியாது.  அப்படித்தான் கேட்டாலும் அதற்குப் பதிலளிக்க முடியாது.  மறுமையில் நீங்கள் ஷிர்க் வைத்ததனால் உங்களை அவர்களும் (காப்பாற்ற) மறுத்து விடுவார்கள்.  (ஸூரா பாதிர் 13-14)

மற்றுமொரு இடத்தில்..

قُلْ لا أَمْلِكُ لِنَفْسِي نَفْعاً وَلا ضَرّاً إِلاَّ مَا شَاءَ اللَّهُ وَلَوْ كُنتُ أَعْلَمُ الْغَيْبَ لاسْتَكْثَرْتُ مِنْ الْخَيْرِ وَمَا مَسَّنِي السُّوءُ إِنْ أَنَا إِلاَّ نَذِيرٌ وَبَشِيرٌ لِقَوْمٍ يُؤْمِنُون الأعراف 188  
நபியே சொல்லுங்கள்.  நான் எவ்வித நன்மை கொடுக்கும் சக் தியையோ, (மக்களுக்குநேரும்) தீங்கைத் தடுக்கும் சக்தியோ சொந்தமாக்கியிருக்க வில்லை.  எனக்கு மறைவான விடயங்கள் பற்றிய ஞானம் இருந்திருப்பின் நல்லவற்றை மாத்திரமே அதி கமதிகம் நான் செய்திருப்பேன், அத்துடன் எனக்கு எவ்வித கெடுதி களும் ஏற்பட்டிருக்காத (வாறும் செய்திருப்பேன்.) (ஸூரத்துல் அஃராப் 188)

நபியவர்களிடத்தில் ஒருவர் மிகவும் கொடிய செயல் எது? எனக் கேட்ட போது அல்லாஹ்வே உன்னைப் படைத்திருக்கும் போது அவனுக்கு நிகராக ஒருவரை ஆக்குவதே மிகக் கொடிய பாவமாகும் என்றார்கள்.  (ஆதாரம் புகாரி 4117.)

இது இப்படியிருக்க தப்லீக் பெரியார்கள் செய்த சில காரியங்களை இந்த நபி மொழியோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.

1- ஜக்கரிய்யா மௌலானா தான் ஹஜ்ஜூச் செய்த வரலாறு பற்றி எழுதுகையில் ' ஹஜ்ஜ10_க்குப் புறப்பட்டு நாற்பது தினங்கள் சென்ற பிறகு நாங்கள் நபியவர்களின் கப்ருக்கு முன்னால் வந்து நின்று நபியவர்களை நோக்கி 'நாங்கள் பிறருக்கு ஹஜ்ஜூச் செய்ய வந்துள்ளோம், எங்களுக்கு வாகன வசதி கிடைக்காவிட்டால் மிகுந்த சிரமமேற்படும் நபிகளாரே! என்று முறையிட்டோம்.  என்ன ஆச்சரியம் நாங்கள் கூட்டி வந்த காட்டறபிக்கு ஒட்டகமொன்று கிடைத்தது.  (தீஸ் மஜாலிஸ் ப: 44)

2-ஸதகாவின் சிறப்பில் வருவதாவது. .
மதீனாவை அண்மித்த பகுதியில் ஒரு ஹாஷிம் குலப் பெண் வாழ்ந்து வந்தாள்.  அங்கிருந்த சில வேலையாற்கள் அவளுக்குத் தொந்தரவு கொடுத்து வந்தனர்.  இவர்களின் தொல்லை பொறுக்க முடியாமல் அவள் நபியவர்களிடத்தில் தனக்கு அபயமளிக்குமாறு பிரார்த்தித்தாள்.  அப்போது (றவ்ழா) நபியவர்களின் கப்ரிலிருந்து என்னிடம் உனக்கு நல்வழிகாட்டல் இல்லையா? பொறுமையைக் கடைப்பிடிப்பாயாக என அசரீரி கேட்டது.  அதன் பின் விரைவிலேயே அந்த மூன்று நபர்களும் மரணித்து விட்டனர், அவர்களது தொல்லையும் முடிவுற்று விட்டது.  (ஸதகாவின் சிறப்பு 961)

நபியவர்கள் தம் கப்ரிலிந்தவாறே பணம் கொடுத்த அதிசயம்.

ஸதகாவின் சிறப்பில் வருவதாவது. ..
முஹம்மதிப்னு முன்கதிர் என்பவர் சொல்கின்றார்.  எனது தந்தையிடத்தில் ஒருவர் ஒருதொகைப் பணத்தை அமானிதமாக ஒப்படைத்து விட்டு ஜிஹாதுக்குச் சென்றார்.  உமக்குத் தேவைப்பட்டால் அதை எடுத்துச் செலவு செய்யுங்கள் பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்றும் சொல்லிச் சென்றார்.  எனது தந்தைக்கு அவசியத்தேவை ஏற்பட்டதனால் அதை எடுத்துச் செலவு செய்யும்படியாகி விட்டது.  பின்னர் அம்மனிதர் வந்து தனது பணத்தைக் கேட்ட போது (அவரிடம் பணமில்லை) அடுத்த நாள் தருகின்றேன் என்று வாக்களித்து விட்டார்கள்.  பின்பு கவலையுடன் நபியவர்களுடைய கப்றுக்குச் சென்று அங்கு தனது பிரச்சினையை நபியவர்களிடம் முறையிட்டுப் பிரார்த்தித்தார்கள்.  பின் மிம்பறுக்குப் பக்கத்திலும் சென்று பிரார்த்தித்தார்கள். ஸூபஹ் வேளை நெருங்கியிருக்கும்.  எனது தந்தை கப்ரிடத்தில் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். என்ன ஆச்சரியம் !! இருளிலே ஒரு அசரீரி. . முஹம்மதின் தந்தையே இதைப் பிடியுங்கள்! என்று ஒரு சத்தம்.  என் தந்தை கை யை நீட்டியதும் ஒரு பணப்பையை நபியவர்கள் கப்றுக்குள் இருந்தவாறே கொடுத்தார்கள்.  அதை எடுத்து தனது அமானிதத்தை தந்தை உரியவரிடம் ஒப்படைத்தார்.  (ஸதகாவின் சிறப்பு 943)

தீன் என்பது அல்லாஹ்வுடைய கட்டளையும் நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கை வழிமுறையும் என்று கூறிக் கொள்ளும் இவர்கள் அல்லாஹ்வும் நபியவர்களும் தடுத்த ,நபியவர்கள் தமது வாழ்நாள் அனைத்தையும் எதை ஒழித்துக்கட்டப் பாடுபட்டார்களோ அந்த ஷிர்க்கையும் தர்ஹா வழிபாட்டையும் இபாதத் எனும் பேரில் பாவமறியா பாமர வெள்ளை உள்ளம் கொண்ட மக்களிடம் விதைக்கும் இந்த நிலையை யாரிடம் முறையிடுவது? அல்லாஹ்தான் நேர்வழி காட்ட வேண்டும்.  இவ்வாறான விடயங்கள் தீனுடையவை என்பதை இவர்களுக்கு அல்லாஹ் சொன்னானா? நபியவர்கள் சொன்னார்களா? இவையெல்லாம் பச்சை ஷிர்க் என்று அல்லாஹ்வும் றஸூலும் சொல்லவில்லையா? அப்படியிருக்க குர்ஆன் ஹதீஸில் தடுக்கப்பட்டவைகளையெல்லாம் இபாதத் என அறிமுகப்படுத்தும் இவர்கள் தீன் என்பது அல்லாஹ்வின் கட்டளையும் நபியுடைய வழியும் என்று சொல்லி அழைப்பது எவ்வளவு பெரிய மோசடி!

இந்த பச்சை ஷிர்க்கான தர்ஹா வழிபாடும் கப்ரில் மரணித்தவர்களிடம் பிரார்த்திப்பதும் இவர்களைப் பொறுத்தவரை இபாதத்களாகக் கருதப்படுவதால்தானோ என்னவோ தப்லீக்கின் கேந்திர ஸ்த்தலமாகி;ய டில்லி மர்க்கஸின் முன் இருக்கும் தர்ஹாவில் நடக்கும் அத்தனை அனாச்சாரங்களையும் வேடிக் கை பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள்.  டில்லி மர்கஸ் பள்ளிவளாகத்திலும் மூன்று கப்ருகள் இன்று வரைக்கும் அகற் றப்படாமல் உள்ளன.  இவர்களைப் பொறுத்த வரைக்கும் கப்ர் வணக்கமெல்லாம் இபாதத்களல்லவா? அவற்றை எப்படி அகற்ற முடியும்?.

  • இது போல ஹஜ்ஜூக்குச் சென்ற ஒருவர் பசியேற்பட்ட போது நபியவர்களிடம் நான் உங்கள் விருந்தாளி என்று கப்ரில் சொல்லி விட்டு உட்காந்திருக்க கப்ரிலிருந்து நபியவர்களின் கைவெளிப்பட்டு ஒரு பண முடிப்பைக் கொடுத்தாகவும் அதிலுள்ள பணத்தின் பரக்கத் காரணமாக நீண்ட நாட்களுக்கு அதை செலவுசெய்த கதையைப் பாருங்கள் (பளாயிலுல் ஹஜ் 925)

  • நபியவர்கள் கப்ரிலிருந்தவாறே ஒருவருக்குப் போர்வை கொடுத்த கதை பார்க்க: ஹஜ்ஜின் சிறப்பு 944.

