Showing posts with label கேள்வி - பதில்கள். Show all posts
Showing posts with label கேள்வி - பதில்கள். Show all posts

அல்-குர்ஆன் பகுதி-1

Q1) குர்ஆன் என்பதற்கு என்ன பொருள்?

A) ஓதுதல்! (that which is recited; or that which is dictated in memory form)

Q2) குர்ஆன் யாரால் அருளப்பட்டது?

A) அகிலங்கள் அனைத்தையும் படைத்த அல்லாஹ்வால் அருளப்பட்டது

Q3) குர்ஆன் எந்த இரவில் அருளப்பட்டது?

A) லைலத்துல் கத்ர் இரவில்

Q4) குர்ஆன் யார் மூலமாக அருளப்பட்டது

A) கண்ணியமிக்க வானவர் ஜிப்ரயீல் (அலை) அவர்களின் மூலமாக.

Q5) குர்ஆன் எந்த தூதருக்கு அருளப்பட்டது?

A) இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு.

Q6) முதன் முதலாக குர்ஆன் எந்த இடத்தில் வைத்து அருளப்பட்டது?

A) மக்காவிலுள்ள ஹிரா குகையில் அருளப்பட்டது

Q7) எந்த கலிபாவின் ஆட்சிக் காலத்தில் குர்ஆன் எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டது?

A) அபூபக்கர் (ரலி) அவர்களின்ஆட்சிக்காலத்தில்

Q8) எந்த கலிபாவின் ஆட்சிக் காலத்தில் குர்ஆன் முதன் முதலாக பிரதியெடுக்கப்பட்டது?

A) உதுமான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்.

Q9) கலிபா உதுமான் அவர்களின் காலத்தில் பிரதியெடுக்கப்பட்ட குர்ஆன் தற்போது எங்கிருக்கிறது?

A) ஒன்று தாஸ்கண்டிலும், மற்றொன்று துர்கியின் இஸ்தான்புல் அருங்காட்சியகத்தில் உள்ளது.

Q10) அல்லாஹ்விடத்தில் உயர்ந்த அந்தஸ்து உடையவர்கள் யார் என குர்ஆன் கூறுகிறது?

A) தக்வா (இறையச்சம்) உடையவர்கள்

Q11) குர்ஆனில் மிகப்பெரிய அத்தியாயம் எது?

A) சூரத்துல் பகரா (இரண்டாவது அத்தியாயம்)

Q13) குர்ஆனில் மிகச் சிறிய அத்தியாயம் எது?

A) சூரத்துல் கவ்ஸர் (108 வது அத்தியாயம்)

Q14) குர்ஆனை பாதுகாப்பது யார் பொறுப்பில் உள்ளது?

A) அதை இறக்கிய இறைவனே அதன் பாதுகாவலன் ஆவான்.

Q15) நபி (ஸல்) அவர்களின் எத்தனையாவது வயதில் முதன் முதலாக குர்ஆன் அருளப்பட்டது?

A) 40 ஆவது வயதில்

Q16) குர்ஆனுக்கு இருக்கும் மற்ற பெயர்களில் சிலவற்றைக் கூறுக:

A) அல்-ஃபுர்கான், அல்-கிதாப், அத்-திக்ர், அல்-நூர், அல்-ஹூதா

Q17) இறைவன் நம்மோடு இருக்கிறான் என கூறிய நபி யார்?

A) முஹம்மது (ஸல்) அத் தவ்பா(9:40)

Q18) ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியுமா?

A) ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியாது. அஸ் ஸபா(34:14) மற்றும் அல் ஜின்னு(72:10)

Q19) குர்ஆனில் மூன்றில் ஒரு பகுதி என சிறப்பித்துக் கூறப்பட்ட சூரா எது?

A) சூரத்துல் இக்லாஸ் (112 வது அத்தியாயம்)

Q20) குர்ஆனில் எத்தனை அத்தியாயங்கள் இருக்கிறது?

A) 114 அத்தியாயங்கள்

Q21) நபி முஸா (அலை) அவர்களோடு இறைவன் பேசிய பள்ளத்தாக்கின் பெயர் என்ன?

A) துவா பள்ளத்தாக்கு. அந் நாஜிஆத்(79:16), தாஹா(20:12). இது தூர் மலையின் அடிவாரத்தில் உள்ளது. (19:52)

Q22) அல்-குர்ஆனை மனனம் செய்த முதல் மனிதர் யார்?

A) முஹம்மது நபி (ஸல்) அவர்கள்

Q23) நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் குர்ஆனில் எத்தனை முறை இடம் பெற்றுள்ளது?

A) முஹம்மது (ஸல்) என நான்கு முறையும், அஹ்மது என ஒரு முறையும் இடம் பெற்றுள்ளது.

Q24) இறைவனை வணங்குவதற்காக கட்டப்பட்ட முதல் இறையில்லம் எது என குர்ஆன் கூறுகிறது?

A) கஃபா

Q25) எதிர்கால சந்ததியினருக்கு அத்தாட்சியாக விட்டு வைக்கப்பட்டுள்ளவற்றில் இரண்டைக் கூறுக:

A) நூஹ் (அலை) அவர்களின் கப்பல் (54:15), மற்றும் பிர்அவ்னின் உடல் (10:92)

Q26) நூஹ் நபியின் கப்பல் எங்கு ஒதுங்கியது என குர்ஆன் கூறுகிறது?

A) ஜூதி மலையில் (11:44 )

Q27) குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஒரே ஒரு ஸஹாபியின் பெயர் என்ன?

A) ஜைத் பின் ஹாரித் (ரலி) அஹ்ஜாப் (33:37)

Q28) ஷைத்தான் எந்த இனத்தைச் சேர்ந்தவன் என குர்ஆன் குறிப்பிடுகிறது?

A) ஜின் இனம்

Q29) இஸ்ராயிலின் வழித்தோன்றல்களுக்கு கடமையாக்கப்பட்ட வணக்கங்கள் என குர்ஆன் குறிப்பிடுபவை எவைகளை?

A) தொழுகை மற்றும் ஜக்காத்

Q30) ‘பிஸ்மில்லாஹ்’ கூறி ஆரம்பம் செய்யப்படாத சூரா எது?

A) சூரத்துத் தவ்பா

Q31) ‘பிஸ்மில்லாஹ்’ இரண்டு முறை வரும் சூரா எது?

A) சூரத்துந் நம்ல் -எறும்புகள் (27:30)

Q32) குர்ஆன் முழுவதுவதுமாக இறக்கியருளப்பட எத்தனை வருடங்கள் ஆனது?

A) 23 வருடங்கள்

Q33) தொழுகையில் அவசியம் ஓதப்பட வேண்டிய சூரா எது?

A) அல்-பாத்திஹா

Q34) துஆ (பிரார்த்தனை) என குறிப்பிடப்படும் சூரா எது?

A) அல்-பாத்திஹா

Q35) திருமறையின் தோற்றுவாய் என குறிப்பிடப்படும் சூரா எது?

A) அல்-பாத்திஹா

Q36) குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்ட ஒரே ஒரு பெண்மணி யார்?

A) மர்யம் (அலை)

Q37) நபிமார்களின் பெயரால் எத்தனை சூராக்கள் இருக்கின்றன?

A) 6 சூராக்கள் (யூனுஸ், ஹூத், யூசுப், இப்ராஹீம், நூஹ், முஹம்மது (ஸல்))

Q38) ஆயத்துல் குர்ஸி குர்ஆனில் எந்த பாகத்தில், சூராவில் உள்ளது?

A) மூன்றாவாது பாகத்தின் ஆரம்பத்தில், இரண்டாவது அத்தியாயத்தின் 255 ஆவது வசனம்.

Q39) அல்-குர்ஆனில் இறைவனின் திருநாமங்களாக எத்தனை பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது?

A) 99 பெயர்கள்

Q40) மதினா வேறெந்த பெயரில் குர்ஆனில் குறிப்பிடப்படுகிறது?

A) யத்ரிப் (33:13)

Q41) பனி இஸ்ராயில் என யாரை குர்ஆன் குறிப்பிடுகிறது?

A) யாகூப் (அலை) அவர்களின் சந்ததியினர்களை

Q42) ஈமான் கொணடவர்களுக்கு உதாரணமாக அல்லாஹ் தன் திருமறையில் கூறும் இரு பெணமணிகள் யாவர்?

A) பிர்அவ்னின் மனைவி (66:11), இம்ரானின் புதல்வி மர்யம் (அலை) (66:12)

Q43) காபிர்களுக்கு உதாரணமாக இறைவன் தன் திருமறையில் கூறும் இரு பெண்கள் யாவர்?

A) நூஹ் (அலை) அவாகளின் மனைவி (66:10), லூத் (அலை) அவர்களின் மனைவி (66:10)

அல்லாஹ் நூஹ் நபியின் மனைவியை காபிர் என்று கூறியிருக்க, நம்மவர்கள் திருமண துஆக்களில் நூஹ் நபியின் மனைவி போல் வாழ்க என்று வாழ்த்துகிறார்கள். நூஹ் நபிக்கு பாரிஸா என்று நல்ல மனைவியும் இருந்ததாக இதற்கு ஒரு கடடுக் கதையையும் கூறுகிறார்கள். இது குர்ஆனிலோ, ஹதீஸிலோ ஆதாரமில்லாத வெறும் யூதக் கடடுக்கதைகளாகும்.

Q44) உள்ளங்கள் எவ்வாறு அமைதி பெறுகிறது என அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்?

A) அல்லாஹ்வை நினைவு கூறுவதன் முலம் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன. (13:28)

Q45) நபி ஈஸா (அலை) அவாகள் செய்ததாக இறைவன் குறிப்பிடும் அற்புதங்கள் யாவை?

A) 1) குழந்தையில் பேசியது, 2) களிமண்ணினால் பறவையை செய்து, இறைவனின் அனுமதியைக் கொண்டு உயிர் கொடுத்தல், 3) பிறவிக் குருடனுக்குப் பார்வையளித்தல், 4) வெண்குஷ்ட ரோகியைக் குணப்படுத்துதல், 5) இறந்தவரை அல்லாஹ்வின் உத்தரவு கொண்டு உயிர் பெறச் செய்தல் (5:110), 6) பிறா உண்பதை வீடடில் உள்ளவற்றை பார்க்காமலே அறிவித்தல் (3:49)

Q46) சுவனத்தில் இருக்காது என்று இறைவன் குறிப்பிடுவது எவை?

A) 1) பசி, 2) நிர்வானம், 3) தாகம், 4) வெயில் (20:118,119)

Q47) வீரமுள்ள செயல் என குர்ஆன் எதைக் கூறுகிறது?

A) எவரேனும் (பிறர் செய்யும் தீங்கை) பொறுத்துக் கொண்டு மன்னித்து விடடால் அது மிக உறுதியான (வீரமுள்ள) செயலாகும். (42:43), (31:17), (3:186)

Q48) நபி முஸா (அலை) அவர்கள் கற்பாறையில் அடித்த போது எத்தனை நீர் ஊற்றுக்கள் பீறிட்டு எழுந்ததாக இறைவன் கூறுகிறான்?

A) பன்னிரணடு நீர் ஊற்றுகள் பீறிடடு எழுந்தது. (2:60) & (7:160)

Q49) தொழாதவர்களுக்காக இறைவன் சித்தப்படுத்தி வைத்திருப்பதாகக் கூறும் நரகத்தின் பெயர் என்ன?

A) ஸகர் என்ற நரகம். அல் முத்தஸ்ஸிர்(74:41,42,43)

Q50) இறைவன் என்னோடு இருக்கிறான் என்று கூறிய நபி யார்?

A) முஸா (அலை) அஷ் ஷுஃரா(26:62)

அல்-குர்ஆன் பகுதி-2

Q51) பெண்கள் எதற்காக பர்தா அணிய வேண்டுமென இறைவன் கூறுகிறான்?

A) “அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும்”. (33:59)

Q52) அல்லாஹ்வின் வசனங்களைக் கொண்டு தீர்ப்பளிக்காதவர்கள் யார் என குர்ஆன் கூறுகிறது?

A) “எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொணடு தீர்ப்பளிக்க வில்லையோ, அவர்கள் நிச்சயமாக காபிர்கள் தாம்” அல் மாயிதா(5:44)

Q53) மார்க்கத்தில் பல பிரிவுகள் குறித்து குர்ஆன் கூறுவது என்ன?

A) “இறைவனின் தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும் யார் தங்களுக்குள் பிரிவையுண்டு பண்ணிக் கொண்டு மாறுபாடாகி விடடார்களோ அவர்களைப் போன்று ஆகிவிடாதீர்கள். அத்தகையோருக்கு கடுமையான வேதனையுண்டு” ஆல இம்ரான்(3:105)

Q54) கருக்கலைப்பு, குடும்பக்கட்டுப்பாடு குறித்து இறைவன் கூறுவது என்ன?

A) “வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொலைச் செய்யாதீர்கள்: நாமே உங்களுக்கும் ஆகாரமளிக்கின்றோம்: அவர்களுக்கும் அளிப்போம்” அல் அன் ஆம்(6:151) மற்றும் பனீ இஸ்ராயீல்(17:31)

Q55) வானவர்களுக்கு இறக்கைகள் உண்டா?

A) வானவர்களுக்கு இறக்கைகள் உண்டு. 35:1 (அல் ஃபாத்திர்)

Q56) ஏழு இரவுகள் எட்டு பகல்களும் தொடர்ந்தார்போல் எந்த சமூகத்திற்கு வேதனை இறக்கப்பட்டது?

A) ஆது சமுகத்தாருக்கு. (69:6,7) (அல் ஹாக்கா)

Q57) முஃமினான ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுவது குறித்து குர்ஆன் என்ன கூறுகிறது?

A) ‘எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள பேதைப் பெண்கள் மீது அவதூறு கூறுகிறார்களோ அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்: இன்னும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு’ அந் நூர்(24:23)

Q58) இறைவனால் பெயர் சூட்டப்படட நபிமார்கள் யாவர்?

A) யஹ்யா (அலை). மர்யம்(19:7), ஆல இம்ரான்(3:39) மற்றும் ஈஸா (அலை) (3:45)

Q59) குர்ஆனில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வரும் வானவர்கள் பெயர் என்ன?

A) மாலிக் (அலை) அஜ் ஜுக்ருஃப்(43:77) மற்றும் மீக்காயீல் (அலை) அல்பகரா(2:98)

Q60) ஹுதமா என்று இறைவன் எதைக் குறிப்பிடுகிறான்?

A) ஹுதமா-எரிந்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பு: அது உடலில் பட்டதும் இதயங்களில் பாயும்: ஹுமஜா (104-4,5,6,7)

Q61) ஹாவியா என்று இறைவன் எதைக் குறிப்பிடுகிறான்?

A) ஹாவியா-அது சுட்டு எரிக்கும் நரகத்தின் தீக்கிடங்காகும். அல் காரிஆ(102-8,9,10,11)

Q62) ஜக்கூம் என்று இறைவன் எதைக் குறிப்பிடுகிறான்?

