நோன்பு பற்றிய கேள்வி பதில்


1 கேள்வி : கர்ப்பிணிப் பெண்கள் கட்டாயம் ரமளான் நோன்பு நோற்க வேண்டுமா? (முபாரக் ஹெச்.அலி யாகூமெயில் மூலமாக)

ரமளான் நோன்பைப் பொறுத்த வரை கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர் நோயாளிகள் போன்றே கருதப்படுவர். அவர்களுக்கு நோன்பு நோற்பது சிரமமாக இருக்குமென்றிருந்தால் அச்சமயத்தில் நோன்பு நோற்காமல் விட்டு விட்டு பின்னர் அதனை களாச் செய்ய வேண்டும்.

சில அறிஞர்கள், 'கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும், நோன்பை விட்டு விட்டு அதற்கு பரிகாரமாக ஒவ்வொரு நாளைக்கும் ஒரு ஏழை என்ற வீதத்தில் உணவு வழங்கினால் போதுமானது' என்று குறிப்பிடுகின்றனர். ஆனால் இக்கருத்து பலவீனமானதாகும்.

நோயாளி மற்றும் பயணியைப் போல் நோன்பை விட்டு விட்டு பின்னர் களா செய்து கொள்ள வேண்டுமென்பதே சரியான கருத்தாகும்.

'உங்களில் நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டு (நோன்பு நோற்றுக்) கொள்ளலாம்....' (அல்குர்ஆன் அல்பகரா 2:184)

'நிச்சயமாக அல்லாஹ் பயணிக்கு நோன்பை விடுவதற்கும், தொழுகையை (அரைவாசியாக) குறைத்துக் கொள்வதற்கும் அனுமதி அளித்துள்ளான். கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் நோன்பை விடுவதற்கு சலுகை அளித்துள்ளான்' என ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்கள்: அபூதாவூத், திர்மிதி, நஸாயி, இப்னுமாஜா)

(இது அஷ்ஷெய்க் இப்னு பாஸ் அவர்கள் வழங்கிய ஃபத்வா)

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

2 கேள்வி : பள்ளியில் நோன்பு திறப்பது சுன்னத் என்பது சரியா? (இக்பால் ரஹீமா சவூதி அரேபியா - யாகூமெயில் மூலமாக)

நோன்பு திறப்பது வலியுறுத்தப்பட்ட சுன்னத்.

'ஒரு நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. நோன்பு திறக்கும் போது ஏற்படுகிற மகிழ்ச்சி ஒன்று. மற்றது அல்லாஹ்வை சந்திக்கும் போது மறுமையில் ஏற்படுகின்ற மகிழ்ச்சி' நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நோன்பை எங்கு திறந்தாலும் சுன்னத் நிறைவேறிவிடும். பள்ளியில் திறப்பது சுன்னத் என்பதைக் கூறும் நபி மொழி ஏதும் கிடையாது. எனவே பள்ளியிலும் திறக்கலாம், வேறு இடங்களிலும் திறக்கலாம்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

3 கேள்வி : பள்ளியில் நோன்பு திறப்பது சுன்னத் என்பது சரியா? என்ற கேள்விக்கு வழிமுறை என்பது இல்லை என கூறியுள்ளீர்கள். இங்கு உள்ள பள்ளிகளில் குறிப்பாக ரஹிமாவில் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யும் தஃவா சென்டரில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்காக பொதுமக்களிடம் (ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் பள்ளி வெளி வாயிலில் வைத்து) வசூல் செய்து அதிலிருந்து தான் ஏற்பாடு செய்கிறார்கள். நோன்பு திறக்க தம்மிடம் வசதியிருந்தும் சில சகோதரர்கள் பள்ளிக்கு சென்று நோன்பு திறப்பதினால் அவர்களுக்கு வசூல் செய்யும் சுமை கூடுதலாகின்றது, இவ்வாறு செய்வது கூடுமா? விளக்கவும். (அப்துல் குத்தூஸ் - ரஹிமா, அராம்கோ மெயில் மூலமாக)

'யார் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்க வைக்கிறாரோ அவருக்கும் அந்த நோன்பாளிக்கு கிடைக்கும் நன்மையளவு நன்மை உண்டு' என நபி (ஸல்) அவர்கள் கூறினாhகள். (நூல்கள்: அஹ்மது, திர்மிதி, இப்னுமாஜா, தாரமி)

நோன்பு திறக்க வைப்பது மிகச் சிறந்த அமலாகும். அந்த அமலின்பால் மக்களை ஆர்வப்படுத்தும் வகையில் பள்ளிவாசலில் வைத்து வசூல் செய்வதில் எந்தத் தவறும் கிடையாது. குறிப்பாக இப்படியான நல்ல அமல்களின் மீது மக்கள் நாட்டமில்லாமல் ஒதுங்கிக் செலலக்கூடிய இன்றைய காலத்தில் இந்தச் செயல் மிகவும் முக்கியமானதாகும். அதேவேளை இந்த வசூல் பலவந்தமாக செய்யப்படுவதாக இருந்தால் அதற்கு மார்க்கத்தில் அனுமதி கிடையாது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