  • நபியவர்கள் கப்ரிலிருந்தவாறே ரொட்டி கொடுத்த சம்பவம் பார்க்க வேண்டுமா? பாருங்கள் ஹஜ்ஜின் சிறப்பு பக்கம் 797

  • மற்றுமொருவர் நபியவர்களிடம் பசிக்கு உணவளிக்குமாறு பிரார்த்தித்ததும் கிச்சடியும் குழம்பும் கொடுத்த நிகழ்ச்சியைப் பார்க்க விரும்பின் புரட்டுங்கள் ஹஜ்ஜின் சிறப்பு பக்கம் 945

  • ஹ் வலிய்யுல்லாஹ் ஒருமுறை நபியவர்களிடம் உணவு கேட்டு முறையிட்ட போது நபியவர்கள் கனவில் சுவையான சோறும் நெய்யும் அடங்கிய மரவையைக் கொடுத்தாகவும் பின்னர் நீர் புகட்டியதாகவும் விழித்துப் பார்த்த போது கையில் உணவின் நெய்மணம் வீசியதாகவுமுள்ள சம்பவத்தைப் பார்க்க ஸதகாவின் சிறப்பு பக்கம் 799
நபியவர்கள் தமது தோழர்களுக்குப் போதனை செய்த போது நீ எதைக் கேட்டாலும் அல்லாஹ்விடமே கேள் எவ்வித உதவி தேடுவதாயினும் அல்லாஹ்விடமே தேடு என்று போதித்தார்களல்லவா? அவர்களின் கப்ரின் முன்னாலேயே அவர்களது பெயரிலேயே இத்தனை அனாச்சாரங்களும்; அரங்கேற்றப்படுகின்றன. இத்தனைக்கும் வஸ்த்துக்களால் எதுவும் ஆவதில்லை. அல்லாஹ்வினால்தான் அனைத்துமே ஆகின்றன என்றும் சொல்லிக் கொள்வார்கள். அப்படியானால் நபிகளார் உட்பட கப்ரில் அடக்கப்பட்டிருக்கும் அனைவருமே அல்லாஹ்தானோ? நஊது பில்லாஹ்.

கப்ர் வணக்கம் கூடுமா? கப்ரிடம் பரக்கத் தேடலாமா? கப்ராளிகளுக்கு நல்லமல்கள் செய்து அனுப்பலாமா? அவர்களுக்கு நடப்பவை எமக்குத் தெரியுமா? எமக்கு நடப்பவை அவர்களுக்குத் தெரியுமா?

ஆம் என்பதே தப்லீக் நூல்களிலிருந்தும் அதன் பெரியார்களின் வழிகாட்டல்களிலிருந்தும் எமக்குக் கிடைக்கும் பதிலாகும். அதற்கு முன் இதைப் பற்றி நபியவர்கள் என்ன சொல்லியிருக்கின்றார்கள் ?

நபியவர்கள் சொல்லியுள்ளார்கள். .
எனது கப்ரை விழா எடுக்கப்படும் இடமாக்கி விடாதீர்கள். யூத கிறிஷதவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்.  ஏனெனில் அவர்களில் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டால் அவரை அடக்கி விட்டு (அதில் கட்டடம் கட்டி) அதனை வணங்குமிடமாக்கிக் கொள்வார்கள்.  இவர்கள்தான் படைப் பினங்களிலேயே மிகக் கெட்டவர்கள் என்றார்கள்.  (ஆதாரம் புகாரி 480) .

அதே போன்றே கப்ரை வலம் வரல், கப்ரின் மண்ணை எடுத்து பரக்கத்துப் பெறல், அதன் பெயரில் நேர்ச்சை செய்தல், கப்ராளிகளுக்கு நன்மைகளைச் செய்து ஹதிய்யாச் செய்தல் அனைத்துமே இஸ்லாம் தடை செய்த பித்அத்தான ஷிர்க்கான விடயங்களாகும். 

இந்த அனைத்து விடயங்களும் தப்லீக் பெரியார்களால் அங்கீகரிக்கப்பட்டதாகவும் ஏன்? அவர்களே முன்னின்று இந்த விடயங்களைச் செய்ததற்காக ஆதாரங்களைக் காணும் போது தான் ஆச்சரியங்கலந்த வேதனையாகவிருக்கின்றது.

மௌலானா ஜக்கரிய்யா சொல்கின்றார்கள். ..
'கப்றிலுள்ள பெரியார்களுக்கு நல்லமல்களைச் செய்து அனுப்புவதில் அதிக கவனஞ் செலுத்துங்கள்.  ஏனெனில் நீங்கள் இப்படிச் செய்யும் போது கப்ராளிகளுடைய றூஹூகள் உங்களின் பக்கம் திரும்பும் அவற்றிலிருந்து பல பரக்கத்துக்களும் உதவிகளும் உங்களுக்கு உண்டாகும்.  (தீஸ் மஜாலிஸ் 211)

மேற்படி செய்த அல்லாஹ்வின் கட்டளையா? நபியின் வழிமுறையா?,

மற்றுமொரு இடத்தில். .. அவ்லியாக்களுடைய கப்ருகளைத் தரிசித்து அதன் மூலம் ஏதேனும் உதவிகளை ஒருவர் பெற்றால் அது தான் பைஅத் செய்திருக்கும் குருநாதர் - ஷேக்கிடமிருந்தே உண்டானது என எண்ண வேண்டும்.  ஏனெனில் அந்த அவ்லியாவின் கப்ரிலிருந்து கிடைத்த பரக்கத் இந்த ஷேய்க்கின் ஊடாகவே கிடைத்திருக்கின்றது.  (ஸக்காலத்துல் குலூப் 137)

ஸவானிஹூ முஹம்மத் எனும் தப்லீக் பெரியாரின் நூலொன்றில் உள்ளதாவது. ..
'ஜக்கரிய்யா மௌலானா அவர்களது சீடர்களில் ஒருவர் ஷேய்க் கன்கோயி அவர்களின் கப்ரைத் தரிசித்தார்.  அப்போது ஷேக் அவர்கள் கப்ரினுள் 'கவ்கப் துர்ரிய'; எனும் கிதாபை வாசித்துக் கொண்டிருக்கக் கண்டார்.  அதே போல் கன்கோயி அவர்கள் மரணித்த வேளை செய்யித் முஹம்மத் என்பவர் அவர்களது கப்ருக்கு அருகிலேயே முறாக்கபாவில் இருந்து கொண்டிருந்தார்கள்.  (ஸவானிவ் முஹம்மது யூஸூப் 135)

ஷேய்க் சர்தார் முஹம்மது பாக்கிஸ்த்தானி அவர்கள் கூறுகின்றார்கள் மதீனாவிலுள்ள மஸ்ஜிதுன் நபவியின் அல் மஜீத் கதவுக்குட்பட்ட இடம் பத்து வருடங்களாக தப்லீக் ஜமா அத்தினரின் கேந்திர ஸ்த்தலமாக இருந்து வந்தது. அப்போது தப்லீக்கின் அமீராக இருந்த முஹம்மது யூஸூப் திஹ்லவி அவர்களுடன் டில்லியில் நிலாமுத்தீன் பகுதியில் இருந்த இல்யாஸ் (றஹ்) அவர்களின் கப்றுக்கு நள்ளிரவில் செல்வோம் அங்கு கப்ரைச் சுற்றி நீண்ட நேரம் தலைகளைத் தாழ்த்தியவர்களாக முறாக்கபா எனும் சிந்தனையில் இருப்போம்.  அப்போது(ஹயாத்துஸ் ஸஹாபா) எனும் நூலை எழுதிய யூஸூப் (றஹ்); சொல்வார்கள் 'நிச்சயமாக இந்தக் கப்றிலிருக்கும் மௌலானா இல்யாஸ் (றஹ்) அவர்கள் தனக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறங்கும் ஒளியினைத் தமது சீடர்களுக்கு அவரவர் தரீக்காவின் மீது கொண்ட பற்று நம்பிக்கைக் கேற்ப பங்கு வைத்துக் கொடுப்பார்கள்' என்று கூறினார்கள்.  (தப்லீக் ஜமாஅத் எனும் நூல் 63-65)


மறைவான ஞானத்தை மனிதனும் அறியலாமா ?

அல்லாஹ்கூறுகின்றான்...
நபியே சொல்லுங்கள்.  அல்லாஹ்வைத்தவிர வானத்திலோ பூமியிலோ உள்ள எவருமே மறைவான விடயங்களை அறிய மாட் டார்கள்.  (அந் நம்ல் 65)


நபியே கூறுங்கள்.. எனக்கு மறைவான விடயங்கள் தெரியுமென்றிருந்தால் எனக்கு நன்மை பயப்பவைகளை மாத்திமே செய்து கொண்டிருந்திருப்பேன். எவ்வித தீங்குகளும் எனக்கு ஏற்பட்டிருக்காது. . (அல் அன்பால் 188)

இவற்றைக் கவனத்தில் வைத்துக் கொண்டு பின்வரும் பெரியார்கள் பற்றிய திகிலூட்டும் சம்பவங்களையும் வாசியுங்கள்.

1-தான் மரணிக்கும் நேரத்தை முன்கூட்டியே சொன்ன பெரியார்கள்.
யஃகூப் அஸ்ஸனூஸிய் சொன்னதாக ஜக்கரியா மௌலானா சொல்கின்றார்கள். .
'எனது சீடர்களில் ஒருவர் என்னிடத்தில் வந்து நான் நாளை ளுஹருக்குப் பின் மரணிப்பேன் என்றார். மறுநாள் ளுஹர் நேர மானதும் சென்று கஃபாவைத் தவாபு செய்தார். அதன் பின் சொன்னது போன்றே மரணித்து விட்டார்.  நானே அவரைக் குளிப்பாட்டி கபனும் செய்தேன்.  கப்றுக்குள் அவரை வைத்த போது கண்களைத் திறந்து விட்டார்.  நானோ ஆச்சரியத்துடன் மரணித்ததன் பின் எப்படி உயிர் பெற்றாய்? என்றதும் ஆம் நான் உயிருடன் தான் இருக்கின்றேன் அல்லாஹ்வின் மீது காதல் வைத்திருக்கும் எவரும் மரணிப்பதில்லை என்றார். (ஸதக்காவின் சிறப்பு 657)

இதில் எத்தனை அபத்தங்கள் என்பதைப் பார்ப்போம்.

  • ஷேக்குக்கே தெரியாத ஞானம் சிஷயனுக்குத் தெரிந்திருக்கின்றது.  இவ்வகையில் இவர் குருவைமிஞ்சிய சீடன்.

  • இவர் மரணமடைந்த நேரம் நாள் போன்றவற்றைத் துல்லியமாக அறிந்து வைத்திருந்திருக்கின்றார்.  அப்படியானால் அல்லாஹ் குர்ஆனில் கூறும் பின்வரும் வசனம்? பற்றி
    எந்தவொரு ஆத்மாவும் நாளைக்கு என்ன நடக்குமென அறியாது. எந்த ஆத்மாவும் எவ்விடத்தில் மரணிக்குமென்றும் அறியாது அல்லாஹ்தான் நிச்சயமாக அனைத்தையும் அறிந் தவனும் ஞானமுள்ளவனுமாகும். (ஸூரா 34)
    என்று சொல்வது பொய்யோ? எதை நம்புவது ??