A) ஜக்கூம்-இது நரகத்தில் உள்ள கள்ளி மரமாகும்: நரகவாசிகளின் விருந்தாகும்: அம்மரம் நரகத்தின் அடித்தளத்திலிருந்து வளரும்: அதன் பாளைகள் சைத்தான்களின் தலைகளைப் போல் இருக்கும். அஸ் ஸாஃப்ஃபாத்(37:61-66) மற்றும் அத் துகான்(44:43-46), 56:52

Q63) திருக்குர்ஆனில் உள்ள மிகப்பெரிய ஆயத்து எது?

A) அல்பகரா(2:282)

Q64) சிலந்திப் பூச்சிக்கு உதாரணமாக அல்லாஹ் யாரை குறிப்பிடுகிறான்? ஏன்?

A) சிலந்திப் பூச்சிக்கு உதாரணமாக அல்லாஹ் அல்லாதவற்றை தங்களுக்குப் பாதுகாப்பாளர்களாக எடுத்துக் கொள்பவர்களை குர்ஆனில் கூறுகிறான். மேலும் இந்த வசனத்தில் சிலந்திப் பூச்சியின் வீடு வீடுகளில் எல்லாம் மிக மிக பலஹீனமாகயிருப்பதைப் போல், இவர்கள் தங்களுக்கு பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டவர்கள் (அவுலியாக்கள், ஷைய்கு மார்கள், பீர் மார்கள், மஸ்தான்கள்) போன்றவர்களும் உங்களுக்கு உதவ முடியாத அளவுக்கு மிக மிக பலஹீனமானவர்களே! என்பதை தெளிவு படுத்துகிறான்.(அன் கபூத்(29:41)

Q65) கழுதைக்கு உதாரணமாக அல்லாஹ் யாரை குறிப்பிடுகிறான்?

A) கழுதைக்கு உதாரணமாக, தவ்ராத் வேதம் கொடுக்கப் பெற்றும் அதன்படி நடக்காதவர்களை குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான். (அல் குர்ஆன் ஜும்ஆ(62:5). மேலும் வெறுக்கத்தக்க குரல் வளம் உடையோருக்கும் கழுதையைஉதாரணமாக கூறுகிறான். (31:19)

Q66) தீமையான செயல் புரிபவர்கள் மரண தருவாயில் பாவ மன்னிப்பு கோருவது குறித்து இறைவன் கூறுவது என்ன?

A) “இன்னும் எவர்கள் தீவினைகளைத் (தொடர்ந்து) செய்து கொண்டேயிருந்து, முடிவில் அவர்களை மரணம் நெருங்கிய போது, ‘நிச்சயமாக இப்பொழுது நான் (பாவங்களுக்காக வருந்தி) மன்னிப்புத் தேடுகிறேன்’ என்று கூறுகின்றார்களோ, அவர்களுக்கும், எவர் காஃபிர்களாகவே மரிக்கிறார்களோ அவர்களுக்கும் பாவமன்னிப்பு இல்லை, இத்தகையோருக்குத் துன்பம் கொடுக்கும் வேதனையையே நாம் சித்தப்படுத்தி வைத்துள்ளோம். ” 4:18 (அந் நிஸா)

Q67) உங்களுக்கு தெரியாத ஐந்து விஷயங்கள் என்று சூரத்துல் லுக்மான் முலம் இறைவன் குறிப்பிடுபவை எவை?

A) 1) கியாம நாள் 2) மழை இறங்குவது 3) கர்பங்களில் உள்ளவை 4) நாளைய தினம் தான் சம்பாதிப்பதை 5) எந்த பூமியில் தாம் இறப்போம். லுக்மான்(31:34)

Q68) அஸ்ஸப்ஃவுல் மஸானி என அழைக்கப்படும் சூரா எது?

A) நபி (ஸல்) அவர்கள் சூரத்துல் பாத்திஹாவிற்கு அஸ்ஸப்ஃவுல் மஸானி (திரும்பத் திரும்ப ஓதப்படும் ஏழு வசனங்கள்) எனப் பெயரிட்டுள்ளார்கள் (ஆதாரம் :புகாரி)

Q69) குர்ஆனின் இதயம் என சிறப்பிக்கப்பட்ட சூரா எது?

A) சூரத்துல் யாசின் (36 வது அத்தியாயம்)

Q70) பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டா?

A) “பெற்றோரோ, நெருங்கிய உறவினரோ விட்டுச் சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பாகமுண்டு – (அதிலிருந்துள்ள சொத்து) குறைவாக இருந்தாலும் சரி, அதிகமாக இருந்தாலும் சரியே; (இது அல்லாஹ்வினால்) விதிக்கப்பட்ட பாகமாகும்” அந் நிஸா (4:7)

Q71) தங்கம் மற்றும் வெள்ளிக்கு ஜக்காத் கொடுக்காதவர் பற்றி குர்ஆன் என்ன கூறுகிறது?

A) “எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ; (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!. (நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் – (இன்னும்) ‘இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது – ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்’ (என்று கூறப்படும்). தவ்பா (9:34,35)

Q72) லுக்மான (அலை) அவர்கள் தம் புதல்வருக்கு அறிவுரை கூறுகையில் எந்த செயலை செய்தால் அது மிகப்பெரும் அநியாயமாகும் என்று கூறினார்கள்?

A) இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு; “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக). (31:13)

Q73) ஈமான் கொண்டவர்களை சோதிப்பதாக அல்லாஹ் கூறுபவற்றுல் சிலதைக் கூறுக!

A) நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக (2:155)

Q74) நன்மையான மற்றும் தீமையான காரியங்களுக்கு சிபாரிசு செய்பவர்களுக்கு கிடைக்கும் கூலி என்ன?

A) எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் ஒரு பாகம் அவருக்கு உண்டு. (அவ்வாறே) எவரேனும் ஒரு தீய காரியத்திற்கு சிபாரிசு செய்தால், அதிலிருந்து அவருக்கும் ஒரு பாகமுண்டு. அல்லாஹ் எல்லா பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான். (4:85)

Q75) கலந்தாலோசனை செய்வது குறித்து குர்ஆன் கூறுவது என்ன?

A) ஈமான் கொண்ட முஃமின்கள் தங்கள் காரியங்களை தங்களிடையே கலந்தாலோசித்துக் கொள்ள வேண்டும். ஆதாரம் :(42:36-38) மற்றும் 3:159

Q76) கேலி செய்தல் (பரிகாசம் செய்தல், கிண்டல் செய்தல்) குறித்து குர்ஆன் கூறுவது என்ன?

A) கேலி செய்தல் (பரிகசிப்பது, கின்டல் செய்வது) அறிவீனர்களின் செயல். ஆதாரம் : (2:67)

Q77) யஃகூபு (அலை) தம் குமாரர்களுக்கு செய்த வஸிய்யத்து (உபதேசம்) என்ன?

A) ”என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்.’ யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம்; ‘எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?’ எனக் கேட்டதற்கு, ‘உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம்; அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்’ எனக் கூறினர். (2:132-133)

Q78) ஈஸா (அலை) அவர்களின் சீடர்களான ஹவாரிய்யூன்கள் செய்த பிரார்த்தனை என்ன?

A) “எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்;. எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!” (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.) (3:53)

Q79) பெற்றோருக்காக என்ன பிரார்த்தனை செய்ய வேண்டும் என குர்ஆன் கூறுகிறது?

A) இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக மேலும், “என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!” என்று கூறிப் பிரார்த்திப்பீராக! (17:24)

Q80) ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழையமாட்டார்கள் என எவர்களைக் குறித்து இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்?

A) எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா – மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் – இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம். (7:40)

Q81) நரகத்திற்கு எத்தனை வாசல்கள் இருப்பதாக அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்?

A) “அதற்கு ஏழு வாசல்கள் உண்டு; அவ்வாசல்கள் ஒவ்வொன்றும் பங்கிடப்பட்ட (தனித்தனிப்) பிரிவினருக்கு உரியதாகும்” (15:44)

Q82) சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் உவமைகளாக இறைவன் தன் திருமறையில் எதைக் கூறுகின்றான்?

A) அவன்தான் வானத்திலிருந்து மழையை இறக்கினான்; அப்பால் ஓடைகள் அவற்றின் அளவுக்குத் தக்கபடி (நீரைக் கொண்டு) ஓடுகின்றன அவ்வெள்ளம் நுரையை மேலே சமந்து செல்கிறது (இவ்வாறே) ஆபரணமோ அல்லது (வேறு) சாமான் செய்யவோ (உலோகங்களை) நெருப்பில் வைத்து உருக்கும் போதும் அதைப் போல் நுரை உண்டாகின்றது இவ்வாறு சத்தியத்திற்கும், அசத்தியத்திற்கும் அல்லாஹ் (உவமை) கூறுகிறான்; அழுக்கு நுரை (பலனற்றதாக இருப்பதால்) அழிந்துபோய் விடுகிறது ஆனால் மனிதர்களுக்குப் பலன் அளிக்கக் கூடியதோ, பூமியில் தங்கி விடுகிறது இவ்வாறே அல்லாஹ் உமமைகளைக் கூறுகிறான். (13:17)

Q83) இறைவன் மன்னிக்காத மிகப்பெரும் பாவம் எது என அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்?

A) ஷிர்க் (இணைவைத்தல்) (4:116)

Q84) அஹ்ஸாப் போரின் போது நாற்புறமும் பல்லாயிரக்கணக்கான எதிரிகளால் சுழப்பட்டிருந்த முஸ்லிம்களை எவ்வாறு காப்பாற்றியதாக அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்?

A) முஃமின்களே! உங்கள் மீதும் அல்லாஹ் புரிந்திருக்கும் அருட் கொடையை நினைத்துப் பாருங்கள்; உங்களிடம் (எதிரிகளின்) படைகள் வந்த போது (புயல்) காற்றையும், நீங்கள் (கண்களால்) பார்க்கவியலா (வானவர்களின்) படைகளையும் அவர்கள் மீது நாம் ஏவினோம்; மேலும், நீங்கள் செய்வதை அல்லாஹ் உற்று நோக்குபவனாக இருக்கிறான். (33:9)

Q85) ஷைத்தான்களின் சகோதரர்கள் என யாரைக் குறித்து குர்ஆன் கூறுகிறது?

A) நிச்சயமாக விரயஞ் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான். (17:27)

Q86) புண்ணியம் என்றால் என்ன என்பதற்கு இறைவன் தன் திருமறையில் கூறும் விளக்கம் என்ன?

A) புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல், (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும்,
மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்;. இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து, முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்) இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள் (பயபக்தியுடையவர்கள்). (2:177)

Q87) யூனூஸ் நபி (அலை) அவர்கள் மீன் வயிற்றினுள் இருக்கும் போது இறைவனிடம் செய்த பிரார்த்தனையைக் கூறுக.

A) அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து ‘உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்’ என்று பிரார்த்தித்தார்.

Q88) தீயோர்களின் பதிவேடு குறித்து குர்ஆன் கூறுவது என்ன?

A) ஆகவே, நிச்சயமாக தீயோர்களின் பதிவேடு ஸிஜ்ஜீனில் இருக்கிறது. ‘ஸிஜ்ஜீன்’ என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்? அது (செயல்கள்) எழுதப்பட்ட ஏடாகும். பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான். அவர்கள் நியாயத் தீர்ப்பு நாளையும் பொய்ப்பிக்கிறார்கள். வரம்பு மீறிய, பெரும் பாவியைத் தவிர வேறெவரும் அதைப் பொய்ப்பிக்க மாட்டார். நம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், ‘அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே’ என்று கூறுகின்றான். அப்படியல்ல: அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன. (தீர்ப்புக்குரிய) அந்நாளில் அவர்கள் தங்கள் இறைவனை விட்டும் திரையிடப்பட்டவர்களாவார்கள். பின்னர் நிச்சயமாக அவர்கள் நரகில் புகுவார்கள். ‘எதை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டு இருந்தீர்களோ, அதுதான் இது’ என்று பின் அவர்களுக்குச் சொல்லப்படும். (83:7-17)

Q89) நல்லோர்களின் பதிவேடு குறித்து குர்ஆன் கூறுவது என்ன?

A) “நிச்சயமாக நல்லோர்களின் பதிவேடும் ‘இல்லிய்யீ’னில் இருக்கிறது. ‘இல்லிய்யுன்’ என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்? (அது) செயல்கள் எழுதப்பட்ட ஏடாகும். (அல்லாஹ்விடம்) நெருங்கிய (கண்ணியம் மிக்க வான)வர்கள் அதை பார்ப்பார்கள். நிச்சயமாக அப்ரார்கள் (நல்லவர்கள்) ‘நயீம்’ என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள். ஆசனங்களில் அமர்ந்து (சுவர்க்கக் காட்சிகளைப்) பார்ப்பார்கள். அவர்களுடைய முகங்களிலிருந்தே (அவர்களுக்குக் கிட்டிய) பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர். (பரிசுத்த) முத்திரையிடப்பட்ட தெளிவான(போதையோ, களங்கமோ அற்ற) மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள். அதன் முத்திரை கஸ்தூரியாகும்; எனவே (அதற்காக) ஆர்வம் கொள்பவர்கள், (அதைப் பெற்றுக் கொள்வதற்கான நல்ல அமல்களில்) ஆர்வம் கொள்ளட்டும். இன்னும், அதனுடைய கலவை தஸ்னீமில் நின்றுமுள்ளதாகும். அது (தஸ்னீம், ஓர் இனிய) நீர்ச்சுனையாகும். அதிலிருந்து (அல்லாஹ்விடம் நெருங்கியவர்கள்) முர்புகள் அருந்துவார்கள். (18-28)

Q90) வட்டி வாங்குபவர்களுக்கான தண்டனை குறித்து குர்ஆன் கூறுவது என்ன?

A) “யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், ‘நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே’ என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது – என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள். (2:275)

Q91) கல்வி ஞானம் கொடுக்கப்பட்டவர்களின் இதயத்தில் குர்ஆன் பாதுகாக்கப்படுகிறது என இறைவன் கூறும் வசனம் எது?

A) “எவர் கல்வி ஞானம் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் உள்ளங்களில், தெளிவான வசனங்களாக இது இருக்கிறது” (29:49)

Q92) அபூபக்கர் (ரலி) ஆட்சிக் காலத்தில் எந்த ஸஹாபியின் பொறுப்பில் எழுத்து வடிவில் முழுமையான குர்ஆனாக தொகுக்கும் பணி ஓப்படைக்கப்பட்டது?

A) ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம் முழு குர்ஆனையும் எழுத்து வடிவில் தொகுக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது.