4 கேள்வி : நோன்பிற்கான நிய்யத் (வாஜிபு) எவ்வாறு செய்ய வேண்டும்? எப்போது செய்ய வேண்டும்? (ராஷித், சூபாநெட் மெயில் மூலமாக)

'ரமழான் நோன்பு வாஜிபானது என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் உறுதியாக நம்ப வேண்டும். நாளை ரமழான் நோன்பு ஆரம்பமாகிறது என்று அறிந்தால் நோன்பு நோற்பதற்கு நிய்யத் வைப்பது அவசியம். நிய்யத்திற்குரிய இடம் உள்ளமாகும். நிய்யத்தை வாயால் மொழிவது வாஜிப் அல்ல என்பது எல்லா முஸ்லிம்களாலும் ஏகோபிக்கப்பட்ட விஷயம்' என இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். (மஜ்மூகூ ஃபதாவா 24-214)

ரமளான் நோன்பிற்குறிய நிய்யத்தை ஒவ்வொரு நாள் இரவும் வைக்க வேண்டும். வாயால் (நவைத்து......) என்று கூறுவது கூடாது. ஏனெனில் நபி (ஸல்) அவர்களோ சஹாபாக்களோ அவ்வாறு கூறியதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

5 கேள்வி : நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் நோன்பு வைக்க வேண்டாம் (வெள்ளி மட்டும்) யூதர்களுக்கு மாற்றம் செய்யுங்கள் என்று கூறியதாக ஹதீஸ் உள்ளதே. அப்படியிருக்க உங்கள் கேள்வி பதில் பகுதியில் திங்கள் வியாளன் தினங்கள் நபி (ஸல்) நோன்பு நோற்ற பல ஹதீஸ்கள் இடம் பெற்றிருக்கின்றன. தயவு செய்து விளக்கவும். (முகம்மது நஸான் - சிரிலங்கா, யாகூ மெயில் மூலமாக)

உங்கள் கேள்வியில் இரண்டு விஷயங்கள் கவனிக்கத் தக்கதாகும்.

1. ஒரு நாள் நோன்பு நோற்க வேண்டாம் (வெள்ளிக் கிழமை) என்று ஹதீஸ் உள்ளதே? ஆனால் நபி (ஸல்) அவர்கள் திங்கள் - வியாழன் போன்ற நாட்களில் ஒரு நாள் நோன்பு வைத்துள்ளார்களே? என்பது முதல் விஷயம்.

தெளிவான ஹதீஸை தவறுதலாக நீங்கள் விளங்கி இருக்கிறீர்கள். இது தொடர்பாக வரும் ஹதீஸைப் பாருங்கள்.
இறை இல்லம் கஃபாவைச் சுற்றி (தவாஃப்) வந்து கொண்டிருந்த ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம் நான், 'வெள்ளிக் கிழமை (ஒரு நாள் மட்டும்) நோன்பு நோற்க வேண்டாமென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்களா?' என்று கேட்டேன். அதற்கு 'ஆம், இந்த இல்லத்தின் அதிபதி மீது ஆணையாக!' என்று ஜாபிர் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: முஹம்மது பின் அப்பாத் பின் ஜஃபர் (ரலி), நூற்கள்: புகாரி 1984, முஸ்லிம் 2101, இப்னுமாஜா 1724)

வெள்ளிக்கிழமை மட்டும் தனித்து நோன்பு வைக்க வேண்டாம் என்பது இதன் பொருள்.

மற்றொரு ஹதீஸ் இன்னும் தெளிவைத் தருகிறது,

'உங்களில் ஒருவர் வெள்ளிக் கிழமைக்கு முன்பு ஒருநாள் அல்லது பின்பு ஒரு நாளைச் சேர்க்காமல் (தனியாக) வெள்ளியன்று மட்டும் நோன்பு நோற்க வேண்டாம்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: புகாரி 1985, முஸ்லிம் 2102, அபூதாவூது 2414, திர்மிதி 674, இப்னுமாஜா 1723)

வெள்ளிக்கிழமை மட்டும் தனித்து நோன்பு நோற்க இந்த ஹதீஸ்களில் தடை உள்ளது, ஆனால் வெள்ளிக்கிழமை தவிர்ந்த மற்ற நாட்களில் ஒரு நாள் தனித்து நோன்பு இருக்க தடை இல்லை. குறிப்பாக திங்கள், வியாழன் தினங்களில் தனித்து நோன்பு இருக்கலாம். இந்த ஹதீஸ் அந்த நோன்புகளை தடுக்காது. வெள்ளிக்கிழமை நோன்பு வைப்பதாக இருந்தால் அதற்கு முன்பு ஒருநாள் அல்லது அதற்கு பின்பு ஒரு நாளை சேர்த்து நோன்பு இருக்க வேண்டும். மேலும் ஒருவர் வழமையாக நோற்கும் நோன்பு வெள்ளிக்கிழமையில் தனித்து அமைந்து விட்டால் கூட அன்று அவர் நோன்பு நோற்பதில் தவறில்லை என்பதை அடுத்து வரும் ஹதீஸ் மேலும் விளக்குகிறது.