  • இவர் உயிரோடு இருந்திருப்பின் தன்னைப் பிறர் குளிப்பாட்டி தனது மறைவிடங்களைப் பார்க்க அனுமதித்திருக்கின்றாரே! இவருக்கு வெட்கம் சூடு சொறணை எதுவுமில்லையா? வெட்கம் ஈமானின் ஒரு பகுதியென நபியவர்கள் சொல்லியிருக்கின்றார்களே அப்படியாயின் ஈமான் முழுமையற்ற இவர் எப்படி இறை நேசராக முடிந்தது.?

  • இவர் உயிரோடிருக்கின்றார் என்று அறிந்து கொண்டே இவரது குரு இவரைப் புதைத்திருக்கின்றார்.  இது பாரதூர மானதொரு கொலைக்குற்றமாகும். இஸ்லாமியச் சட்டத்தின் படி இவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமே?

இது போன்றே ஜக்கரிய்யா மௌலானாவின் தாயும் சிறிய தந்தையும் தாம் மரணிக்கும் நேரத்தைத் துல்லியமாகக் குறித்துக் கூறியதாகவும் அதே நேரத்தில் சொன்னபடி மரணமடைந்ததாகவும் சொல்லும் அதிசய நிகழ்ச்சி. பார்க்க : (வழாயிபு றமழான் 22)

மௌலானா யூஸூபுக்கும் இன்ஆமுல் ஹஸன் இருவருக்குமிடையில் நடந்த உரையாடல். .
யூஸூப் : நான் என் கடமையைச் செய்து முடித்து விட்டேன் இனி நான் உலகிலிருக்க வேண்டிய அவசியமில்லை. 
இன்ஆம் : அப்படியல்ல.  நீங்கள் செய்ய வேண்டிய நிறைய வேலைகள் பாக்கியிருக்கின்றனவே.
யூஸூப் : எனக்கு எத்தனை வயது தெரியுமா?
இன்ஆம் : நாப்பத்தியெட்டு வயது.
யூஸூப் : இந்த வயது போதும்.
இன்ஆம் : இல்லையில்லை. உலகிக்கு நீர் செய்ய வேண்டிய சேவைகள் நிறையவே இருக்கின்றன.
யூஸூப் : 48 வருடங்கள் சேவை செய்தது போதாதா?. 
இன்ஆம் : எதற்காக இப்படிப் பேசுகின்றீர்கள்.  மரணம் என்பது எப்போதும் வரக் கூடியதே, அதை விட்டும் யாரும் தப்பிக்க முடியாது.  ஆனால் நீங்கள் இன்னும் நிறைய செய்ய வேண்டிய விசயங்கள் இருக்கின்றனவே.
யூஸூப் : நல்லது நீங்கள் உங்களுக்குள் மஸூராச் செய்து நான் எவ்வளவு காலம் இருந்து எனது பணிகளைச் செய்து முடிக்க வேண்டுமென்று சொல்லுங்கள் என்றதும் இதில் மஸூராப் பண்ண என்ன தேவையிருக்கின்றது.  அஜல் முடிந்தால் மறுமைக்குக் செல்ல வேண்டியதுதான் என்றார்.
யூஸூப் : அப்படியாயின் எனக்கு 48 வயது போதும் நான் எனது திட்டத்தை முடித்து விட்டேன்.  மீதமுள்ளதை இருப்பவர்கள் பார்த்துக் கொள்ளட்டும்.  நான் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றார்.

உண்மைதான் அன்றைக்கு அடுத்த நாளே அவர்கள் இறையடி யெய்தி விட்டார்கள்.  இன்னா லில்லாஹி
இப்படி தான் மரணிக்கும் தருணம் ஒருவருக்குத் தெரிந்திருந்தால் மறைவான ஞானம் அல்லாஹ்வுக்கு மாத்திரமே இருக்கின்றது என்பதில் என்ன அர்த்தம் இருக்கின்றது.  இப்படி அறிய முடியுமாயின் காலம் முழுதும் ஒருவன் பாவஞ் செய்து விட்டு இறுதியில் தான் மரணிக்க முன் தவ்பாச் செய்து கொண்டால் போதுமென ஒவ்வொருவரும் நினைத்தால் இந்த சரீஅத் சட்டங்களின் நிலை என்னவோ?. இவ்வாறெல்லாம் இவர்கள் கூறுவதன் உள் நோக்கம் யாதெனில் தம்மை சாதாரண மக்களை விட ஒரு படி உயர்த்தி யாருக்கும் தெரியாத சில விடயங்கள் தமக்குத் தெரியும் என்பதாக பாமரர்களை நம்பவைத்து ஒருவித குருபக்தியை உருவாக்குவதேயன்றி வேறென்னஇருக்கமுடியும் ?.


தப்லீக் பெரியார்களின் மற்றும் சில மார்க்க விரோதக் கருத்துக்கள்.

1- கஃபாவைப் பற்றி. ..
2- மரணித்தவர்கள் பற்றி....
3- தரீக்காக்கள் பற்றி...
4- பைஅத் செய்வது பற்றி. .
5- ஜிஹாத் செய்வது பற்றி. ...
இவ்வாறு எத்தனையோ விடயங்களில் தப்லீக் பெரியார்கள் சரீஆவுக்கு முரண்படும் விடயங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன.  முடிந்தளவு அவை பற்றி விளக்க முயற்சிக்கின்றேன். 






இரண்டாம் நம்பர் தொழுகை .


இஸ்லாத்தின் அடிப்படை விடயங்களில் இரண்டாவது இடத்தை வகிப்பது தொழுகையாகும் . தொழுகையை விட்டவன் முஸ்லிமாக இருக்க முடியாது . தொழுகையின் முக்கியத்துவம் சிறப்பு அதனை விடுவதால் ஏற்படும் இன்னல்கள் பற்றியெல்லாம் அல்குர்ஆனிலும் நபிமொழியிலும் அதிக இடங்களில் விபரித்துக் கூறப்பட்டுள்ளன .

தப்லீக் ஜமாஅத்தைப் பொறுத்த வரைக்கும் அவர்களின் தஃலீம் தொகுப்பான அமல்களின் சிறப்பில் தொழுகைக்காக ஒரு பகுதியே ஒதுக்கப்பட்டுள்ளது . அதிலே தொழுகையின் அவசியம், அதன் சிறப்புகள், தொழுகையை விட்டவர்களுக்குரிய தண்டணைகள் பற்றியெல்லாம் விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன. இதையெல்லாம் எவரும் குறை கூற வேண்டியதில்லை.

தஃலீம் தொகுப்பு புத்தகத்தின் வடிவமைப்பே வித்தியாசமானது திட்டமிட்டு இதனை ஜக்கரிய்யா மௌலானா மிக்க வியூகம் வகுத்து தமது மார்க்க விரோதக் கருத்துக்கள் பாரரர்களுக்கு இலகுவில் புரிந்து விடாதபடி திட்டமிட்டு வகுத்திருக்கின்றார்கள். அதைத் தமிழில் தந்த நிஜாமுத்தீன் அதைவிடமேலே சென்று மௌலானா கூறிய மார்க்க விரோதக் கருத்துக்களை இலகுவில் புரியாத வகையில் இலக்கிய நயம்பட இலைமறை காயாக ஆங்காங்கே புகுத்தியிருக்கின்றார்கள் . ஆரம்பத்தில் அல்குர்ஆன் வசனங்களை அரபியில் போட்டு அதன் அர்த்தத்தையும் தருவார்கள் இதன் பின் ஆதாரப்பூர்வமான நபி மொழிகள் சிலதைக் கூறி விடயத்துக்கு வலுவூட்டுவார்கள். இதனால் வாககர்கள் கவரப்பட்டு ஆர்வத்துடன் தொடர்ந்து படிக்க முற்படுவார்கள் . அதன் பின் சில பலவீனமான ஹதீஸ்களின் விளக்கங்கங்கள் வரும். பின்னர் புனையப்பட்ட முகவரியில்லாத சில விடயங்கள்

'ஒரு ஹதீஸில் வருவதாவது, ஒரு அறிவிப்பில் சொல்லப்பட்டுள்ளதாவது ' எனும் பெயரில் இடம் பெறும் . அதன்பின்னர் பெரியார்களின் வரலாறு எனும் பெயரில் பல்வேறு விதமான போலிக்கதைகளும் நடக்காத கற்பனைச் சம்பவங்களும் சாகசச் செயல்களாகச் சித்தரிக்கப்பட்டு நவரசக் கதைகளுக்கு உரமூட்டுவது போல் அசந்து போன மக்களுக்கு உற்சாகப் பானமாக ஊட்டப்படும். ஏமாந்து பழகிப்போன எம் சமூதாயம் அவை அனைத்துமே இஸ்லாம் தான்என்று எண்ணித் தொலைத்து விடும் இது தான் தஃலீமைப் பற்றிய சுருக்கம் .


விரிவாகக் கூறுவதாயின் ...
தப்லீக் சகோதரர்கள் மக்களைத் தொழுகைக்கு அழைக்கின்றார்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது . ஏனெனில் எனக்கே தப்லீக்கில் பலதடவைகள் நீண்ட வக்துக்களில் வெளிக்கிளம்பிச்சென்ற அனுபவமுண்டு . இவர்களது முயற்சியால் பலர் தொழுகையாளர்களாக ஆனதையும் பல பாழடைந்த பள்ளிகள் எழுச்சி பெற்றதையும் கூட மறுக்க முடியாது . அவையெல்லாம் இதனால் கிடைக்கும் நன்மைகள். அதே போல் இதிலுள்ள பாதகங்களையும் கவனிக்கத்தானே வேண்டும். ஒரு மனிதன் ஐவேளை தொழக் கூடியவனாக இருக்கின்றான் என்பதற்காக அவன் செய்கின்ற ஏனைய தவறுகள் எதையும் கண்டு கொள்ளாமல் விட்டு விடமுடியுமா?முடியாதுதானே! அப்படியானால் இப்போது இங்கு தொழுகை விடயத்தில் தப்லீக் மக்களிடத்திலுள்ள தவறுகளையும் சொல்லத்தானே வேண்டும் .அது தானே நீதி ?