அவ்வப்போது அல்லாஹ் இறக்கியருளும் வஹியை நபி (ஸல்) அவர்கள் உடனே எழுதி வைத்துக் கொள்ளுமாறு தம் தோழர்களுக்கு கட்டளையிடுவார்கள். இவ்வாறு இறைச்செய்தியை எழுதுவதற்காக நபி (ஸல்) அவர்களால் நியமிக்கப்பட்டவர்களில் அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலி ரலி), முஆவியா (ரலி), அபான் பின் ஸயீத் (ரலி), காலித் பின் வலித் (ரலி), உபை பின் கஅப் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி) மற்றும் ஸாபித் பின் கைஸ் (ரலி) போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள்.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் தோல்பட்டைகளிலும், மரப்பட்டைகளிலும், எலும்புகளிலும், வெண்மையான கல் பலகைகளிலும் குர்ஆன் எழுதி வைத்து பாதுகாக்கப்பட்டது. இவ்வாறு எழுதி வைத்து பாதுகாக்கப்பட்டவைகள் நபி(ஸல்) அவர்களின் வீட்டில் வைத்து பாதுகாக்ப்பட்டிருந்தது. அபூபக்கர் (ரலி) ஆட்சிக் காலத்தில் முழு குர்ஆனையும் மனனம் செய்திருந்த ஸைத் பின் ஸாபித் (ரலி) பொறுப்பில் எழுத்து வடிவில் முழுமையான குர்ஆனாக தொகுக்கும் பணி ஓப்படைக்கப்பட்டு, அவர்கள் அப்பணியை செவ்வனே நிறைவேற்றினார்கள். (ஆதாரம் : புகாரி)

Q93) ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களால் எழுத்து வடிவில் தொகுக்கப்பட்ட முழு குர்ஆன், உஸ்மான் (ரலி) அவர்களால் தற்போதுள்ள அமைப்பில் தொகுக்ப்படும் வரையிலும் யார் யார் பொறுப்பில் இருந்தது?

A) முதலில் அபூபக்கர் (ரலி) அவர்கள் பொறுப்பிலும், அவர்களின் மரணத்திற்குப் பின்னர் அது உமர் (ரலி) அவர்களின் பொறுப்பிலும், அவர்களின் மரணத்திற்குப் பின்னர் உமர் (ரலி) அவர்களின் மகளும், நபி (ஸல்) அவர்களின் மனைவியுமான ஹப்ஸா (ரலி) அவர்களிடத்திலும் இருந்தது.

பின்னர் உஸ்மான் (ரலி) அவர்கள் ஹப்ஸா (ரலி) அவர்களிடத்தில் இருந்த அந்த மூலப்பிரதியிலிருந்து பல பிரதிகளைத் தொகுத்து உலகின் பல பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தார்கள். அவற்றுல் ஒன்று தான் ரஷ்யாவின் தாஸ்கண்ட் நகரத்திலும் மற்றொன்று துருக்கியின் இஸ்தான்புல் நகரத்திலும் இருக்கும் அருங்காட்சியகத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Q94) உஸ்மான் (ரலி) அவர்களால் பல பிரதிகளாக குர்ஆன் தொகுக்ப்படுவதற்காக அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெற்றவர்கள் யாவர்?

A) நபி (ஸல்) அவர்களின் காலத்தில் தோல்பட்டைகளிலும், மரப்பட்டைகளிலும், எலும்புகளிலும், வெண்மையான கல் பலகைகளிலும் குர்ஆன் எழுதி வைத்து பாதுகாக்கப்பட்ட குர்ஆனை அபூபக்கர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் எழுத்து வடிவில் முழுமையான குர்ஆனாக அமைப்பதற்காக பொறுப்பேற்ற ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களே உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்திலும் பல பிரதிகளாக குர்ஆன் தொகுக்ப்படுவதற்காக அமைக்கப்பட்ட குழுவில் தலைமை வகித்தார்கள்.

இவருடைய தலைமையிலான இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த மற்ற நபித்தோழர்கள் அப்துல்லாஹ் பின் ஜூபைர் (ரலி), ஸயித் பின் அல் ஆஸ் (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அல் ஹாரிஸ் (ரலி) போன்றோர்களாவார்கள்.

Q95) ‘குர்ஆனின் தாய்’ என நபி (ஸல்) அவர்களால் பெயரிடப்பட்ட சூரா எது?

A) அல்-பாத்திஹா

Q96) நபி (ஸல்) அவர்களுக்கு கட்டுப்படுவதன் அவசியம் குறித்து குர்ஆன் கூறும் வசனங்களில் மூன்றைக் கூறுக:

A) ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கு கீழ்ப்படியுங்கள் – உங்கள் செயல்களை பாழாக்கிவிடாதீர்கள். (47:33)

“(நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்; இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்” (59:7)

(நபியே!) நீர் கூறும்: ‘நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். (3:31)

Q97) இஸ்லாம் அல்லாத மற்ற மார்க்கங்களைப் பின்பற்றுவது குறித்து குர்ஆன் கூறுவது என்ன?

A) இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். (3:85)

Q98) அல்லாஹ்வுக்கு இணை வைப்பவர்களை (ஷிர்க் செய்பவர்களை) திருமணம் செய்வது குறித்து குர்ஆன் கூறும் அறிவுரை என்ன?

A) (அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்; இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். (2:221)

Q99) ஸலாம் கூறப்பட்டால் அதற்கு பதில் கூறவேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்தும் குர்ஆன் வசனம் எது?

A) உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான். (4:86)

Q100) செய்த தருமங்களைச் சொல்லிக்காட்டுவதற்கு குர்ஆன் கூறும் உவமை என்ன?

A) “நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்; அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும்; அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது; அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது; இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை. (2:264)

நபிமொழிகள்

Q1) “ஸிஹாஹ் ஸித்தஹ்” என்று கூறப்படும் ஹதீஸ் நூல்களின் பெயர் என்ன?

A) 1) புஹாரி 2) முஸ்லீம் 3) அபூதாவுத் 4) திர்மிதி 5) நஸயி 6) இப்னுமாஜா

Q2) அல்லாஹ்வின் எந்த இரு அருட்கொடைகளை மக்கள் நஷ்டத்திற்குள்ளாக்குகிறார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

A) ‘ஆரோக்கியம், ஓய்வு நேரம் ஆகிய இந்த இரண்டு அருட்கொடைகளை மக்கள் நஷ்டத்திற்குள்ளாக்குகிறார்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி)

Q3) உங்களில் (முஸ்லிம்களில்) சிறந்தவர்கள் என யாரைக் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

A) ‘உங்களில் (முஸ்லிம்களில்) சிறந்தவர்கள் யார் எனில், யார் குர்ஆனைக் கற்று, (பிறருக்கும்) கற்றுத் தருகிறார்களோ அவர்கள்’ (அறிவிப்பவர் : உதுமான் (ரலி), நூல்: புகாரி)

Q4) ஹுதைபிய்யா உடன்படிக்கையில் எந்த வார்த்தை இடம்பெறக் கூடாது என மக்கத்து காஃபிர்கள் கூறினர்?

A) “ரஸுலுல்லாஹ்” என்ற வார்த்தை இடம்பெறக்கூடாது என்று மக்கத்து காபிர்கள் கூறினர்.

Q5) தச்சராக இருந்த இறைத்தூதர் யார்?

A) ஜக்கரிய்யா (அலை) (முஸ்லிம்)

Q6) எந்த மூன்று இடங்களைத் தவிர நன்மையை நாடி பிரயாணம் செய்யாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

A) 1) மஸ்ஜிதுல் ஹரம் 2) மஸ்ஜிதுல் அக்ஸா 3) மஸ்ஜிதுன் நபவி. (புகாரி)

Q7) காலத்தைத் திட்டுவது குறித்து கூறப்படும் நபிமொழி எது?

A) ‘காலத்தைத் திட்டுவதன் மூலம் மனிதர்கள் எனக்கு தீங்கிழைக்கிறார்கள். காலத்திற்குச் சொந்தக்காரன் நானே! இரவையும் பகலையும் மாறி வரச்செய்பவனும் நானே! என அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்’ (அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : புகாரி)

Q8) நீதிபதிகள் எத்தனை வகைப்படுவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

நீதிபதிகள் மூன்று வகைப்படுவர்: அவர்களில் ஒரு வகையினர் சுவனத்திற்கும், இரு வகையினர் நரகத்திற்கும் செல்வர்: உணமையை அறிந்து அதன் படி தீர்ப்பு வழங்கியவர் சுவனம் செல்வர். உணமையை அறிந்திருந்தும் அநீதமாக தீர்ப்பு வழங்கியவரும், உணமையை அறியாமலேயே தீர்ப்பு வழங்கியவரும் நரகம் புகுவார். (அறிவிப்பவா : புரைதா (ரலி), நூல் : அபூதாவுது)

Q9) ‘அஸ்ரத்துல் முபஸ்ஸரா’ என்று அழைக்கப்படக் கூடக் கூடிய சுவர்க்கத்திற்கு நன்மாராயங் கூறப்பட்ட நபித்தோழர்கள் யாவர்?

A) (1) அபூபக்கர் (ரலி) (2) உமர் (ரலி) (3) உதுமான் (ரலி) (4) அலி (ரலி) (5) தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி) (6) ஜுபைர் இப்னு அவ்வாம் (ரலி) (7) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) (8) ஸஃது இப்னு அபீவக்காஸ் (ரலி) (9) ஸயித் இப்னு ஜைத் (ரலி) (10) அபூ உபைதா இப்னு அல் ஜர்ராஹ் (ரலி) (ஆதாரம் : திர்மிதி, இப்னு மாஜா)

Q10) மனிதன் மரணித்த பின்பும் பயன் தரக் கூடிய அமல்கள் யாவை?

A) ‘மனிதன் இறந்து விடடால் மூன்று விஷயங்களைத் தவிர அவனுடைய அமல்கள் அனைத்தும் அவனை விட்டும் துண்டிக்கப்படுகின்றது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த மூன்று விஷயங்கள் 1) நிரந்தர தாமம் 2) பயன் தரும் கல்வி 3) இறந்தவருடைய சாலிஹான பிள்ளைகள் செய்யும் துஆ (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), ஆதாரம் : முஸ்லிம்)

Q11) எந்த இரு விஷயங்கள் ஒருவரிடம் இருந்தால் அவனை நன்றி உள்ளவன் என்றும், பொறுமை உள்ளவன் என்றும் இறைவன் குறித்துக் கொள்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

A) 1) இறை நெறியை மேற்கொள்வதில் தன்னைவிட மேலானவரைப் பார்த்தல் 2) உலக வசதிகளைப் பொருத்தவரை தன்னை விடக் கீழானவரைப் பார்த்து இறைவனுக்கு நன்றி செலுத்துதல் (திர்மிதி)

Q12) எல்லாவற்றையும் விட சிறந்த செல்வங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியவை எவை?

A) 1) இறைவனை நினைவு கூறும் நாவு 2) இறைவனுக்கு நன்றி செலுத்தும் உள்ளம் 3) இறை வழியில் நடந்திட கனவனுக்கு உதவிடும் நம்பிக்கையுள்ள மனைவி. (திர்மிதி)

Q13) எந்த ஐந்து கேள்விகளுக்கு விடைதராமல் மனிதன் மறுமையில் இறைவனின் நீதி மன்றத்திலிருந்து அகன்று செல்ல முடியாது என்று நபி (ஸல்) கூறினார்கள்?

A) 1) வாழ்நாளை எப்படி கழித்தான் 2) வாலிபத்தை எவ்வாறு கழித்தான் 3) எவ்வாறு செல்வத்தை ஈட்டினான் 4) அந்த செல்வத்தை எவ்வாறு செலவழித்தான் 5) அவன் அறிந்ததிலிருந்து எவ்வாறு செயல்பட்டான். (திர்மிதி)

Q14) முனாஃபிக்குகளின் அடையாளங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியவை எவை?

A) 1)பேசினால் பொய் கலந்து பேசுவான் 2) வாக்குறுதியை மீறுவான் 3) நம்பினால் மோசடி செய்வான் (புஹாரி)

Q15) வாழ்நாள் அதிகரிக்கப்படவும், உணவு விஸ்தீரிக்கப்படவும் விரும்புகிறவர்கள் என்ன செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

A) ‘வாழ்நாள் அதிகரிக்கப்படவும், உணவு விஸ்தீரிக்கப்படவும் விரும்புகிறவர்கள் தம் சுற்றத்தினருடன் (உறவினர்களுடன்) நல்லுறவு பாராட்டுவாராக’ (அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி), ஆதாரம் :புகாரி)

Q16) எந்த ஏழு நபர்களுக்கு மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் இடம் கிடைக்கும்?

A) 1) நீதமான ஆடசியாளர் 2) அல்லாஹ்வின் வணக்கத்திலேயே வளர்ந்த வாலிபன் 3) யாருடைய உள்ளம் அல்லாஹ்வின் பள்ளியை நினைத்த வண்ணம் இருக்கிறதோ அவர் 4) அல்லாஹ்வுக்காகவே விருப்பம் கொண்டு, சந்தித்து, பிரிந்த இருவர் 5) அழகும் அந்தஸ்தும் உள்ள பெண் தன் விருப்பத்திற்கு இணங்குமாறு அழைத்த போது, நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன் என்று கூறியவர் 6) வலக்கரம் என்ன கொடுத்தது என்று தன் இடக்கரம் அறியாத அளவுக்கு இரகசியமாக தர்மம் செய்தவர் 7) தனிமையில் அல்லாஹ்வின் அச்சத்தால் கண்ணீர் மல்க அல்லாஹ்வை நினைவு கூர்பவர். (புகாரி)

Q17) நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்தைக் கூறுக.

A) நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்து ஒன்று தான்.

அல்லாஹ் நபி (ஸல்) அவாகள் மீது ஸலவாத் கூறுமாறு திருக்குர்ஆனில் வசனம் 33:56 ல் கட்டளையிட்ட போது, நபி தோழாகள் நபி (ஸல்) அவர்களிடம் எப்படி ஸலவாத் கூறவேணடும் என கேட்டபோது, பின் வரும் ஸலவாத்தை ஓதிக்காட்டினார்கள்.

அல்லாஹும்ம ஸல்லிஅலா முஹம்மதின் வ-அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம, வ-அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலாமுஹம்மதின் வ-அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம, வ-அலா ஆலி இப்ராகீம இன்னக்க ஹமீதுன் மஜீத்

Q18) அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறை கூறிய நயவஞ்சகன் யார்?

A) அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு உபை ஸலூல் (புகாரி)

Q19) ஆயிஷா (ரலி) அவாகள் மீது கூறப்பட்ட அவதூறு சம்பந்தமாக இறங்கிய குர்ஆன் வசனம் எது?

A) எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே! ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது; மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு. (அல்-குர்ஆன் 24:11)

எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு. (அல்-குர்ஆன் 24:23)

Q20) என்ன காரணங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள் என நபி (ஸல) அவர்கள் கூறினார்கள்?

A) ‘ஒரு பெண் நான்கு காரணங்களுக்காக மணமுடிக்கப்படுகிறாள். அவளின் செல்வத்திற்காக, அவளின் அந்தஸ்திற்காக, அவளின் அழகிற்காக, அவளின் மார்க்கத்திற்காக. நீ மார்க்கப் பற்றுள்ளவளைத் தேர்ந்தெடுத்து அவளை மணமுடித்துக் கொள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)

Q21) குழந்தைகளின் எத்தனை வயதில் அவர்களை தொழுகைக்கு ஏவுமாறு நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள்?

A) ‘உங்களின் குழந்தைகளுக்கு எழு வயது ஆகும் போது தொழும்படி கட்டளையிடுங்கள்: அவர்கள் பத்து வயது ஆகும் போது (தொழ மறுத்தால்) அவர்களை அடியுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத்)

Q22) “நோன்பாளிக்கு இரு சந்தோஷங்கள் உள்ளன” என்று நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் அந்த இரு சந்தோஷங்கள் யாவை?

A) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பாளிக்கு இரு சந்தோஷங்கள் உள்ளன. ஓன்று நோன்பு திறக்கும் போது. மற்றது தனது நாயனை (மறுமையில்) சந்திக்கும் போது ஏற்படுகின்ற சந்தோஷமாகும். (ஆதாரம் : திமிதி)

Q23) ஹிஜ்ரி எத்தனையாவது ஆண்டில் ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டது?

A) ஹிஜ்ரி இரண்டாவது ஆண்டில் நோன்பு கடமையாக்கப்பட்டது.

Q24) நெருப்பு விறகை அழித்து விடுவதைப் போல் எந்த செயல் நன்மையை அழித்து விடுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினாகள்?

A) நெருப்பு விறகை அழித்து விடுவதைப் போல் பொறாமை நன்மையை அழித்து விடுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: அபூதாவுத்)

Q25) மறுமை நாளில் முஃமினின் தராசில் எவற்றை விட வேறெதுவும் கணமானதாக இருக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

A) ‘மறுமையில் ஒரு அடியானின் தராசில் நற்குணங்களைத் தவிர வேறெதுவும் கணமானதாக இருக்காது. அசிங்கமான கெட்ட வார்த்தை பேசுபவனை அல்லாஹ் வெறுக்கிறான்’ (அறிவிப்பவர் : அபுதர்தா (ரலி), ஆதாரம் : திமிதி மற்றும் அஹ்மத்)

Q26) பெருமை என்றால் என்ன என்பதற்கு நபி (ஸல்) அவர்கள் அளித்த விளக்கம் என்ன?

A) ‘எவனுடைய உள்ளத்தில் கடுகளவு பெருமை இருக்கிறதோ அவன் சொர்க்கம் செல்ல முடியாது’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். அப்போது ஒரு மனிதர் ‘என்னுடைய உடையும், என் காலனிகளும் அழகாக இருக்க வேண்டுமென்று நான் விரும்புவது பெருமையா?’ என்று கேட்டார். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘இறைவன் அழகானவன், அவன் அழகை விரும்புகிறான். பெருமை என்பது சத்தியத்தை மறைப்பதும், மக்களை இழிவாகக் கருதுவதுமாகும்’ என விளக்கினார்கள். (அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம்: முஸ்லிம் மற்றும் திர்மிதி)

Q27) திருடர்களில் மிகவும் மோசமான திருடன் என்று யாரைக் குறித்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?

A) ‘திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்? என்று நபித் தோழர்கள் கேட்டனர். ‘தனது ருகூவையும், ஸுஜுதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்’ என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தாகள். (அறிவிப்பவர் : அபூகதாதா ரலி, நூற்கள் அஹ்மத், ஹாகிம், தப்ரானி)

தொழுகை

Q1) முஸ்லிம்கள் அவசியம் தொழுகையை நிறைவேற்ற வேண்டுமா?

A) ஆம். இது இறைவனின் கட்டளையாகும். அல்லாஹ் கூறுகிறான் : ”நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகையானது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது” (அல்-குர்ஆன் 4:103).

நபி (ஸல்) கூறினார்கள் : முஸ்லிமுக்கும் காஃபிருக்கும் இடையே உள்ள உடன்படிக்கையே தொழுகை தான். அதனை எவன் விட்டு விடுகின்றானோ அவன் காஃபிராகி விட்டான். (ஆதாரம்: அஹ்மத் , திர்மிதி)

Q2) தொழாதவர்களுக்கு இறைவன் சித்தப்படுத்தி வைத்திருக்கும் நரகத்தின் பெயர் என்ன?

A) ஸகர் என்ற நரகம். அதாரம் : அல்-குர்ஆன் (74:41,42,43)

Q3) முஸ்லிம்கள் நாளொன்றுக்கு எத்தனை முறை தொழுகையை நிறைவேற்ற வேண்டும்?

A) முஸ்லிம்களுக்கு நாளொன்றுக்கு ஐந்து நேரத் தொழுகைகள் கடமையாக்கப்பட்டுள்ளது

Q4) ஐந்து நேரத் தொழுகைகளின் பெயர்களைக் கூறுக!

A) fபஜ்ர், லுஹர், அஸர், மஃரிப் மற்றும் இஷா

Q5) பஜ்ர் தொழுகையின் நேரம் எது?

A) அதிகாலை உதயமானதிலிருந்து சூரியன் உதயமாகும் வரைக்குமாகும்

Q6) லுஹர் தொழுகையின் நேரம் எது?

A) சூரியன் உச்சி சாயத்துவுங்கியதிலிருந்து ஒரு பொருளின் நிழல் அதன் உயரத்தின் அளவிற்கு வரும் வரைக்குமாகும்.

Q7) அஸர் தொழுகையின் நேரம் எது?

A) ஒரு பொருளின் நிழல் அதன் உயரத்தின் அளவை அடைந்தவுடன் ஆரம்பமாகி சூரியன் மறையும் வரை நீடிக்கின்றது

Q8) மஃரிப் தொழுகையின் நேரம் எது?

A) சூரியன் மறைந்ததிலிருந்து செம்மேகம் மறையும் வரைக்குமாகும். செம்மேகம் என்பது சூரியன் மறைந்த பிறகு தோன்றுவதாகும்

Q9) இஷா தொழுகையின் நேரம் எது?

A) செம்மேகம் மறைந்ததிலிருந்து இரவின் பகுதி வரைக்குமாகும்

Q10) தொழுவதற்கு தடை செய்யப்பட்ட நேரங்கள் யாவை?

A) 1) சூரியன் அடிவானில் உதயமாவதில் இருந்து அது முழுமையாக உதயமாகும் வரை உள்ள நேரம் 2) சூரியன் நடு உச்சியில் இருக்கும் போது 3) சூரியன் அடிவானில் மறைய ஆரம்பமாவதில் இருந்து அது முழுமையாக மறையும் வரை உள்ள நேரம். (ஆதாரம் : அஹ்மத் மற்றும் முஸ்லிம்)

மேற்கண்ட மூன்று நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் ஒருவர் தன்னுடைய இறைவனுக்காக ஸஜ்தா செய்வதற்கு எந்த தடையும் இல்லை.

Q11) தொழுகைக்கு முன் உளூ செய்வது அவசியமா?

A) ஆம். இது இறைவனின் கட்டளையாகும்.

அல்லாஹ் கூறுகிறான்: முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும்போது, (முன்னதாக) உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும், கழுவிக் கொள்ளுங்கள்; உங்களுடைய தலைகளை (ஈரக்கையால்) தடவி (மஸஹு செய்து) கொள்ளுங்கள்; உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை(க் கழுவிக் கொள்ளுங்கள்) (அல்-குர்ஆன் 5:6)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களில் எவரது தொழுகையையும் நீங்கள் உளூச் செய்தால் தவிர, அசுத்தத்துடன் ஏற்றுக் கொள்ள மாட்டான்’ (ஆதாரம்: அபூதாவுத்)

Q12) உளூ எவ்வாறு செய்ய வேண்டும்?

A) உளூ செய்வதாக மனதில் எண்ணிக் கொண்டு (வாயால் மொழிவது அல்ல) நிய்யத் செய்த பிறகு ‘பிஸ்மில்லாஹ்’ கூறி உளூ செய்யத் துவங்க வேண்டும். இரு கைகளையும் மணிக்கட்டு வரை மூன்று முறை கழுவிக் கொள்ளவேண்டும். மூன்று முறை வாய் கொப்பளிக்க வேண்டும். மூக்கிற்குள் வலது கையால் தண்ணீர் செலுத்தி இடது கையால் மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு காதிலிருந்து மறு காதுவரையும், நெற்றியின் ஆரம்பப் பகுதியிலிருந்து கீழ் தாடை
வரையும் முகத்தை மூன்று முறை கழுவவேண்டும். இரண்டு கைகளையும் விரல் நுனிகளிலிருந்து முழங்கை உட்பட மூன்று முறை கழுவவேண்டும். முதலில் வலது கையையும் பிறகு இடது கையையும் கழுவவேண்டும். இரண்டு கைகளையும் தண்ணீரில் நனைத்து தலையின் முற்பகுதியிலிருந்து பிற்பகுதி வரை கொண்டு சென்று மீண்டும் அதனை முற்பகுதிக்கு கொண்டு வரவேண்டும். பிறகு ஆட்காட்டி விரலை காதின் உட்பகுதியையும், பெருவிரலால் காதின் வெளிப்பகுதியையும் தடவ வேண்டும். தலையில் மஸஹ் ஒரு முறை தான் செய்ய வேண்டும். இரண்டு கால்களையும் விரல் நுனிகளிலிருந்து கணுக்கால் வரையில் முதலில் வலது காலையும் பிறகு இடது காலையும் மூன்று முறை கழுவவேண்டும்.

Q13) உளூ செய்து முடித்தவுடன் ஓதும் துஆ எது?

A) “அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹ்” என்று கூறவேண்டும்.

Q14) உளுவை முறிக்கும் செயல்கள் யாவை?

A) மல ஜலம் கழித்தல், காற்று பிரிதல், இச்சை நீர் வெளிப்படல், அயர்ந்து தூங்குதல், ஒட்டக மாமிசம் உண்ணுதல் மற்றும் இன உறுப்பை இச்சையுடன் தொடுதல்.

Q15) உளூ செய்வதற்கு அல்லது கடமையான குளிப்பை நிறைவேற்ற தண்ணீர் கிடைக்கவில்லையானால் என்ன செய்ய வேண்டும்?

A) உளு செய்யவோ, குளிக்கவோ தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் அல்லது தண்ணீர் இருந்தும் அதனை பயன்படுத்த முடியாத நோய் போன்ற சூழ்நிலை ஏற்பட்டால் உளு மற்றும் குளிப்புக்கு பகரமாக தயம்மும் செய்து தொழுகையை நிறை வேற்றலாம். ஏனென்றால் எக்காரணத்தைக் கொண்டும் தொழுகையை விடுவதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை.

Q16) தயம்மும் எவ்வாறு செய்ய வேண்டும்?

A) தூய்மையான மண்ணில் இரண்டு உள்ளங்கைகளையும் ஒரு முறை அடித்து அதனை முகத்தில் தடவிவிட்டு பிறகு அதனைக் கொண்டு இரண்டு முன்னங்கையில் தடவவேண்டும். இதுவே தயம்மும் செய்யும் முறையாகும்.

Q17) பாங்கு சொல்லி முடித்ததும் ஓத வேண்டிய துஆ எது?

A) ‘அல்லாஹூம்ம ரப்பஹாதித் தஃவதித் தாம்மத்தி வஸ்ஸலாதில் காயிமத்தி ஆத்தி முஹம்மதினில் வஸீலத்த வல்ஃபளிலத்த வப்அஃத்ஹூ மகாமன் மஹ்மூதினில்லதி வத்ததஹ்’

பொருள்: பரிபூரணமான இப்பிரார்த்தனைக்கும், நிரந்தரமான தொழுகைக்கும் உரிய இரட்சகனே! முஹம்மது (ஸல்) அவர்களுக்கு சுவர்க்கத்தில் உள்ள வஸீலா எனும் உயர்வான அந்தஸ்த்தையும் சிறப்பையும் வழங்குவாயாக!

Q18) பாங்கு துஆவை ஓதுவதால் கிடைக்கும் நன்மை என்ன?

A) பாங்கு துஆவை ஓதுவதால் அவருக்கு மறுமையில் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரை கிடைக்கும். ஆதாரம் : புகாரி.

Q19) fபர்லான தொழுகைகள் எத்தனை ரக்அத்துகள்?

A) பஜ்ர்-2, லுஹர்-4, அஸர்-4, மஃரிப்-3, இஷா-4

Q20) சுன்னத்தான தொழுகைகள் எத்தனை ரக்அத்துகள்?

A) fபஜ்ர் முன் சுன்னத்து-2, லுஹர் முன் சுன்னத்து-4 (2+2), பின் சுன்னத்து-2, மஃரிப் பின் சுன்னத்து-2, இஷா பின் சுன்னத்து-2.

குறிப்பு: லுஹருடைய முன் சுன்னத்து நான்கு ரக்அத்துகளை இரண்டிரண்டு ரக்அத்துகளாக தொழ வேண்டும்.

Q21) சுன்னத்தான தொழுகைகளை நிறைவேற்றுவதால் என்ன நன்மை கிடைக்கும்?

A) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு நாளைக்கு 12 ரக்அத்துகள் நஃபிலாக (உபரியாக) யார் தொழுது வருகிறாரோ அவருக்கு சுவனத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படும்”.

Q22) நபி (ஸல்) அவர்களால் வலியுறுத்தப்பட்ட சுன்னத் தொழுகைகள் யாவை?

A) நபி (ஸல்) அவர்கள் ஊரில் இருந்தாலும் சரி அல்லது பிரயாணத்தில் இருந்தாலும் சரி, வித்ருடைய தொழுகையை, பஜ்ருடைய தொழுகை – இவ்விரண்டையும் விடாமல் தொழுது வந்திருக்கிறார்கள்.

Q23) காணிக்கை தொழுகை என்றால் என்ன?

A) முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களை, எந்தப் பள்ளிவாசலுக்குள் நுழைந்தவுடன் பள்ளி காணிக்கை தொழுகையாக இரண்டு ரக்அத் தொழச் சொல்லி ஏவியுள்ளார்கள். இமாம் அவர்கள் பிரசங்கத்தை ஆரம்பித்து விட்டாலும் அல்லது ஆரம்பிக்காவிட்டாலும் இது பொருந்தும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் பள்ளிவாசலில் நுழையும் போதெல்லாம் இரண்டு ரக்அத் தொழுவதற்கு முன் உட்காராதீர்கள்” ஆதாரம் : முஅத்தா.

Q24) தொழுகை போன்ற வணக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகள் யாவை?

A) நாம் எந்த ஒரு அமலைச் செய்வதாக இருந்தாலும் இரண்டு நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது மிக மிக அவசியம்! அவைகளாவன: -

  1. எந்த ஒரு அமலை செய்வதாக இருந்தாலும் நன்மையை எதிர்பார்த்து இஹ்லாஸோடு செய்ய வேண்டும்
  2. எந்தவொரு வணக்கமாக இருந்தாலும் நபி صلى الله عليه وسلم அவர்கள் காட்டித் தந்த வழி முறையில் அவைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

எனவே இந்த இரண்டு நிபந்தனைகளில் எதில் ஒன்றில் குறைவு ஏற்பட்டாலும் அது பரிபூரணமான அமலாக ஆகமாட்டாது என்பதை நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்

Q25) தொழுகையை எப்படி தொழ வேண்டும் என நபி (ஸல்) கட்டளையிட்டுள்ளார்கள்?

A) நபி صلى الله عليه وسلم அவர்கள் முஸ்லிம்களுக்கு ‘என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்’ என்று கட்டளையிட்டுள்ளார்கள். எனவே நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுதார்கள் என்பதைக் கண்டறிந்து அதன்படி தொழவேண்டும். (தொழுகை பற்றிய இந்த கேள்வி பதில்கள் நபி வழியின் அடிப்படையில் அமைந்ததே)

Q25) தொழுகையின் போது எதை முன்னோக்கித் தொழ வேண்டும்?