'இரவுகளில் வெள்ளிக்கிழமை இரவை மட்டும் இரவுத் தொழுகைக்காகத் தேர்ந்தெடுக்காதீர்கள். தினங்களில் வெள்ளிக்கிழமை தினத்தை மட்டும் நோன்பு நோற்பதற்காகத் தேர்ந்தெடுக்காதீர்கள். உங்களில் ஒருவர் (வழக்கமாக) நோன்பு நோற்கும் நாள் வெள்ளிக்கிழமையாக அமைந்து விட்டால் தவிர' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), முஸ்லிம் 2103)

இந்த ஹதீஸ் வெள்ளிக்கிழமை மட்டும் தனித்து நோன்பு வைக்கக் கூடாது என்பதையும் யாரெல்லாம் அவ்வாறு நோன்பு வைக்கலாம் என்பதையும் தெளிவாக கூறுகிறது.

'ஒரு நாள் நோன்பு நோற்க வேண்டாம்' என்ற வாசகம் எல்லா நாட்களையும் உள்ளடக்கக் கூடியது என்பதையும், 'வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் நோன்பு நோற்காதீர்கள்' என்ற வாசகம் வெள்ளிக்கிழமையை மட்டும் குறிக்கும் என்பதையும் விளங்கிக் கொள்வது அவசியம். இங்கே 'வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் நோன்பு நோற்காதீர்கள்' என்ற வாசகமே மேற்கண்ட ஹதீஸில் இடம் பெற்றுள்ளதை கவனியுங்கள்.

2. வெள்ளிக்கிழமை நோன்பு நோற்காது இருப்பது யூதர்களுக்கு மாறுசெய்வதாகும் என்று ஹதீஸ் இருக்கிறதே, என்பதும் உங்கள் கேள்வியில் உள்ள அடுத்த விஷயம்.

வெள்ளிக்கிழமைக்கும் யூதர்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக நம்மால் அறிய முடியவில்லை. ஆனால் மேலே நாம் குறிப்பிட்டுள்ள ஹதீஸில் வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்காது இருப்பதற்கான காரணம் சொல்லப்பட்டிருப்பதை விளங்க முடிகிறது.

வெள்ளிக்கிழமை என்பது வார நாட்களில் ஒரு விஷேசமான நாள் என்பதில் யாருக்கும் ஐயமில்லை. அதற்காக அந்த நாளில் மட்டும் இரவுத் தொழுகையை தொழுவது, அந்த நாளில் மட்டும் நோன்பு நோற்பது என்பது இயல்பாகவே மனிதர்கள் செய்ய நினைக்கும் விஷயங்கள் தான். இன்றும் கூட அந்த வழக்கம் பலரிடம் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கத்தை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள் என்பது முதல் காரணம்.

மகிழ்ச்சிக்குரிய நாளான பெருநாட்களில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்க தடை செய்தார்கள் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். அதுபோல ஹஜ்ஜின் மிகமுக்கிய கிரியையான அரஃபாத்தில் தங்கி இருத்தலின் போதும் அங்கே நிகழ்;த்தப்படும் குத்பா உரையை செவிமடுக்கும் ஜாஹிகள் நோன்பு நோற்க வலியுறுத்தப்படவில்லை. அதே தினத்தில் அரபாவில் தங்கியிராத மற்றவர்கள் நோன்பு நோற்க கட்டளையிடப்பட்டிருக்கிறார்கள். அதுபோல சூரியன் உதிக்கும் நாட்களிலெல்லாம் சிறந்த நாள் வெள்ளிக்கிழமை என்ற சிறப்பைப் பெற்ற இந்த நாளில் தனித்து ஒரு நாள் மட்டும் நோன்பிருக்க நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள் என்பது இரண்டாவது காரணம்.

முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமை என்பது வாராந்திர பெருநாள் போன்றதாகும், அதனாலேயே அந்த நாளில் நோன்பு நோற்க தடுக்கப்பட்டுள்ளது என்பதை பின் வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

'நிச்சயமாக வெள்ளிக்கிழமை உங்களுக்கு பெருநாளாகும். ஆகவே அதற்கு முன்போ அல்லது பின்போ நோன்பு நோற்றாலே தவிர, அதில் நோன்பு நோற்காதீர்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அம்ர் அல் அஸரி (ரலி), நூல்: அல்பஸ்ஸார்)

ஒரு நாள் நோன்பு என்பது வெள்ளிக்கிழமைக்கு மட்டும் குறிப்பாக சொல்லப்பட்ட ஒன்று, அது பொதுவானது அல்ல. யூதர்களுக்கு மாறு செய்வதற்காக அந்த நோன்பை வைக்க வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக எந்த குறிப்பும் இல்லை.