எனவே தப்லீக் சகோதரர்களாயினும் ஏனைய பொது சகோதரர்களாயினும் சரி பின்வரும் குற்றச் சாட்டுக்களைச் செவிமடுங்கள் . அவதானியுங்கள் பின் அது சரிதானா? என சிந்தியுங்கள் . தீர்ப்புக் கூறுவது உங்கள் கைகளில் . அல்லாஹ்வுக்குப் பயந்து நாளை மறுமையில் அவன் எம்மை விசாரிப்பான் என்பதை உள்மனதில் நிறுத்தி வாசியுங்கள் . சரியாயின் அதை ஏற்றுக்கொண்டு உங்கள் முடிவை மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை . பிடிவாதத்தை விடுங்கள் அதனால் மறுமையில் எமக்கு எவ்வித பலனும் ஏற்படப் போவதுமில்லை .அல்லாஹ் நாளை மறுமையில் எம்மை விசாரிக்கும் போது குர்ஆன் சொன்ன படி வாழ்ந்தாயா ? நபிகளின் வழிகாட்டல்களின் படி வாழ்ந்தாயா ? என்றே விசாரிப்பான் . நீ அந்த ஜமாஅத்தை ஆதரித்தாயா ? இந்த இயக்கத்துக்காகப் பாடுபட்டாயா ? என்றெல்லாம் கேட்கப் போவதில்லை . ஒரு அமைப்பை ஒருவர் ஆதரிப்பதும் புறக்கணிப்பதும் அவரவர் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது . ஆனால் நபி வழியை ஒவ்வொருவரும் ஆதரித்தே ஆகவேண்டும் . அதன்படியே வாழ்ந்தாக வேண்டும் .இல்லாவிட்டால் செல்லுமிடம் நரகந்தான் . இப்போது விடயத்துக்கு வருவோம்.

முறைப்பாடு : . 1 (தப்லீக் பெரியார்களும் மத்ஹபு வெறியும்...?)

முஸ்லிம்களில் மத்தியில் நான்கு மத்ஹபுகளைப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை கணிசமாக இருந்தாலும் அனைத்து அறிஞர்களுமே நபிவழிக்கு மாற்றமாக மத்ஹபுச் சட்டங்கள் அமையும்போது நபி வழிப்படியே நடக்க வேண்டுமென்ற முடி விலுள்ளனர் . அதுவே சரியானதுமாகும் . நான்பு மத்ஹபுகள் என்பது அந்த நான்கு இமாம்களும் திட்டமிட்டு உருவாக்கி விட்டு இதைத்தான் மக்கள் பின்பற்ற வேண்டுமென்ற எண்ணத்தில் செய்ததன்று . மாறாக அவர்கள் வழங்கிய தீர்ப்புக்கள் கருத்துக்கள் போன்றன காலப்போக்கில் மக்களால் பின்பற்றப்பட்டு வந்ததால் ஏதேச்சையாக உருவானதே மத்ஹபுகளாகும் . அப்போதும் கூட அந்த இமாம்கள் தாம் கூறிய கருத்துக்களும் தீர்ப்புக்களும் நபிவழிக்கு மாற்றமாக இருப்பின் தமது கருத்தைத் தூக்கியெறிந்து விட்டு நபிவழிப்படி அமல் செய்யுமாறு கட்டளையிட்டுள்ளார்கள் .

இமாம் ஷjபி அவர்கள் கூறுகின்றார்கள் ..
எம்மில் ஒருவர் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸூக்கு மாற்றமாகச் சொன்னால் அதை யாருமே எடுத்துச் செயற்படுத்தக் கூடாது என்பதே எனது கருத்தாகும் . எந்த ஒரு அறிஞருக்கும் ஆதாரப் பூர்வமான ஹதீஸூக்கு மாற்றமாகப் பேசும் உரிமை கிடையாது. . ( நூல் : றிஸாலா 219ம் பக்கம் )

எங்களுடைய பேச்சுக்களை மாத்திரம் ஆதாரமாகக் கொண்டு நாங்கள் எங்கிருந்து (என்னஆதாரத்தின் அடிப்படையில்) சொன்னோம் என அறியாமல் தீர்ப்பு வழங்குவது யாருக்கும் கூடாது என இமாம் அபூஹனீபா, மாலிக் ஷாபிஃ, அஹ்மத் ஆகிய நால்வருமே கூறியுள்ளார்கள் . (நூல் : அல் இன்திகாஃ 145 பக்கம் ).

நான் ஒரு விடயத்தைச் சொல்லியிருந்தால் அதனை அல்லாஹ்வின் வேதத்தோடும் நபியவர்களின் ஸூன்னத்தோடும் உரசிப் பாருங்கள் .அவ்விரண்டுக்கும் மாற்றமாக என் சொல் இருந்தால் என் சொல்லைச் சுவற்றில் தூக்கி வீசி விடுங்கள் .என்று நான்கு இமாம்களும் கூறியுள்ளார்கள் . ( நவவியின் அல் மஜ்மூஃ 1-63)

இமாம் அபூஹனீபா (றஹ்) அவர்கள் மார்க்கத்தீர்ப்பு வழங்கிவிட்டு இவ்வாறு கூறுவார்களாம் ..இதுதான் என்னுடைய அறிவுக்கு எட்டிய விளக்கம் .இதைவிடத் தெளிவான விளக்கம் யாருக்கும் கிடைத்தால் அவர் அதைப் பின்பற்றுவதுதான் சரியானது .
( தன்பீஹூல் காபிலீன் முன்னுரை )

அது மாத்திரமல்ல இவர்களுக்குப் பின்வந்த எவ்வளவோ இமாம்கள் தான் ஒரு குறிப்பிட்ட மத்ஹபுடைய இமாம்களாக கணிக்கப்பட்டாலும் கூட எத்தனையோ விடயங்களில் மத்ஹபுவைப் பின்பற்றுவது கட்டாயமில்லை என வலியுறுத்தியுள்ளதைப் பார்க்கலாம் .

ஹனபி மத்ஹபின் மேதையாகிய முல்லா அலிகாரி அவர்கள் சொல்கின்றார்கள் ..
'இந்த சமூதாயத்தில் யாரும் ஹனபியாகவோ, மாலிக்காகவோ ஷாபியாகவோ, ஹன்பலியாகவோ இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை .நான்கு இமாம்களும் அறிஞர்கள்தான் எனவே யார் ஒரு அறிஞரைப் பின்தொடர்கின்றாரோ அவர் நிம்மதியாக இறைவனைச் சந்திப்பார் என்று சொல்லப்படுகின்றது . ஆனால் பருவ வயதையடைந்த ஒவ்வொருவரும் நபிமார்களின் தலைவரான முஹம்மது நபி அவர்களைப் பின்பற்றுமாறே கட்டளையிடப்பட்டுள்ளனர் . அவர்கள் தான் பின்பற்றப்படவேண்டிய இமாம் ஆவார்கள் .

ஹனபி மத்ஹபு மேதையான அப்துல் ஹக் திஹ்லவி அவர்கள் கூறும் போது ' பின்பற்றப்பட வேண்டிய ஒரே இமாம் முஹம்மது நபியவர்கள் மட்டுமே. அவர்கள் அல்லாதவர்களைப் பின்பற்றுவது அறிவுக்குப் பொருந்தாது . இதுதான் ஆரம்பக் கால நல்லோர்கள் கடைப்பிடித்த நல்ல முறையாகும் . அல்லாஹ் நம்மையும் அவர்களுடன் சேர்ப்பானாக, ( ஷரஹ-ஸ்ஸிராத்தல் முஸ்தகீம் .)

இது இப்படியிருக்க தப்லீக் ஜமாஅத்தின் பெரியார்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் தீன் என்பது அல்லாஹ்வின் கட்டளையும் நபியவர்களின் வாழ்க்கை வழிமுறையுமாகும் என்று சொல்லிக் கொள்கின்றார்கள் . ஆனால் ஹனபி மத்ஹபில் உள்ள சட்டங்களை அச்சரம் பிசகாமல் பின்பற்றுவதில் பைத்தியகாரத்தனமாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது . அவ்வாறு செய்வது கடமை என்று பகிரங்கமாகவே பிரகடனப் படுத்துகின்றவர்கள் இவர்கள் . நபி வழி எக்கேடு கெட்டாவது போகட்டும் . ஹனபி மத்ஹபே எமது வழி எனும் வகையில் அவர்களின் செயற்பாடுகள் இருப்பதை நன்றாகவே நாம் அவதானிக்கலாம் . ஏனைய மத்ஹபுவைச் சார்ந்த தப்லீக் தொண்டர்கள் ஹனபி மத்ஹபைத்தான் பின்பற்ற வேண்டுமென்று இவர்கள் வெளிப்படையாக வலியுத்துவதில்லை .

இருந்தாலும் இவர்களிடம் பாடம் பெற்று மூளைச் சலவைக்கு உற்படுத்தப்பட்ட கார்க்கூன்களும் காலப்போக்கில் இவர்களைப் பின்பற்றி அவர்கள் செய்வதைப் போன்றே செய்வதையும், இன்னும் சிலர் இதே பிடிவாதத்தை தமது மத்ஹபான ஷாபி மத்ஹபு எனும் பேரில் ஊர் வழக்கில் உள்ள மௌட்டீக அனுஷட்டானங்களை பக்திப் பரவசத்துடன் செய்து வருவதையும் காணக் கூடியதாக இருக்கின்றது . சுருக்கமாசச் சொல்வதாயின் இன்றைய டில்லி, ட்ரைவிங் மர்க்கஸின் தப்லீக் பெரியார்கள் ஹனபி மத்ஹபைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுகின்றனர் . இவர்கள் நேர்வழி காட்டுவார்கள் என்று இவர்களை நம்பி தப்லீக்கில் தம்மை இணைத்துக் கொண்ட அப்பாவி கார்க்கூன்கள் நபி வழியைப் பின்பற்றுகின்றோம் என்று எண்ணிக்கொண்டு டில்லி மர்க்கஸ் பெரியார்களையும், ட்ரைவிங் மர்க்கஸ் பெரியார்களையும் பின் பற்றுகின்றார்கள் . இருவருமே நபிவழியைத் தூக்கி வீசி விட்டார்கள் .

நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் ;;;
'நான் எவ்வாறு தொழுவதை நீங்கள் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள் . ஆதாரம் (புகாரி 595 )

ஆனால் தப்லீக் பெரியார்கள் இன்று வரைக்கும் ஹனபி மத்ஹபின் மீது கொண்டுள்ள ஒருவகை வெறியால் தொழுகை விடயத்தில் எந்தனையோ மஸாயில்களில் - தம் அம்மத்ஹபு நபிவழிக்கு மாற்றமாக இருந்தும் ஹதீஸைத் தூக்கியெறிந்து விட்டு மத்ஹபின் படியல்லவோ தொழுகின்றனர் ...உதாரணத்துக்கு சில உண்மைகள் ...