A) கஃபாவை முன்னோக்கித் தொழ வேண்டும்.

Q26) தொழுகைக்கான நிய்யத் எப்படி செய்ய வேண்டும்?

A) தொழப்போகும் நேரத்தொழுகையை மனதில் எண்ணி (வாயால் மொழிவது அல்ல) நிய்யத் செய்து கொள்ள வேண்டும்

Q27) தொழுகையைத் துவங்குவதற்கான தக்பீர் கூறும் போது எதுவரை கையை உயர்த்த வேண்டும்?

A) இருகைகளையும் இரு புஜங்களுக்கு அல்லது இரு காதுகளுக்கு நேராக உயர்த்தி (காது சோனையை தொட வேண்டியதில்லை) “அல்லாஹு அக்பர்” என்று தக்பீர் கூற வேண்டும்.

Q28) தக்பீர் கூறியவுடன் கையை எங்கே வைக்க வேண்டும்?

A) கையை உயர்த்தி தக்பீர் கூறியவுடன் வலது கை மணிக்கட்டை இடது கை மணிக்கட்டின் மீது வைத்து நெஞ்சின் மீது கட்டிக்கொள்ள வேண்டும்.

Q29) தொழுகையில் ஆரம்ப தக்பீர் கட்டியவுடன் என்ன ஓதவேண்டும்?

A) முதலில் ஆரம்ப துஆ ஓதி, பிறகு ‘அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம்’, ‘பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்’ என்று கூற வேண்டும். பிறகு சூரத்துல் பாத்திஹா ஓத வேண்டும். அதன் பிறகு குர்ஆனில் இருந்து தெரிந்த சூராவையோ அல்லது சில வசனங்களையோ ஓத வேண்டும்.

Q30) தொழுகைக்கான ஆரம்ப துஆவைக் கூறுக!

A) ‘அல்லாஹூம்ம பாஇத் பைனீ வ பைன க(த்)தாயாய கமாபாஅத்த பைனல் மஷ்ரிகி வல் மஃரிபி அல்லாஹூம்ம நக்கினீ மின் க(த்)தாயாய கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளூ மினித் தனஸி அல்லாஹூம் மஃக் ஸில்னீ மின்கதாயாய பில் மாயி வஸ் ஸல்ஜி வல் பரத்’

இதன் பொருள்: இறைவனே! எனக்கும் என்னுடைய தவறுகளுக்கும் மத்தியில் இடைவெளி ஏற்படுத்துவாயாக! கிழக்கிற்கும் மேற்கிற்கும் மத்தியில் நீ இடைவெளி ஏற்படுத்தியது போன்று! இறைவனே! என் தவறுகளை விட்டும் என்னை தூய்மைப் படுத்துவாயாக! வெள்ளை ஆடையை அழுக்கில் இருந்து தூய்மைப்படுத்துவது போன்று! இறைவனே! தண்ணீர், பனி மற்றும் பனிக்கட்டி கொண்டு என்னைக் கழுவி என் குற்றங்களை போக்குவாயாக!

விரும்பினால் மேற்கூறிய துஆவிற்கு பதிலாக பின்வரும் துஆவை ஓதலாம்: “ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக்க வதபாரக்ஸ்முக வதஆலா ஜத்துக்க வலா இலாஹ கைருக்க”.

இதன் பொருள்: ‘இறைவனே! உன்னைப் புகழ்வதுடன் துதிக்கிறேன். உனது திருப்பெயர் அருட்பேறுடையது. உனது ஆற்றல் மிகவும் உயர்ந்தது. உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாரும் இல்லை’

Q31) தொழுகையில் சூரத்துல் ஃபாத்திஹா அவசியம் ஓத வேண்டுமா?

A) ஆம். நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள்: ‘திருக்குர்ஆனின் தோற்றுவாயை (அல்ஹம்து சூராவை) ஓதாதவருக்குத் தொழுகை கூடாது.’ (ஆதாரம் : புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா, மற்றும் அஹ்மத்)

Q32) சூரத்துல் fபாத்திஹாவைக் கூறுக!

A) பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன். அர்ரஹ்மானி ர்ரஹீம். மாலிகி யவ்மித்தீன். இய்யாக்கநஃபுது வஇய்யாக்க நஸ்தயீன். இஹ்திநஸ்ஸிராத்தல் முஸ்தஃகீம். ஸிராத்தல்லதீன அன்அம்த அலைஹிம். கைரில் மஃக்ழுபி அலைஹிம் வலழ்ழாலீன்.

Q33) சூரத்துல் fபாத்திஹாவின் பொருள் என்ன?

A) 1:1 அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். 1:2 (அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன். 1:3 (அவனே நியாயத்) தீர்ப்பு நாளின் அதிபதி(யும் ஆவான்). 1:4 (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். 1:5 நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக! 1:6 (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. 1:7 (அது) உன் கோபத்துக்கு ஆளானோர் வழியுமல்ல, நெறி தவறியோர் வழியுமல்ல.

Q34) இமாமுடன் ஜமாஅத்தாக தொழுபவர்கள் சூரத்துல் பாத்திஹாவை எப்படி ஓத வேண்டும்?

A) குர்ஆன் வசனம் மற்றும் நபிமொழிகளின் அடிப்படையில் பெரும்பாலான அறிஞர்களின் கருத்துப்படி, இமாம் உரத்தக் குரலில் ஓதும் தொழுகைகளான fபஜ்ர், மஃரிப் மற்றும் இஷா தொழுகையின் முதல் இரண்டு ரக்அத் போன்றவற்றில் இமாமுக்கு பின்னால் நின்று தொழுபவர்கள், இமாம் ஓதுவதை கவனமாக கேட்க வேண்டும்.

இமாம் மெதுவாக ஓதும் தொழுகைகளான லுஹர், அஸர், மஃரிபுடைய மூன்றாவது ரக்அத் மற்றும் இஷாவுடைய கடைசி இரண்டு ரக்அத்கள் ஆகிய தொழுகைகளில் இமாமுக்குப் பின்னால் நின்று தொழுபவர்களும் சூரத்துல் ஃபாத்திஹா அவசியம் ஓதவேண்டும் என்பதாகும். அல்லாஹவே முற்றிலும் அறிந்தவன்.

Q35) ருகூவு செய்வது எப்படி?

A) குர்ஆனின் வசனங்களை ஓதி முடித்தவுடன் அல்லாஹு அக்பர் என்று கூறி ருகூவு செய்யவேண்டும். குனிந்து இரண்டு கைகளைக் கொண்டு -விரல்களை விரித்தவாறு- முட்டுக்கால்களைப் பிடிக்கவேண்டும். முதுகை வில் போன்று வளைக்காமல் தலையை முதுகின் மட்டத்திற்கு சமமாக வைக்கவேண்டும். இதுவே ருகூவுச் செய்யும் முறையாகும்.

Q36) ருகூவில் என்ன ஓத வேண்டும்?

A) ‘ஸூப்ஹான ரப்பியல் அழீம்’ (இதை மூன்று முறை அல்லது அதற்கு அதிகமாக ஓதுவது சிறந்தது).

இதன் பொருள்: ‘மகத்தான இன் இறைவன் பரிசுத்தமானவன்’

Q37) ருகூவில் இருந்து எழும் போது என்ன கூற வேண்டும்?

A) ‘ஸமிஅல்லாஹூ லிமன் ஹமிதா(ஹ்). இதன் பொருள் : ‘தன்னைப் புகழ்வதை அல்லாஹ் கேட்டுக் கொண்டான்’

Q38) இமாமைப் பின்பற்றித் தொழுபவர் எந்த துஆவை ஓத வேண்டும்?

A) இமாமைப் பின்பற்றித் தொழுபவர் ‘ஸமி அல்லாஹூ லிமன் ஹமிதா’ என்பதற்குப் பதிலாக ‘ரப்பனா வல(க்)கல் ஹம்து’என்று கூற வேண்டும்.

இதன் பொருள்: ‘எங்கள் இறைவனே! உனக்கே எல்லாப் புகழும்!’

Q39) ருகூவில் இருந்து எழுந்து நேராக நின்றதும் எந்த துஆவை ஓத வேண்டும்?

A) ‘அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹம்து மில்அஸ் ஸமாவாத்தி வமில்அல் அர்ழி வமில்அ மா ஷிஃத மின் ஷைஇன் பஃது’

இதன் பொருள்: “இறைவா! புகழ் அனைத்தும் உனக்கே! வானங்கள் நிறைய, பூமி நிறைய, இவையன்றி நீ எதையெல்லாம் நாடுகிறாயோ அவை நிறைய உனக்கே புகழ் அனைத்தும்’

ஜமாஅத் தொழுகையில் இமாமைப் பினபற்றித் தொழுபவர் இந்த துஆவை ஓதுவதற்கு இயலவில்லையெனில் ‘ரப்பனா வலகல் ஹம்து’ என்று கூறினால் போதுமானது.

Q40) ஸூஜூது செய்வது எப்படி?

A) ருகூவில் இருந்து எழுந்து நின்ற பிறகு ஓத வேண்டிய துஆக்களை ஓதிய பிறகு, “அல்லாஹு அக்பர்” என்று கூறி ஸுஜுது செய்ய வேண்டும். முகம் (மூக்கு,நெற்றி) இரண்டு உள்ளங்கைகள், இரண்டு முட்டுக்கால்கள், இரண்டு கால் விரல்களின் உட்பகுதி ஆகிய ஏழு உறுப்புக்களும் பூமியில் படும் வகையில் ஸுஜுது அமைந்திட வேண்டும். மேலும் இரு கால்களின் பாதங்களும் நட்டியவாறு இருக்கவேண்டும். உடலோடு ஓட்டவோ அல்லது முழங்கைகளை தரையில் படுமாறும் வகைக்கக் கூடாது.

Q41) ஸூஜூது செய்யும் போது எந்த துஆவை ஓத வேண்டும்?

A) ஸூப்ஹான ரப்பியல் அஃலா (இதை மூன்று முறை அல்லது அதற்கு அதிகமாக ஓதுவது சிறந்தது).

இதன் பொருள்: உயர்வான என் இறைவன் தூயவன்’

அத்துடன் பின்வரும் துஆவையும் ஓதுவது விரும்பத்தக்கது:- ஸூப்ஹான கல்லாஹூம்ம ரப்பனா வபிஹம்திக்க அல்லாஹூம்மஃபிர்லீ

இதன் பொருள்: ‘யா அல்லாஹ்! என் அதிபதியே! உன்னைப் புகழ்வதுடன் உன்னைத் தூயவன் என்று துதிக்கிறேன். யா அல்லாஹ் என்னை மன்னிப்பாயாக!’

Q42) ஸூஜூதிலிருந்து எழுந்ததும் எப்படி உட்கார வேண்டும்?

A) அல்லாஹு அக்பர் என்று கூறியவாறு ஸுஜுதிலிருந்து தலையை உயர்த்த வேண்டும். ஸஜ்தாவிலிருந்து எழுந்து இடது கால்களின் மீது உட்கார்ந்து, வலது காலை நட்டு வைத்திருக்க வேண்டும். வலது தொடையின் மீது வலது கையையும் இடது தொடையின் மீது இடது கையையும் முட்டுக்கருகில் கைவிரல்களை விரிக்காமல் இணைத்தவாறு வைக்கவேண்டும்.

Q43) இரண்டு சஜ்தாக்களுக்கும் இடையிலான அமர்வில் எந்த துஆவை ஓத வேண்டும்?

A) ‘ரப்பிஃக்பிர்லீ வர்ஹம்னீ வஹ்தினீ வர்ஸூக்னீ வஜ்புர்னீ வஆஃபினீ’.

இதன் பொருள்: ‘என் இரட்சகனே! என்னை மன்னித்தருள்வாயாக! எனக்கு அருள் புரிவாயாக! எனக்கு நேர் வழிகாட்டுவாயாக! எனக்கு ரிஸ்க் வழங்குவாயாக! எனக்கு ஆறுதல் அளிப்பாயாக! எனக்கு நிவாரணம் அளிப்பாயாக!’

Q44) அமர்வில் ஓத வேண்டிய அத்தஹிய்யாத்து துஆவைக் கூறுக!

A) ‘அத்தஹிய்யாத்து லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யிபாத்து அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வரஹ்மதுல்லாஹி வபகரகாதுஹூ அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அல்லாஇலாஹ இல்லல்லாஹூ வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ’

இதன் பொருள்: காணிக்கைகள் வணக்கங்கள் மற்றும் நற்பணிகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். நபியே! அமைதியும் அல்லாஹ்வின் கருணையும் அருட்பேருகளும் உங்கள் மீது உண்டாகட்டும். எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் அமைதி உண்டாகட்டும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் முஹம்மது நபி (ஸல்) அல்லாஹ்வின் அடியாரும் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் சாட்சியம் கூறுகிறேன்’

Q45) அத்தஹிய்யாத்துக்குப் பிறகு ஓத வேண்டிய ஸலவாத்து கூறுக!

A) ‘அல்லாஹூம்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத். அல்லாஹூம்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்’

இதன் பொருள்: ‘யாஅல்லாஹ்! முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் வழிவந்தவர்கள் மீதும் கருணை பொழிவாயாக! இப்ராஹீம் (அலை) மீதும் அவர்களின் வழிவந்தவர்கள் மீதும் நீ கருணை பொழிந்தது போன்று. நிச்சயமாக நீ புகழுக்கும் மகத்துவத்திற்கும் உரியவன். அதுபோல முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் வழிவந்தவர்கள் மீதும் அருட்பேருகள் பொழிவாயாக! இப்ராஹீம் (அலை) மீதும் அவர்களின் வழிவந்தவர்கள் மீதும் நீ அருட்பேருகள் பொழிந்தது போன்று. நிச்சயமாக நீ புகழுக்கும் மகத்துவத்திற்கும் உரியவன்’

Q46) ஸலவாத்திற்குப் பிறகு ஓதவேண்டிய துஆவைக் கூறுக!

A) ‘அல்லாஹூம்ம இன்னீ அஊதுபிக மின் அதாபி ஜஹன்னம வமின் அதாபில் கப்ரி வமின் fபித்னத்தில் மஹ்யா வல்மமாத்தி வமின் fபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால்’

இதன் பொருள்: ‘யா அல்லாஹ் நரகத்தின் வேதனையில் இருந்தும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் வாழ்க்கை மற்றும் மரணத்தின் குழப்பத்தில் இருந்தும் தஜ்ஜாலின் குழப்பத்தில் இருந்தும் நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்’

Q47) தொழுது முடித்ததும் ஓத வேண்டிய திக்ருகளில் சிலவற்றைக் கூறுக!

A) தொழுது முடித்ததும் ஓத வேண்டிய திக்ருகள் பல உள்ளன. அவற்றில் சில பின்வருமாறு.