1- தொழுகைக்குப் பின் ஓதப்படும் கூட்டு துஆ நபியவர்கள் சொல்லித்தராத பித்அத்தாகும் . ஹனபி தப்லீக் பெரியார்கள் இதைச் செய்வதில்லை . நபிவழிக்கு மாறானது என்பதற்காக அல்ல. தமது மத்ஹபில் இல்லை என்பதனால்தான் . நபி வழியில் இல்லை என்பதற்காகத்தான் இவர்கள் செய்யாதிருக்கின்றார்கள் என்று வைத்துக் கொண்டால் ஷாபி மத்ஹபு தப்லீக் வாதிகள் கூட்டு துஆ ஓதும் போது இவர்களும் சேர்ந்து ஜால்ரா போடுவார்களா ? ஆனால் போடுகின்றார்களே .. . ஆக மொத்தத்தில் நபிவழிப்படி நடப்பதில் இருசாராருக்கும் பிடிப்பில்லை . ஒரு சில உள்ளுர் தப்லீக் மர்க்கஸ்களின் பொறுப்புதாரிகள் டில்லி மர்கஸில் நடப்பது போல்தான் இங்கும் நடை பெற வேண்டும் என்பதற்காக கூட்டுதுஆவை விடவேண்டுமென அடம்பிடித்த சம்பவங்களும் உண்டு. எனவே யார் எந்த மத்ஹபை, எந்த வழிகெட்ட இயக்கத்தைச் சேர்ந்தோராக இருப்பினும் தப்லீக் ஜமாஅத் அவர்களை ஏற்றுக் கொள்ளும் . அவர்களிடம் இருக்கும் எதையும் பற்றி அலட்டிக் கொள்ளாது .

எனது ஊரில் உள்ள தப்லீக் மர்க்கஸில் ஜூமைராத் பயான் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இஷாத் தொழுகைக்கு ஏனைய பள்ளிகளில் அதான் சொல்லப்படும் போது மர்க்கஸிலும் அதான் சொல்வதா அல்லது பயானைத் தொடரலாமா ? எனும் சர்ச்சை ஒன்று ஏற்பட்டது . இது பற்றி நபிவழியில் ஸூன்னாவில் தீர்வு இருந்தும் கூட, 100க்கும் மேற்பட்ட உலமாக்கள் ஊரில் இருந்தும் கூட, உலமாக்கள் ஒன்றிமே அவ்வூரில் இருந்தும் கூட ,பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் இருந்தும் கூட இவை அனைத்தையும் புறக்கணித்து விட்டு இவ்விடயத்தை கொழும்பு பெரிய மர்க்கஸின் கவனத்துக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து டில்லி மர்க்கஸூக்கு அனுப்பப்பட்டே முடிவு பெறப்பட்டது . ஏற்கனவே பல உலமாக்கள் சொன்ன முடிவுதான் அது. இது எதைக் காட்டுகின்றது ? இவர்களுக்கு டில்லி தப்லீக் பெரியார்கள் மீது ஏற்பட்ட குருபக்தியும், தனி; மனித வழிபாடும் நபி வழியையும் மறக்கச் செய்து - தான் சார்ந்திருந்த மத்ஹபையும் மறக்கச் செய்து குருவழி நடக்கும்; குருடர்களாக்கி விட்டதே ....

2- நபிவழிதான் நம்வழியென ஒன்றுமறியாத அப்பாவி தப்லீக் தொண்டர்கள் கூறிக்கொண்டு திரிகின்றார்கள் . ஆனால் இவர்களின் தலைவரான ஜக்கரிய்யா மௌலானா தப்லீக் அமைப்பு வஹாபிஸ அமைப்பு என்றோருக்கு மறுப்பாக என்னகூறுகின்றார் என்று பாருங்கள்...

நாங்கள் வஹ்ஹாபிகளல்ல . 'வஹ்ஹாபிகள் எனப்படுவோர் ஹன்பலி மத்ஹபைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொண்டாலும் அந்த மத்ஹபில் ஏதாவது ஒன்றை ஹதீஸூக்கு மாற்றமென அவர்கள் கருதினால் உடனே மத்ஹபை விட்டு விடுவார்கள் . ஆனால் தப்லீக் பெரியார்களான தேவ்பந்த் ஆலிம்களோஇமாம் அபூஹனீபா அவர்களைப் பின்பற்றுகின்றவர்கள் ஹனபி மத்ஹபுப்படி நடப்பவர்கள் . அவ்வாறு பின்பற்றுவது வாஜிப் என்று கூறுகின்றவர்கள். (தப்லீக் பற்றிய குற்றச்சாட்டுக்களும் பதில்களும் ப:176)

நபிவழியே தீன் என்ற இவர்களின் கூற்று உண்மையாயின் மேற்படி ஜக்கரியாமொலானாவின் வாக்கு மூலத்தின்கதிஎன்ன ??? சிந்திப்போமாக .

3- தொழுகைக்காக அதான் சொல்லும் போது ஒவ்வொரு வாசகங்களையும் இரு முறை சொல்லும்படியும் இகாமத்தின் போது ஒவ்வொரு தடவை சொல்லும் படியும் நபியவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள் . ஆதாரம் : ( புகாரி 167)

இதற்கு மாற்றமாக தப்லீக் மர்க்கஸ்களென்ன ? ஏனைய ஹனபி தப்லீக் கார்க்கூன்களின் மஸ்ஜித்களிலும் ஹனபி மத்ஹபின் படி இருதடவைகள் அதானைப் போன்றே இகாமத்தும் சொல்லப் படுகின்றது .ஷாபி மத்ஹபு பள்ளிகளுக்கு இவர்கள் வந்தால் - அங்கு தமது மத்ஹபின் படி அங்கு நடக்க முற்பட்டால் - மத்ஹபு வெறியை வெளிப்படுத்தினால் சர்ச்சை ஏற்பட்டு ஷாபியிகள் தப்லீக் வக்தில் கிளம்புவது தடைப்படலாம் என்ற அச்சத்தால் பெரியார்களே அந்தந்த இடங்களில் எப்படித் தொழுகின்றார்களோ அப்படியே தொழுது கொள்ளுங்கள் என்று கார்க்கூன்களுக்கு அறிவுரை வழங்குகின்றனர்.

எனவே இவர்களைப் பிடித்துள்ள மத்ஹபு வெறி ஸூன்னாவைக் கண்டெல்லாம் நீங்காது . மாறாக தம் இயக்கத்தின் எண்ணிக்கை பாதிக்கப்படலாம் எனும் போது அவரவர் மத்ஹப்படி செய்யலாம் என சலுகையளிக்கப்படும் . எனவே தம் மத்ஹபு மீது இவர்களுக்குள்ள நம்பிக்கை கூட நபியின் ஸூன்னாவின் மீது கிடையாது என்பதே உண்மை,

4-அதே போன்று தொழுகையில் பாத்திஹா ஸூராவுக்குப்பின் சத்தமிட்டு ஆமீன் கூறுவது நபி வழியாகும் .
உங்களுக்குத் தொழுகை நடத்தும் இமாம் ஆமீன் கூறினால் நீங்களும் ஆமீன் கூறுங்கள் .ஏனெனில் எவரின் ஆமீன் மலக்குகளின் ஆமீனுக்கு நேர்படுகின்றதோ அவரது முன்னைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன என நபியவர்கள் கூறியுள்ளார்கள் . (புகாரி முஸ்லிம் 738 )

ஹனபி மதஹபுக்காரர்கள் இவ்வாறு சத்தமிட்டு ஆமீன் சொல்வதில்லை . இதே மத்ஹபின் அடிப்படையினையே தப்லீக் பெரியார்களும் தமது டில்லி ட்ரைவிங் மர்கஸ்களில் அமுல்ப் படுத்துகின்றார்கள் .

5-இவ்வாறே மஃரிபுடைய அதானுக்குப்பின்னர் இரண்டு ரக்அத் ஸூன்னத்து விரும்பியவர்கள் தொழுது கொள்ள நபியவர்கள் அனுமதித்துள்ளனர் . ஹனபி மத்ஹபில் இதுகிடையாது ஆகவே தப்லீக் பெரியார்களிடமும் கிடையாது . இவ்வாறே றுகூஉக் குப்பின் கைகளை உயர்த்துவது நபிவழியாகும் ஹனபிகளிடம் அது இல்லாததால் தப்லீக் பெரியார்களிடமும் இல்லை .

இவையெல்லாம் உதாரணத்துக்குத்தான். இது போன்ற எத்தனையோ ஸூன்னாவுக்கு எதிரான மத்ஹபு சட்டங்களுக்கு தப்லீக் பெரியார்கள் கட்டுப்பட்டு ஸூன்னாவை விட மத்ஹபே பெரிதென வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் .அவ்வாறு கற்றும் கொடுக் கின்றனர்.

இத்தனையும் செய்து கொண்டு அசலான நபிகளின் வாழ்க்கையைக் கடைப்பிடிப்பதில் தான் துன்யா ஆகிரா இரண்டின் வெற்றியுமிருக்கின்றது என்று சங்கூதவும் செய்கின்றனர் .



முறைப்பாடு : 2
தொழுகையின் சிறப்பும். .. தஃலீம் தொகுப்பும். ..

தொழுகையானது இஸ்லாத்தின் இரண்டாவது தூணாகும்.  இதை விட்டவனுக்கும் இஸ்லாத்துக்கும் இடையில் எவ்வித தொடர்புமில்லை என்பதும் நபிமொழியாகும்.  தப்லீக் தஃலீம் தொகுப்பில் தொழுகைக்காக ஒரு தனிப் பகுதியே ஒதுக்கப் பட்டுள்ளது.  இதில் தொழுகையின் சிறப்புகள், அதனால் கிடைக்கும் நன்மைகள், விடுவதால் ஏற்படும் தண்டணைகள் பற்றியெல்லாம் விலாவாரியாக விளக்கமாகக் கூறப்பட்டுள்ளன.  இதை எவரும் மறுக்க முடியாது.  ஆனால் நபியவர்கள் தொழுகையின் சிறப்புகளைக் கூறியது போல, தொழாதவர்களுக்குரிய தண்டணைகள் பற்றிக் கூறியது போல, எவ்வாறு தொழவேண்டுமெனவும் கூறினார்களா இல்லையா?  அப்படியாயின் நபி வழிப்படி தொழும் முறையோ, தொழுகையின் சட்ட திட்டங்களோ ஏன் தப்லீக்கில் போதிக்கப்படுவதில்லை ?.