‘அஸ்தஃக்பிருல்லாஹ், அஸ்தஃக்பிருல்லாஹ், அஸ்தஃக்பிருல்லாஹ். அல்லாஹும்ம அன்தஸ்ஸலாம் வமின்கஸ் ஸலாம் தபாரக்த யாதல் ஜலாலி வல் இக்ராம்”

பொருள்: அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுகிறேன். இறைவா நீ எல்லாக் குறைகளை விட்டும் பாதுகாப்பு பெற்றவன். உன்னிடமிருந்தே பாதுகாப்பு ஏற்படுகின்றது. மதிப்பும் மகத்துவமும் மிக்கவனே! நீ உயர்ந்து விட்டாய்!

“லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு லஹுல்முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம லாமானிஅ லிமா அஃதைத்த வலா முஃதிய லிமா மனஃத வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின் கல் ஜத்”

பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. ஆட்சியும் அவனுக்கே! புகழும் அவனுக்கே! அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். இறைவா நீ கொடுப்பதைத் தடுப்பவர் எவருமில்லை. நீ தடுப்தைக் கொடுப்பவர் எவருமில்லை. மதிப்புடைய எவரும் எந்தப் பயனும் அளிக்கமாட்டார். மதிப்பு உன்னிடமே உள்ளது

“லாஹவ்ல லாகுவ்வத்த இல்லா பில்லாஹ். லாயிலாஹ இல்லல்லாஹு வலா நஃபுது இல்லா இய்யாஹு லஹுன் நிஃமது வலஹுல் ஃபழ்லு வலஹுல் ஸனாவுல் ஹஸனு லாயிலாஹ இல்லல்லாஹு முக்லிஸீன லஹுத்தீன வலவ்கரீஹல் காஃபிரூன்”

பொருள்: அல்லாஹ்வின் துணையின்றி நல்லவற்றைச் செய்யவோ தீயவற்றிலிருந்து விலகவோ இயலாது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவனைத் தவிர வேறு எவரையும் நாங்கள் வணங்க மாட்டோம். அருட்கொடை அவனுக்குரியது. பேருபகாரமும் அவனுக்குரியது. அழகிய புகழும் அவனுக்குரியது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை. நிராகரிப்போர் விரும்பாவிட்டாலும் வணக்கங்களை அவனுக்கு மட்டுமே கலப்பற்ற முறையில் செய்வோம்

“லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்கலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீது வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்”

பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாதொரு இணையுமில்லை. ஆட்சி அதிகாரம் அவனுக்குரியதே! அவனுக்கே எல்லாப் புகழும். அவனே வாழ்வும் மரணமும் அளிக்கின்றான். அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்

“சுப்ஹானல்லாஹ்” – 33 தடவைகள், “அல்ஹம்துலில்லாஹ்” – 33 தடவைகள், “அல்லாஹு அக்பர்” – 33 தடவைகள், பிறகு, “லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்கலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்” – ஒரு தடவை ஓத வேண்டும்.

ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஆயத்துல் குர்ஸி, குல் ஹுவல்லாஹு அஹத், குல் அவூது பிரப்பில் ஃபலக், குல் அவூது பிரப்பின்னாஸ் ஓத வேண்டும். இந்த மூன்று சூராக்களையும் மஃரிபுக்குப் பிறகும், பஜ்ருக்குப் பிறகும் மூன்று தடவை ஓதுவது விரும்பத்தக்கதாகும்.

Q48) தொழுகையை முறிக்கும் செயல்களில் சிலவற்றைக் கூறுக!

A) தொழுகையை முறிக்கும் செயல்களின் எண்ணிக்கையில் அறிஞர்களுக்கிடையில் வேறுபாடுபாடுகள் காணப்படுகின்றன. இருப்பினும் பின்வரும் செயல்கள் தொழுகையை முறிக்கும் என்பது அறிஞர்கள் பலரின் கருத்தாகும்.

1) உளுவை முறிக்கும் அனைத்துச் செயல்களும் தொழுகையையும் முறிக்கும். (உதாரணங்கள் : காற்றுப் பிரிதல்,ஒட்டக இறைச்சி உண்ணுதல், மல ஜலம் வெளியாகுதல் etc.), 2) மர்மஸ் தானங்களை வேண்டுமென்றே திறந்து வைத்தல். 3) கிப்லாவின் திசையல்லாமல் வேறு திசையை நோக்கியிருத்தல், 4) உடலிலோ, ஆடையிலோ அல்லது தொழுமிடத்திலோ அசுத்தம் இருத்தல், 5) தேவையில்லாத அதிகப்படியான உடலசைவுகள், 6) ருகூவு, சஜ்தா போன்ற தொழுகையின் முக்கிய கடமைகளை விட்டுவிடுதல், 7) வேண்டுமென்றே அதிகப்படியான தொழுகையின் கடமையான செயல்களைச் செய்தல், 8.) வேண்டுமென்றே தொழுகையின் கடமையான செயல்களை முன் பின் முரணாக மாற்றிச் செய்தல், 9) தொழுகையை நிறைவு செய்வதற்கு முன்னரே வேண்டுமென்றே சலாம் கொடுத்தல், 10) வேண்டுமென்றே குர்ஆனை தவறாக ஓதுதல், 11) வேண்டுமென்றே தஸஹ்ஹூத் போன்ற தொழுகையின் முக்கிய கடமையினை விட்டுவிடுதல். மறதியில் விட்டிருப்பின் சஜ்தா ஸஹவு செய்ய வேண்டும், 12) தொழுகையை விடுவதாக தீர்மானித்தல், 13) வேகமா சிரிப்பது (வெடிசிரிப்பு), 14) வேண்டுமென்றே பேசுவது, 15) சாப்பிடுவது மற்றும் குடிப்பது. அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.

Q49) தொழுகையின் போது தவிர்க்கப்பட வேண்டிய பொதுவான தவறுகள் சிலவற்றைக் கூறுக!

A) தொழுகைக்கு வருமுன் துர் வாசனையுடைய பூண்டு, வெங்காயம் மற்றும் புகை பிடித்து முடித்து விடுவது, தொழுகையை விட்டு விடுவோம் என்ற பயத்தில் தொழுகைக்காக விரைந்தோடுவது, ருகூவுக்கு செல்லும் போது தக்பீர் அல்-இஹ்ராம் (ஆரம்ப தக்பீர்) சொல்வது, தொழுகைக்கான நிய்யத்தை வாயால் சொல்வது, சுத்ரா (தடுப்பு) நோக்கி தொழுவதை தவிர்த்தல், ஜமாஅத் தொழுகையில் முதல் வரிசையில் நிற்பதை வெறுப்பது, தொழுகையில் மேல் நோக்கியோ, இமாமையோ, வலது, இடது புறமோ பார்ப்பது, கூட்டுத் தொழுகையில் வருசைகளில் இடைவெளி விடுவது, சூரதுல் பாதிஹாவை இடைவெளி விடாமல் தொடர்ந்து ஓதுவது, தொழுகையின் போது ஆடிக் கொண்டிருத்தல், கைக்கடிகாரம் பார்த்தல், விரல்களை முறித்தல், பாதத்தையோ மற்ற உறுப்புகளையோ தொடர்ந்து அசைத்துக் கொண்டிருத்தல், இமாமுக்கு பின்னால் நின்று குர்ஆனை பார்த்துக் கொண்டு இமாம் ஒதுவதை சரிபார்ப்பது, கூட்டுத் தொழுகையில் இமாமை முந்துவது அல்லது இமாமோடு செயல்படுவது, ருகூவின் போது தலையை அதிகமாக குணிதல் அல்லது தலையை மேலாக்குதல் அல்லது முதுகை வளைவாக வைத்துக் கொள்ளுதல், ருகூவு, ஸஜ்தாவின் போது கைகளை உடலோடு ஒட்டிவைத்தல் மற்றும் ஸஜ்தாவின் போது அடிவயிற்றை தொடையோடு ஒட்டிவைத்தல், இறுக்கமான அல்லது மெல்லிய ஆடை அணிந்து பின்புறம் வெளியே தெரியுமாறு தொழுவது, இமாம் சூரத்துல் ஃபாத்திஹாவை முடிக்கும் போது “ஆமீன்” வேகமாக சொல்வதை தவிர்ப்பது, ஸஜ்தாவின் போது மூக்கு தரையில் படாமல் நெற்றியை மட்டும் தரையில் வைப்பது, ருகூவு, ஸஜ்தாவை அமைதியாக நிறைவேற்றாமல் வேகமாக நிறைவேற்றுவது, ஸலாம் சொல்லி தொழுகையை முடிக்கும் போது இரண்டு உள்ளங்கையை அசைத்தல், இடது கையால் தஸ்பீஹ் எண்ணுவது, தொழுகை முடிந்தவுடன் மற்றவர்களுடன் ” தகப்பலல்லாஹ் “என்று சொல்லி கை குழுக்குவது, தொழுகை முடிந்த உடனே திக்ருகள் செய்யாமல் கையை உயர்த்தி துஆ கேட்பது, தொழுகை முடிந்தவுடன் திக்ரு செய்யாமல் எழுந்து செல்வது, தொழுது கொண்டிருப்பவரின் முன்னால் செல்வது, நோய் வாய்பட்டிருக்கும் போது தொழுகையை அலட்சியப்படுத்துவது, கப்ருகளில் தொழுவது, ஆண்கள் தொழுவதுபோல் அல்லாமல் பெண்கள் வேறு முறையில் தொழுவது மற்றும் கணுக்காலுக்கு கீழே ஆடை அனிந்து தொழுதல்.

Q50) தொழுகையில் ஓதக் கூடிய சிறிய அத்தியாயங்கள் சிலவற்றை (குறைந்தது 10) பொருளுடன் கூறுக!

A) குறிப்பு: தொழுகையில் ஓதுவதற்கு ஏதுவாக அரபி தெரியாதவர்களுக்காக குர்ஆனின் பத்து சிறிய அத்தியாயங்களை தமிழில் தந்திருக்கிறோம். தயவு செய்து சரியான அரபி உச்சரிப்பை அரபியில் ஓத தெரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்ளவும்.

அத்தியாயம் – 103 ஸூரத்துல் அஸ்ரி (காலம்)

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். வல்அஸ்ர். இன்னல் இன்ஸான லஃபீஹூஸ்ர். இல்லல்லதீன ஆமனு வஆமிலூஸ் ஸாலிஹாத்தி வதவாஸவ் பில்ஹக்கி வதவாஸவ் பிஸ்ஸப்ர்

இதன் பொருள்: அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கின்றேன். காலத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். ஆயினும் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை)

அத்தியாயம் – 105 ஸூரத்துல் ஃபீல் (யானை)

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். அலம்தர கைஃப ஃபஅல ரப்புக பிஅஸ்ஹாபில் ஃபீல். அலம் யஜ்அல் கய்தஹூம் பீ தஃழ்லீலின். வஅர்ஸல அலைஹிம் தைய்ரன் அபாபீல். தர்மீஹிம் பிஹிஜாரதிம் மின்ஸிஜ்ஜீல். fபஜஅலஹூம் கஅஸ்ஃபிம் மஃகூல்.

இதன் பொருள்: அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்) 105:1 (நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? 105:2 அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா? 105:3 மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான். 105:4 சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. 105:5 அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.

அத்தியாயம் – 106 ஸூரத்து குறைஷின் (குறைஷிகள்)

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். லிஈலாஃபி குரைஷின். ஈலாஃபிஹிம் ரிஹ்லதஷ்ஷிதாயி வஸ்ஸய்ஃப். fபல்யஃபுதூ ரப்பஹாதல் பைத். அல்லதீ அத்அமஹூம் மின்ஜூஇவ் வஆமனஹூம் மின்ஹவ்ஃப்

இதன் பொருள்: அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்) 106:1 குறைஷிகளுக்கு விருப்பம் உண்டாக்கி, 106:2 மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக- 106:3 இவ்வீட்டின் (கஃபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக. 106:4 அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்.

அத்தியாயம் – 108 ஸூரத்துல் கவ்ஸர் (மிகுந்த நன்மைகள்)

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். இன்னா அஃதய்னா கல்கவ்தர். fபஸல்லி லிரப்பிக வன்கர். இன்னஷானிஅக ஹூவல் அப்தர்.

இதன் பொருள்: அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்) 108:1 (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம். 108:2 எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக. 108:3 நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன்.

அத்தியாயம் – 109 ஸூரத்துல் காஃபிரூன் (காஃபிர்கள்)

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். குல்யா அய்யுஹல் காஃபிருன. லா அஃபுது மா தஃபுதூன். வலா அன்தும் ஆபிதூன மாஅஃபுது. வலாஅனா ஆபிதும் மாஅபத்தும். வலா அன்தும் ஆபிதூன மாஅஃபுது. லகும் தீனுகும் வலியதீன்.

இதன் பொருள்: அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்) 109:1 (நபியே!) நீர் சொல்வீராக: காஃபிர்களே! 109:2 நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன். 109:3 இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர். 109:4 அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன். 109:5 மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர். 109:6 உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.’

அத்தியாயம் – 110 ஸூரத்துந் நஸ்ர் (உதவி)

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். இதாஜாஅ நஸ்ருல்லாஹி வல்பத்ஹூ. வரஅய்தன்னாஸ யத்ஹூலூன fபீதினில்லாஹி அஃப்வாஜா. fபஸப்பிஹ் பிஹம்தி ரப்பிக வஸ்தஃபிர்ஹூ. இன்னஹூ கான தவ்வாபா

இதன் பொருள்: அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்) 110:1 அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும், 110:2 மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும், 110:3 உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக; மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக – நிச்சயமாக அவன் ‘தவ்பாவை’ (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான்.

அத்தியாயம் – 111 ஸூரத்துல் லஹப் (ஜுவாலை)

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். தப்பத்யதா அபீலஹபின் வதப். மா அக்gனா அன்ஹூ மாலுஹூவமா கஸப். ஸயஸ்லா னாரன் தாதலகபின். வம்ரஅதுஹூ ஹம்மாலதல் ஹதப். fபீ ஜிதிஹா ஹப்லுன் மிம்மஸத்

இதன் பொருள்: அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்) 111:1 அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக; அவனும் நாசமாகட்டும். 111:2 அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை. 111:3 விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான். 111:4 விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ, 111:5 அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).

அத்தியாயம் – 112 ஸூரத்துல் இஃக்லாஸ் (ஏகத்துவம்)

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். குல்ஹூவல்லாஹூ அஹத். அல்லாஹூஸ் ஸமத். லம்யலித் வலம் யூலத். வலம் யகுல்லஹூ குஃபுவன் அஹத்.

இதன் பொருள்: அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்) 112:1 (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. 112:2 அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். 112:3 அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. 112:4 அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

அத்தியாயம் – 113 ஸூரத்துல் fபலக் (அதிகாலை)

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். குல்அவூது பிரப்பில் fபலக். மின் ஷர்ரிமா ஹலக். வமின் ஷர்ரி ஹாஸிகின் இதா வகப். வமின் ஷர்ரின்னஃப் fபாதாத்தி பில்உகத். வமின்ஷர்ரி ஹாஸிதின் இதா ஹஸத்.

இதன் பொருள்: அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்) 113:1 (நபியே!) நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன். 113:2 அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்- 113:3 இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்- 113:4 இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும், 113:5 பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்).