உதாரணமாக ஒரு பாடசாலையில் கம்யூட்டர் கல்வியின் சிறப்பு அதன் முக்கியத்துவம் பற்றி மாத்திரம் போதிக்கப்படுகின்றது கம்யூட்டர்க் கல்வி போதிக்கப்படுவதில்லை.  இந்நிலையில் இந்தக் கல்வியால் மாணவர்களுக்குக் கிடைக்கும் பயன் யாது?  பூச்சியம் தான் மிச்சம்.  இதுதான் இன்று தப்லீக்கிலும் நடந்து கொண்டிருக்கின்றது.  நபி வழிப்படி தொழும் முறை பற்றி அதன் சட்டதிட்டங்கள் பற்றி, தொழுகையில் ஓத வேண்டியவை, வுழூ, தொழுகையின் பர்ழு ஷர்த்து, சுன்னத்துக்கள், தொழுகையை முறிப்பவைகள் பற்றியெல்லாம் ஏராளமான ஹதீஸ்களும் சட்டதிட்டங்களும் உள்ளன.  இவை தஃலீம் தொகுப்பில் மருந்துக்கேனும் உண்டா?.  இல்லை தப்லீக் முக்கியஸ்த்தர்களுக்கேனும் தெரியுமா?
அவர்களாவது 40 நாள் உடல் பொருள், தொழிலைத் தியாகம் செய்து தப்லீக்கில் வெளிக் கிளம்பும் அப்பாவிக்கார்க்கூன்களுக்கு அன்றாட மஸூராவில் ஒரு நேரம் ஒதுக்கிக் கற்றுக் கொடுக்கின்றார்களா? ஓவ்வொரு நாளும் தஃலீம் வாசிக்க 6-7 மணிநேரங்கள் ஒதுக்கப்படுகின்றதே.  நபியவர்கள் சொல்லித்தந்த சட்டதிட்டங்கள் பற்றிக் கற்பிக்க அரைமணி நேரமாவது ஒதுக்கப்படுகின்றதா?  இல்லையே?  அன்பின் கார்க்கூன்களே! நீங்கள் எவ்வளவு தடவைகள் வக்தில் வெளிக்கிளம்பியுள்ளீர்கள்.  மார்க்க சட்ட திட்டங்கள் பற்றி எந்தளவுக்கு நீங்கள் தப்லீக்கில் சென்று கற்றுக் கொண்டீர்கள் என்று உங்கள் இதயத்தில் கை வைத்துச் சொல்லுங்கள். 

இது பற்றி அவர்களிடம் வினவினால் தயாராக ஒரு பதில் வைத்திருக்கின்றார்கள்.  'பழாயில்களைப் பற்றி தஃலீம் புத்தகத்தில் படிப்பது, மஸாயில்களை (சட்டங்களை) ஆலிம் உலமாக்களை அணுகி கால்மடித்து ஹதிய்யாக்களைக் கொடுத்துப் படித்துக் கொள்வது' இதுதான் பதில்.  சரி 40 நாள் 4 மாதம் என்றெல்லாம் நீண்ட காலங்கள் தொழில் துறை, உத்தி யோகம் பொறுப்புக்களைத் துறந்து மக்கள் வெளிக்கிளம்பிச் செல்கின்றார்கள்.  இதிலாவது தொழுகை பற்றிய இன்னும் மார்க்க சம்பத்தப்பட்ட எந்தநிகழ்ச்சியாவது இடம்பெறுகின்றதா?  அங்கும் அதே தஃலீம் அதே அமல்களின் சிறப்பு, சலித்துப் போனால் உசார் படுத்த ஹஜ்ஜின் சிறப்பு ஸதக்காவின் சிறப்பு எனும் பெயரில் இரு நாவல்கள்.  இதிலே துப்பறியும் கதைகளும், மெய்சிலிர்க்க வைக்கும் கதைகளும் தாராளமாக எவ்வித முகவரியுமில்லாது அவிழ்த்து விடப்படுகின்றன. 
இந்தப் பொன்னான நேரத்தை மார்க்க தொழுகை விடயங்களைக் கற்பிப்பதில் செலவிடலாமே என்று சொல்லிப் பாருங்கள்.  அதற்கும் ஒரு ரெடிமேட் பதில் 'ஆறு நம்பருக்கு அப்பால் பேசுவது உஸூலுக்கு மாற்றமானது.  அதைப் பெரியார்கள் அனுமதிப்பதில்லை.  கண்ட கண்ட மௌலவி மார்களிடமெல்லாம் மார்க்கம் கற்கக் கூடாது.  பேணுதலான, இந்த ஹக்கான வேலையில் ஊறியவர்களிடத்திலேயே மார்க்கம் படிக்க வேண்டுமென்று' தத்துவம் பேசுவார்கள்.  அவர்களிடமாவது கேட்டுப்படிக்கின்றார்களா என்றால் அதுவும் இல்லை.
இன்றைக்கு ஒவ்வொரு ஊர் கிராமங்களிலும் கூட 4மாதங்கள் ஒருவருடம் வக்து முடித்தவர்கள் கூட உண்டு.  இவர்களிடம் எந்தளவு மார்க்க விடயங்களைத் தேடிப் படித்துள்ளீர்கள், தொழுகை துஆக்கள், அதன் சட்டங்கள், இன்னும் தொழுகை பற்றித் தெரிய வேண்டிய நூற்றுக் கணக்கான சட்டங்கள் உள்ளனவே!! இவற்றில் சிறிதளவாவது தெரியுமா?  என்று விசாரித்துப் பாருங்கள். அப்படி ஒரு சிலருக்குத் தெரிந்திருந்தாலும் அது அவரது தனிப்பட்ட முயற்சியால் - ஏனைய இஸ்லாமிய நூல்களைப் படித்ததால் கற்ற விடயங்களாகத்தான் இருக்கும்.  இதை நீங்கள் ஏற்கத் தயங்கினால் நீங்களே பத்து தப்லீக் கார்க்கூன்களை அழைத்து அவர்களிடத்தில் சில தொழுகையின் சட்டங்களைக் கேட்டுப்பாருங்கள் எத்தனை பேர் சரியான பதில் சொல்கின்றார்கள் என்று பாருங்கள். ??

தப்லீக் பெரியார்கள் மார்க்க சட்டதிட்டங்களைப் பற்றி தமது தப்லீக் கார்க்கூன்களுக்கு கற்றுக் கொடுக்கத் தயங்குவதிலும் ஒரு உண்மை மறைந்திருக்கின்றது.  அதாவது டில்லி பெரியார்கள் ஹதீஸின் அடிப்படையிலுள்ள சட்டங்களை ஏற்றுக் கொள்வதில்லை அவர்களது ஹனபி மத்ஹபு நூலிலுள்ள சட்டங்களே இஸ்லாம் என்றும் அதைத்தான் பின்பற்றுவது கடமையென்றும் கூறி நபிவழிச் சட்டங்களை மட்டுமன்றி, ஏனைய மத்ஹபுச் சட்டங்களையும் புறக்கணிப்பவர்கள்.  எனவே மார்க்க சட்டங்கள் கற்பிப்பதென்றால் ஹனபி மத்ஹபுப் படிதான் கற்பிக்க வேண்டுமென்பதில் இவர்களுக்கு வெறி ஆனால் ஏனைய மத்ஹபுகளைச் சார்ந்த கார்க்கூன்கள், தப்லீக் உலமாக்கள் இதனை ஜீரணிக்க மாட்டார்கள்.  ஆகவே இந்த மத்ஹபுச் சட்டப் பிரச்சினையால் தப்லீக்கின் இயக்க ஆதரவாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தடைப்படலாம் என்ற குறுகிய சுயநல எண்ணத்தாலேயே இவர்கள் ஆறு நம்பருக்கு அப்பால் போய் சட்டதிட்டங்கள் போதிக்கப்படுவதற்குத் தடை விதித்துள்ளார்கள். தமது இயக்கத்தை வளர்ப்பதற்காக இஸ்லாத்தின் ஆணிவேரான மார்க்க சட்டங்கள் மக்களுக்குப் போய்ச் சேராமல் தடை வேலி போட்டிருக்கிக்கும் இவர்கள்தான் நபியவர்களை நேசிப்பவர்களா? நபிவழிப்படி வாழ்பவர்களா?  சிந்திப்பீர்களாக. .

முறைப்பாடு : -3
ஹதீஸ் போதனையா. . கப்ஸா போதனையா ??

நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் எம்மனைவருக்கும் ஈருலக வழிகாட்டியாக வந்தவர்கள்.  எமக்குத் தேவையான எவ்விடயத்தையும் அவர்கள் சொல்லித்தராமல் விட்டதில்லை. எனவே ஒரு முஸ்லிம் எப்படித்தொழ வேண்டும் என அறிந்து கொள்ள விரும்பினால் ஹதீஸின் ஒளியில் எவ்வித சந்தேகங்களும் மீதியிருக்காத அளவுக்குத் தெட்டத் தெளிவாக அறிந்து கொள்ளும் அளவுக்கு தொழும் முறை, அதன் சிறப்பு, அதை முறிப்பவை, அதனை விட்டால் கிடைக்கும் தண்டணை இப்படி ஏராளமான நபி மொழிகள் இருக்கின்றன. 
ஆனால் தப்லீக் தஃலீம் தொகுப்பை எடுத்துக் கொள்ளுங்கள்.  அதில் தொழுகை பற்றிய பகுதியின் ஆரம்பத்தில் மாத்திரம் சில அல்குர்ஆன் வசனங்களும் சில நபி மொழிகளும் இடம் பெறும் அதற்கு அடுத்த கட்டமாக 'ஒரு ஹதீஸில் வருவதாவது.... ' ஒரு அறிவிப்பில் வருவதாவது... ' என்ற பெயரில் பலவீனமான மற்றும் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான ஹதீஸ்கள் இடம்பெறும். 
ஜக்கரிய்யா மௌலானாவோ ஹதீஸ்கலை மேதையாகிற்றே. . 20-25 வருடங்கள் புகாரி – முஸ்லிம் போன்ற ஹதீஸ் நூற்கள் நடத்தியவர்களாயிற்றே. . புகாரி முஸ்லிமில் தொழுகை பற்றி ஹதீஸ்களே இல்லையா?  என்று உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். 
உண்மைதான் அதில் வரும் ஹதீஸ்களையெல்லாம் சொன்னால் மக்கள் நபிவழிப்படி தொழ ஆரம்பித்து விடுவார்களே ஹனபி -ஷாபி மத்ஹபின் ஹதீஸூக்கு மாற்றமான சட்டங்களை அலட்சியம் செய்து விடுவார்களே. . அதன் பின்பு எல்லோரும் நபிகளுக்குத்தான் மதிப்பளிப்பார்கள்.  பெரியார்களுக்கு மதிப்பளிக்க மாட்டார்களே!. நபிவழியைப் படித்துக் கொடுத்தால் இவர்களது திஸ்த் திய்யாத்தரிக்காவிடம் பைஅத் செய்ய எவன் வரப்போகின்றான். ?? எனவேதான் தமது நோக்கம் நிறைவேற வேண்டுமென்பதற்காகவே ஆதாரப்பூர்வமான சட்ட சம் பந்தப்பட்ட ஹதீஸ்களைக் கூறுவதைத் திட்டமிட்டுத் தவிர்த்துள்ளார்கள்.  இவர்களது நோக்கம் பாரரர்களை ஹனபி ஷாபி மத்ஹபுக்குள்ளேயே வைத்துக் கொண்டு - அதை விட்டு வெளி யேற விடாது, இபாதத் எனும் போர்வையிலேயே ஹதீஸ் எனும் பெயரிலேயே பெரியார்களின் வீர தீர சாகசக் கதைகளைக் கூறி பெரியார்கள் மீது குறுட்டுப் பக்தியை உண்டு பண்ணி பின்னர் திஸ்த்திய்யாத் தரீக்காவுக்குள் உள் வாங்கிக் கொள்வதுதான் இவர்களது அந்தரங்க உள் நோக்கம்.  இதை நீங்கள் இப் போது ஒப்புக்கொள்ளா விட்டாலும் போகக் போக ஏற்றுக் கொள்வீர்கள். . என்னைப் போன்று. ..