அத்தியாயம் : 114 – ஸூரத்துந் நாஸ் (மனிதர்கள்)

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். குல்அவூது பிரப்பின்னாஸ். மலிகின்னாஸ். இலாஹின்னாஸ். மின்ஷர்ரில் வஸ்வாஸில் ஹன்னாஸ். அல்லதீ யூவஸ்விஸூ fபீசுதூரின்னாஸ். மினல் ஜின்னதி வன்னாஸ்.

இதன் பொருள்: அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்) 114:1 (நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன். 114:2 (அவனே) மனிதர்களின் அரசன்; 114:3 (அவனே) மனிதர்களின் நாயன். 114:4 பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கை விட்டும் (இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்). 114:5 அவன் மனிதர்களின்

இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான். 114:6 (இத்தகையோர்) ஜின்களிலும், மனிதர்களிலும் இருக்கின்றனர்.

முஹம்மது நபி (ஸல்) வரலாறு பகுதி-1

Q1) முஹம்மது நபி (ஸல்) எத்தகைய மக்கள் வாழ்ந்த காலத்தில் பிறந்தார்கள்?

கற்களையும், சிலைகளையும், வாழ்ந்து மறைந்த நல்லடியார்களின் உருவங்களையும் கடவுள் எனவும், கடவுளுக்கு நெருக்கமானவர்கள் எனவும் வழிபட்ட அறியாமைக் கால மக்கள் வாழ்ந்த சமூகத்திலே பிறந்தார்கள்.

Q2) அறியாமைக் கால மக்கள் வணங்கிக் கொண்டிருந்த கடவுளர்களின் பெயர்கள் சிலவற்றைக் கூறுக:

லாத், மனாத்,உஸ்ஸா,ஹுப்ல் – இவைகள் முஹம்மது நபி (ஸல்) பிறந்த கால கட்டத்தில் வாழ்ந்த மக்களின் கடவுள்களாகும்.

Q3) முஹம்மது நபி (ஸல்) பிறந்த கால கட்டத்தில் வாழ்ந்த மக்களின் சமூகம் எப்படியிருந்தது?

அநியாயம் பரவிக் கிடந்தது. பலவீனர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. பெண் குழந்தைகள் உயிருடன் புதைக்கப்பட்டனர். புனிதமானவைகள் அலட்சியப்படுத்தப்பட்டன. பலமுள்ளவர்கள் பலவீனர்களின் உரிமைகளைச் சுரண்டித் தின்றனர். கணக்கின்றி பல மனைவியரை வைத்திருந்தனர். விபச்சாரம் பரவிக்கிடந்தது. அற்பக் காரணங்களுக்காக பல குலங்களிடையே போர்கள் நடந்துகொண்டிருந்தன.

Q4) முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எந்த நபியின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்?

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மகனார் நபி இஸ்மாயில் (அலை) அவர்களின் வம்சா வழியைச் சேர்ந்தவராவார்கள்.

Q5) நபி (ஸல்) அவர்கள் எந்த குலத்தைச் சேர்ந்தவர்கள்?

அரேயிர்களின் உயர் குலமான குரைஷிக் குலத்தைச் சேர்ந்தவர்கள்.

Q6) முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பாட்டனார் பெயர் என்ன?

அப்துல் முத்தலிஃப்

Q7) முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தந்தையார் பெயர் என்ன?

அப்துல்லாஹ்

Q8) முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தாயார் பெயர் என்ன?

ஆமினா அம்மையார்

Q9) முஹம்மது (ஸல்) அவர்களின் தாயார் எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவராவார்?

ஆமினா அம்மையார் பனூஸஹ்ரா கோத்திரத்தைச் சேர்ந்த வஹ்ப் என்பவரின் மகளாவார்.

Q10) முஹம்மது (ஸல்) அவர்களின் தந்தை எங்கு, எப்போது மரணமடைந்தார்கள்?

முஹம்மது (ஸல்) அவர்கள் தன் தம் தாயின் வயிற்றில் சில மாத கருவாக இருந்தபோது, சிரியா நாட்டிற்கு வியாபாரத்திற்காக செல்லும் வழியில் மதினாவில் நோய்வாய்பட்டு இறந்தார்.

Q11) முஹம்மது (ஸல்) அவர்கள் எந்த வருடம் பிறந்தார்கள்?

கி.பி. 570 ஆம் ஆண்டு, ரபியுல் அவ்வல் மாதம் பிறந்தார்கள். பிறந்த தேதியில் கருத்து வேறுபாடு உண்டு. ஆயினும் பல அறிஞர்களின் கருத்துப்படி ரபியுல் அவ்வல் மாதம் 12-ல் பிறந்தார்கள் என்பதாகும்.

Q12) முஹம்மது (ஸல்) அவர்கள் பிறந்த வருடம் வரலாற்று ஆசிரியர்களிடையே எப்படி அழைக்கப்படுகிறது?

யானை ஆண்டு என அழைக்கப்படுகிறது.

Q13) முஹம்மது (ஸல்) அவர்கள் பிறந்த வருடம் யானை ஆண்டு என்று ஏன் அழைக்கப்படுகிறது?

நபிகள் நாயகம் பிறப்பதற்கு ஐம்பது நாட்களுக்கு முன்பு கஃபதுல்லாஹ்வை இடிப்பதற்காக படைதிரட்டி வந்த ஆப்ரஹாம் என்ற கிறிஸ்தவ ஆட்சியாளரின் யானைப் படையினர் மீது அல்லாஹ் ‘அபாபீல்’ என்னும் பறவைகளை அனுப்பி அவற்றை அழித்தான். இதன் காரணமாக அந்த ஆண்டை யானை ஆண்டு என்கின்றனர்.

Q14) முஹம்மது (ஸல்) அவர்கள் குழந்தையாக இருந்த போது அவர்களுக்குப் பாலூட்டிய செவிலித் தாய் யார்?

பனூஸஃத் கோத்திரத்தைச் சேர்ந்த கிராமவாசியான ஹலீமத்துஸ் ஸஃதிய்யா என்ற அம்மையார்.

Q15) முஹம்மது (ஸல்) அவர்களின் தாயார் எப்போது மரணமடைந்தார்கள்?

நபி (ஸல்) அவர்கள் ஆறு வயதாக இருக்கும் போது மதினாவிலிருந்து திரும்பும் வழியில் அப்வாஃ என்னுமிடத்தில் ஆமினா அம்மையார் மரணமடைந்தார்கள்.

Q16) முஹம்மது (ஸல்) அவர்களின் தாயார் மரணத்திற்குப் பின்னர் யார் பொறுப்பில் வளர்ந்தார்கள்?

தமது பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களின் பொறுப்பில் வளர்ந்தார்கள்.

Q17) முஹம்மது (ஸல்) அவர்களின் பாட்டனார் அப்துல் முத்தலிப் எப்போது மரணமடைந்தார்கள்?

நபி (ஸல்) அவர்களுக்கு எட்டு வயதாக இருக்கும் போது.

Q18) அப்துல் முத்தலிப் அவர்களின் மரணத்திற்குப்பிறகு முஹம்மது (ஸல்) அவர்கள் யார் பொறுப்பில் வளர்ந்தார்கள்?

நபி (ஸல்) அவர்களின் பெரிய தகப்பனார் அபுதாலிப் அவர்களின் பொறுப்பில் வளர்ந்தார்கள்.

Q19) முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அச்சமூக மக்களால் வழங்கப்பட்ட பெயர்கள் யாவை? ஏன்?

உண்மையாளர், மற்றும் நம்பிக்கையாளர் (அல்-அமீன்) என்று அழைக்கப்பட்டார்கள்.

காரணம் இவ்விரண்டு குணங்களின் அடிப்ப டையிலேயே வளர்ந்து வந்தார்கள். நம்பிக்கைக்குரியவர் வந்து விட்டாரெனக் கூறப்பட்டால் நிச்சயமாக அது நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் தான் என்று புரிந்துகொள்ளப்படும்.

Q20) முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது ஆரம்பக் காலத்தில் செய்த தொழில் என்ன?

குரைஷிகளில் ஒருவரிடம் கூலிக்கு ஆடுகள் மேய்க்கும் வேலையைச் செய்தார்கள்.

Q21) முஹம்மது நபி (ஸல்) அவர்கள் எந்த நாட்டுக்கு வியாபாரத்திற்காகச் சென்றார்கள்?

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சிரியா நாட்டுக்கு வியாபாரத்திற்காகச் சென்றார்கள்.

Q22) முஹம்மது நபி (ஸல்) அவர்களின் முதல் திருமணம் எப்போது யாருடன் நடந்தது?

நபி (ஸல்) அவர்களுக்கு 25 வயதாக இருக்கும் போது விதவையான 40 வயதான கதீஜா (ரலி)அம்மையாருடன் நடந்தது.

Q23) முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு கதீஜா (ரலி) அவர்கள் மூலமாகப் பிறந்த குழந்தைகள் யாவர்?

ஸைனப் (ரலி), ருகைய்யா (ரலி), உம்முகுல்ஸும் (ரலி), ஃபாத்திமா (ரலி) ஆகிய பெண் மக்க ளையும் காசிம் (ரலி), அப்துல்லாஹ் (ரலி) என்ற இரு ஆண் மக்களையும் பெற்றெடுத்;தார்கள்.

காசிம் (ரலி), அப்துல்லாஹ் (ரலி) ஆகிய இருவரும் சிறுவயதிலேயே இறந்துவிட்டார்கள்.

Q24) முஹம்மது நபி (ஸல்) அவர்களின் எத்தனையாவது வயதில் வஹி இறங்க ஆரம்பித்தது?

40 ஆம் வயதில்.

Q25) முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு எந்த இடத்தில் முதன்முதலாக வஹீ இறங்கியது?

மக்காவிலுள்ள ஜபல் அல்-நூர் என்று சொல்லப்படக்கூடிய மலையிலுள்ள ஹிரா என்னும் குகையில்

Q26) முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு இறைவனிடமிருந்து வஹியை கொண்டு வந்த வானவர் பெயர் என்ன?

ஜிப்ரயீல் (அலை)

Q27) முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முதன் முதலாக இறங்கிய வஹி எது?

அல்-குர்ஆனின் 96 வது அத்தியாயத்தின் முதல் ஐந்து வசனங்கள். (96:1-5)

Q28) முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முதன் முதலாக வஹி இறங்கிய நிகழ்ச்சியைக் கூறுக:

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் இருபத்தொன்றாம் இரவில் ஹிரா குகையில் தங்கியிருந்த போது ஜீப்ரீல் (அலை), நபி (ஸல்) அவர்களிடம் வந்து நீர் ஓதுவீராக! எனக் கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எனக்கு ஓதத்தெரியாது எனக் கூறினார்கள். ஜிப்ரீல்(அலை) அவர்கள் இரண்டாம் முறையும், மூன்றாம் முறையும் ஓதுவீராக எனக் கூறினார்கள். மூன்றாம் முறை ”படைத்த உம் இறைவனின் திருப் பெயர் கொண்டு ஓதுவீராக! கருவறைச் சுவற்றில் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு நிலையிலிருந்து அவன் மனிதனைப் படைத்தான். ஓதுவீராக! உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில் அவனே எழுது கோலின் மூலம் கற்றுக் கொடுத்தான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றை யெல்லாம் கற்றுக் கொடுத்தான்”(96:1-5) எனக் கூறினார்கள். பின்னர் அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டார்கள்.

Q29) ஜிப்ரயீல் (அலை) அவர்களைக் கண்டு பயந்திருந்த நபி (ஸல்) அவர்களை யாரிடம் கதீஜா (ரலி) அவர்கள் அழைத்துச் சென்றார்கள்?

வரகா இப்னு நவ்பல் என்ற கிறிஸ்தவ அறிஞரிடம்.

Q30) முதன் முதலில் வணக்கத்திற்குரியவன் ஏக இறைவனான அல்லாஹ் ஒருவனே என்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் எனவும் ஏற்றுக்கொண்டவர் யார்?

நபி (ஸல்) அவர்களின் மனைவி கதீஜா (ரலி) அவர்கள்.

Q31) நபி (ஸல்) அவர்கள் எத்தனை ஆண்டுகள் இரகசியமாக பிரச்சாரம் செய்தார்கள்?

மூன்றாண்டுகள். இந்த மூன்றாண்டுகளில் அநேகர் இஸ்லாத்திற்கு வந்தனர். ஆயினும் குரைஷிகளின் துன்புறுத்தலுக்குப் பயந்து அதை இரகசியமாக வைத்திருந்தனர்.

Q32) மக்கத்து காஃபிர்களும் திருமறை வசனங்களுக்கு கட்டுண்டு இறைவனை சிரம் பணிந்த நிகழ்ச்சியைக் கூறுக:

ஒரு முறை ரமலானில் நபி (ஸல்) அவர்கள் கஃபாவிற்குச் சென்றார்கள். அங்கு நின்றுகொண்டு திடீரென நஜ்ம் அத்தியாயத்தை ஓத ஆரம்பித்தார்கள். இதற்கு முன் அல்லாஹ்வின் வார்த்தையைச் கேட்டிராத இறை நிராகரிப்பாளர்களான குரைஷிகள் இப்போது நபி (ஸல்) அவர்கள் திடீரென இந்த அத்தியாயத்தை ஓதிக்காட்டியபோது- ஈர்ப்பு சக்தியுள்ள இத்தெய்வீக வாக்கு அவர்களின் செவிகளைத் தட்டியபோது அவர்களில் ஒவ்வொருவரும் அதை செவிதாழ்த்திக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். இறுதியாக ”அல்லாஹ்வுக்கே சிரம்பணியுங்கள்! அவனையே வணங்குங்கள்!”என்ற வசனத்தை ஓதி நபி (ஸல்) அவர்கள் சிரம்பணிந்தபோது அவர்களில் யாரும் தன்னைக் கட்டுப்ப டுத்திக்கொள்ள முடியாமல் விழுந்து சிரம்பணிந்தார்கள்.

Q33) நபி (ஸல்) அவர்கள் பகிரங்க அழைப்பு விடுக்கவேண்டும் என இறங்கிய வசனம் எது?

”உமக்கு கட்டளையிடப்பட்டிருப்பதை பகிரங்மாக அறிவிப்பீராக! இணைவைப்பவர்களைப் புறக்கணிப்பீராக!”(15:94)

Q34) நபி (ஸல்) அவர்கள் செய்த முதல் பகிரங்க பிரச்சாரம் எது?

நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் ஸஃபா குன்றின் மீது நின்று கொண்டு குரைஷிகளை அழைத்தார்கள். அவர்கள் முன் அதிகமானோர் ஒன்று கூடினார்கள் அப்போது அவர்களை நோக்கி,

”இம்மலைக்குப் பின்னால் எதிரிகள் உங்களை அழிக்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என நான் உங்களிடம் கூறினால் நீங்கள் என்னை நம்புவீர்களா?” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள் ஆம்! உண்மையையும் நம்பிக்கையையும்; தவிர வேறு எதையுமே நாங்கள் உங்களிடம் அறிந்ததில்லை எனக் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், நிச்சயமாக நான் கடுமையான வேதனையை விட்டும் உங்களை எச்சரிக்கை செய்கிறேன் எனக் கூறினார்கள். பின்பு அவர்களை அல்லாஹ்வின் பக்கமும் சிலை வணக்கங்களை விட்டுவிடுமாறும் அழைக்க ஆரம்பித்தார்கள். அப்போது அக்கூட்ட த்திலிருந்த அபூலஹப் கொதித்தெழுந்தான். உனக்கு நாசம் உண்டாகட்டும்! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்? எனக் கேட்டான். இதன் பிறகு அல்லாஹ் இந்த அத்தியாயத்தை இறக்கிவைத்தான்: ”அபூலஹபின் இரு கைகளும் நாசமாகட்டும்! அவனும் நாசமாகட்டும்! அவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்தவையும் அவனுக்;கு எந்தப் பல னையும் அளிக்கவில்லை. விரைவில் அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் போடப்படு வான். (இங்கும்அங்கும்)புறம்பேசித்திரிபவளான அவனுடைய மனைவியும் (நெருப்பில்போடப் படுவாள்) அவளின் கழுத்தில் முறுக்கேற்றப்பட்ட கயிறு இருக்கும்”.(111:1-5)

Q35) இஸ்லாத்திற்காக முதன்முதலாக உயிர்தியாகம் செய்தவர் யார்?

இஸ்லாத்தில் முதன் முதலாக உயிர்த்தியாகம் செய்தவர் சுமையா (ரலி) என்ற பெண்மணி ஆவார்கள்.

Q36) இஸ்லாத்தை ஏற்றதற்காக பிலால் (ரலி) அவர்கள் பட்ட கஷ்டங்கள் யாவை?

பிலால்(ரலி) அவர்கள் இஸ்லாத்தை விட்டுவிட வேண்டுமென்பதற்காக பிலால் (ரலி) அவர்களின் எஜமான் உமையா பின்கலஃப், பிலால்(ரலி) அவர்களைச் சங்கிலியால் கட்டி மக்காவிற்கு வெளியே கொண்டு வந்து அனல் பறக்கும் மணலில் படுக்க வைத்து அவர்களின் நெஞ்சில் மிகப் பெரும் பாரங்கல்லை வைத்து அவனும் அவனைச் சாந்தவர்களும் அவர்களைச் சாட்டையால் மாறி மாறி அடித்தனர். பிலால்(ரலி) அவர்கள் ஏகன், ஏகன் என்றே திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந் தார்கள். இந்நிலையில் அபூபக்கர்(ரலி) உமையாவிட மிருந்து பிலால்(ரலி) அவர்களை விலைக்கு வாங்கி சுதந்திரமானவர்களாக அல்லாஹ்வின் பாதையில் விடுதலை செய்தார்கள்.

Q37) முஸ்லிம்கள் முதன் முதலாக எந்த நாட்டிற்குச் ஹிஜ்ரத் சென்றார்கள்?

மக்கத்து இறை நிராகரிப்பாளர்களின் கொடுமைகளிலிருந்து தங்களை காப்பாற்றிக்கொள்வதற்காக சுமார் 70 முஸ்லிம்கள் தத்தம் குடும்பத்தார்களுடன் நஜ்ஜாஸி மன்னர் ஆட்சி செய்து கொண்டிருந்த அபீஸீனியாவிற்கு ஹிஜ்ரத் சென்றார்கள்.

Q38) உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற விதத்தைக் கூறுக:

நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்வதற்காக உருவிய வாளுடன் புறப்பட்டுச் சென்ற உமர் (ரலி) அவர்கள் வழியில் தம் சகோதரி இஸ்லாத்தை தழுவிய செய்தி கேட்டு அவரின் வீட்டிற்குச் சென்று, அங்கே திருக்குர்ஆனைச் செவியுற்று இஸ்லாத்தை ஏற்றார்.

Q39) இஸ்லாத்தை விட்டு விட வேண்டுமென்பதற்காக முஸ்லிம்களையும் பனூ ஹாஷிம் குலத்தவர்களையும் எத்தனை ஆண்டுகள் சமூக புறக்கணிப்பு செய்தனர்?

மூன்றாண்டுகள். முஸ்லிம்கள் மக்காவிற்கு வெளியே உள்ள கணவாய்களில் ஒன்றான அபூதாலிப் கணவாய்க்கு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளானார்கள். அங்கு முஸ்லிம்கள் மிகக்கடுமையான கஷ்டத்திற் காளானார்கள். பசியையும் பல்வேறு கஷ்டங்களையும் அனுபவித்தனர். அவர்களில் வசதியுள்ளவர்கள் தங்களின் பெரும் பொருளைச் செலவிட்டனர். கதீஜா(ரலி) அவர்கள் தம் செல்வம் அனைத்தையும் செலவு செய்தார்கள். அவர்களிடம் நோய் பரவியது. பெரும்பாலோர் அழிந்துவிடும் நிலைக்கு ஆளானார்கள். எனினும் அவர்கள் நிலை குலையாமல் உறுதியோடும் பொறுமையோடும் இருந்தார்கள். அவர்களில் எவரும் தன் மார்க்கத்திலிருந்து பின்வாங்கவில்லை.

Q40) பிரச்சாரத்திற்காக தாயிப் நகர் சென்ற நபி (ஸல்) அவர்களை அந்த நகரின் மக்கள் எவ்வாறு நடத்தினார்கள்?

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதது மட்டுமல்லாம்ல் நபி (ஸல்) அவர்களை மிக மோசமாக நடத்தினார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக சிறுவர்களைத் தூண்டிவிட்டனர். அவர்கள் நபிகள் நாயகம்(ஸல்)அவர்களைக் கல்லால் எறிந்து அவர்களின் இரு கணுக்கால்களில் இரத்தம் வரும் அளவுக்கு காயப்படுத்தினார்கள்.

Q41) மக்கத்து இறை நிராகரிப்பாளர்கள் இஸ்லாத்தை ஏற்க வேண்டுமென்பதற்காக நபி (ஸல்) அவர்கள் செய்து காட்டிய அற்புதம் என்ன?

ஒரு முறை மக்கத்து இறை நிராகரிப்பாளர்கள் சந்திரனை இரு கூறாகப் பிளந்து காட்டும்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வேண்டினார்கள். அதை அவர்கள் தமது இறைவனிடம் வேண்டி சந்திரனை இரு கூறாகப் பிளந்து காட்டினார்கள். குரைஷிகள் அவ்வற்புதத்தை நீண்ட நேரம் கண்டார்கள். எனினும் அவர்கள் அதை நம்பவில்லை. முஹம்மத் எங்களுக்கு சூனியம் செய்துவிட்டாரெனக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் இவர் உங்களுக்கு சூனியம் செய்து விட்டாலும் அனைத்து மக்களுக்கும் அவரால் சூனியம் செய்ய முடியாது. எனவே இதன் உண்மை நிலையை அறிந்துகொள்வதற்காக பயணக் கூட்டத் தினரை எதிர்பாருங்கள் எனக் கூறினார். பின்னர் பயணிகள் வந்தபோது அவர்களிடம் இது பற்றிக் கேட்டனர். அதற்கவர்கள் ஆம்! நாங்களும் அதைக் கண்டோம் எனக் கூறினர். எனினும் குரைஷிகள் இதன் பின்னரும்; நிராகரிப்பிலேயே பிடிவாதமாக இருந்தனர்.

Q42) நபி (ஸல்) அவர்களின் மிஹ்ராஜ் பயணம் பற்றிக் கூறுக.

நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ரஜப் மாதம் 27-ஆம் இரவு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களை அழைத்துக் கொண்டு ஃபலஸ்தீனிலுள்ள பைத்துல் முகத்தஸுக்கு கொண்டு சென்றார்கள். பிறகு அங்கிருந்து அவர்களை வானத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு அவர்கள் தமது இறைவனின் மாபெரும் அத்தாட்சிகளைக் கண்டார்கள். வானில் வைத்தே ஐவேளைத் தொழுகைகள் கடமையாக்க ப்பட்டன. அதே இரவில் அவர்கள் தெளிந்த உள்ளத்துடனும் அழுத்தமான உறுதியுடனும் மக்காவிற்குத் திரும்பி வந்தார்கள்.

Q43) உமர் (ரலி) அவர்கள் மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்த நிகழ்ச்சியைக் கூறுக:

முஸ்லிம்கள் அனைவரும் பயந்தவர்களாக இரகசியமாக மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்த சமயத்தில் உமர்(ரலி) அவர்களின் ஹிஜ்ரத் வீரத்திற்கும் சவாலுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக விளங்கியது. ஏனெனில் அவர்கள் தமது வாளை உருவிக்கொண்டு தமது வில்லை யும் ஏந்திக் கொண்டு கஃபதுல்லாவிற்குச் சென்று அதை வலம்வந்துவிட்டு பின்னர் இணை வைப்பவர்களை நோக்கி, ”எவன் தனது மiனைவியை விதவையாக்க விரும்புகிறானோ அல்லது தனது குழந்தையை அநாதையாக்க விரும்புகிறானோ அவன் என்னிடம் வரட்டும்! இதோ நான் ஹிஜ்ரத் புறப்படுகிறேன்!” எனக் கூறிவிட்டுச் சென்றார்கள். எவரும் அவரைத் தடுக்கத் துணியவில்லை.

Q44) நபி (ஸல்) அவர்கள் மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்த நிகழ்ச்சியைக் கூறுக:

நபி (ஸல்) அவர்களின் பிரச்சாரத்தை நிறுத்தமுடியாத மக்கத்து இறைநிராகரிப்பாளர்கள் ஆலோசனை நடத்தி நபி (ஸல்) அவர்களைக் கொன்றுவிடத் தீர்மானித்தார்கள். இச்சதித்திட்டத்தை அல்லாஹ் சங்கைக்குரிய தனது நபிக்கு தெரிவித்துவிட்டான். நபி (ஸல்)அவர்கள் அபூபக்கர்(ரலி)அவர்களுடன் ஹிஜ்ரத்துச் செய்ய முடிவு செய்தார்கள். அந்த இரவில் நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் அலீ(ரலி)யிடம் தம்முடைய இடத்தில் உறங்க வைத்தார்கள். சதிகாரர்கள் வந்து வீட்டை முற்றுகையிட்டார்கள். படுக்கையிலிருந்த அலீ (ரலி) யைப் பார்த்துவிட்டு அவர் முஹம்மதுதான் என எண்ணிக்கொண்டார்கள். அவர் எப்போது வெளியே வருவார் என்பதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் . நபி (ஸல்) அவர்கள் மண்ணை அள்ளி அவர்களின் தலையில் தூவிவிட்டு வீட்டைவிட்டுப் புறப்பட்டுச் சென்றார்கள். அல்லாஹ் அவர்களின் பார்வையைப் பறித்துவிட்டான். ஆகவே அவர்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்றதை உணரவில்லை.

Q45) நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செல்லும் வழியில் எந்த குகையில் தங்கினார்கள்?

நபி (ஸல்) அவர்ககளும் அபூபக்கர்(ரலி) அவர்களும் சுமார் ஐந்து மைல் தூரம் சென்று ஸவ்ர் எனும் குகையில் ஒழிந்து கொண்டனர். குரைஷிகள் எல்லா பாகங்களிலும் நபி (ஸல்) அவர்களைத் தேடுவதற்கு ஆள் அனுப்பினார்கள். நபி (ஸல்) அவர்களை உயிருடனோ பிணமாகவோ கொண்டு வருபவருக்கு நூறு ஒட்டகங்கள் பரிசாகத் தரப்படுமென அறிவித்தார்கள். அவர்கள் நபி (ஸல்)அவர்களைத் தேடி குகை வாசலுக்கே வந்துவிட்டார்கள். எந்த அளவுக்கு என் றால் அவர்களில் ஒருவன் கீழே குனிந்து பார்த்துவிட்டால் அவர்கள் இருவரையும் கண்டு கொள்வான். நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு ஏதும் நேர்ந்துவிடுமோ என அபூபக்கர் (ரலி)கடுமையான கவலை கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அபூ பக்கரே! நாம் இரண்டு பேர்தான் இருக்கிறோம் என எண்ணிக்கொண்டீரா? அல்லாஹ் மூன்றாவது ஆளாக இருக்கிறான்! நீங்கள் கவலைப்படாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்! எனக் கூறினார்கள். ஆனால் அக்கூட்டத்தினர் அவ்விருவரையும் பார்க்க வில்லை. இருவரும் குகையில் மூன்று நாட்கள் தங்கியிருந்துவிட்டு பிறகு மதீனாவை நோக்கி நடந்தனர்.

Q46) நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செல்லும் வழியல் நடைபெற்ற அற்புதம் என்ன?

நபி (ஸல்) அவர்ககளும் அபூபக்கர்(ரலி) அவர்களும் ஹிஜ்ரத் செல்லும் வழியில் உம்மு மஃபத் எனச் சொல்லப்படும் ஒரு பெண்மணியைக் கண்டனர். அவரிடம் உணவும் தண்ணீரும் கேட்டனர். அவரிடம் மெலிந்த ஒரே ஒரு ஆட்டைத் தவிர எதுவுமே இல்லை. அதில் துளிப் பால் கூட இல்லை. நபி (ஸல்) அவர்கள் அதன் அருகில் சென்று அதன் பால் மடியைத் தடவி பால் கறந்து ஒரு பெரிய பாத்திரத்தை நிரப்பினார்கள். அதைப் பார்த்து விட்டு உம்மு மஃபத் திகைத்துப்போய் நின்று கொண்டிருந்தார். பிறகு அனைவரும் தாகம் தீர அருந்தினர். பிறகு இரண்டாம் முறையும் பால் கறந்து பாத்திரத்தை நிறைத்து விட்டு அதை உம்மு மஃபதிடம் கொடுத்துவிட்டு நடையைத் தொடர்ந்தனர்.

Q47) நபி (ஸல்) அவர்களால் கட்டப்பட்ட இஸ்லாத்தின் முதல் பள்ளிவாசல் எது?

ஹிஜ்ரத் சென்ற நபி (ஸல்) அவர்கள் மதினாவின் குபா என்ற பகுதியை அடைந்து அங்கு நான்கு நாட்கள் தங்கியிருந்து அங்கு ‘குபா பள்ளிவாசலை’ கட்டியெழுப்பினார்கள்.

Q48) ஹிஜ்ரத் சென்று மதினா வந்தடைந்தவுடன் நபி (ஸல்) அவர்கள் யார் வீட்டில் தங்கினார்கள்?

நபி (ஸல்) அவர்கள் அபூ அய்யூப் அல்-அன்சாரி வீட்டில் தங்கினார்கள்.

Q49) முஹாஜிர்கள் மற்றும் அன்ஸாரிகள் என்பவர்கள் யார்?

மக்காவிலிருந்து தம் சொத்து, உறவினர்கள் மற்றும் அனைத்தையும் துறந்து மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்தவர்கள் முஹாஜிர்கள் ஆவார்கள். முஹாஜிர்களுக்கு உதவி செய்த மதீனாவாசிகள் அன்ஸாரிகள் ஆவார்கள்.

Q50) பத்ருப் போர் எப்போது நடைபெற்றது?

ஹஜ்ரி 2 ஆம் ஆண்டு ரமலான் 17 அன்று வெள்ளிக் கிழமை.