உதாரணத்துக்கு சில பலவீனமான ஹதீஸ்கள். ..

1-தொழுகையைப் பேணித் தொழுபவருக்கு 5வித உபகாரமும் விடுபவருக்கு 15 வகை தண்டனையும்.  ஹதீஸில் வருவதாக சிலர் சொல்கின்றார்கள் என்று இச்சம்பவம் ஆரம்பிக்கின்றது.  (அமல்களின் சிறப்பு பக்கம் 50) நன்மை தண்டணையெல்லாம் மறுமை பற்றிய விடயம்.  அதைக் குர்ஆன் ஹதீஸில் இருந்தால் மட்டுமே ஏற்க முடியும்.  அப்படியென்றால் இந்த 'சிலருக்கு'' இவற்றைச் சொல்லிக் கொடுத்தது யார்? 

2- ஒரு ஹதீஸில் வருவதாவது. ..தொழுகையைப் பேணுவதால் மஃரிபா எனும் இறை ஞான ஒளி உண்டாகின்றது.  58ம் பக்கம்
இந்த ஹதீஸ் எங்கிருக்கின்றது.  அதன்தரம் என்ன என்று எடுத்துக் காட்ட முடியுமா?

3 தொழுகையை விட்டவனைப் பார்த்து சொர்க்கம் உனக்காக நானில்லை எனக்காக நீயில்லையென்றும், நரகம் என்னிடம் வந்துவிடு உனக்காக நீ எனக்காக நான் என்றும் கூறும்.  ப: 63

4 நரகத்தில் 'லம்லம்' எனும் காடுண்டு அதில் ஒட்டகக் கழுத்துள்ள பாம்புண்டு அதன் நீளம் ஒரு மாதம் நடந்து செல்லுமளவுக்கு இருக்கும்.  தொழுகையை விட்டோர் அதில் போடப்படுவார்கள். 
5.நரகத்தில் ஜூப்புல் ஹூஜ்ன் எனும் மைதானம் இருக்கின்றது.  அதில் கோவேறு கழுதையின் அளவு பெரிய தேள் இருக்கின்றது.  தொழுகையை விட்டவர்களை அது வேதனை செய்கின்றது என ஒரு ஹதீஸில் வந்துள்ளது.  (பக்கம் 63 அதே அமல்களின் சிறப்பு)

இவையெல்லாம் மறைவான விடயங்களல்லவா?  இப்படியான செய்திகளைச் சொல்லும் போது அவற்றின் நம்பகத் தன்மையை உறுதி செய்வது அவசியமல்லவா?  மக்களைப் பயம்காட்ட வேண்டுமென்பதற்காக நினைத்ததையெல்லாம் சொல்லி விட முடியுமா? .
6-எவனொருவனின் முதல் வார்த்தையும் இறுதி வார்த்தையும் லாயிலாஹ இல்லல்லாஹ் எனும் கலிமாவாக இருக்கின்றதோ அவர் ஆயிரம் வருடங்கள்தான் வாழ்ந்த போதிலும் தான் செய்த எந்தப் பாவத்தைப் பற்றியும் விசாரணை செய்யப்பட மாட்டார். 
(தப்லீக் தஃலீம் தொகுப்பு ப: 596)

இதன் அறிவிப்பாளர் வரிசையில் பல குளறுபடிகள் இருந்தும் அவற்றையெல்லாம் வேண்டுமென்றே ஜக்கரிய்யா மொலானா கண்டு கொள்ளாமல்ப் புறக்கணித்திருக்கின்றார்.  இந்த ஹதீஸின் படி கலிமாச் சொன்ன ஒருவன் என்னதான் குற்றம் செய்தாலும் அதற்கு விசாரணையோ தண்டணையோ இல்லை யென விளங்குகின்றது.  இது தவறாகும்.  என்னதான் முஃமினாக இருந்தாலும் அவன் செய்த குற்றத்திற்காக விசாரிக்கபடாதவரை, அதற்காக தண்டனை பெறாத வரை அல்லது அதை அல்லாஹ் மன்னிக்காத வரை எவனும் சொர்க்கம் செல்ல முடியாதென்றும், கலிமாவை ஏற்றுக் கொண்ட லட்சக் கணக்கான பாவிகள் வேதனை செய்யப்பட்டதன் பின்னர் நரகை விட்டும் வெளியேற்றப்படுவதாகவும் பல்வேறு ஹதீஸ்களில் வந்துள்ளதே,

7- யார் வெள்ளிக்கிழமை தினத்தில் எண்பது தடவைகள் தொழுகின்றாறோ அவரது எண்பது வருடத்துப் பாவங்கள் மன்னிக்கப்படும்.  பக்கம் 721 இதுவும் மிகப்பலவீனமான ஹதீஸாகும். 

8- ஜூமைராத் இரவில் பள்ளியில் தங்குவதை ஆர்வ மூட்டுவதற்காக ' அல்லாஹ்வின் நாட்டத்தை விரும்பி யார் ஒருநாள் பள்ளியில் இஃதிகாப் இருக்கின்றாறோ அல்லாஹ் அவரை மூன்று கன்தக் தூரம் நரகை விட்டும் தூரமாக்குவான் ஒவ்வொரு கன்தக்குக்கும் இடைப்பட்ட தூரம் வானம் பூமிக்கு இடைப்பட்ட தூரத்தை விட அதிகமானதாகும் என்று ஹதீஸில் உள்ளது'.  என எழுதி வைத்திருக்கின்றார்.  (அமல்களின் சிறப்பு பக்கம் 466).

இதையும் பலவீனமானதென்று தெரிந்து கொண்டே மௌலானா அவர்கள் ஜூமைராத் நிகழ்ச்சியை திறம்பட நடத்துவதற்காக இடம்பெறச் செய்துள்ளார்கள்.

9-யார் தினமும் ஸூரத்துல் வாகிஆவை ஓதி வருகின்றாரோ அவ ருக்கு வறுமையே வராது.  இப்னு மஸ்ஊத் அவர்கள் தன் பெண் மக்களுக்கு இவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டிருந்தார்கள்.  யார் யாஸீன் ஸூராவை ஓதுகின்றாரோ அவரது முன்னைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன. ப: 292, 293) இவையும் ஆதாரத்துக்கு எடுக்க முடியாத பலவீனமானவையாகும்.

10- உங்களைப் பைத்தியக்காரர்கள் என்று சொல்லுமளவுக்கு அல்லது முனாபிக் என்று மக்கள் சொல்லுமளவுக்கு நீங்கள்
(சத்தமிட்டு) திக்ர் செய்யுங்கள். என்ற ஹதீஸ் அமல்களின் சிறப்பு நூலில் உள்ளது.  'சத்தமிட்டு' எனும் சொல் ஹதீஸில் இல்லாதிருந்தும் மௌலானா தமது தரீக்காவின் கூட்டு திக்ரை நியாயப்படுத்த அதை அடைப்புக்குறிக்குள் இட்டுள்ளார்கள். இந்த ஹதீஸூம் கடும் பலவீனமான ஹதீஸாகும் பார்க்க: (சிலிசிலா 518)

11- எனது புறக்கணிக்கப்பட்ட ஸூன்னத்துக்களில் ஒன்றை உயிர்ப்பிப்பவருக்கு நூறு ஷஹீத்களுடைய நன்மை கிடைக்குமென நபியவர்கள் கூறினார்கள்.  (126) இதுவும் தப்லீக்கில் அடிக்கடி கூறப்படும் ஹதீஸ் ஆனால் இது பலவீனமானது.  இதன் அறிவிப்பாளர் வரிசையில் இனந்தெரியாத சிலர் உள்ளனர்.  (மஜ்மஉஸ்ஸவாயித் 1-172)

12- யார் லாயிலாஹ இல்லல்லாஹ் என ஒரு தடவை சொன்னால் அவரது 50 வருட பாவங்கள் மன்னிக்கப்படுமென நபியவர்கள் கூறிய போது அவரிடம் 50வருட பாவங்கள் இல்லாதிருப்பின் ?? என தோழர்கள் கேட்க அவரது பெற்றோர் உறவினர்களுடைய 50 வருட பாவங்கள் மன்னிக்கப்படும் என்றார்கள்.  (தப்லீக் தஃலீம் 596)

இந்த ஹதீஸ்படி ஒரு குடும்பத்தில் ஒருவன் மாத்திரம் இதை ஒரு தடவை சொல்லி விட்டு ஏனைய அனைவரும் அவர்களது ஆயுள் வரைக்கும் நினைத்த அனைத்துப் பாவங்களையும் செய்யலாம்?  இறுதியில் அனைவருக்கும் சொர்க்கம்தான்?  அப்படியானால் தொழுகை எதற்கு நோன்பு எதற்கு? ஹராம் ஹலால் எதற்கு?  இன்று கிருஷதவர்களின் கொள்கையும் இதுதான்.
சிந்தித்துப் பாருங்கள் ஒரு பலவீனமான ஹதீஸால் ஏற்படும் விளைவு என்னவென்று?  இதன்படி ஒருவர் ஒரு தடவை கலிமா சொல்லி விட்டு 50 வருடம் பாவம் செய்தால் மறுமையில் அல்லாஹ் அவரை நரகுக்கு அனுப்பும் போது ஜக்கரிய்யா மௌலானாவால் அவரைக் காப்பாற்ற முடியுமா?

இது போன்ற நூற்றுக்கணக்கான பலவீனமான ஹதீஸ்கள் இதில் இடம் பெறுகின்றன.  இவற்றுக்குப் பதில் புகாரி முஸ்லிமில் உள்ள ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களை இடம்பெறச் செய்திருக்கலாம் தானே. 

இப்படிக்கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் பலவீனமான ஹதீஸ்களையும் மக்களுக்கு ஆர்வமூட்டும் நோக்கில் சொன்னால் என்ன?: நல்லதுதானே எத்தனையோ அறபு நூல்களில் பலவீனமான ஹதீஸ்கள் இடம்பெறவில்லையா?  என பதிலளிப்பர்.  அறபு நூல்களில் பலவீனமான ஹதீஸ்கள் இடம் பெற்றிருப்பதை இவர்கள் ஆதாரமாகக்; கூற முடியாது.  ஏனெனில் அவை சில நூற்களில் இடம்பெற்றிருப்பினும் அவை மூல நூல்கள்.  பெரும் ஏடுகள்.  அறிஞர்களுக்கென எழுதப்பட்டவை இவற்றைப் படிப்பவர்களும் பெரிய பெரிய ஹதீஸ் பற்றி அறிந்த அறிஞர்களே. அவர்கள் அதில் இருப்பதை யெல்லாம் அப்படியே ஏற்கப்போவதில்லை.  தேடி ஆராய்ந்ததன்பின் பலவீனமானவற்றைப் புறந்தள்ளிவிடுவர்.  ஆனால் பாமரர்களுக்காக வேறு எத்தனையோ நூல்கள் உள்ளன.  பாமர அப்பாவி மக்களுக்குச் சொல்லும் விடயங்கள் உண்மைதானா? ஆதாரப்பூர்வமானவைதானா எனப் பார்த்துச் சொல்வது உலமாக்களின் கடமையல்லவா?  அவர்கள் - உலமாக்கள் இஸ்லாத்தையே சொல்கின்றனர் என்று எண்ணி ஆலிம்களை நாடி வரும் போது பலவீனமான, பொய்யான செய்திகளை இஸ்லாம் எனும் பெயரில் சொல்வது அவர்களுக்குச் செய்யும் நம்பிக்கைத் துரொகமல்லவா?  மோசடியல்லவா?.

இது மட்டுமின்றி தப்லீக் தஃலீம் தொகுப்பில் பலவீனமான பல ஹதீஸ்களைக் கூறிய மௌலானா அவர்கள் அந்த ஹதீஸின் நூலாசிரியரே அதன் கீழ் இந்த ஹதீஸ் பலவீனமானது, அறிவிப்பாளர் வரிசை சீரற்றது என்று கூறியிருந்தும் -- அதனை அறபியில் மாத்திரம் இடம்பெறச் செய்து விட்டு மொழி பெயர்ப்பின்போது அது பெயர்க்கபடாமல் இருட்டிப்புச் செய்யப் பட்டுள்ளது.  இதுவும் பாமர மக்களுக்குச் செய்த மற்றுமொரு நம்பிக்கைத் துரோகமாகும்.

ஆர்வமூட்டுவதற்காக பலவீனமானவற்றை மக்களுக்குக் சொல்லலாமென்ற கருத்தை ஒரு சிலரைத் தவிர ஏனைய அறிஞர்கள் ஏற்கவில்லை.  சில அறிஞர்கள் அவ்வாறு சொல்லியிருப்பினும் பல நிபந்தனைகளுடன்தான் சொல்லியிருக்கின்றனர். அதில் முதல் நிபந்தனை அகதா -இறை நம்பிக்கை பற்றிய, மறைவான விடயங்கள் பற்றிய தகவல்கள் கூறும் பலவீனமான ஹதீஸ்களை ஆர்வமூட்டும் நோக்கில் கூட கூற முடியாது என்ற ஒருமித்த முடிவில் உள்ளனர். எனவே இங்கு தொழுகையின் சிறப்பு பகுதியில் கூறப்பட்டிருக்கும் பலவீனமான ஹதீஸ்கள் மறைவான விடயங்கள் பற்றிப் பேசுபவையாகவே உள்ளன,.  சுவர்க்கத்தில் நடப்பவை, நரகத்தில் நடப்பவை, கப்ரில் நடப்பவை பற்றியெல்லாம் சொல்லும் ஹதீஸ் பலவீனமாயிருந்தால் அதை புறந்தள்ள வேண்டியது தான்.  ஒருபோதும் ஆதாரத்துக்கு எடுக்க முடியாது. . இது அனைத்து இஸ்லாமிய அறிஞர்களினதும் ஒருமித்த கருத்தாகும்.  தப்லீக் பெரியார்கள் இவ்விடயத்தில் மாறுசெய்கின்றார்கள்.

சரி இதைத்தான் விட்டு விடுவோம்.  இத்தோடு ஜக்கரிய்யா மௌலானா நிறுத்தித் கொண்டார்களா?  இவற்றுக்கு அடுத்த படியாக விளக்கவுரை எனும் பெயரில் ஆரம்பமாகும் கப்ஸாப்பகுதியில் ஆயிரக்கணக்கான முகவரியில்லாத சம்பவங்கள். .. ஒரு பெரியார்; சொன்னது, ஆரிபீன்கள் சொன்னது, சூபியாக்கள் சொன்னது, நல்லடியார்கள் வாழ்வில் நடை பெற்றது, உண்மைச் சம்பவம் எனும் பெயர்களிலெல்லாம் நவரசக் கதைகள், பெரியார்களின் சாத்தியமற்ற சாதனைகள், தூள் கிளப்புகின்றன.  அல்குர்ஆனையும் ஹதீஸையும் படிக்க வேண்டும் அதன் வழிநடக்க வேண்டும் எனும் ஆர்வத்தில் தமது உடல் பொருள் தொழில் போன்றவற்றைத் தியாகம் செய்து வரும் அப்பாவி மக்களின் நேரங்களை இப்படி முகவரியற்ற கப்ஸாக்களை வாசித்துப் பாழ்படுத்துவது தகுமா? அல்லாஹ்வுக்குப் பொருந்துமா?. 

இது ஒரு புறமிருக்க இந்தக் கதைகளும் கப்ஸாக்களும் நேரத்தைக் கடத்துவதற்காக அல்லது மக்களின் தூக்கத்தைக் கலைத்து விழிப்பையும் புத்துணர்ச்சியையும் தருவதற்காக என்று கூடச் சொல்லி சில வேளை நியாயப்படுத்தி விடலாம்.  ஆனால் இக்கதைகள் கொண்டுள்ள அபத்தங்கள், மார்க்க முரண்பாடுகள், நபிகளாருக்கும் உத்தம சஹாபாக்களுக்கும் இழுக்கை அவமானத்தை ஈட்டித்தரும் அவர்களை மறைமுகமாகக் கொச்சைப் படுத்தும் நிகழ்வுகள், இஸ்லாமிய அகீதா - இறை நம்பிக்கைக்கு மாற்றமான விடயங்கள் எல்லாம் இக்கதைகளில் மறைமுகமாகப் போதிக்கப்படுவதால் தான் இவற்றை காரசாரமாக விமர்சிக்க வேண்டியுள்ளது சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.


இதில் வரும் கப்ஸாக்களை இருபெரும் பிரிவுகளாக வகைப் படுத்தலாம்

1- பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட நடைமுறைச் சாத்தியமற்றவை...

2-இஸ்லாத்திற்கு – அதன் ஓரிரைக் கொள்கைக்கு வேட்டு வைக்கக் கூடியவை. ....
புரிந்து கொள்வதற்காக சில உதாரணங்கள். ..

பகுத்தறிவு ஏற்காத சாத்தியமற்றவை சில....

தொழுகையில் உள்ளச்சம் இருக்க வேண்டியது உண்மைதான்; முஃமின்கள் தொழுகையில் உள்ளச்சத்துடன் இருப்பார்கள் என்று அல்லாஹ் பிரஸ்த்தாபிக்கின்றான். நபி(ஸல்) அவர்களும் தொழுகையை உள்ளச்சத்துடன் தொழ வேண்டும் என்று போதித்திருக்கின்றார்கள்.  அவர்களை விட அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்கள் எவருமில்லை.  அவர்களை விட பய பக்தியுடன் தொழுதவர்களும் எவருமில்லை.  இருப்பினும் நபியவர்கள் பயபக்தியுடன் தொழுவித்த போதே பின்னால் உள்ள மஃமூம்களின் செயற்பாடுகளையும் அவதானித்திருக்கின்றார்கள்.  நபியவர்கள் தொழும் போது பாதணியில் நஜீஸ் இருந்ததால் பாதணியைக்கழட்ட பின்னால் நின்றவர்களும் கழட்ட அதைக் கண்டு நபியவர்கள் தொழுகையின் பின் விசாரித்திருக்கின்றார்கள் (புகாரி 376)

அதே போல் நபியவர்கள் தொழுவிக்கும் போது பின்னால் உள்ளவர்கள் ஓதிய ஓதல்களைச் செவியுற்று தொழுது முடிந்ததும் அது பற்றி விசாரித்து விட்டு ஸூரத்துல் பாத்திஹாவைத் தவிர வேறு எதையும் தனக்குப்பின்னால் நின்று கொண்டு ஓத வேண்டாம் என்று போதித்துள்ளார்கள்.  (அபூதாவூத் 701, )
இதற்கு மாற்றமாக தஃலீம் தொகுப்பில் தொழுகையில் பெரியார்களின் பயபக்தி எனும் தலைப்பில் பல அர்த்தமற்ற சாத்தியமற்ற இன்னும்சொன்னால் முகவரியேயற்ற சம்பவங்கள் ஏராளம் ஏராளம்....